30 மார்ச் 2021

சிறைக் கைதிக்கு மனைவி கடிதம்

 30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

அன்புள்ள கணவருக்கு... நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே... குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னால் இருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடம் இருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளை எல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.


குங்குமம் மகிமை

30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.


படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப் படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

5. தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

7. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

10. குங்குமம் இரு புருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக் கொள்ளும் மற்றவைகளை குங்குமத்திற்கு கீழே இட்டுக் கொள்ள கூடாது.

குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.

பெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.

குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலை பெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும்.

இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோயில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர்.

நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை. சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  

மதுரை மீனாட்சி ஆலயத்தின் தாழம்பூ மண குங்குமம் உலகப்பிரசித்தி பெற்றது.     

நன்றி: தினகரன் ஆன்மீகம்    

 

24 மார்ச் 2021

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது

24.03.2021

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளன. அது தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம்  22-க்கு 11 எனும் வாக்குகளில் நிறைவேறி உள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம், உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை (abstain).

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்காள தேசம், கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளித்தன.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் மலேசியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற 2021 பிப்ரவரியில் முறையீடு செய்தது.

இப்படி ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப் படுவது இலங்கை அரசுக்கு அனைத்துலக அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாகும்.

IN FAVOUR 22


Argentina 🇦🇷
Armenia 🇦🇲
Austria 🇦🇹
Bahamas 🇧🇸
Brazil 🇧🇷
Bulgaria 🇧🇬
Côte d’Ivoire 🇨🇮
Czechia 🇨🇿
Denmark 🇩🇰
Fiji 🇫🇯
France 🇫🇷
Germany 🇩🇪
Italy 🇮🇹
Malawi 🇲🇼
Marshall Islands 🇲🇭
Mexico 🇲🇽
Netherlands 🇳🇱
Poland 🇵🇱
Republic of South Korea 🇰🇷
Ukraine 🇺🇦
United Kingdom of Great Britain and Northern Ireland 🇬🇧
Uruguay 🇺🇾

AGAINST 11

Bangladesh 🇧🇩
Bolivia 🇧🇴
China 🇨🇳
Cuba 🇨🇺
Eritrea 🇪🇷
Pakistan 🇵🇰
Philippines 🇵🇭
Russia 🇷🇺
Somalia 🇸🇴
Uzbekistan 🇺🇿
Venezuela 🇻🇪

ABSTAIN 14

Bahrain 🇧🇭
Burkina Faso 🇧🇫
Cameroon 🇨🇲
Gabon 🇬🇦
India 🇮🇳
Indonesia 🇮🇩
Japan 🇯🇵
Libya 🇱🇾
Mauritania 🇲🇷
Namibia 🇳🇦
Nepal 🇳🇵
Senegal 🇸🇳
Sudan 🇸🇩
Togo 🇹🇬

மலேசியம்
24.03.2021

சான்றுகள்:

1. https://www.tamilguardian.com/

2. https://www.bbc.com/tamil/global-56496711

 

உளவியல் தகவல்கள்

24.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

1. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டு இருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்து இருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக் கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம். மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்தி இருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம்... புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தைச் சந்திப்பவர்கள் யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால்; ஒன்று அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல் அவர்கள் ஒரு போதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம். யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக தடவை கூறி விவாதித்தால், அதை அவர் செய்து இருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்.

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருத முடியும். அவர் அந்த பதற்றத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  

14. ஒருவர் அதிகாலையில் விழிப்பவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.

15. ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்து இருப்பவராக இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.  

16. ஒரு மனிதன் ஆகக் குறைந்தது 6 மணி நேரம் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவருக்கு பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

17. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts (முடியாது/ கிடைக்காது/ இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts பேசுபவராக இருப்பார்.




 

23 மார்ச் 2021

இறை தூதர் - என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு

23.03.2021

இறை அறிவு..
இப்புவியல் ..
கற்றோர்..
அறிவாரோ ..?



இறையின்..
விவேகம்...
மர்மம்..
மானுடம்...
புரிவாரோ.?

ஆண்டவர்..
அறிவே..
அனைத்திற்கும்..
ஆரம்பம்..!

இறைவனின்..
தூதரே..
அறிவின்..
போதகர்..!

இறை ஞானம்..
பெற்றிட..
இறை தூதரை..
ஏற்போம்..!


என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு




 

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மர்

 23.03.2021

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மரா? இது சாத்தியமா? இது என்ன புதிய கதை என்று கேட்கலாம். உலகத்திலேயே மூத்த இனம் என்று ஓர் இனம் பெருமை பேசிக் கொண்டு இருக்கும் போது, போதி தர்மர் பல்லவ இனம் சார்ந்தவர்; தமிழர்களின் இனம் சார்ந்தவர் என்று சொல்வதில் என்னங்க தப்பு.

இல்லாதவர்களே இருப்பதாகக் கற்பனை ஜோடனைகள் செய்யும் போது இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு.

குமரிக்கண்டம் அவர்களுடையது என்கிறார்கள். இராஜா சோழன் அவர்களின் பரம்பரையினர் என்கிறார்கள். ராமர் பாலம் அவர்களுடையது என்கிறார்கள். இந்தியப் பெருங்கடலில் பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்திய திசைக்காட்டியை அவர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் சேலை கட்டும் பழக்கத்தைத் தமிழர்கள் தான் இந்திய நாட்டிற்கு கடத்திச் சென்றார்கள் என்கிறார்கள்.

அதிரசம்; அல்வா; கேசரி; இட்லி; இடியப்பம்; தோசை; வடை; பருப்பு சாம்பார்; மிளகு ரசம்; மழை நீர் எல்லாமே பறிபோய் விட்டன. பாக்கி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழன் என்கிற பேர் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

அந்தப் பாவனையில் போதி தர்மர் அவர்களின் பரம்பரையினர் என்று சொல்வதற்கு அதிக நாட்கள் பிடிக்காது. போதி தர்மரின் பெயரை மாற்றி; அவரின் பல்லவப் பின்னணியைக்கூட மாற்றி விடலாம். காலம் நெருங்கி வருகிறது. பொறுத்து இருந்து பாருங்கள்.

ஒன்று மட்டும் சொல்வேன். போதிதர்மர் என்பவர் தமிழர் இனத்தைச் சார்ந்தவர் என்று நாம் இப்போதே இங்கே இந்தப் பக்கம் முன்னெடுப்பு செய்யவில்லை என்றால் போதிதர்மர் என்பவர் ’அவர்களின்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் காலத்தில் ’அவர்களே’ ஒரு கதையை உருவாக்கி விடுவார்கள். வடை போச்சே என்று வாயைப் பிளந்து உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் மிச்சம்.

வரலாற்றையே மாற்றி போதி தர்மரை அவர்கள் பக்கம் இழுத்து ஆலாபனை செய்யலாம். அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும். என் கருத்துகளில் உடன்பாடு என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை.

போதி தர்மர் வாழ்ந்த காலம் கி.பி. 475 - கி.பி. 550. இந்தக் காலக் கட்டத்தில் மலாயா கடாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை. அதை மறந்துவிட வேண்டாம். போதி தர்மர் சீனாவுக்குப் போகும் போது கடார மண்ணில் கால் பதித்து விட்டுத் தான் போய் இருக்கிறார். கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார்.

கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் உறவாடிச் சென்று உள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கடாரத்தில் தங்கி இருக்கிறார்.  

அந்தக் கட்டத்தில் அதாவது கி.பி. 500-ஆம் ஆண்டுகளில் கடாரம் பூஜாங் சமவெளியில் தமிழர்கள் வணிகம் செய்து வந்து உள்ளனர். ஓராங் அஸ்லி மக்களுடன் ஒன்றரக் கலந்து தமிழர் சார்ந்த பண்பாடுகளைப் பரவல் செய்து உள்ளனர்.

ஓராங் அஸ்லி மக்கள் வெற்றிலை போடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்து போனதாகும். கடாரத்திற்குச் சென்ற போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களிடம் வர்மக்கலையைச் சொல்லித் தந்து உள்ளார். கடாரத்து மண்ணில் வர்மக்கலை நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.

1025-ஆம் ஆண்டு கடாரத்தைக் கடைசியாக ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் வர்மக்கலையை ஆதரித்து குருகுலங்களை உருவாக்கி உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் வர்மக்கலை மிகவும் பரவலாகி இந்தோனேசியா வரை படர்ந்து உள்ளது. சுமத்திரா ஆச்சே பகுதியில் வர்மக்கலை பள்ளிக்கூடமே இருந்து உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.03.2021


https://ksmuthukrishnan.blogspot.com/2021/03/blog-post_23.html


சான்றுகள்:

1. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press,

2. Taylor, Nora A. (2000), Studies on Southeast Asia (Studies on Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor), 29, Southeast Asia Program Publications)

3. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: Indian Historical Research Institute

4. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)

5. Taisho Shinshu Daizokyo, Vol. 85, No. 2837 Archived 2008-06-05 at the Wayback Machine, p. 1285b 17(05)

https://www.facebook.com/ksmuthukrishnan/posts/4313371142010367?__cft__[0]=AZUADmf0QSPtsc13h_8A9NN-dfBc7-tP_gGklbxMes0YnonWoK8o7VtdOC8op8Gq2eXk8Eaf5qpqrcnUZRm9qHL4DSh1sJEndYas7uEsj3YKrdj4o2Fb7WCOOtrz_zPxO5A&__tn__=%2CO%2CP-R


பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இந்த கட்டுரையை நேற்று படித்தேன். நிறைய புரியாத புதிர்களுக்கு  கட்டுரை வழி விடைகள் கிடைத்தது மகிழ்ச்சியே கட்டுரையாளருக்கு நன்றி🙏🌺🙏🌺.


அட்லாண்ட்டிக் சுவர்

23.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்


இன்று மார்ச் 23 1942-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகப் போரின் அதிசயம் என்று சொல்லப்படும் அட்லாண்ட்டிக் சுவர் (Atlantic Wall) எனும் பாதுகாப்பு அரணை அமைப்பதற்கான உத்தரவை ஹிட்லர் பிறப்பித்தார்.

சுவர் என்று குறிப்பிடப் பட்டாலும், சிறு கோட்டைகள், தடுப்புகள் என்று மாறுபட்ட அமைப்புகளுடன் கொண்ட அரண். ஸ்பெயின் எல்லையில் தொடங்கும் பிரான்சின் கடற்கரைப் பகுதி, வடக்கே நோர்வேயின் வடமுனை வரை 3,200 கி.மீ.க்கும் அதிக (2,000 மைல்) நீளக் கடற்கரைப் பகுதியில் இது அமைக்கப்பட்டது.

அமெரிக்கா நேரடியாக உலகப் போரில் இறங்கியதும், நேச நாடுகளின் படைகள் கடல்வழியாக நுழையலாம் என்பதை எதிர்பார்த்த ஹிட்லர், 1943 மே 1-க்குள் (14 மாதங்களில்) இதைக் கட்டி முடிக்க உத்தரவிட்டார்.

17 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, 50 ஆண்டு அனுபவம் கொண்டிருந்த ஜெர்ட் வோன் ருண்ட்ஸ்ட்டெட் என்ற தளபதி, இந்தக் கட்டுமானப் பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.

ஜெர்மனியின் தாக்குதலை எதிர்பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தரைக்குள் மறைந்து இருந்து மேல் எழும்பும் பாதுகாப்புக் கோபுரங்களுடன், சுமார் 100 கி.மீ. தொலைவிற்குப் பிரான்ஸ் அமைத்து இருந்த ’மேஜினாட் லைன்’ என்கிற அரணை உடைத்து நுழைந்த அந்தத் தளபதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அவர் அனுப்பப் பட்டார்.


உண்மையில் அனைத்துப் பகுகளிலும் முழுமையாக கட்டி முடிக்கப் படவில்லை. எனினும் மிகப் பெரும் பகுதியைப் பாதுகாக்கிற வகையில் உருவாக்கப்பட்டு இருந்த இதற்கு இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டனர்.

வெறும் 10 விழுக்காடு ஜெர்மன் தொழிலாளர்களுடன்; சிறைப் பிடிக்கப் பட்டவர்கள் 90 விழுக்காட்டினர் பயன்படுத்தப் பட்டனர். 12 இலட்சம் டன் எஃகு (இருபதாயிரம் கவச வண்டிகள் செய்யலாம்), 1.7 கோடி கனமீட்டர் கான்க்ரீட் உள்ளிட்டவை பயன்படுத்தப் பட்டன.

இதன் அரண்களில், அதுவரை பிற படைகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த கப்பல்களின் பீரங்கிகள் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இவற்றுக்கான பல்வேறு விதமான குண்டுகளை விநியோகிப்பது மிகப்பெரிய சிரமாமாக இருந்தது. இருந்த போதிலும், எவ்வளவு தொலைவில் எதிரிகள் வரும் போது எப்படித் தாக்கினால் தடுக்கலாம் என்பதற்கு, ஏராளமான குண்டுகளைக் கடலில் சுட்டு ஒத்திகை பார்க்கப் பட்டது.

அத்துடன் கடலில் இருந்து இந்த அரண்கள் வரையிலான பகுதியில் சுமார் 50 இலட்சம் கண்ணி வெடிகளும் புதைக்கப் பட்டன.

1944 ஜூன் 6-இல் நோர்மண்டியில் இறங்கிய நேச நாடுகளின் படைகள், வெறும் சிலமணி நேரத்தில் இவற்றைத் தகர்த்து நுழைந்தன என்பது தனிக் கதை.

போருக்குப்பின் வெறுப்பின் சின்னங்களாக இவற்றைக் கருதிய மக்கள் பல பகுதிகளிலும் தகர்த்து விட்டாலும், பல பகுதிகளில் எஞ்சி இருப்பவை வரலாற்றுச் சின்னங்களாக நிற்கின்றன!
 



இந்திய மாவீரர்களின் நினைவு தினம்

1931 மார்ச் 24-ஆம் தேதி பகத்சிங் (24), சிவராம் ராஜகுரு (22), சுக்தேவ் (24) ஆகிய மூவருக்கும் லாகூர் சிறை வளாகத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை 11 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது முன்தினம் மார்ச் 23-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி விட்டனர்.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூவரும் ஒன்றாகவே, ஒரே சிறையில், ஒரே நேரத்தில், வீர மரணம் எய்தினர். இந்தியச் சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில் தூக்கில் போடப் பட்டவர்கள் இவர்கள் மட்டுமே.

சட்டப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட நீதிபதிகள் யாரும் முன்வராத நிலையில், ஒரு வெள்ளைக்கார நீதிமன்றத் தலைவரின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.

தண்டனை நிறைவேற்றப் பட்டதும், அவசர அவசரமாகச் சிறையின் பின்பக்கச் சுவர் ஒன்று உடைக்கப்பட்டது. பின்பக்கமாக, இரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு செல்லப் பட்டன.

சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்களின் அஸ்தி சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப் பட்டது.

இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில், மிக மிகச் சிறிய வயதில் தூக்குத் தண்டனை அனுபவித்தவர்கள். நிச்சயமாக இது நடக்கும் என முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் எந்தவிதச் சலனமோ, கலக்கமோ, வருத்தமோ காட்டவில்லை.

இந்தியத் தேசத்திற்காகச் சாவை எதிர் கொண்ட மகத்தான மாவீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். அவர்களின் நினைவுதினம் (மார்ச்-23) இன்று. அவர்களை என்றும் நினைவு கொள்வோம்.


பின்னூட்டங்கள்



தனசேகரன் தேவநாதன்: இவர்களின் தியாகத்தை இன்றைய தலைமுறையினர் மதிக்கிறார்களா. இந்தியாவில் அகிம்சை வழி சுதநந்திரம் என்பது சரியான ஒரு பதம். அதன் வரலாறு அதை மெய்பிக்குமா. தகவலுக்கு நன்றி ஐயா.

இமயவர்மன்: அருமை நண்பரே. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்கள் தூக்கு தண்டனை பெற்ற நாள் இது. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இந்த நாடு உள்ளது. அதே நேரத்தில் நாட்டைக் கொள்ளை அடிக்க கூட்டணி அமைத்துக் கொண்டு வீதிகளில் வலம் வருகிறார்கள் அவர்களுக்கும் மாலை மரியாதை பட்டு ஆடைஅளிக்கப் படுகின்றது. வெட்கக்கேடு.


வெங்கடேசன்:
இதற்கு எல்லாம் இவர்களுக்கு ஏது நேரம். தற்போதய அரசியல் மக்களை முட்டாளாக்கி... வறுமையில் தள்ளி.. இலவசங்களை அள்ளிக் கொடுத்து...சே மிகவும் கேவலமாகி விட்டது 😭😭😭



22 மார்ச் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் போட்டி 2021

22.03.2021

அனைத்துலக அறிவியல் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு (Emergeny Ranger Friendly System Project - Malaysia Innovation, Invention and Creativity Association - MIICA) பாராட்டுதலுக்கு உரியது.


உண்மையிலேயே கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி நிகழ்த்துகைக் காட்சியளிப்பு (presentation) பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எத்துனை அழகாக முன்வைக்கிறார்கள். எத்துனை அழகாக முன்னமைப்புச் செய்கிறார்கள். அனைவரும் மலாயா வாழ் தமிழர்களின் வாரிசுகள்.


இந்த நாட்டில் தமிழ்க் குழந்தைகள் மற்ற மற்ற மொழிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்குத் கங்கார் தமிழ்ப்பள்ளியும் முன்னுதாரணமாய் விளங்குகின்றது. பெருமைப் படுகிறோம்.


பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்ப் பெருமக்கள் மேலும் தமிழ்மொழிக்குச் சிறப்பு செய்ய வேண்டும். இந்தக் காணொலிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களை வெற்றி பெறச் செய்யலாம். அனைத்து அன்பர்களும் ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.


This is an international science project. Please like the school video to win in this video competition. Click in this link to like the video, comment and also please share to others.

https://www.facebook.com/watch/?v=476024890101248


மன்னிக்க முடியாத கோபம்

22.03.2021

பதிவு செய்தவர்: தேவிசர கடாரம்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டார்.

"மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்க துடிக்கிறீர்களா நீங்கள்?"

மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம் ...ஐயா’ என்றார்கள்.

ஆசிரியர்க்கு மிகுந்த வியப்பு. ஒவ்வொருவராக அழைத்து "மன்னிக்கவும்... மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள உள்ளன?" என்று கேட்டார்.  ஒவ்வொருவரும் ஐந்து பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்.  மாணவர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார் .

ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளிப் பழம் கொண்டு வரப்பட்டது. யார் மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிப் பழங்களைப் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தக்காளி பை எப்போதும் உங்கக் கூடவே இருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகிலேயே வைத்து இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள். ஓரிரு நாட்கள் ஒரு கதையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாடகளில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின.

நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப் பட்டனர்  ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர் .

மௌனமாகப் புன்னகைத்த ஆசிரியர், "நாற்றம் வீசுபவை தக்காளிகள் மட்டும் அல்ல அந்த நாற்றத்தை போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை, பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால் தக்காளிப் பையை தூக்கி எறியுங்கள் என்றார்.

அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு ஏற்பட்டது. அப்போதே தக்காளி பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசினார்கள் பகை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.

நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்து இருக்கிறோம். தக்காளி பை நாற்றத்தை நினைவில் கொள்வோம். பகைமை மறப்போம். பகுத்தறிவோடு பயணிப்போம்.


 

ஆண் பெண் மூளை வித்தியாசங்கள்

22.03.2021

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது!

உதாரணமாக ஒரு பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப் பட்டு உள்ளது.

உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலைபேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி

பெண்களால் இலகுவாகப் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும்!

அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண் குழந்தை அதிகப் படியான சொற்களைத் தெரிந்து வைத்து இருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.

அதனால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைப் படத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் மூளையால் இதைச் செய்ய முடியாது. அது மட்டும் அல்லாது பெண்களால் ஆண்கள் முன்வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்.

வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றால் போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.

இதற்குக் காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக் கூடிய மூளைத்திறன்” ஆகும்.

உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப் பேச்சு

ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராகப் பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக அதைப் பொய் என்பதை அறிந்து கொள்வார்கள்!

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறு இல்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் போது ஓர் ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சினையையும் தனித் தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தீர்வை படிப்படியாக இனம் காணும். இதனால் பிரச்சினை உள்ள ஆண்கள் தனிமையில் தம் தீர்வுகளை இனம் கண்டு கொள்வார்கள்.

ஆனால் இதே அளவு பிரச்சினை உள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சினைகளைத் தனித்தனியாக பிரித்து அறியாது. யாராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனைகளையும் வாய் மூலமாக சொல்வன் மூலம் திருப்தி அடைந்து கொள்ளும்.

சொன்ன பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

தேவைகள்

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை

ஒரு பெண்ணிற்கு தனது காதல் உறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால் அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால் ஓர் ஆணிற்கு தன் வேலையில் பிரச்சினை இருப்பின் அவர்கள் காதல் உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

உரையாடல்

பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!


பின்னூட்டங்கள்


 

கலைவாணி ஜான்சன்: அருமை அருமை... உண்மைகள் நிறைந்த பதிவு ஐயா...

தனசேகரன் தேவநாதன்: இயற்கையின் அற்புதம் நன்றி ஐயா🌷🙏🌺

வெங்கடேசன்: சிறப்பான ஆச்சர்யமூட்டும் தகவல்கள். மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். நம்மை சுற்றி உள்ள நம் பெண் பிள்ளைகள்; நம்முடைய சகோதரிகள் இவர்களுடைய பழக்க வழக்கங்களில் இதைப் பார்க்க முடியும் 😄


 

சிட்டுக்குருவி தினம் உருவான கதை

22.03.2021

சிட்டுக் குருவிகள்...  சின்னக் குருவிகள்... செல்லக் குருவிகள்.  அவை மனித குலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார்.


அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக் குருவியும் இடம் பெற்றிருந்தது.  சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படும் அளவுக்கு என்ன தப்பு செய்தன?

விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றது தான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னால் தப்பா?

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக் குருவிகளை அழிக்கப் பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப் பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள்.

அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனை விதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான்.

சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர்.

கோடிக் கணக்கான சிட்டுக் குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன.

பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின.

மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி).

ஆனால் 3 கோடியே 60 இலட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில், சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக் கூடச் சொல்லப் பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா.

வெட்டுக்கிளிகள், பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து சிட்டுக் குருவியின் பெயர் நீக்கப்பட்டது.

இப்போது சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சம் அடைந்தது. சின்னக் குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.

பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது.

பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின் நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால், மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை.

இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக் குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக் குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு சிட்டுக் குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர்.

- எம்.குமரேசன்; நன்றி: விகடன்

தனசேகரன் தேவநாதன்: உலக படைப்பே ஒன்றுக்கொன்று உதவி என்ற அடிப்படைதான் என்பதை உணர்த்தும் அனுபவக் கட்டுரை.

நாகராஜன்: பதிவு அருமை ஐயா

கென்னடி ஆறுமுகம்: அருமையான தகவல் ஐயா.

தேவிசர கடாரம்: அருமை ஐயா...👌

ராதா பச்சையப்பன்: சிட்டுக் குருவி, சிட்டு குருவி‌ சேதி தெரியுமா. சிட்டுக் குருவியின் தினம் கட்டுரை நன்று. பல விசயங்களை தெரிய வருகிறது. நன்றி 🙏🌻

வெங்கடேசன்: இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ முடியும். ஒரு சிறிய பறவை இனத்தை அழித்ததால் சீனர்கள் என்ன விலை கொடுத்து இருக்கிறர்கள். அருமையான கட்டுரை மிக்க நன்றி ஐயா.

கரு. ராஜா சுங்கை பூலோ: ஒரு சாதாரண சிட்டுக் குருவிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையா???? சீனாக்காரனும் சில நேரத்தில் முட்டாள் தனமாக முடிவு செய்து இருக்கிறான். பாராட்டுக்கள்.


 

மரகதப் புத்தர் சிலை

 22.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம் கிரீக்

1784 மார்ச் 22 ஆம் தேதி உலகின் மிகப் புகழ்பெற்ற மரகதப் புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள 'வாட் பரா கேவ்' அல்லது 'வாட் பரா சி ரத்தன சசாதரம்' என்று அழைக்கப்படும் ஆலயத்திற்கு மாற்றப் பட்டது.

உருவ வழிபாடு என்பதையே புத்தர் ஏற்காததால், தொடக்கத்தில் புத்தரின் சிலைகளே அமைக்கப்பட்டது இல்லை.

எண்பது வயதில் இறக்கும் வரை நடந்தே அவர் போதித்துக் கொண்டு இருந்ததால் அவருடைய பாதத் தடங்கள்; போதிமரம்; பயணிப்பவர் இல்லாமல் குடையுடன் குதிரை; அவர் இல்லாத வெற்றுச் சிம்மாசனம்; தர்மச் சக்கரம்; உள்ளிட்டவைதான் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

சக்கரத்தின் ஆரங்கள் சமமாக இருந்தால்தான் அது சரியாகச் செயல்படும். அந்த அடிப்படையில் சமத்துவத்தின் அடையாளமாகப் புத்தர் பயன்படுத்திய தர்மச் சக்கரம்; பாதம் உள்ளிட்டவை சமத்துவத்தையே ஏற்காத இந்து சமயத்தால் பின்னாளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

புத்தரின் உடலை அடையாளமாகப் பயன்படுத்துவதை அவர் மறுத்ததால், போதி சத்துவர்களின் உருவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரியதை புத்தர் ஏற்றுக் கொண்டதாக சர்வாஸ்த்திவாத பவுத்தம் கூறுவதால், போதி சத்துவர்களின் உருவங்களும் சிலைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து புத்தரின் சிலைகள் உருவாகத் தொடங்கின. இது அவருக்கு 5-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கிறித்துவின் உருவத்தை அந்தச் சமயத்தினர் பயன்படுத்தியதன் விளைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தொடக்ககால பவுத்தச் சிற்பக் கலையில், கிரேக்கச் சிற்பக் கலையின் தாக்கம் அதிகமிருப்பது, அப்பகுதிகளிலும் பவுத்தம் பெற்றிருந்த செல்வாக்கை மட்டுமின்றி, அங்கு கிறித்தவம் உருவான போது, பவுத்தத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் விளக்குகிறது.

இன்று உலகில் இருக்கிற மிகப் பெரிய 10 சிலைகளில் 4 புத்தர் சிலைகள். உலகம் முழுவதும் பரவலாக மிக அதிகச் சிலைகளைக் கொண்டு இருப்பவரும் புத்தர்தான். பல்வேறு மிக அரிய பொருட்களாலான சிலைகளும் புத்தருக்கு உள்ளன.

அவற்றில் ஒன்றான இந்த மரகதக் கல்லாலான புத்தர் சிலை உருவான வரலாறு யாருக்கும் தெரியவில்லை. இந்துக் கடவுளர்களான விஷ்ணு, இந்திரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன.

1434-இல் கிடைத்த இது, சுண்ணாம்பு சாந்தால் செய்யப்பட்ட சிலையாகவே கருதப்பட்டு, சியாங் ராய் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

எதிர்பாராமல் சிலையின் மூக்குப் பகுதி சேதமுற்ற போது, உள்ளே பச்சை நிறம் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டபோது இரண்டு அடிக்கும் அதிக நீளமுள்ள மரகதக் கல்லில் செதுக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஐந்து முறை இடமாற்றம் செய்யப்பட்ட பின், 1784-இல் தற்போதைய ஆலயத்தில் இது அமையப் பெற்றது.



 

17 மார்ச் 2021

ராமோன் மாக்சாசே

17.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1957 மார்ச் 17-ஆம் நாளில் பிலிப்பைன்ஸ்சின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ராமோன் மாக்சேசே (49 வயதில்) விமான விபத்தில் பலியானார். "ஆசியாவின் நோபல் பரிசு" என்று புகழப்படும் மகசேசே (மாக்சாசே என்பதுதான் பிலிப்பினோ மொழியில் சரியான உச்சரிப்பு) விருது இவர் பெயரில்தான் வழங்கப் படுகிறது.

இவரின் எளிமை, நேர்மை, மக்களுடனான நெருக்கம், பிலிப்பைன்சின் பொற்காலம் என்று புகழப் படுகிறது. இவர் ஆண்ட மூன்றாண்டு காலத்தில் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்றும் அவர் பெயரை நிலைபெறச் செய்யும் நோக்கில் இந்த விருது உருவாக்கப்பட்டது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பேருந்து நிறுவனத்தில் வாகனங்களின் பழுது நீக்குபவராக (ஆட்டோமொபைல் மெக்கானிக்) வாழ்ந்த மாக்சேசே, இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் பிலிப்பைன்சின் இராணுவத்தில் சேர்ந்தார்.

ஸ்பெயினின் குடியேற்ற நாடாக இருந்து, 1899-இல் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு இருந்த பிலிப்பைன்சை, உலகப் போரில் ஜப்பான் கைப்பற்றிய போது தப்பிச் சென்ற மாக்சேசே, காடுகளில் ஒளிந்து கொரில்லா போராளியாகப் போராடினார்.

உலகப் போரின் முடிவில் விடுதலைப் பெற்ற பிலிப்பைன்சில் நாடாளுமன்ற உறுப்பினரானார் மாக்சேசே. கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் என்று கருதப்பட்ட ஹுக்பலஹாப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, முன்னாள் கொரில்லா என்ற முறையில் பாதுகாப்பு அமைச்சரான மாக்சேசே, நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. வாழ்வு இழந்த விவசாயிகள் என்று புரிந்ததும், சரண் அடைபவர்களுக்கு நிலம் முதலானவற்றை வழங்கி போராட்டத்தைச் சுமுகமாக முடித்தார்.

இராணுவத்தில் இருந்த ஊழல்வாதிகளை அகற்றி, சீரமைத்து இராணுவத்தின் மீதும் மரியாதையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் கூட்டாளி; தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர். 1953-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தி, எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.

ஊழல், நெருங்கியவர்களுக்கு சாதகம் முதலானவற்றை ஒழித்தது; குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பொதுமக்கள் வந்து செல்ல முதன்முறையாக அனுமதித்தது; பொது இடங்களுக்கு தன் பெயரைச் சூட்டுவதற்கு அனுமதி மறுத்தது; ஊதியத்தைத் தவிர சிறப்புச் சலுகைகளை ஏற்காதது என்று நீளும் பட்டியல் அவரை மக்களின் தலைவராக்கியது.

தன் காரின் ஓட்டுனர் சாலைவிதியை மீறிய போது, தானே இறங்கி அபராதம் செலுத்தியது; கார் பழுதாகி ஓட்டுநர் தடுமாறிய போது மீண்டும் மெக்கானிக்காக மாறி தானே சரி செய்தது; போன்றவற்றால் மக்கள் வியக்கும் தலைவராக இருந்தார்.

அவரின் ஆட்சியில், பல துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிய பிலிப்பைன்ஸ், ஆசியாவின் இரண்டாவது மிகச் சிறந்த நாடாக விளங்கியது.

அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் இந்த விருதும் உருவாக்கப்பட்டது.



வளமெலாம் பழைய சோற்றிலே - பாதாசன்

17.03.2021

பதிவு செய்தவர்: கரு. ராஜா, கோலாலம்பூர்

வீட்டுச் சமையலை விரும்பெனக் கூறினால்
நாட்டுக் காரியின் நாசி லெமா வே
வேண்டும் என்கிறாள் வீம்புடன் பெயர்த்தி !
யாண்டும் பலரிடம் இதுவே நடப்பு !
"நாட்டுக் காரி நாசி யும் வேண்டாம் ;
நீட்டு காசை நினைத்த படிநான்
முட்டை ரொட்டி சானாய் முழுங்கணும்"
முட்டி அழுகிறான் மூத்த பெயரனும் !
"வாந்தான் மீயை வாங்கிவா தாத்தா
'ஏன்தான் ?' கேட்டால் எனக்கது பிடிக்கும்"
என்கிறான் இன்னோர் இளைய பேரனும் !



மிளகு ரசத்தைக் கேட்டால் மீசூப்
வழங்கி டட்டுமா ? மனைவி கேட்கிறாள் !
தின்றிட பெர்கர் சிறப்பாம்பீசா
மென்றிடச் சுவைதரும் மேகி - இப்படித்
தமிழர் சமையலில் சம்பந்த மில்லா
அமிலம் கலந்த அத்தனை உணவிலும்
ஆர்வம் காட்டி அசத்தும் தமிழினம்
தீர்வாய்க் கெண்டகி சிக்கனு க் (கு) அடிமை
ஓர்வாய் மெக்டொனால்ட் உண்ணா விடிலோ
யார்வா யிலும்சுவை இருப்பதே இல்லை !
இத்தனை நடந்தும்  இனும்நான் இருந்திட
மொத்தமோர் காரணம் முந்தி மொழிகிறேன் !
பச்சை நீரினைப் பாலாய்க் கருதியான்
பச்சைவெங் காயம் பக்கம் வைத்துச்
சோற்றுடன் கலந்து சுவைத்தே உண்பதால்
ஆற்றங் கரைச்செடி போலவே செழிப்புடன்
நலத்துடன் வாழ்கிறேன் நாளும்
வளமெலாம் வீட்டுப் பழைய சோற்றிலே !


கவிஞர் பாதாசன்


 

ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி கணேசன்

17.03.2021

பதிவு செய்தவர்: இயக்குநர் விஜயசிங்கம்

’நான் மேடையிலே போடாத வேஷம் இல்லை. அர்ஜுனனா நடிச்சிருக்கேன், அரிசந்திரனா நடிச்சிருக்கேன். நான் போடாத வேஷம் இது ஒன்னுதான்ப்பா.

இன்னிக்கு தான்ப்பா என் தம்பிக்கு முன்னாலேயே அண்ணனா நடிக்க போறேன்' என்று ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் தம்பியாக நடித்த ஸ்ரீகாந்திடன் சொல்வார் ரங்கதுரையாக வாழ்ந்த நடிகர் திலகம்.

அதே படத்தில் டி.கே. பகவதி அவர்களிடம் "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், ராத்திரியிலே ராஜா வேஷம் போட்டு நடிக்கிறதுலே இருக்கிற இன்பம் வேறு எதிலேயும் இல்லை" என்று சொல்லும் போது நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், பக்தியையும் உணர்த்தினார்.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வராமல் இருக்குமா? காட்சியின் ஆரம்பத்தில் காட்டும் கம்பீர நடை, முடிவில் தலை குனிந்து தளர்ந்த நடை... பிறவி நடிகரையா🙏

திரை உலகின் மிக சிறந்த நடிகன் என்ற பெயரும், புகழும் பெற்ற பின்பும் அவர் தனது முதல் காதலான நாடக மேடையை என்றும் மறக்கவில்லை.

சினிமாவுக்கு வந்த பின்னரும் பல படங்களில் ஓரங்க நாடகங்களில் நடித்து தன் நாடக நடிப்பென்னும் தாகத்தைத் தீர்த்து கொண்டதோடு மட்டுமில்லாமல், ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்தார்.

சேரன் - செங்குட்டுவன் (ராஜா ராணி), ஓதெல்லோ ஆங்கில வசனம் பேசி நடித்த இரத்த திலகம், சாம்ராட் அசோகனாக அன்னையின் ஆணையில், சீசராக சொர்கம் படத்தில், சலீமாக, சாக்ரடீசாக, வீர வசனம் பேசும் சத்ரபதி சிவாஜியாக (ராமன் எத்தனை ராமனடி)

'ராஜபார்ட் ரங்கதுரை'யில் ஒரு நாடகக் கலைஞன் தன் தொழில் நிலைத்து நிற்க சந்திக்கும் சோதனைகளை நடிகர் திலகம் மிக அருமையாக வெளி படுத்தி இருப்பார்.

தன் 32-ஆவது வயதில் 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக ஆசிய-ஆப்ரிக்க திரை விழாவில்  சிறந்த நடிகர் பட்டம் வாங்கிய முதல் இந்தியன் என்ற பெருமை பெற்ற நடிகர் திலகம் தான்.  

படங்களில் ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்த கால கட்டத்திலும் பல மேடை நாடகங்களில் நடித்தார். தனது 18-ஆவது வயதிலேயே 'சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்' நாடகத்தின் மூலம் 'சிவாஜி' கணேசன் என்று பெரியாரால் அழைக்கப் பட்டவர் அல்லவா நடிகர் திலகம்!

ஒரு கலைஞனுக்கு தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட, தன் நடிப்பிற்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை.

ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை நடிகர் திலகம்.

தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடத்தினார்.

வியட்நாம் வீடு, தங்க பதக்கம் போன்ற நாடகங்களில் நடித்தார். பின்னர் அவை திரைபடமாக வந்து சக்கை போடு போட்டன. தனது சிவாஜி நாடக மன்றம் மூலம் பல நடிகர்களுக்கு வாய்பளித்தார், அவர்களின் வருமானத்துக்கு வழி வகுத்தார். தனது திரை படங்களிலும் பல நாடக  நடிகர்களுக்கு வாய்பளித்தார்.

நாடகங்களிலும், வெள்ளிதிரையில் மட்டுமில்லாமல், சின்ன திரையிலும் தோன்றி நம்மை அவர்  மகிழ்வித்திருக்கிறார்.

சிவாஜி மகராஜ் சத்ரபதியாக பட்டம் சூட்டி 300 ஆண்டுகளை கொண்டாட 'சத்ரபதி சிவாஜி' என்ற பெயரில் 1974-ஆம் ஆண்டில் 30-நிமிட படத்தை ஏ.வி.எம். நிறுவனம், பம்பாய் தூர்தர்ஷனுக்காக தயாரித்தது. 1974-ஆம் ஆண்டு ஜுலை 21-ஆம் தேதியில் அது ஒளிபரப்பபட்டது.

சிவாஜி சிவாஜியாக தோன்றி அற்புதமாக நடித்த மோனோ acting மிக பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கான எல்லா தயாரிப்புச் செலவையும் நடிகர் திலகம் தானே ஏற்றுக் கொண்டார் என்பது கூடுதலான செய்தி.

சிவாஜியாக நடித்து புகழ் பெற்று திரை உலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த பூமியை விட்டு (நம்மை விட்டு போகவில்லை. இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார்) பிரிந்ததும் ஒரு ஜூலை 21 தான்!!😢

நடிகர் திலகம் வெள்ளித் திரையில் அடைந்த புகழை போலவே, நாடக மேடையிலும் பல புகழ் பெற்ற கதாபாத்திரங்களை, தேசப் பக்தர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து நம்முடன் வாழ்ந்து வந்தார்.

அவர் அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கா விட்டால், கட்டபொம்மனையும், கொடி காத்த குமரனையும், சத்ரபதி சிவாஜியையும், பகத் சிங்கையும், வாஞ்சிநாதனையும் அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது.

தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழ் நாட்டின் பெருமை. அவர் போல் தொழில் பக்தி கொண்டவர்கள் உண்டோ?🙏

அனைவரும் படித்த, கேட்ட செய்தியாக இருக்கலாம். ஆயினும், நடிகர் திலகம் புகழ்  பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும், எழுதினாலும் அலுப்பதில்லையே! அதுதான் அவரின் மகிமை.


மலேசியத் திரைப்பட இயக்குநர் விஜயசிங்கம்


மலேசியம் புலன அன்பர். மலேசியாவில் பல மேடை நாடகங்களை அறங்கேற்றம் செய்து தன் திறமையை உணர்த்தியவர்.

தமிழ் மலாய் ஆங்கில மொழிகளில் நிறைய தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்தவர். கதாசிரியர்; வசனகர்த்தா; இயக்குநர்; தயாரிப்பாளர். இப்படிப் பல்வேறு பரிமாணங்கள். நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகர்.

தமிழகத்தில் ‘நினைவுகள் மறைவதில்லை’ என்ற திரைப்படத்தை பெரும் கனவுகளுடன் இயக்கியவர். 2002-ஆம் ஆண்டு Film Station Productions நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். 




15 மார்ச் 2021

கல்வெட்டுகளில் தேவதாசி நூல் விமர்சனம்

14.03.2021

பதிவு செய்தவர்: முனைவர் க.சுபாஷிணி

வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சாந்தினிபி அவர்கள் எழுதி, விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் ''கல்வெட்டுகளில் தேவதாசி'.

தேவதாசி அல்லது தேவரடியார் என்று குறிப்பிடப் படுவோர் யார் என்ற கேள்வியும், அதன் பின்னணியிலான சர்ச்சைகளும், அவர்களைப் பொதுவாகவே பாலியல் தொழில் சார்ந்தவர்களாக எண்ணக் கூடிய சிந்தையும் அதிகரித்து வெளிப்பட்ட சூழலில், தேவரடியார் என்பவர் யார் என்பதை கல்வெட்டுகளின் சான்றுகளின் அடிப்படையை வைத்து ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி இருக்கின்றார் நூலாசிரியர்.

நூலின் 12 தலைப்புகளில் தேவரடியார் தொடர்பான செய்திகள் ஆராயப் படுகின்றன. தேவரடியார் தோற்றம், தேவரடியார்களின் பெயர்கள், அவற்றிற்கான விளக்கம், கோயிலுக்குள் பணிசெய்ய வந்தது எப்படி, கோயில்களில் தேவரடியார்கள், அவர்களது கடமை, அவர்களது போராட்டம், சிறப்பான செயல்பாடுகள், அவர்களது பொருளாதார சமூக நிலை, கோயில்களில் கொள்ளைகளும் நடந்தன போன்ற செய்திகள், கால ஓட்டத்தில் தேவரடியார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், அம்மாற்றத்தின் பின்னணி, தேவதாசிகள் எனப் படுவோருக்குள் உள்ள பிரிவு என நூல் விரிவாக ஆராய்கின்றது.

நூலில் மிக முக்கியமாக தேவரடியார் - தேவதாசி என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கம் வழங்கப் படுகின்றது. அதனை அடுத்து தேவரடியார் எனப்படுபவர் அல்லது தேவர் மகளார் என மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெயரிடப்பட்ட பெண்கள் எத்தகைய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், அவர்களைப்பற்றி பல்வேறு கோயில்களில் வழங்கப்பட்டுள்ள கல்வெட்டுச் சான்றுகள் பற்றிய செய்தி என்பவை நூலில் பல இடங்களில் விளக்கப் படுகின்றன.

நூலில் தனியொரு அத்தியாயமாக `பொருளாதார சமூக நிலை` என்ற தலைப்பில் நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்கள் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. `அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு` என்ற அறிவுக்கு ஒவ்வாத பழமொழி கடந்த நூற்றாண்டில் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் வந்திருக்க வேண்டும்.

ஏனெனில் காலம் காலமாக தங்கள் குடும்ப வாழ்க்கையின் பொருளாதார நிலையை தக்கவைக்க பெண்கள் விவசாயத்திலும், தொழிற்சாலைகளிலும், வெளி இடங்களிலும், பொது இடங்களிலும், பணிபுரிந்த செய்திகளை நாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அந்தப் பணியை செய்வதில் இச்சிறு நூல் பங்களித்துள்ளது.

தேவரடியார் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட பெண்களின் நிலை அவலநிலைக்கு மாறியதற்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசியல் நிலைத்தன்மை முக்கிய காரணமாகிறது.

குறிப்பாக விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் கோயில் கலாச்சாரம் என்பது மாற்றம் கண்டு, பெண்கள் பாலியல் ரீதியாக குறிவைத்து தாக்கப்படும் அவலநிலை ஏற்பட்டது.

தேவரடியார் எனும் சொல்லில் `ர`கரம் நீக்கப்பட்டு `தேவடியாள்` என மாறி, பரத்தை எனும்  சொல்லாக நம் சமூகத்தில் ஒரு சொல் உருவாகியிருப்பது அவலம். தமிழைப் சிறப்பித்து செம்மொழியைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

அழுக்கேறிய சிந்தனையுடன் தேவரடியார் என்ற சொல்லைச்  சிதைத்ததோடு அதன் பொருளையும் சிதைத்து பெண் சமூகத்திற்குக் கேட்டினை விளைவித்த செயலை நாம் கண்டிக்க வேண்டியது அவசியம். அச்சொல்லை நம் பேச்சு வழக்கிலிருந்தே தமிழ் மக்கள் ஒதுக்க வேண்டியதும் தமிழுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது.  மிகப்பழமையான பல செய்திகளைக் கல்வெட்டு சார்ந்து கூறும் ஆசிரியர்,  இக்கால மற்றும் இடைக்கால அரசியல் மற்றும் சமூக செய்திகளையும் நூலில் பல இடங்களில் இணைத்திருக்கிறார்.

அத்துடன் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டங்கள், கடந்த நூற்றாண்டில் பல தளங்களில் பாலியல் தொழிலுக்கு எதிராக நிகழ்ந்த சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமன்றி  சில மதம் சார்ந்த அமைப்புகளின் `நாட்டிய எதிர்ப்பு

இயக்கம்` போன்ற செய்திகளும் இணைக்கப் பட்டிருப்பது சிறப்பு. இது பாராட்டுதலுக்குரியது. நூலில் பல சான்றுகள் பேசப்படுகின்றன. ஆனால் இந்த நூலில் கூறப்படுகின்ற சான்றுகளுக்கான துணை குறிப்புகளோ அல்லது `சைட்டேஷன்` என்று சொல்லப்படுகின்ற சான்றுகள் தொடர்பான ஆவணங்கள் பற்றிய செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரும் குறையாகவே காண்கிறேன்.

இந்த நூல் எடுத்துக் கொண்ட தலைப்பு ஆழமானது, கணமானது. இத்தகைய தலைப்பு பற்றி கூறுகின்ற நூல் ஒவ்வொரு கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும்,  அரசியல் தொடர்பான செய்திகள் கூறப்படும் போது அல்லது வரலாற்று நிகழ்வுகள் பதியப்படும் போது அவை பற்றிய சரியான துணை குறிப்புகளையும் பட்டியலிட்டிருக்க வேண்டும்.

அது இடம்பெறாமல் இருப்பது இந்த நூலில் நான்  காணும் மிகப்பெரிய ஒரு குறை என்றே கருதுகிறேன்.ஆசிரியர் தனது அடுத்த பதிப்பில் இந்தக் குறையை நீக்கி எல்லாச் சான்றுகளுக்கும் முறையான துணை குறிப்புகளை வழங்கி இந்த நூலின் தரத்தை மேலும் உயர்த்துவார் என்று நம்புகின்றேன்.

ஏறக்குறைய 102 பக்கங்கள் கொண்ட இந்த நூல் கணமான பொருளை, வரலாறு, சமூகவியல், அரசியல் என்ற முப்பரிமாணத்தில் அலசி ஆராய்கின்றது. தமிழ் ஆய்வுலகத்திற்கு, அதிலும் குறிப்பாக சமூகவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு இந்த நூல் நிச்சயம் பயனளிக்கும்.


ஜூலியஸ் சீசர் படுகொலை நாள் மார்ச் 14

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

கி.மு. 44-ஆம் ஆண்டு இன்றைய நாளில் ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப் பட்டார்.

ரோமக் குடியரசு தோற்றுவிக்கப்பட்ட பின் ஆண்டுக்கு ஒரு முறை செனட் தேர்ந்து எடுக்கும் இரண்டு கான்சல்கள் இணைந்து ஆட்சி நடத்துவார்கள். கி.மு.59-இல் கான்சலாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட சீசர், முந்தைய ஆட்சியாளர்களைப் போலன்றி, எளிய மக்களின் நலனில் அக்கறை காட்டினார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்கினார். நிலச் சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு விளைநிலங்கள் வழங்கினார்.

வேலையின்மை, வன்முறை, ஊழல் ஆகியவை மலிந்து இருந்த ரோம் நகரில், சீசர் வேலைகளை வழங்கியதுடன், நகரையும் ஒழுங்கு படுத்தினார். நாள்காட்டியைச் சீரமைத்து ஜூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். பிரதேச ஆளுநர்களின் பதவிக் காலத்தைக் குறைத்துச் செனட்டை விரிவாக்கினார்.

இத்தகைய செயல்பாடுகளைத் தடையின்றித் தொடர்வதற்காகத் தன்னைச் சர்வாதிகாரியாகவும் செனட்டையே அறிவிக்கச் செய்தார். இவற்றால் இராணுவம், எளிய மக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும், ஏற்கெனவே இருந்த ஆளும் வர்க்கத்தினரால் ஏற்க முடியவில்லை.

பேரரசர் எனும் அளவுக்குச் செய்யப்பட்ட மரியாதைகளைச் சீசர் மறுத்தாலும், அவரின் ஒப்புதலுடன் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, குடியரசைக் காப்பதற்காக அவரைக் கொலை செய்யச் சதி செய்தனர்.

மார்ச் ஐடஸ் (15) என்பது பாரம்பரியமாக, ரோமானியர்கள் கடன்களைத் தீர்ப்பதற்கான நாளாகும். அந்த நாளில், 60 சதிகாரர்கள் சூழ்ந்து, சீசரின் உடலில் 23 இடங்களில் கத்தியால் குத்தினர்.

அன்றைக்கு அவைக்குச் செல்ல வேண்டாம் என்று சீசரின் மனைவி தடுத்த போதும், அவரை அழைத்து வந்தது டெசிமஸ் புரூட்டஸ்தான். அதனால்தான், இரண்டாவது ஆளாக புரூட்டஸ் கத்தியால் குத்தியதும், 'நீயுமா புரூட்டஸ்' என்று சீசர் கூறியதாக சேக்ஸ்பியர் எழுதினார்.

ஆனால், உண்மையில் சீசர் எதுவுமே சொல்லவில்லை என்றும், 'நீயுமா குழந்தையே' என்று சொன்னதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

சதிகாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மக்கள் கிளர்ந்து எழுந்ததில், அவர்கள் அனைவரும் நாட்டை விட்டே ஓட நேர்ந்தது. வாரிசாக சீசர் அறிவித்து இருந்த ஆக்டேவியஸ் (அகஸ்டஸ் சீசர்) பேரரசராகி, குடியரசே இல்லாமல் போனது.

நாட்டை விரிவாக்குவதில் தீவிரமாக இருந்த சீசர் கொல்லப் படாமல் இருந்து இருந்தால், அலெக்சாண்டர் போல ரோமப் பேரரசை விரிவாக்கம் செய்து இருக்கக் கூடும். ஐரோப்பிய வரலாறேகூட வேறு மாதிரி இருந்து இருக்கலாம் என்கிறார்கள்!

சில கூடுதல் தகவல்கள்:


பூம்புகார் படத்தின் 'போகாதே, போகாதே, என் கணவா...' போலவே, கெட்ட கனவுகளைக் கண்டதாகக் கூறி, அன்றைய நாளில் அவைக்குச் செல்ல வேண்டாமென்று அவரின் மனைவி தடுத்தார்.

சீசர் நண்பராகக் கருதிக் கொண்டு இருந்த புரூட்டஸ்தான், ’பெண்களின் கனவுக்கு எல்லாம் சீசர் முக்கியத்துவம் தரலாமா’ என்று கூறி (சீண்டி) அழைத்துச் சென்றார்.

சீசர் அவைக்குள் நுழைந்த உடனேயே, நாடு கடத்தப் பட்டிருந்த தன் சகோதரரை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கும் சாக்கில், டிலியஸ் சிம்பர், சீசரின் தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவரது அங்கியைப் பிடித்து இழுத்ததால், சீசர் அசைய முடியாமல் போன நேரத்தில், சூழ்ந்து கொண்டு, கத்திகளால் குத்தினர்.

சீசரைக் கொன்றபின், கொன்ற செனட்டர்கள், மக்கள் மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு, 'வெற்றி வெற்றி, குடியரைக் காப்பாற்றி விட்டோம்' என்று கூவியபடி தெருக்களில் செல்ல, வீடுகளின் கதவுகளை அடைத்துக் கொண்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேயில்லை.

கொல்லப் பட்டபின் நடைபெற்ற குழப்பங்களில், சீசரின் உடல், அவையின் படிகளிலேயே மூன்று மணி நேரத்திற்குக் கிடந்தது. சீசரின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, புரூட்டஸ், கேஷியஸ் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கினர்.

நடுத்தர, கீழ்த்தட்டு வர்க்க மக்கள், தங்கள் நலனில் அக்கறை கொண்டவரை, ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறிய கூட்டம் கொன்று விட்டதாகப் பொங்கி எழுந்தது உள்நாட்டுப் போராகியது.

சீசர் வாரிசாக அறிவித்து இருந்த கையஸ் ஆக்டேவியஸ், 18 வயதே ஆகி இருந்தாலும், தெளிவான அரசியல் அறிவுகளைப் பெற்று இருந்ததால், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அரசுத் தலைவரானார்.

 

தமிழர் இனத்தின் மீது ஏன் வஞ்சனை?

15.03.2021

வெங்கடேசன்: அறிவு பூர்வமாக எதையும் அணுகுவது கிடையாது. சிறிய விசயத்திற்கு கூட உணர்ச்சி வயப்படுவது. அதற்கு உதாரணம் நம் சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகள். சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் கடையை அடித்து நொறுக்குவது 😭😭😭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக வளர்த்து இருந்தால் அடாவடித் தனங்கள் நடைபெறா. தலை சரியாக இருந்தால் வாலும் சரியாக இயங்கும்.

வெங்கடேசன்: நான் பார்த்த சில பெற்றோர்கள் நல்ல குணம் உடையவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் படுமோசமாக இருக்கிறார்கள் ஐயா 😭😭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மையாக இருக்கலாம். இருந்தாலும் கோழி முட்டை போடுவது எப்படி ஐயா கோழிக்குத் தெரியாமல் இருக்கும்?

வெங்கடேசன்: ஆகா என்ன உவமானம் ஐயா 🤭🤭🤭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். மகன் செய்வது பெற்றோருக்குத் தெரியாமலா போகும். போற்றிப் போற்றி வளர்ப்பதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறோம். ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் பக்கத்தில் இருக்கும் மட்டையைச் சார்ந்துதான் ஊறிக் கொண்டு இருக்கும்.

டாக்டர் ஜெயஸ்ரீ: இயந்திர கதியில் ஒடும் இவ்வுலகில் குழந்தைப் பராமரிப்புக்கு பெற்றோருக்கு நேரம் செலவிட நேரமில்லை; அவர்களுக்கு நேரமின்மை காரணம். எவ்வளவு நல்ல பெற்றோராய் இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி, தட்டித் திருத்தி கலந்து ஆலோசித்து சரி எது  தவறு எது என மாதிரிகளுடன் உணர்த்துகிற போது; பல்வேறு சூழ்நிலைகளில் நீண்ட நேரம் செலவிடுகிற போது; பெற்றோரைப் பார்த்து பிள்ளைகள் வழி நடப்பர்.

நீண்ட நேரம் பேசுகிற போது குழந்தைகளுக்கு எண்ணங்களைப் பகிரும் பழக்கத்தை போதிக்கிறோம். பின்னர் அதுவே பழக்கமாகி விட பிள்ளைகள் பகிரும் வழக்கமும் எடுத்துச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். இன்று என்னைப் பொருத்தவரை நேரமின்மை தான் பரம எதிரி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சரியாகச் சொன்னீர்கள். அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழலில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க நேரம் இல்லாமல் போகிறது. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கிப் பிள்ளைகளுடன் பேச வேண்டும். அன்றைக்கு எங்கே போனார்கள். என்ன செய்தார்கள் என்பதைக் கண்டு அறிய வேண்டும்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் பெற்றோர் நம்மைக் கண்காணிக்கிறார்கள் எனும் அச்சம் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். தவறு செய்ய தயங்குவார்கள். தவறு செய்தாலும் பெற்றோரிடம் அறிவுரை கேட்பார்கள்.

பிள்ளைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அவர்கள் செய்வதே அவர்களுக்குச் சரி எனப் படும். தவறு செய்தாலும் அந்தத் தவறு சரி எனவே அவர்களுக்குத் தோன்றும்.

ஒரு குழந்தை வாழ்வது பெற்றோரின் கைகளில் உள்ளது. தாழ்வது சுற்றுச் சூழல்; நடைமுறைப் பழக்க வழக்கங்கள்; நண்பர்களிடம் உள்ளது.

வெங்கடேசன்: உண்மை தான் நீங்கள் சொல்வது. தற்போதய சூழ் நிலையில் இருவருமே வேலை செய்தால்தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் 👍




ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம்

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

இன்று மார்ச் 14 தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம். சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே மனிதகுலத்துக்கு பெரும்பயன் சேர்த்த வியத்தகு சாதனையாளர்.

இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942-ஆம் ஆண்டு பிறந்தவர்

1962-ஆம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

ஹாக்கிங்ஸ். குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடல் இயக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் இருந்தார். கணினி வழியாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு உள்ளானார்.

இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொது வாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்ததோடு சகர நாற்காலியில் இருந்தவாறே பிறருக்கான உந்து சக்தியாகவும் இருந்தார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத் துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியவை.

கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப் பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன என்றும்; அதன் மூலம் காலப் போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என்றும்; இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இந்த வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

அதிதீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து, இஸ்ரேலில் பங்கேற்க வேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார்.

வியட்நாம் மீதான போர், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு எனத் தன் வீல்சேரில் பயணித்த படியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார்.

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்" என உறுதிபடக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்!


 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளை

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

கல்வி என்பது வெறும் விதிகளைக் கற்றுக் கொடுப்பது அல்ல. மாறாக மனித மூளையை சிந்திக்கத் தூண்டும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்றார் ஐன்ஸ்டீன்!

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆகச் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1955-ஆம் ஆண்டு தனது 76-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்தார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளையை எடுத்து வைத்து கொண்டார்.

இதனை அறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர், தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக ஹார்வே கூறினார்!

இருந்த போதும் அவர் பணி நீக்கம் செய்யப் பட்டார். ஆனாலும் ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.

இந்த நிலையில், ஐன்ஸ்டீன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு அவரின் மூளையை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் ஹார்வேயிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஐன்ஸ்டீன் மூளையின் சில பகுதிகளைப் பரிசோதனைக்காக வழங்கினார்.

அதில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர். சராசரி மனிதனைக் காட்டிலும் ஐன்ஸ்டீன் மூளை சிறியது என்றும், அதே சமயம் சராசரி மனிதனின் மூளையை விடவும் அடர்த்தியானது என்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்!

தற்போது ஐன்ஸ்டீன் மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்பியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதைப் பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்ட இந்த மூளையின் துகள்களை லென்ஸ் மூலமாகத்தான் பார்க்க முடியும். 20-ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மூளை ஐன்ஸ்டீனுடையது!!

13 மார்ச் 2021

மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டுகிறது

13.03.2021

கரு. ராஜா சுங்கை பூலோ: உங்கள் கட்டுரையைப் படித்தேன். கூடிய விரைவில் இந்த கட்டுரைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெரிய நூலாகப் போட்டு விடுங்கள். உங்களுக்குப் பிறகு இது போன்ற கட்டுரைகளை எழுத இங்கே எழுத்தாளர்கள் இல்லை.

ஆகவே, கூடிய விரைவில் புத்தகம் வெளியாக வேண்டும். நம் சந்ததிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதை எல்லாம் மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டிக் கொண்டு பேயாய் திரிகின்றது. கட்டுரை அருமை. பாராட்டுக்கள்.

மகேந்திர மணி காப்பார்: உண்மை... வரவேற்கிறோம்🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க ராஜா. மிகச் சிரமப்பட்டுக் கட்டுரைகள் தயாரிக்கப் படுகின்றன. பல நூல்களைப் படித்து பல இணைய ஊடகங்களில் இருந்து பதிவுகளைச் சேகரித்து; பல நாடுகளின் பழம் பொருள் காப்பகங்களில் இருந்து பதிவுகளை மீட்டு எடுத்து... சற்று சிரமமே. ஒவ்வொரு நாளும் 6 - 8 மணி நேரம் பிடிக்கும்.

என் மனதில் நீண்ட நாட்களாக ஓர் ஆதங்கம். அதையும் சொல்லி விட்டீர்கள். நமக்குப் பிறகு யார் எடுத்துச் செய்யப் போகிறார்கள் எனும் ஆதங்கம் தான்.

அதனால் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகு முன்னர் பிரார்த்தனையின் போது இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைப்பேன். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நோய் நொடி இல்லாமல் நகர வேண்டும்.

இயன்ற வரையில் மலாயா தமிழர்களைப் பற்றிய தகவல்களை மீட்டு எடுத்து ஆவணமாக்கிவிட வேண்டும். அவற்றை நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சீதனமாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இதுதான் என் ஆசை.

காசு பணம் புகழ் பதவி எதுவும் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்தால் போதும்... வயதும் உயர்கிறது. செய்து முடித்துவிட வேண்டும். கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🌻

ஜெயகோபாலன்: நான் மிகவும் வரவேற்கிறேன் ஐயா 🙏

தேவி சர: தங்கள் எண்ணம் போல் எல்லாம் அமையும் ஐயா... தங்களுக்காக எங்கள் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்..🙏🏻

டத்தோ தெய்வீகன்: வணக்கம் தலைவரே. பணிகளிலேயே மிகவும் சிரமமான பணி, எழுதுவது. அதுவும் ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் பல செய்து, தகவல்கள் சரியானதா என்று சரிபார்த்து, பின்னர் எழுத்துப்பிழை, சொற்பிழை, வாக்கியப் பிழை, கருத்துப் பிழை என்பதை எல்லாம் சரிபார்த்து, குறித்த நேரத்திற்குள் எழுதி முடிப்பது சாதாரண பணியல்ல.

ஓய்வு இல்லாமல் ஓடுகின்ற நதியைப் போல, உங்களின் எழுத்துப் பணி,  ஆண்டுகள் பலவாக, தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது. உங்களின் முத்தான எழுத்துக்கள், எதிர்கால சந்ததியின் அறிவுக்கு வித்தாகவும், நெஞ்சுக்கு சத்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் உங்கள் பயணம். கலையட்டும் சமுதாயத்தின் நீண்ட சயனம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
நன்றிங்க ஐயா தெய்வீகன் அவர்களே. தாங்கள் சொல்வது மிகச் சரி. நம் இனத்துக்கு எதையாவது செய்து நிரந்தரமாக்கி விட்டுச் செல்ல வேண்டும் எனும் ஒரு தூண்டுதலே மூல காரணம்.

நாம் மறைந்த பின்னர் நம் சந்ததியினர் நம் வரலாறு தெரியாமல் வாயில்லா பூச்சிகளாக... அப்பாவிகளாக இருந்துவிடக் கூடாது. அதற்காக இப்போதே செய்து விடுவோம் எனும் உத்வேகம் உயிர்ப்பு பெறும் போது அசதி சோர்வு எல்லாம் ஏற்படுவது இல்லை ஐயா.

கொரோனா கட்டுப்பாடு தளர்ந்ததும் நூல்களை வரிசையாக வெளியிட்டு விடுவோம். மிக மிகக் குறைந்த விலையில் அனைத்துத் தமிழர்களின் வீடுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக அமைதல் வேண்டும்.  தாங்களும் முன் நின்று உதவி செய்ய வேண்டும். நன்றிங்க.

வெங்கடேசன்:
மிகவும் சிறப்பான செயல் வெற்றி நிச்சயம். இறைவன் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் ஐயா🙏🙏

செல்லையா செல்லம்: உங்கள் பணி தொய்வின்றி நடைபெற இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி. வணக்கம்



 

12 மார்ச் 2021

காற்று: சத்யா பிரான்சிஸ்

12.03.2021

உலகில் பரவியிருக்கும் காற்று
புரிந்து கொள்ள முடியாத அதிசயம்
கையில்  தொட்டுணர முடியாத அற்புதம்!
புயல் காற்றின் குரல்வலையை நெறிக்க முனைந்த
மாயக் கரங்கள் தோற்று விழுந்தன!..

காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத காற்று | காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத  காற்று - hindutamil.in

கடலில் மீன் சுவாசிக்கும்
பருந்தும் ஆகாயத்தில் சுகராகம் வாசிக்கும்
பசும் காடுகளே மனிதனின்
நச்சுக்காற்றைத் தியாக விசுவாசத்துடன் சுவாசித்து பரிசுத்தத்தைப் பரப்புகிறது!

உலக உயிர்களுக்கு
காற்று இறைவன்!
காற்றில்லாத கோளங்கள்
இறை சுவாசமில்லாத நரகம்..!

புதையுண்ட கல்வெட்டுகளில்
கற்காலத்தை அறிந்த ஆய்வாளன்
ஆண்டவன் வயதைக் கணக்கிடுவதில்
படு தோல்வி..

மனித அறிவுக்கும்
விஞ்ஞானத் தொழில் நுட்பத்திற்கும்
காற்று சவால் தருகிறது..
அறிவியல் மனிதன்
இயற்கைக் காற்றை உற்பத்தி செய்வானா?

(மலேசியம்)

ஈபோர் தோட்டத்து இளவேனில் காலம்: ராதா பச்சையப்பன்

01.01.2021

பத்து தீகா ஈபோர் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். பள்ளிப் படிப்பும் அங்கு தான். நான் வசித்த தோட்டம் வெள்ளைகாரர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தோட்டம்தான்.  

ஈபோர் தோட்டத்தில் ஐந்து வரிசைகள் கொண்ட வீடுகள். தோட்டத்தில் முன்னூறுக்கும் மேல் மக்கள் வசித்து வந்தார்கள். வெள்ளக்காரர்களின் எஸ்டேட் என்பதால் சற்று சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.

தோட்ட மக்கள் குடியிருந்த வீட்டுப் பகுதிகளில் தினமும் கூட்டிப் பெருக்கி;  குப்பைகளை முறையாகப் பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி வைப்பார்கள். அதற்கு என்று மூன்று பேர் வேலை செய்தார்கள்.

வீட்டுப் பகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மெசின் போட்டு புற்களை வெட்டி விடுவார்கள். தோட்டத்தில் தமிழ், ஆங்கிலம், மலாய் போதிக்கும் பள்ளியும் இருந்தது. எங்களுக்கு ஆங்கிலம் போதித்தவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆவார்.

தோட்ட வீடு ஓர் அளவு வசதியானதே. இரண்டு அறைகள்; அடுப்புகள் கொண்ட சமையல் பகுதி. வீட்டின் உள்ளே குளியல் அறை; கழிவறை; நீர்க் குழாய்கள் கொண்டவை. மின்சார விளக்கு வசதியும் உண்டு.

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் விளக்கைப் போட்டு விடுவார்கள். அப்புறம் காலை ஏழு மணிக்கு அடைத்து விடுவார்கள். மாலை ஏழு மணிக்கு மறுபடியும் திறந்து; இரவு பத்து மணிக்கு அடைத்து விடுவார்கள். எஸ்டேட்டில் திருமணம், திருவிழா, இறப்பு போன்ற நாட்களில் விடிய விடிய விளக்கு எரியும்.

மாடுகள் வளர்க்க எஸ்டேட் நிர்வாகமே மாட்டுக் கொட்டகை கட்டிக் கொடுத்தது. ஒரு கொட்டகைக்கு ஐம்பது காசு வீதம், ஒருவர் எத்தனை கொட்டகை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அவர்கள் சம்பளத்தில் இருந்து வெட்டிக் கொள்வார்கள். ஆடு வளர்ப்புக்குத் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

மாதத்தில் மூன்று சினிமாப் படம் காட்டுவார்கள். அதற்கும் நிர்வாகமே  தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பணத்தை வெட்டி திரைப் படக்காரரிடம்  கொடுத்து விடுவார்கள்.

வீட்டின் பின்புறம் இடம் உள்ளவர்கள் காய்கறித் தோட்டம் போட்டுக் கொள்வதும் உண்டு. சிலர் ஒதுக்குப் புறமான இடங்களில் காய்கறித் தோட்டம் போடுவதும் உண்டு. கோழி, ஈத்தை வளர்ப்பதும் உண்டு.

மாலையில் காற்பந்து, பூப்பந்து, விளையாடத் தோட்ட நிர்வாகம் வசதி செய்து கொடுத்து இருந்தது. இதில் டேவான் என்று சொல்லப்பட்ட நாடகக் கொட்டகையும் இருந்தது.

தோட்டத்தில் வேலை செயபவர்களின் குழந்தைகளைக் கவனித்துக்  கொள்ள ஆயா கொட்டகையும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாமார்களும் இருந்தார்கள். பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகமே பால்டின் வாங்கிக் கொடுத்து உதவி செய்தது.

தோட்டத்தில் சிறிய பெரிய இரண்டு கோயில்கள் இருந்தன. பெரிய கோயிலில் எல்லாச் சாமிகளும் இருக்கும். ஒரு பூசாரியும் இருப்பார். பெரிய  கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப் படும்.

திருவிழா என்றால் தோட்டமே ஒரே கோலாகலமாக இருக்கும். மூன்று நாட்களுக்கு  முன்பே ஆத்தாங்கரையில் சாமி அழைத்து; மஞ்சள் கயிற்றைச் சில ஆண்களின் கைகளில் கட்டி விடுவார்கள்.

காப்பு கட்டியவர்கள் மூன்று நாளும் கோவிலிலேயே தங்கி விடுவார்கள். வீட்டிற்குப்  போக மாட்டார்கள். எல்லார் வீட்டிற்கும் உறவினர்கள் வருவார்கள்.

திருவிழா தினத்தன்று கோயில் காவல் தெய்வத்துக்கு ஆட்டுக் கடா வெட்டிச் சமைப்பார்கள். மற்ற தெய்வச் சிலைகளைத் திரை போட்டு மூடி விடுவார்கள்.

திருவிழா அன்று தோட்ட நிர்வாகத்தின் வெள்ளைகாரத் துரைமார்களும், சின்னதுரை, கிராணிமார்களும் வந்து கோயில் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் சின்ன வயது பெண்களும்; குமரிப் பெண்களும்; அழகு தேவதைகளாகக் கோயிலுக்கு வருவார்கள். தலையில் மல்லி பூவோடும், விதம் விதமான கலரில் பாவாடை சட்டை, தாவணி, சேலை கோலத்தில் அழகுக் கோலங்களில் காட்சி தருவார்கள்.

யார் யார் வீட்டில் எவ்வளவு  நகைகள் இருக்கிறது என்பதை அன்றைய தினத்தில்  பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரவில் தேர் ஊர்வலம் வரும்.

ஒரு வருடம் தேர் ஊர்வலம் வரும்போது; சற்று இறக்கமான இடத்தில் வரும் போது  தேரின் தலைப் பாகம் கழன்று தேருடன் வருபவர்களின் மீது விழுந்து விட்டது.

பாதிப்பு அடைந்தவர்களில் ஒருவர் நல்ல எழுத்தாளர்; தமிழ்ப் பற்றாளர்; நாடறிந்தவர். அவர்தான் மணிவெள்ளையனார். நாங்கள் ஒரே வரிசை வீட்டில் உள்ளவர்கள். இப்போது அவர் இல்லை.

தோட்டத்தில் தீபாவளி வந்தால் பலகாரம் செய்ய ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதும் உண்டு. கெட்டி உருண்டை பிடிப்பதில் இரண்டு மூன்று பேர்கள் சேர்ந்து உதவிக் கொள்வார்கள்.

தோட்டத்தில் இறப்பு என்றால் அன்று யாருக்கும் வேலை இல்லை. அன்று இரவு  இறப்பு வீட்டில் பலர் கண்விழித்து இருப்பார்கள். தப்பு அடிப்பவர் இறந்தவரின் வாழ்ந்த கதையைப் பாட்டாகப் படிப்பார். கேட்கும் போது அழுகை அழுகையாக வரும்.

தோட்ட மக்களே ஒன்றுகூடி தங்கள் வீட்டுக் காரியமாகவே நினைத்துச் செய்வார்கள். இன்று போல் அன்று பெட்டி எதுவும் இல்லை. அழகாகப் பாடை செய்வார்கள். இப்போது ’பேக்கேச்’ என்று சொல்லி எல்லாவற்றையும் பூசாரியோ அல்லது குருக்களோ எடுத்து வந்து விடுகிறார்கள்.

இறந்தவருக்கு எண்ணெய் வைப்பவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது. வீட்டில்  சுபகாரியம் செய்யக் கூடாது என்பார்கள். முன்பு காலத்தில் தோட்ட மக்களே எல்லாச் சாங்கியங்களையும் செய்தார்கள்.  

இப்போது சாங்கியம் செய்பவர்கள் பலர்; அல்லது உறவினர்கள் பலர்; எண்ணெய் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். கடைசியில் ஒரு சிலரே வைத்துக் கொள்கிறார்கள்.  

முன்பு ஊருக்கு ஒருவராக இருந்த பூசாரிகள்; இன்று வீட்டுக்கு ஒரு பூசாரியாக  இருக்கிறார்கள். அன்று துக்கச் சோறு என்று சொல்லி மாமன் மச்சான் ஆக்கிப்  போட்டார்கள். இன்று ’கேட்டிரிங்’ என்று சொல்லிச் சமைத்துப் போடுகிறார்கள். காலம் செய்யும் கோலம்.

அன்று  தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்; தோட்டப் பள்ளியில் படித்தவர்கள் பலர்; இன்று ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பேச்சாளர்களாக, மருத்துவர்களாக, வக்கீல்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக நாடு முழுமைக்கும் பரவி உள்ளார்கள். அந்த வகையில் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் இப்போது நாடு போற்றும் அளவிற்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

மறைந்த மணிவெள்ளையனாரின் தம்பி துரைராஜ் தனியார் மருத்துவமனையில்  மருத்துவராக இன்றும் பணிபுரிகிறார்.

அண்மையில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை செய்த நான்கு மாணவ மணிகளும்; பத்து தீகா ஈபோர் தோட்டத் தமிழ் பள்ளியில் படித்தவர்கள் தான்.

2020 டிசம்பர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில் (WYIE) ITEX2020 Kuala Lumpur) ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அன்றைய காலத்தில் ரப்பர் மரக் காட்டில் பூத்தக் காளானுக்கும்; ஆயில்பாம் காட்டில் முளைத்த கீரைக்கும்; குளம், குட்டை, அல்லூரில் கிடைத்த மீனுக்கும் இருந்த ருசி இருக்கிறதே அது தனி ருசிதான்.  

அது ஓர் இளவேனில் காலம். மீண்டும் வராது. தோட்ட வாழ்க்கையே தனிதான். நானும் தோட்டத்தில் வாழ்ந்தவள் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன்.  

என்றும் உங்கள் சகோதரி ராதா பச்சையப்பன்.




கு.ச. இராமசாமி
(மலேசிய நண்பர் ஞாயிறு மலர் ஆசிரியர்): சகோதரியின் தோட்டக்கதை பழைய நினைவுகளைப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்தவன்தான்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் சகோதரி... அற்புதமான பதிவு. தோட்டப் புறத்தின் எதார்த்தமான சமூக வாழ்வியல் தன்மைகளை அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்குரிய பதிவு.

அத்துடன் நான் படித்துக் கொடுத்த மாணவி இப்படி இவ்வளவு அழகாகத் தமிழ் எழுதுகிறாரே என்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் ஆசிரியருக்கு இதைவிட ஒரு பெரிய சன்மானம் எதுவும் இல்லை. மிக்க நன்றிம்மா ராதா.

ஆங்கில மொழி ஆசிரியராகத் தான் ஈபோர் தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். ஆனால் தமிழ் மொழியோடு இணைந்து வாழ்ந்தேன். பலருக்கும் தெரியும். மறுபடியும் அந்தப் பள்ளியைப் போய்ப் பார்க்க வேண்டும். நெஞ்சுக்குள் மாமழை பொழிய வேண்டும்.