இமயவர்மன், திருச்சி - 15.01.2024
🎉 போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும்!. இது பின்னர் மருவி போகிப் பண்டிகை என்றாகி விட்டது.
🎉 வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
🎉 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர்.
🎉 இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாளன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள்.
காப்புக் கட்டுதல் :
🎉 போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு-ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.
🎉 மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் வருவதைத் தடுக்கும். விஷ முறிவுக்கு உதவும்.
🎉 வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை வரவிடாமல் தடுக்கும். ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளைத் தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.
இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :
🎉 மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.
🎉 மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.
பழைய பொருட்களை எரித்தல் :
🎉 பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள்.
அதனோடு மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் துயரங்களையும் அழிப்பதால் இப்பண்டிகையைப் போக்கி என்றனர். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாடத்தின் வெளிப்பாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக