19 பிப்ரவரி 2021

சுய ஒழுக்கம் (Self Discipline)

19.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phone-இல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம் அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாகக் கேட்பவரிடம் மனப் பூர்வமாக கேட்டுக் கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் பண்பை உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், உணவுத் தட்டு, குடை போன்றவைக்கும்.

3. கடயில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், விலைப் பட்டியலில் விலை அதிகமான் உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் செய்யச் சொல்லுங்கள்.

4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.

இன்னும் கல்யாணம் ஆகலயா?

குழந்தைகள் இல்லையா?

இன்னும் சொந்த வீடு வாங்கவில்லையா?

ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?

இது நமது பிரச்சினை இல்லை தானே!"

5. தானியங்கி கதவைத் திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும் வரை மூடாமல் பிடித்து இருப்பது அவர்களைச் சமூகத்தில் பொறுப்பு உள்ளவர்களாக மாறச் செய்யும்!

6. நண்பருடன் டாக்சியில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்து விடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளியுங்கள். மோசமாக இருந்தாலும், கவனிப்பில் வைத்து இருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டல் அடிப்பதை சம்பந்தப் பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்து விடாதீர்கள். அவரை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளைச் சுட்டிக் காட்டலாம்.

12. உடல் பருமனை ஒரு போதும் கிண்டல் அடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க சூட்டிகையாக, கவர்ச்சியாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்களின் படத்தைக் காட்ட போனைக் கொடுத்தால் Gallery-யில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டு விடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும் போது போனை நோண்டிக் கொண்டு இருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், ஸ்டைலுக்காக கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிரவும்.

சான்று: https://www.kalvikural.com/2020/07/self-discipline_22.html


 

12 பிப்ரவரி 2021

பிழை இல்லாமல் தமிழ் கற்றுக் கொள்வோம்

11.02.2021

பதிவு செய்தவர்: டாக்டர் ஜெயஸ்ரீ


மூனு சுழி “ண”, ரெண்டு சுழி “ன” என்ன வித்தியாசம்?

கண்ணப்பன்’னு’ எழுதச் சொன்னால் ஒருத்தன்

4-சுழி 5-சுழி போட்டானாம்!

என்னப்பானு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,

4-சுழி 5-சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!

மூனுசுழி "ண" என்பதும் தவறு!

"ண" இதன் பெயர் "டண்ணகரம்",

"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கு எல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்"னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கு எல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்"னு பேரு. இது ரெண்டும் என்றுமே மாறி வராது. இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா?

வேற மாதிரி சொன்னா. இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! வர்க்க எழுத்து-ன்னா,

சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.

இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்")
 
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்படி?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ’ட’ இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்".

இதே மாதிரிதான்

"ந' கரம்" என்பதை, "தந்நகரம்" னு சொல்லனும்.

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.

(பந்து, வெந்தயம், மந்தை…)

தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு. இதைப் புரிந்து கொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும்.  (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூடப் பாடத்தில் வராது!)

எடுத்துக்காட்டாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன –

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்து உள்ளனர்

இதை எல்லாரும் படித்து இருப்போம்-

வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையின எழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்தில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18-எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள –

18 எழுத்து வருதுல்ல... இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப் படுத்தாமல் "க ங ச ஞ ட ண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் அவற்றின் பெயருக்கேற்ப (உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி மென்மையாகவும் இன்றி இடையினமாக) செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகமே இரட்டை எதிர்த் துருவ ஈர்ப்பில் தானே இயங்குகிறது!

நெட்டை ’னா’ குட்டை

பள்ளம் ’னா’ மேடு

தொப்பை ’னா’ சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் ’னா’ மெல்லினம்.

அப்படின்னா பெண்கள் எல்லாம் மெல்லிய மலர்தானா... அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்.

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்பிட முடியுமா?

முடியும்னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழ் இயல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன "ர" என்பதும் தவறு!

பெரிய "ற" என்பதும் தவறு!

ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வருவது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் ’னு’ வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில ’லோல்’ படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம முன்னோர்கள்

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான்!

இதே மாதிரித்தான்

உயிரெழுத்தில்

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

ஐ-

ஒ-ஓ

என வரும் இன எழுத்துகள்

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை (ஓசை ஒழுங்கு) அறிந்து எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும். படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

நன்றி!


11 பிப்ரவரி 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். இவரின் மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்.

மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த பெரும்பாலான சமூக நிகழ்வுகளில் சமூக ஆர்வலராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பற்றுதலைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிதும் கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.    

பாலன் முனியாண்டி, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவர். பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் அந்தக் கழகம் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணிப் பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். கடல் கடந்தும் காணலாம்.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தினரைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள்.

செய்த தர்மம் தலைகாக்கும்... தக்க சமயத்தில் உயிர் காக்கும்... இது நான்கு மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு (10.11.2020) பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

*மலேசியம்* புலனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும்.

தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.02.2021

 

10 பிப்ரவரி 2021

மயிர் குறை கருவி

10.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

மயிர் குறை கருவி. என்னது இது? நாம் அன்றாடம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்.

கத்தரிக் கோலை கண்டுபிடித்தது யார்? எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக் கோலை முடி வெட்ட பயன்படுத்தினார்கள் என்பது தான் சிறப்பான விடயம்.

அதன் பெயர்தான் "மயிர் குறை கருவி"

சங்க இலக்கியமான *பொருநர் ஆற்றுப்படை*

கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

யாழிசைத்துப் பாடும் பாடினியை வர்ணிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்..

பாடினியின் காது, மயிர் குறை கருவியின் அடிப்பக்கம் போன்று இருந்ததாம். கத்திரிக் கோலின் கைப்பிடிபோல் அவளின் காது நீண்டு இருந்தது.

பாடல் 25 - 30.

" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "


கருமையான கூந்தல், பிறைபோல் நெற்றி, கொலை வில் போன்று வளைந்த புருவம், இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..

அடடா...
என்னவொரு உவமை...
நீண்ட காதுகளுக்கும்...
கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்...


அதைவிட அவசியம்... சங்க காலத்திலேயே தமிழன் முடி வெட்டி சிகை அலங்காரம் கொண்ட நாகரிகத் தமிழன் என்பதுதான்.

நன்றி: முனைவர் பாண்டியராஜா அவர்களின் சங்கச் சோலை இணையப் பக்கம்.



தமிழர் உறவு முறைகள்

08.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

தமிழன் தெரிந்து கொள்ள வேண்டிய தன் இனத்தின் பெருமை. அதை உலகிற்கே உரக்க சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. உறவுகள்:-

Mom , Mother , Mummy - அம்மா, தாய், அன்னை.

Dad , Father , Daddy - அப்பா, தந்தை, அய்யன்

Elder Sister - அக்காள், தமக்கை

Elder Brother - அண்ணன், தமையன்

Younger Sister - தங்கை, அங்கச்சி

Younger Brother - தம்பி, அம்பி

Maternal Grandmother - பாட்டி, ஆச்சி , அம்மம்மா, அமத்தா, அம்மாயி

Paternal Grandmother - பாட்டி, ஆச்சி, அப்பத்தா

Maternal Grandfather - தாத்தா, பாட்டன், பாட்டனார்

Paternal Grandfater - தாத்தா, பாட்டன், அப்பப்பா

Great Grandmother - பூட்டி, கொள்ளுப் பாட்டி, முப்பாட்டி

Great Grandfather - பூட்டன், கொள்ளு தாத்தா, முப்பாட்டன்

Great Great Grandmother - எள்ளுப் பாட்டி, ஓட்டி

Great Great Grandfather - எள்ளுத் தாத்தா, ஓட்டன், சீயான்

Brother - in - Law [Elder Sister's Husband] - மாமா , மைத்துனர்

Brother - in - Law [Younger Sister's Husband] - கொழுந்தனார்

Sister-in-Law [Elder Brother's Wife] - அண்ணி, மைத்துனி, மதினி, அத்தாச்சி

Sister-in-Law [Younger Brother's Wife] - கொழுந்தியாள்

Uncle [Mother's brother] - மாமா, தாய்மாமன்

Aunt [Mother's brother's wife] - அத்தை, அம்மாமி

Aunt [Mother's elder sister / Father's elder brother's wife] - பெரியம்மாள்

Uncle [Mother's elder sister's husband / Father's elder brother] - பெரியப்பா

Aunt [Mother's younger sister / Father's younger brother's wife] -சித்தி, சின்னம்மாள்

Uncle [Mother's younger sister's husband / Father's younger brother] - சித்தப்பா, சிற்றப்பார்

Aunt [Father's sister] - அத்தை

Uncle [Father's sister's husband] - மாமா

Wife - மனைவி

Husband - கணவன்

Mother-in-law - மாமியார்

Father-in-law - மாமனார்

Brother-in-law [Husband's brother] - கொழுந்தன், அளியன்

Sister-in-law [Husband's sister] - நாத்தனார்

Brother-in-law [Wife's brother] - மச்சான், மச்சினன், அளியன்

Sister-in-law [Wife's elder sister] - அண்ணி, அத்தாச்சி

Sister-in-law [Wife's younger sister] - கொழுந்தி

Son - மகன், புதல்வன்

Daughter - மகள், புதல்வி

Son-in-law - மருமகன், மாப்பிள்ளை

Daughter-in-law - மருமகள், மட்டுப் பொண்ணு

Daughter / Son -in-law's parent [No term in english] - சம்பந்தி

Cross-cousin [Father's sister's son] - அத்தான்

Cross-cousin [Father's sister's daughter] - அத்தங்கார்

Cross-cousin [Mother's brother's son] - அம்மாஞ்சி

Cross-cousin [Mother's Brother's daughter] - அம்மங்கார்

Grandson - பேரன்

Granddaughter - பேத்தி

Great Grandson - கொள்ளுப்பேரன்

Great Granddaughter - கொள்ளுப்பேத்தி

Grand Grand Grandson - எள்ளுப்பேரன்

Grand Grand Granddaughter - எள்ளுப்பேத்தி

நாம் காணும் அனைத்துக் குடும்ப தரப்பினருக்கும் தமிழில் பெயருண்டு. ஆங்கிலத்தைப் போல் யாரைக் கண்டாலும் Uncle, Aunty என்று கூப்பிடும் அவநிலை தமிழுக்கு இல்லை. பிற மொழியை போலன்று. மூன்று தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களுக்கும் பெயர் வழங்கியப் பெருமையும் தமிழையே சாரும்.

இப்படி சொந்த வீட்டில் உள்ளவர்களையே Son-in-law, Daughter-in-law, Brother-in-law, Sister-in-law, Cross-cousin என்று பிரித்துப் பார்க்காமல் நல்ல தமிழில் ஒற்றுமை கலந்த உறவுச் சொல்லிலேயே அழைக்கலாமே.

மற்ற எந்த மொழியிலும் இல்லாத; சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளைச் சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனித் தனியாகப் பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டு உள்ளது.

வேதனை என்னவெனில் நம் தலைமுறையினரோ இதைப் பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர்.

இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள் பாசப் பிணைப்பு வளரும்.




 

07 பிப்ரவரி 2021

செங்காட் கிண்டிங்ஸ் மலைக்காடுகள்

06.02.2021

சிம்மோர் நகரில் இருந்து தஞ்சோங் ரம்புத்தான் செல்லும் பாதையில் 6-ஆவது கி.மீ. பழைய செங்காட் கிண்டிங்ஸ் ரப்பர் தோட்டம். இப்போது இல்லை. நில மேம்பாட்டுத் திட்டங்களினால் அந்த இடம் மறைந்து விட்டது.


ஏறக்குறைய 2000 அடி உயரத்தில்...

அந்தத் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் உட்புறம் ஒரு தார் சலை. முன்று கி.மீ. தொலைவில் மலைக்காடுகள். அங்குதான் என் மகளின் மாளிகை உள்ளது.

காட்டுப் பன்றிகள் மேய்ந்த பாசா காடு

ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்வது உண்டு. மாளிகைக்கு அருகில் காட்டுப் பாதைகள் உள்ளன. அங்கு நடைப் பயிற்சிகள் மேற்கொள்வதும் உண்டு. அப்போது எடுத்த சில ஒளிப் படங்கள். பதிவு செய்கிறேன்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

 

தனசேகரன் தேவநாதன்: சித்திர சோலைகளே... பாரதிதான் கவிதை வரிகள் மனதை வருடுகிறது ஐயா.

ரஞ்சன் கங்கார் பூலாய்: இயற்கையை ரசிப்போம்... பசுமையைச் சுவாசிப்போம்... அண்ணா... காலையிலேயே இப்படங்களை அனுப்பி என்னை உசுப்பி விடுகிறீர்கள்...
பழைய நினைவுகளுக்கு... விடுமுறை காலங்களில் காட்டிற்குள் நுழைந்த அனுபவத்தை சொல்கிறேன்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தம்பி... இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி... அதனால் தான் சிறு விலங்குகள் வாழ்கின்றன. இல்லை என்றால்... ?

ஆதி சேகர்: நல்ல தூக்கம்... மலேசியம்... புலனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..!

நல்ல இயற்கை காட்சியை காலையிலேயே... படம் பிடித்து கண்ணுக்கும்... மனதுக்கும்.... குளிர்ச்சியை தந்த ஐயா அவர்களுக்கும்.. தேவிசர..மா விற்கும்.. நன்றி....!

ரஞ்சன் கங்கார் பூலாய்: காட்டிற்குள் நுழைந்த அனுபவம் சுவாரசியமானது... காட்டுப் பழங்களை பறிக்க... காட்டு டுரியான் (முள் நாறிப்பழம்) மங்குஸ்தீன், ரம்பத்தான், டுக்கு, பலா, பூனைப் புடுக்கு பழம் (buah rampai) இன்னும் பல வகையான பழங்கள்  ...

முள்ளம் பன்றி முட்கள்

இப்போது  இருக்கும் நிலையில்... மனித நாகரீகம்  தெரியாத  இந்த காட்டான்களோடு வாழ்வதை விட... காட்டிற்குள் குடியேறி விடலாமா என்று  தோன்றுகிறது.

டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: இயற்கையோடு இணைந்தால் வாழ்க்கை முழுதும் அழகு! இந்த இடத்தில் நீர் நெருப்பு தவிர  பஞ்ச பூதத்தில் அனைத்தும் பரிபூரணமாக ரசாயனக் கலப்பின்றி கிடைப்பதால் உடலும் தேறி உள்ளமும் அமைதி அடையும்.



தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா - பொய்யான தகவல்கள்

06.02.2021

தமிழ்ப்பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் ஆக்ககரமான பணிகள் இப்போது நாடு முழுவதும் நடக்கின்றன. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் முழக்கமும் நேர்த்தியான இயக்கமும் சூடுபிடிக்கும் சூழ்நிலை மெல்ல உருவாகி வருகின்றது.

இம்மாதிரி நேரத்தில் தமிழ்ப் பள்ளிகள் மீது நம்பிக்கை தருகின்ற செய்திகள், தகவல்கள், காணொளிகள் ஆகியவைக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதிகமாக வெளியிட வேண்டும். பகிர வேண்டும்.

அதை விட்டுவிட்டு "தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா... தமிழ்ப்பள்ளிகள் அழிந்துபோகும்... என்று எச்சரிக்கை மணி" அடிப்பது தேவையற்றது.

ஆதாரம் இல்லாத பொய்யான விபரங்களைப் பரப்புவது நல்லதல்ல. இதனால், தமிழ்ப்பள்ளியை நம்பிக்கையோடு தேர்வு செய்துள்ள பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்ப்பள்ளியை நம்பியவர்கள் கூட திரும்பி ஓடுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும்.

கல்வி அமைச்சின் தகவல், புள்ளி விவரம் என்று சொல்லி ஆதாரம் அற்ற தகவல்களையும் கணக்குகளையும் பரப்புவதையும் மக்களைக் குழப்புவதையும் நிறுத்த வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் அழிந்து போகும் என்று கணக்குகள் காட்டி அச்சுறுத்தும் பொறுப்பற்ற போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நல்ல. (Positive) தகவல்களை அதிகம் வழங்க வேண்டும்.

தற்போது நமது நாளிதழ்கள், மின்னல் எப்.எம் & டி.எச்.ஆர் ராகா வானொலி, தொலைக்காட்சி 2, பெர்னாமா ஆகிய அனைத்து ஊடகங்களும் சிறப்பான பரப்புரைப் பணிகளை செய்ய தொடங்கி விட்டன. இதன்வழி மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம்.

இதோடு தமிழ்ப் பள்ளிகளின் சாதனைகள், வெற்றிக் கதைகள், வசதிகள், கற்றல் கற்பித்தல் வளர்ச்சிகள், தற்போது இணையவழி கற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பள்ளிகளையும் மாணவர்களையும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. நமது ஊடகங்கள் மிகச் சிறப்பாக இதைச் செய்கின்றன.

தமிழ்ப்பள்ளிக்கு ஆக்கமான காரியங்கள் மட்டும் செய்வோம். எச்சரிக்கை மணி அடிக்கிறோம் என்று நினைத்து சாவு மணியை யாரும் அடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

உரைப்பு மிளகாய் உளறல் மனிதர்கள்

06.02.2021

உலகத்திலேயே மிக உரைப்பான மிளகாய் கரோலினா ரீப்பர் (Carolina Reaper குண்டு மிளகாய்). இதன் உரைப்புத் தன்மை 1,569,300 SHU. உரைப்புத் தன்மையைக் கணக்கிடுவதற்கு Scoville Heat Units எனும் அளவையைப் பயன்படுத்துகிறார்கள்.

உலகிலேயே ஆக உயர்ந்த உரைப்புத் தன்மை அந்தக் கரோலினா ரீப்பர் குண்டு மிளகாய்க்கு உண்டு. அந்த மிளகாய் வகையில்: Trinidad Scorpion Moruga; Pot Douglah; Pot Primo; Trinidad Scorpion Butch T; Naga Viper; Ghost Pepper; Pot Barrackpore; Pot Jonah; Red Savina Habanero எனும் கொடும் உரைப்பு மிளகாய்கள் உள்ளன.

ஒரு சாமானிய மனிதர் ஒரு குண்டு மிளகாய் சாப்பிடலாம். சமயங்களில் அதுவே உயிருக்கு ஆபத்தாகவும் அமையலாம்.

2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒருவர் (34 வயது) ஒரே ஒரு மிளகாய் சாப்பிட்டு பல நாட்கள் மருத்துவமனையில் கிடந்தாராம். அவருக்கு thunderclap எனும் தலைவலி. உயிர் போகும் ’debilitating severe headaches’ தலைவலி. அப்படியே Reversible cerebral vasoconstriction syndrome எனும் நோய்க்குறி.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது என்னென்னவோ உளறி  இருக்கிறார். அதில் தற்புகழ்ச்சி புகழாரங்கள். மூளைதான் மயக்க நிலையில் இருக்கிறதே. அதனால் என்ன பெருமை பேசினார் என்று அவருக்கே தெரியவில்லை போலும். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

மனித மூளையில் பெருமூளை சிறுமூளை எனும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு இடையில் மெடுல்லா எனும் மூளைத் தண்டு உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா மனித இனத்தவர்களுக்கும் அதே மூளைதான். அதே மூளைத் தண்டு தான்.

ஆனால் ஒரு சில இனத்தவருக்கு மூளைத் தண்டுக்குப் பதிலாக கரோலினா ரீப்பர் குண்டு மிளகாய் போல மூளைத் தண்டு இருக்கலாம்; குண்டு மிளகாய் போல இயங்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சில இனத்தவர் அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த காலத்தில் இருந்து அந்த குண்டு மிளகாய் கூடவே அவர்களின் மூளையில் ஒட்டிக் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

ஆகவே அவர்களைக் குறை சொல்லி ஒன்றும் இல்லை. கரோலினா ரீப்பர் குண்டு மிளகாயைத் தான் குறை சொல்ல வேண்டும். அந்தக் குண்டு மிளகாய் காரம் குறையும் வரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டுதான் இருப்பார்கள். காரம் குறைய இன்னும் பல மாமாங்கங்கள் பிடிக்கலாம்.

குமரிக் கண்டம் அவர்களின் பாட்டன் சொத்து என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

சிந்துவெளியில் அவர்களின் பாட்டிமார்கள் பட்டம் விட்டார்கள் என்று உளறலாம்.  ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

ஐஸ்லாந்தில் அவர்களின் மாமா ஐஸ்கிரீம் விற்றார் என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

இத்தாலியில் அவர்களின் அத்தைமார்கள் இட்லி சுட்டு விற்றார்கள் என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள். வேறு வழி இல்லை.

அதே சமயத்தில் அவர்களின் உளறல்களை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட மறந்துவிடவும் வேண்டாம். அதனால் அவர்களுக்கும் பெருமை. நமக்கும் நிம்மதி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2021


 

காஜாங் தமிழ்ப்பள்ளி சாதனை - அனைத்துலக ரோபோட்டிக் போட்டி 2021

06.02.2021

தென் கொரியாவில் நடை பெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் காஜாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

இணையம் வழி நடைபெற்ற இப்போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்ட வேளையில், ரோபோட்டிக் குழு பிரிவில் காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ரேகன் பிள்ளை அந்தோணிப் பிள்ளை, முகேஷ் குமார் சரவணகுமார், கவியரசு தமிழரசு ஆகியோர் தங்கம் வென்று உள்ளனர்.

திரிஷர் நிஷேல் குமார், அரவிந்தன் ஜெய்சந்திரன், யுவனேஸ்வர் சண்முகசீலன் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

தர்ஷன் ஜெயசீலன், பித்திகா அரிகிருஷ்ணன், மோஷிகன் ரமேஸ் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.

2018, 2019 பிலிப்பைன்ஸில் நடந்த இப்போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இம்முறை 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து இருப்பதாகத் தலைமையாசிரியர் ஜோன் பொஸ்கோ தெரிவித்தார்.

புறப்பாட நடவடிக்கை துணை தலைமையாசிரியர் கு. நெடுஞ்செழியன், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சி. காந்திமதி, பயிற்றுநர் விக்னேஸ்வரன் ஆகியோர் மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.
 

 

 

அகங்காரம் எனும் படகு

06.02.2021

இந்த உலகில் ஒவ்வொருவரும் அடுத்தவர்களை அதிகாரம் செய்து அவர்களை விட தான் உயர்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

தன்னை மிகவும் முக்கியமானவனாக எல்லோரும் கருத வேணடும் என்று நினைக்கிறார்கள். இது தான் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

ஒருவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தான் வெளிப்பட வேண்டும் என்று மன இறுக்கம் கொள்கின்றான். தான் நினைப்பது போல் நடக்க வில்லை என்றால் துன்புறுகிறான். கவலைப் படுகிறான். மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.

அவனுடைய அகங்கார மனமே இந்தத் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம். இப்படி அகங்கார மனம் படைத்தவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போடுகின்றனர். பணம், அதிகாரம், பதவி, அரசியல் பலம், பொய் நடிப்பு, கொள்கை; ஏன் மதத்திலும் கூட ஒழுக்கத்திலும் கூட போட்டி போடுகிறார்கள்.

தான்தான் இந்த உலகத்தின் மையம் என்று எல்லோரும் கருத வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். இந்த விபரீதமான அகங்கார எண்ணம்தான் உங்கள் பிரச்சினைகளின் ஆணிவேர்.

இதனால் உங்களைத் தவிர எல்லோரும் பகைவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே படகில் தான் பயணம் செய்கிறார்கள். அது தான் அந்த அகங்காரப் படகு.

-ஓஷோ



06 பிப்ரவரி 2021

இயற்கையை ரசிப்போம்

05.02.2021

பதிவு செய்தவர் - தேவி, கடாரம்

சின்ன வயதில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது எல்லாம், ஒரு புறம் மனத்தில் வியப்பாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று தோன்றும்.

“அசோகர் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார், சத்திரங்களைக் கட்டினார்” என்று ஒரே வாய்பாடு. எப்போது பார்த்தாலும் மரம், செடி, கொடிகளைப் பற்றித்தான் பேசுவார்கள்.


இப்போதுதான் அந்த வரிகளின் உண்மையான ஆழம் தெரிகிறது. பொருளும் புரிகிறது. இப்போது பாருங்கள். எங்கு பார்த்தாலும் நிஜக் காடுகள் அழிக்கப் படுகின்றன., கான்கிரீட் காடுகள் உருவாகி வருகின்றன. அதனால் உலகின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது.


மனித உறவுகளைப் போல இயற்கை மீதான நமது நேசமும் பாசமும் ஆழமாகக் காலா காலத்திற்கும் தொடர வேண்டும். இது உலக மக்கள் பலருக்குப் புரிவது இல்லை.

இன்று நம்மில் பலர் மிக வேகமாக இயற்கைச் சூழலை மாற்றி வருகிறார்கள். இயற்கைக்கு நம் உதவி தேவை இல்லை. ஆனால் நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை.


நாம் வாழும் இந்த உலகின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கி இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்க வேண்டியது இதுதான்: “இயற்கை தான் நமது வாழ்க்கை”.

1964-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். அவரிடம் ஒருமுறை “நீங்கள் நாளை இறந்து போகப் போவதாக அறிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவரின்பதில்: “ஒரு மரம் நடுவேன்”.


மரம் நம் வாழ்க்கையின் குறியீடு. நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப்பாறுவார்கள். அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை சிறிதும் அற்றவர்கள் தான் இயற்கையைப் பாழாக்குவார்கள்.

மலைகளை அழிப்பார்கள். மரங்களை வெட்டுவார்கள். மணலை அள்ளுவார்கள். இவர்களைவிட மானிட இனத்திற்குப் பெரிய துரோகிகள் யாரும் இல்லை.

சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: “நிழல் தர மரம் இல்லையா? கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக் கூடாது, உன்னைத் தான் சொல்ல வேண்டும்”.



 

தமிழாக இருக்கட்டும்

05.02.2021

பதிவு செய்தவர் - மகேந்திரமணி, காப்பார்

தமிழைத் தெளிவாக உச்சரித்துப் பார்
உன் குரலில் ஒரு கம்பீரம் இருக்கும்
குரல் ஒலியில் ஒரு கர்வம் இருக்கும்
செவியில் செந்தனலாய் நிறையும்

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
எழுதிப் பார்... எழுத்துக்கள்
ஒவ்வொன்றும் ஓவியங்கள்

செந்தமிழை வாசித்தவன்
எம்மொழியும் வாசிக்கலாம்
செம்மொழியை நேசித்தவன்
செம்மையாக வாழலாம்

பைந்தமிழை வாசித்தவன்
பயம் இன்றி வாழலாம்
இசைத்தமிழ் பயின்றவன்
ஈரேழு உலகம் ஆளலாம்

முத்தமிழ் கற்றவன்
முக்தி பெற்றவன்

அறுசுவை உணவில் விருப்பமில்லை
அருந்தமிழ் இருக்க
ஆரோக்கியத்திற்கு குறைவில்லை
குறில் நெடில் மாத்திரை
என் குரலில் ஒலிக்க

அதிகாரம் நெடில்
அடக்கம் குறில்
தொடக்கம் குரல்
உலக அடக்கம் திருக்குறள்

தமிழில் பேசுங்கள்
தமிழில் எழுதுங்கள்
தாய் தந்தையைத் தான்
புதைத்து விடுகிறோம்
தாய்மொழியையும் புதைத்து விடாதீர்கள்

முதியோர்கள் தான் முதியோர் இல்லத்தில்
முதுமொழி யாவது இளையோர் உள்ளத்தில்
இருக்கட்டும் நிலையாக

நீ வசிப்பது தமிழ் மண்ணாக
வாசிப்பதும் நேசிப்பதும்
சுவாசிப்பதும் தமிழாக இருக்கட்டும்
முத்தமிழைச் சுவைப்போம்

பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
விதைத்திடு தமிழ் மொழி
விருட்சமாகட்டும்  தலைமுறை

படித்ததை பகிர்கிறேன்...✍️



 

05 பிப்ரவரி 2021

மலேசியா தமிழ்ப் பள்ளிகளில் 2021-ஆம் ஆண்டு பதிவு சரிவு

05.02.2021

பதிவு செய்தவர் - பி.கே.குமார், ஈப்போ

மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி - குமரன் வேலு

தமிழ்ப் பள்ளிகளில் 2021 முதலாம் ஆண்டுக்குப் பதிந்த மாணவர் எண்ணிக்கையிலும்  மொத்த மாணவர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.

எண்ணிக்கையில் தொடர் சரிவுகள் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

1. குறைந்த எண்ணிக்கையில்  மாணவர்கள் கொண்டப் பள்ளிகள் மூடுவிழா காணும்.

2. புதிய ஆசிரியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட மாட்டார்கள்.

3. சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தேசியப்பள்ளிக்கு இடம்மாற வேண்டியது வரும்.

4. தலைமை ஆசிரியர் மற்றும் துணைத்தலைமை ஆசிரியர் பதவிகள் பறிபோகும்.

ஆண்டு - முதலாம்  ஆண்டு - மொத்தம்
               
2018       13771           81583           
2019       13281           81420
2020       12578           80743
2021       12489           79 870

2019 ஆம் ஆண்டை விடவும் 2020-இல் 683 குறைந்து; கடந்த 2020-ஆண்டை விடவும் 2021-இல் 873 மாணவர்கள் குறைந்து விட்டனர். 2020-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 369 பள்ளிகள் நகர்ப் புறங்களில் இருக்கின்றன. 158 பள்ளிகள் கிராமபுறப் பள்ளிகள்.

நகரம் - புறநகரம் - மொத்தம்

பள்ளிகள் - (நகரம்) 369 - (புறநகரம்) 158 - (மொத்தம்) 527

மாணவர் - (நகரம்) 72,891 - (புறநகரம்) 17,852 - (மொத்தம்) 80743

(மேல்காணும் தரவு கல்வியமைச்சின் கல்வி ஆய்வுத் திட்டப் பிரிவால் வெளியிடப்பட்டது)

90 விழுக்காடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நகர்ப்புறங்களில் இருக்கின்றனர். வெறும் 10 விழுக்காடு மட்டுமே கிராமபுறத்தைச் சேர்ந்தவர்கள்.

நகர்ப் புறங்களில் புதிய பள்ளிகளை நிருமாணிப்பதும், கிராமப்புறப் பள்ளிகளை நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்த்தலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஓரளவு வழிகோலும். மறுப்பதற்கு இல்லை.

ஆனால், தரவுகளின் இயல்பைப்  பார்க்கும் பொழுது மாணவர் எண்ணிக்கையின் சரிவுக்கு நம்மினத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதே முக்கியக் காரணம் என்பது என்னுடைய தெளிவு.

வீட்டிற்கு 7 - 8 குழந்தைகள் இருந்த காலம் மலையேறி இப்பொழுது 2 - 3 என்றாகி விட்டது. வாழ்க்கை செலவினமும் கல்விச் செலவினமும் அதிகரிக்க அதிகரிக்க பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வருகிறது நமது இனம்.

இது தொடர்பாகக் கடந்த ஆண்டில் ஓர் பதிவைச் செய்திருந்தேன். அப்பொழுதே எச்சரித்தேன். மக்கள் தொகையில் ஏற்படும் வீழ்ச்சி, நமக்கு அரசியல், கல்வி, பொருளாதார ரீதியாக எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதே நிலைமை நீடித்தால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பதிந்திருப்பர் என்பதை ஓரளவுக்கு கணித ரீதியாக அனுமானிக்கலாம்.

Nt =  P x e ^ ( rt)


t =  ஆண்டுகள்

P = மக்கள் தொகை (நடப்பு ஆண்டில்)

r = மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம்

2020 (நடப்பு ஆண்டு) மாணவர் எண்ணிக்கை = 80743

t = 30 ஆண்டுகள் (2050-இல்)


ஆண்டுக்கு சராசரியாக 700 மாணவர்கள் குறைந்து வருவதாக எண்ணிக் கொள்வோம் (தரவுகள் அவ்வாறே காட்டுகின்றன).

அதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் -700/80, 743= - 0.867%   (-) மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்று பொருள்

r = - 0.867%= 0.00876

e = 2.718 (மாறிலி)

N = 80743 x (2.718) ^ ( -0.00876x30) =  61, 875


2030 ஆண்டுவாக்கில் நமது மாணவர் எண்ணிக்கை 61000 ஆக குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

ஏறக்குறைய 20,000 மாணவர்களை இழக்க நேரிடும். பின்பு, 30 மாணவருக்கு  ஓர் வகுப்பறை என்றால், ~700 வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு:

1. தேசியப் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கும் மாணவர்களைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் திருப்ப வேண்டும். அப்படி வரும் போது புதிய வசதியான பள்ளிக்கூடங்கள் தேவைப்படும். புதிய தமிழ்ப் பள்ளிகள் நகர்ப் புறங்களில் கட்டப்பட வேண்டும்.

2. இந்தியர்களின் பிறப்பு விகிதத்தில் ஏற்றம் ஏற்பட வேண்டும். வீட்டுக்கு 4-5 பேராவது குழந்தைகள் தேவை.

- குமரன் வேலு
 

உலகின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் பிளாக்வெல்

03.02.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரும், பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடியுமான எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1821) பிறந்தார். தந்தை சர்க்கரை ஆலை உரிமையாளர். 1830-ல் குடும்பம் நியூயார்க் நகரில் குடியேறியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒஹியோவுக்கு இடம்பெயர்ந்தனர். தந்தை 1838-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

l குடும்ப செலவை சமாளிக்க, சகோதரிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கினார் எலிசபெத். பள்ளியை வெற்றிகரமாக நடத்தமுடியாததால், டியூஷன் வகுப்புகள் எடுத்தார். சிறுகதைகள் எழுதினார். இசை கற்றார். மகளிர் உரிமை தொடர்பான போராட்டங்கள், பிரச்சாரங்களில் பங்கேற்றார்.

l இவரது தோழி ஒருவர் பிறப்புறுப்பு தொற்றுக்காக ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஒரு பெண் டாக்டர் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இவரிடம் வேதனையுடன் கூறினார். ‘நீ ஏன் மருத்துவம் படிக்கக் கூடாது’ என்றும் கேட்டார். அதுவே மருத்துவம் படிக்கும் உந்துதலை இவரிடம் ஏற்படுத்தியது.

l 12 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார். ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்த காலம் என்பதால், இவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் இவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. ‘ஒரு பெண்ணை சேர்ப்பதா, வேண்டாமா?’ என்று 150 மாணவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

l படிப்பின்போதும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். அனைத் தையும் சமாளித்து 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். அமெரிக் காவிலேயே முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண் என்ற பெருமை பெற்றார்.

l உயர்கல்விக்காக ஐரோப்பா சென்றார். அப்போதும் நிராகரிக்கப் பட்டார். பாரீஸில் உள்ள லாமெடர்னைட் என்ற மருத்துவமனையில், மருத்துவர் என்பதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

l ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது இவரது கண்ணில் ரசாயன திரவம் பட்டதால், ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். இதனால், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை நிராசையானது. பின்னர், நியூயார்க் திரும்பியவர், மருத்துவப் பணியைத் தொடங்கினார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரைகளை எழுதினார்.

l பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்த தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஒரு மருத்துவமனை திறந்தார். இவரது தங்கையும் மருத்துவம் படித்து, அமெரிக்காவின் 3-வது பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவினார்.

l இங்கிலாந்து அரசால் ‘பெண் டாக்டர்’ என்று 1865-ல் அங்கீ கரிக்கப்பட்டார். இவரது தீவிர முயற்சியால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ஃபார் வுமன்’ என்ற கல்வி நிறுவனம் 1874-ல் தொடங் கப்பட்டது. லண்டன் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

l கடும் போராட்டங்கள், தடைகள், சவால்கள், அவமானங்களை சந்தித்தாலும் அனைத்தையும் வென்று, பெண்களின் மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிய எலிசபெத் பிளாக்வெல் 89-வது வயதில் (1910) மறைந்தார்.


நூறு கறுப்பு சிவப்பு எறும்புகள்

03.02.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன் கங்கார் பூலாய்

நூறு கறுப்பு எறும்புகளையும்; நூறு சிவப்பு எறும்புகளையும் சேகரித்து; ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால் எதுவும் நடக்காது. ஒரு பிரச்சினையும் வராது.

ஆனால் நீங்கள் அந்த ஜாடியை எடுத்துப் பலமாகக் குலுக்கி ஒரு மேசையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்தது என்ன  நடக்கும்?

நீங்கள் குலுக்கிய வேகத்தில் ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் ஒன்றுக்கு ஒன்று தாக்கி ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும். சிவப்பு கறுப்பை எதிரி என்றும் கறுப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்.

ஆனால் உண்மையில் எதிரி அந்த ஜாடியை அசைத்தவர் யார் என அந்த  எறும்புகளுக்குத் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. அப்படி செய்தவர் ஹாயாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டு இருப்பார்.

அது போல் இந்த சிக்கலான சமுதாயத்திலும் இதே நிலைதான். சாதி மத அரசியல் வெறியர்கள் குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் வக்கிரங்கள்.

குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் எதையும் நம்பி விடாதீர்கள். எங்கு பார்த்தாலும் வதந்திகள்... வதந்திகள்... மட்டும் தான். பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

எந்த விசயத்திலும் பொது புத்தியோடு அணுக வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுவதற்கு முன் நம்மை நாமே, ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த ஜாடியை குலுக்கியது யார்?

வெங்கடேசன்: எதையும் ஆராயமல் உணர்ச்சி வசப்படுவதால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது யார் பொறுமையுடன் இருக்கிறார்கள்?

தேவி கடாரம்: அருமை நல்ல பதிவு




 

04 பிப்ரவரி 2021

மலேசியம் ஹைக்கூ கவிதைகள்

04.02.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

ராதா பச்சையப்பன்: தமிழ் ஹைக்கூ கவிதைகள். நன்று.

தனசேகரன் தேவநாதன்:
படிக்க படிக்க பரவசப் படுத்தியது தங்கள் படைப்பு.

ரஞ்சன் கங்கார் பூலாய்: 90-களில் ஹைக்கூ கவிதைகள் தொட்டால் பற்றிக்குமே என்ற நிலையில் இருந்தது. கால ஓட்டத்தில் அவை மறக்கடிக்கப் படுவது வேதனை. ஆனால் தாங்கள் சமீப காலமாக ஹைக்கூ கவிதைகளைப் பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

தேவி கடாரம்: ஹைக்கூ கவிதைகளுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு காலத்தில் வார, மாத இதழ்களில் அலங்கரித்த ஹைக்கூ கவிதைகள் இன்று சிலரால் மட்டுமே விரும்பப் படுகிறது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: உண்மைதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் விட்டது. ஆனால் ஹைக்கூ கவிதை அப்படியல்ல. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. 




கலியுகம் பற்றி மகாபாரதம்

04.02.2021

மகாபாரதம் பற்றிய காணொலியைப் பதிவு செய்ததும், ஒருவர் அழைத்துப் பேசினார். இந்து மதம் தமிழர்களின் மதம் அல்ல. அதைப் பற்றி ஏன் பெருமையாகக் காணொலிப் பதிவுகளை எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டார். என்ன பதில் சொல்லலாம். அந்தக் காணொலியைப் பதிவு செய்தது தப்பா? தூங்கப் போகும் நேரத்தில் மனதில் சன்னமாய்ச் சின்ன இறுக்கம். அவரிடம் வாதம் செய்யலாம். ஆனால் தூக்கம் கெடும்.

பாலன் முனியாண்டி: தூங்குபவனை எழுப்பி விடாலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவரை எழுப்பவே முடியாது என்பதை போல... இவருடன் வாதம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட வாதம் பண்ணாமல் இருப்பதே சிறப்பு.

முருகன் சுங்கை சிப்புட்: அவருக்கு தெரிந்த ஒன்றை உங்கள் முன் வைத்துள்ளார். அவர் சொல்வது ஏதும் தவறு இருந்தால், அதை சரிப்படுத்த வேண்டியது தங்கள் கடமை. அதை விடுத்து உதாசீனப் படுத்துவது படித்தவர்களுக்கு அழகல்ல.

தனசேகரன் தேவநாதன்:
புள்ளி வைக்க இயலா விவாதங்கள்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அவரைப் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பார்ப்பதில் அழகு இல்லை.

பௌத்தம் ஒரு மதம். சீக்கியம் ஒரு மதம். கிறிஸ்துவம் ஒரு மதம். அந்த மதங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் கதையாகச் சொல்லும் போது சிலரும் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். குட் வெரிகுட் என்று பின்னூட்டம் வழங்குகிறார்கள்.

ஆனால் இந்து மதத்தின் கதைகளைச் சொல்லும் போது மட்டும் (வாழ்வியல் தத்துவங்கள்) ஏன் சிலருக்கு சினம் வருகிறது. புரியவில்லை. ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காமல் போகட்டும். அது அவருடைய 'பசால்'. அதற்காக மற்றவர்களின் இந்து மதக் கருத்துகளை எதிர்ப்பதில் நியாயம் இல்லை.

பி.கு: இந்தப் பதிவைப் படம் பிடிச்சு மற்ற புலனங்களில் போட்டு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... தமிழம் இயக்கத்துக்கு எதிரானவன் என்று பிரசாரம் செய்யாமல் இருந்தால் கோடி புண்ணியம். ஏற்கனவே பட்டு இருக்கிறேன்.

ராதா பச்சையப்பன்:
ஆமாம் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். நமக்கு தான் தெரிவது இல்லை.

கரு. ராஜா: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது போன்ற விவாதங்களை தவிர்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
இந்து எனும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக பல முறை வம்புக்கு இழுத்து பல முறை என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி ஓர் இந்துவத்வா என்றால் அதற்கு நாம் இங்கே என்ன செய்வது... இந்து என்பது ஒரு மதம். சிலர் சமயம் என்கிறார்கள். அதன் கீழே சைவம், சைவ சித்தாந்தம், என்பது எல்லாம் பிரிவுகள் அல்லது சமயப் பிரிவுகள்.

தினகரன் சுப்பிரமணியம் தங்காக்:
விடுங்கள் ஆசான் மனிதம் காப்போம்.

தேவிசர கடாரம்: முற்றிலும் உண்மை ஐயா. தெளிவாக சொல்லி இருக்கிறீகள். நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால் அது நம் கருத்து. அதை மற்றவர் மேல் திணிப்பது அநியாயம்.