31 டிசம்பர் 2020

இரத்த உறவுகளில் ஏன் திருமணம் செய்யக் கூடாது - கென்னடி ஆறுமுகம் கிரீக்

23.12.2020

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு செய்வது ஓர் ஆண் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் 23 + 23 குரோமோசோம்கள் (Chromosomes) உள்ளன என்பதை அறிவோம்.

தாய் மூலம் 23; தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது.


தாயிடம் x x குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தையிடம், x y என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்; இருவரின் x + x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை அறிவியல் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே குடும்பத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே குடும்பத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x குரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y குரோமோசோம்கள் தந்தை வழி வருவது இல்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்து இருக்க வேண்டுமே... முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேத்தி என x குரோமோசோம்கள் வழி வழியாக வருவது இல்லை. தன் தாயிடம் இருந்தும், தன் தந்தையிடம் இருந்தும் x குரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.


ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y குரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவது இல்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y குரோமோசொம்கள் மட்டுமே.

ஓர் ஆணால் மட்டுமே இந்த y குரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y குரோமோசோம்கள் கிடைப்பது இல்லை. ஆணின் y குரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டு இருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டு இருக்கிறதாம்.

13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்றுப் போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும்; பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த இரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.

**************

வாழ்த்துகள்... வாழ்த்துகள்...


கொரோனா தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆணையால் எங்குமே செல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கென்னடி ஆறுமுகம் குடும்பத்தினர்... கேமரன் மலையில். 31.12.2020

நமக்கு ஏன் வயதாகிறது: புதிய ஆய்வு - முத்துசாமி கோலக்கிள்ளான்

23.12.2020

இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பைச் சந்திக்கத்தான் வேண்டும். நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதே சமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்குப் பதில் சொல்ல முடியும்.

Martin Hetzer

அதாவது ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது.

ஆக பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்குக் காரணம் நமக்கு வயதாகிப் போவது அல்லது மூப்பு அடைவதுதான்! ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?

இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நான் கண்டுபிடித்து விட்டேன் என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய (Salk Institute for Biological Studies) விஞ்ஞானி மார்டின் ஹெட்சர் (Martin Hetzer).

நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக் கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP (extremely long-lived proteins – ELLP) எனும் ஒரு வகை புரதங்கள் இருக்கின்றன. 'ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள்.

Longevity Cells Found: Scientists at the Salk Institute report they have found a component of brain cells that could explain how the aging process occurs. The scientists found that certain proteins, called " long-lived protein supporting" (extremely long-lived proteins – ELLP), found on the surface of the nucleus of neurons, is thought to have longevity in living creatures.

நியூக்ளியசிற்கு உள்ளேயும்; நியூக்ளியசில் இருந்து வெளியேவும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்குப் 'போக்குவரத்து வழித் தடப் புரதங்கள்' என்றும் மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த ELLP புரதங்களே! உடலின் பிற புரதங்கள் சேதம் அடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால் வேதியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதம் அடையும் போது அவற்றுக்கு மாற்றாக, புதிய ELLP புரதங்கள் உற்பத்தி செய்யப் படுவது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப் பொருளான DNA-வை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்பு அடைகின்றன என்று கண்டு அறிந்து உள்ளனர் மார்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக உடலில் உள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயல் இழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம்.

எடுத்துக்காட்டாக எலிகளின் உடலில் உள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்டின் ஹெட்சர்.

இத்தகைய சிறப்புப் பண்பு உடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்பு அடைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டு அறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்பு அடைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்பு அடைதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்பு அடைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப் பொருட்கள் சென்று உள் இருக்கும் DNA-வை சேதப் படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றம் அடைகின்றன.

இதை ஆய்வாளர் மார்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்பு அடைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி.

இந்தப் பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதிநிலை (internal stability) பாதிக்கப் படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில் (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதம் அடைவதே காரணமாக இருக்கக் கூடும் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலில் உள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும் போது அவை, அவற்றின் சேதம் அடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்து விடுகின்றன.

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒரு முறை சேதம் அடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவது இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

மூப்பு அடைதல் தொடர்பான இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு நரம்புச் சிதைவு குறைபாடுகளான அல்ஷெய்மர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் ஏற்படுவதற்கான மூலக் காரணங்களை அறிந்து கொள்ளவும், இந்த நோய்கள் குறித்த மேல் அதிகப் புரிதலையும் பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

'என்றும் பதினாறு' மார்கண்டேயனைப் பற்றி படித்து இருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும் போது, ஒருவேளை மார்கண்டேயரின் ELLP புரதங்கள் அவருடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதம் அடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Read more:
https://www.trussty.com/2012/05/longevity-cells-found.html#ixzz6iCbG50X6




 

30 டிசம்பர் 2020

காகத்தின் வாழ்வியல் இரகசியங்கள் - நாகேஷ் எஸ்.வி.

22.12.2020

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அலட்சியம் செய்து இருப்போம். ஆனால் ஆச்சரியப்படும் அளவு அசாத்திய குணங்கள்; பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு.

மனிதனைவிட வாழ்வில் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இயற்கையின் பூரண அறிவைப் பெற இன்று காகங்களைப் பற்றி சித்த நூல்களில் சொல்லப்பட்ட இரகசியங்களைத் தெரிந்து கொள்வோம்.

காகம் உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாகக் காகத்தைச் சொல்லலாம். தன் ஜோடியுடன் மட்டுமே இணை சேரும். பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டுத் தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒரு போதும் தனியாகச் சாப்பிட வேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்துப் பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

காக்கைக்கையின் கூண்டுக்குள் இருக்கும் முட்டை தன் முட்டை இல்லை என்று காக்கைக்குத் தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவு அளித்து பராமரிக்கும்.  உலகில் மிகச் சிறந்த மாற்றந்தாய் காகம் தான்.

தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மை உண்டு. இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப் படுகிறது.

இது மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான். ஆனாலும் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவது இல்லையோ என்று தோன்றுகிறது.

காகத்திற்குத் தினமும் காலையில் கம்பு, சோளம், திணை வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு மறைந்த உடன் பிறப்புகளின் ஆசிர்வாதமாகும்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க; தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். கணுப்பிடி என்பது விடியல் காலையில் செய்யும் பிரார்த்தனை.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலம் போடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா… கா…. கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களைச் சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் கா... கா... என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  

மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். இதனால் மறைந்த உடன் பிறப்புகளின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை வழிபடுவதால் சனி பகவானைத் திருப்தி படுத்தியதாகவும் ஒரு நம்பிக்கை.

தமிழர்களின் நம்பிக்கையின்படி காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம் மணிக் காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாதது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். இது ஒரு நம்பிக்கை.

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும்; நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும்; முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா… கா… என்று பல முறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. இதுவும் ஒரு நம்பிக்கை.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம். காகத்திடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள்...

காலை எழுந்திரு

மாலையிலும் குளி

கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண்


வாழ்க வளமுடன் நலமுடன்.



 

மலாயா தமிழர்கள் வரலாறு: தர்ம ஆர்டர்

21.12.2020

தென்னிந்தியத் தொழிலாளர் நிதியின் அசல் பெயர் இந்திய இமிகிரேஷன் நிதி. 1908-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. 1960-களில் அந்தப் பெயர் இந்தியக் குடிநுழைவு நிதி என்று மாற்றம் கண்டது.

இதற்கு தர்ம ஆர்டர் எனும் இன்னும் ஒரு பெயரும் இருந்தது. அந்த நிதி உருவாக்கப் படுவதற்கு ஒரே ஓர் அடிப்படைக் காரணம் மட்டும் தான் மிக மிக முக்கியமான காரணம்.

மலாயாவில் தென்னிந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப் பட்டன. அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப் பட்டார்கள். அவற்றைச் சீர் செய்து சமன் செய்வதே அந்த நிதியின் பிரதான நோக்கம்.

இந்த நிதிக்கு ஒரு வாரியம் இருந்தது. அதன் பெயர் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம். இந்த வாரியம் தான் அந்த நிதியை நிர்வகித்து வந்தது. அந்த அமைப்பில் இடம் பெற்று இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதவள அமைச்சரால் நியமிக்கப் பட்டார்கள். சரி.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வாரியம் இயங்கி வந்தது. 1948-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை 27 ஆயிரத்து 399 தென்னிந்தியத் தொழிலாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அந்த வாரியம் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறது.

தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் பல ஆண்டுகளாகத் தென்னிந்தியத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மேற்கல்வி பயில நிதியுதவி செய்து வந்தது.

1962-ஆம் ஆண்டில் இருந்து 1992-ஆம் ஆண்டு வரையில் 699 ஏழை இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கி உள்ளது.

1960-ஆம் ஆண்டுகளில் அப்போதைய பினாங்கு மாநில ம.இ.கா. தலைவரும் வர்த்தகத் தொழில் அதிபருமான அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை அவர்கள் நிபோங் திபால் நகருக்கு அருகில் இருந்த கிரியான்; சுங்கை ஜாவி தோட்டங்களை வாங்கினார்.

அவற்றில் கிரியான் தோட்டத்தில் தன் சொந்த நன்கொடையாக 15 ஏக்கர் நிலத்தை முதியோர் பராமரிப்புகளுக்காக வழங்கி இருந்தார். இந்த நிலம் நிபோங் திபால் ஜாலான் புக்கிட் பஞ்சோரில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

அந்த நிலத்தில் தான் ஏழை இந்தியர்களுக்கான முதியோர் இல்லம் கட்டப்பட்டு இருந்தது. என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை வழங்கிய 15 ஏக்கர் நிலத்தில் 14 ஏக்கரில் செம்பனை மரங்கள் இருந்தன. செம்பனைப் பழங்களில் இருந்து கிடைத்த வருமானம் முதியோர் இல்லப் பராமரிப்புச் செலவுக்குப் பயன்பட்டது.

ஆகக் கடைசியாக அந்த இல்லத்தில் 16 முதியவர்கள் தங்கி இருந்தார்கள். சயாம் மரண இரயில்வேயில் தப்பித்து வந்த சிலரும் அந்த இல்லத்தில் தங்கி இருந்தார்கள். மேலும் 43 பேருக்குத் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியத்தில் இருந்து நிதியுதவி கிடைத்து வந்தது.

1999 மே மாதம் 13-ஆம் தேதி தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் கலைக்கப் பட்டது. தென்னிந்தியாவிற்குப் போக இந்தியர்கள் முன்வரவில்லை. அந்த நிதி சும்மாவே கிடக்கிறது என்கிற கருத்துகளை ம.இ.கா. முன்வைத்தது.

அதனால் அந்த வாரியம் கலைக்கப்பட வேண்டும். அதில் உள்ள பணத்தை எடுத்து வேறு வகையில் செலவு செய்யலாம் என்று ம.இ.கா. தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

அப்போது ம.இ.கா.வின் தலைவராக டத்தோ ஸ்ரீ (துன்) சாமிவேலு இருந்தார். திதி நட்சத்திரம் இராகு காலம் கேது காலம் பார்த்து ஒரு வழியாக அந்த வாரியத்தைக் கலைத்தார்கள். மன்னிக்கவும். மூடுவிழா செய்தார்கள்.

இந்தியச் சமுதாய நலன் கருதிச் செய்தார்களா இல்லை நாட்டு நலன் கருதிச் செய்தார்களா. தெரியவில்லை. தர்ம ஆர்டர்... தர்ம ஆஸ்பத்திரிக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.12.2020

 

29 டிசம்பர் 2020

சயாம் மரண இரயில் பாதையிலே - ராதா பச்சையப்பன்

21.12.2020

சயாம் மரண இரயில் பாதைக்குப் போய் திரும்பி வராதவர்களில் என் மாமாவும் தாத்தாவும் அடங்குவர்கள். இவர்கள் மாமனாரும் மருமகனும் ஆவார்கள். மாமியார்  திருமணம் ஆகி ஒரு வருடம் கூட  ஆகவில்லை. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் தாயும், மகளும் கர்ப்பவதிகள். இருவரின் பிரசவத்தின் போது தான் இருவருடைய கணவன் மார்களும் இறந்து போன சேதியும் வந்தது.  

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் தாயும், மகளும்...    எவ்வளவு வேதனையான விசயம் இது.

மகளுக்கு முதல் பிரசவம். ஆண் பிள்ளை. தாய்க்கு எட்டாவது பிரசவம். ஆண் பிள்ளை. ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள். நான்கு ஆண் பிள்ளைகள். இந்தக் குழந்தையும் சேர்த்து மொத்தம் எட்டுப் பிள்ளைகள்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்து... அதில் ஒரு பெண்... கணவர் இன்றி கை குழந்தையோடு... பாட்டி மிகவும் சிரமப் பட்டுதான்... கணவரின் துனை இன்றி தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.

பாட்டி தமிழகத்தில் இருந்து வந்தவராம். மிகவும் கெட்டிகாரத் தனமாகவே பிள்ளைகளைப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்தார்.  

அதில் ஒரு மகன் அந்தக் கால ஆசிரியர். மகளுக்கும் மறுமணம் செய்து வைத்தார்.   எனக்கு விபரம் தெரிந்து பாட்டி சாரி பிளவுஸ் போட்டது இல்லை. அவர்கள் ஊரில் கணவர் இறந்து விட்டால் சாரி பிளவுஸ் போட மாட்டார்களாம்.

பாட்டி இறக்கும் போது 92 வயது. ஒரு பல் கூட விழவில்லை. தலைமுடியும் சரியாக  நரைக்கவில்லை. எஸ்டேட் வேலையோடு மரவள்ளிக் கிழங்கு தோட்டம் போட்டு பிள்ளைகளின் சாப்பாட்டுக்கும் குடும்பத்துக்கும் உபரி வருமானம் தேடிக் கொண்டார்.   

சகோதரர் திரு. குணநாதன் சயாமுக்குப் போனவர்களைக் கண்டு பேட்டி எடுத்து  கட்டுரையை நாளிதழில் போட்டார். அதில் என் மாமா தாத்தா பெயரும் இடம் பெற்று இருந்தது. அதைக் கண்டு என் மாமா மகனும் அவர் மகளும் பேட்டி கொடுத்த பெரியவரைப் போய் பார்த்து விபரங்களை கேட்டார்கள். அப்போது பெரியவர் யோசித்து யோசித்துப் பேசினாராம்.  

தாத்தா வசதியாக வாழ்ந்தவர். தமிழகத்தில் ஊரின் பெயர் புத்தூர். தாத்தாவுடன் தான் அந்தப் பெரியவரும் மலேசியாவிற்கு வந்தாராம். தாத்தா வீட்டோடு இருந்து வேலைகளைச் செய்தாகச் சொன்னார்.

சயாமுக்குப் போகும் போதும் அனைவரும் ஒன்றாகவே போனார்களாம். அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்ததாகச் சொன்னார். தாத்தா உடம்புக்கு மிகவும் முடியாத நிலையில்  இருந்தாராம். கஞ்சி கொண்டு வந்து கொடுத்து விட்டு, ’இங்கயே இரு  என்று கூறி விட்டு போய் வந்து பார்க்கும் போது தாத்தாவைக் காணவில்லையாம்.

 

எங்கு தேடியும் கிடைக்க வில்லை என்றார். மாமாவையும் பார்க்கவில்லை என்றார்.  தாத்தாவின் பெயர் சுப்பராயன். மாமாவின் பெயர் முனுசாமி என்று அந்தப் பெரியவர் மிகச் சரியாகச் சொன்னார்.

கோலா சிலாங்கூர், ஜெரம் கென்னி எஸ்டேட்டில் ஒன்றாக வசித்தவர்கள். அதை  இருபதாங்கட்டை என்றும் சொல்வது உண்டு. பெரியவருக்கும் வயது கடந்து விட்டது. ஞாபகமும் குறைந்து  விட்டது. கனத்த மனத்தோடும் கண்களில் கண்ணீரோடும்  விடை பெற்று வந்தோம்.  

அதற்கு முன் கோலா கிள்ளானில் ஒரு கோயிலில் சயாமுக்குப் போய் அங்கு இறந்தவர்களுக்கு ஆத்ம பூஜை செய்தார்கள். அதிலும் கலந்து கொண்டோம். மற்றும்  ஒருவர் எனது சின்னம்மாவின் கணவரும் சயாமுக்குப் போனவர். பத்து தீகா ஈபோர் எஸ்டேட்டில் வாழ்ந்தவர்கள்.

கணவர் வருவார் வருவார் என்று சின்னம்மா தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரொம்ப வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்தார். இறுதியில் கண் மூடினார். சயாம் இரயில் பாதை பலருடைய வாழ்கையையும் கனவுகளையும் அழித்து விட்டது!

Raja Sg Buluh: படித்தேன். மனம் வலிக்கிறது. ஜப்பான் அரசு ஏதோ ஒரு தொகை கொடுத்தாகப் பேசப் படுகிறது, நம்பப் படுகிறது. தகவல் அறிந்த வட்டாரம் சொல்கிறது. ஏன் இந்தோனேசிய செய்தி நிறுவனம்கூட (அந்தாரா) செய்தி போட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால் ஒரு தம்படியும் கண்ணில் காட்டாதது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கிறது. என்ன செய்வது சகோதரி.

இது சம்பந்தமாக, என் நண்பர் இன்னொரு பதிவை போட்டு இருக்கிறார். என் நண்பரின் தந்தையும் கம்பி சடக்கு போடப் போய் ஒரு காலை இழந்து மலாயாவுக்கு திரும்பியவர். அந்தப் பதிவு இதுதான்.

மாசிலன், பகாவ், பெல்டா:
உண்மைதான். இங்கு சிரம்பானில் இதற்கு ஓர் அமைப்பு இருந்தது. அதன் தலைவர் திரு. சசிதரன். நஷ்டயீடு பெற பலர் பதிந்தனர். பல மாநிலங்களில் இருந்தும் பதிந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் சீனர்களும் பதிந்தனர்.

சசிதரன் தமிழ் பிரிவுக்குத் தலைவர். அதேவேளையில் ‌இந்த அமைப்புக்குத் தேசிய தலைவர் ஓய்வுபெற்ற இராணுவத்தைச் சேர்ந்த ஒரு மலாய்க்காரர் இருந்தார். இந்த அமைப்பில் மலாய்க்காரர்கள்தான் அதிகம். குவாந்தானில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டோம்.‌

பதிவுக் கட்டணம், அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று சில பல காலக் கட்டங்களில் ஆளுக்கு 500 வெள்ளி வரை கொடுத்தோம். இறுதியில் அந்தத் தலைவன் தான் தின்னான்! தொடர்ந்து அவன் மேல் வழக்கும் போடப் பட்டது!

அதே வேளையில் ஐ.நா. வரை இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது. வழக்கறிஞர் கட்டணம் கட்ட முடியாமல் அப்படியே நின்று விட்டது!

மகாதீர் பிரதமராக இருந்த போது, ஜப்பானிய அரசு இதற்கான நஷ்டயீடு கோடிக் கணக்கான பணம் வழங்கியது. அந்தப் பணத்தைக் கொண்டு கப்பல் வாங்கப் பட்டதாகவும் கேள்வி பட்டோம்! எப்படி கதை போகிறது பார்த்தீர்களா?

Raja Sg Buluh: சயாம் மரணப் பாதை அமைக்கச் சென்ற என் தந்தை திரும்பவே இல்லை. நான் ஒரு முறை பட்டர்வர்த்தில் இருந்து பாங்காக் வரை இரயிலில் பயணம் செய்தேன்.

இந்தப் பாதையை அமைக்கப் போன என் தந்தையைப் பற்றி யோசித்தேன். மனம் வலித்தது. என் குடும்பத்தில் இருவரை இழந்தது மிக மிக வேதனையான காலச்சுவடு. பிழைக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம். நமக்கு என்று கேட்பார் இல்லை. நாதியற்று இன்றும் வாழ்கிறோம்.



 

எம்.ஜி.ஆர்: வறுமையின் காரணமாய் நடிக்க வந்தேன்

21.12.2020

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு அளித்த பேட்டி...

கே: நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

எம்.ஜி.ஆர் : வறுமைதான்.

கே: நீங்கள் நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

எம்.ஜி.ஆர் : வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியைப் போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

கே: ஆங்கிலப் படத்தில் நடிப்பீர்களா?

எம்.ஜி.ஆர் : இங்கிலீஷ் நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது.

கே: மலையாளம் தெரியுமா?

எம்.ஜி.ஆர் : தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன்.

கே: கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்குப் போவீர்களா?

எம்.ஜி.ஆர் : நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போய் இருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்து இருந்தேன்.

சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்குப்  போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது எல்லாம் கிடையாது.

வேண்டுவது தப்பு இல்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பது இல்லை.

கே: உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

எம்.ஜி.ஆர் : என் வீட்டு பூஜை அறையில் இருப்பது எல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய், தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

கே: நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு இருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆர் : என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

கே: அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

எம்.ஜி.ஆர் : கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடி இருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்த போது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.

 


தமிழினத்தின் மூத்த இசை

20.12.2020

தமிழினத்தின் மூத்த இசை - இதை
தாழ்ந்த இசை என்பதுவோ!
எமதம்மன் பறை இசைக்கே
எழுந்தாட்டம் போடு கின்றாள்! - அட!
இமைமூடி செல்பவர்க்கும்
இறுதியிசை இதுவாச்சு! - அன்று
தமதுரையை தப்படித்தே
சகலருக்கும் கோன் சொன்னான்..!

ம.அ.சந்திரன் மலேசியா

சுப்பையா, ம. (ம.அ. சந்திரன்)
பிறந்த தேதி: 29/8/1951
புனைபெயர்: ம.அ.சந்திரன்
பணி: வியாபாரம்

நூல்கள்: “சிந்தனைச் செல்வம்” (கவிதைத் தொகுப்பு)

1973 முதல் எழுதி வருகிறார். பெரிதும் கவிதைகளும் கட்டுரைகளுமே எழுதி வருகிறார். மலேசிய திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.



 

28 டிசம்பர் 2020

காலை வணக்கம் மாலை வணக்கம் சரியா?

19.12.2020

Water Falls என்பதை அப்படியே மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்கிறோம். நீருக்கு ஏது வீழ்ச்சி? அருவி எனும் சொல்லே ஏற்புடையது.

King Cobra என்பதை வார்த்தை மாறாமல் பெயர்த்து ராஜ நாகம் என்கிறோம். கருநாகம் எனும் சொல்லே தமிழுக்கு ஏற்றது.

இதை எல்லாம் விடப் பெரிய வியப்பு என்னவெனில் ’டீசல்’ என்பதைக் ’கல்நெய்’ என மொழி பெயர்ப்பது.

டீசல் எண்ணெயைக் கண்டு அறிந்த ரூடால்ப் டீசல் என்பவரின் பெயரே அதற்கு வைக்கப் பட்டது. கண்டுபிடிப்புகளை அந்தந்த மொழிப் பெயர்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது அவற்றின் பெயர்களைத் தமிழில் உருவாக்கலாமா என்பது பெரும் விவாதத்திற்கு உரியது.

கண்டறிந்தோர் இட்ட பெயரை ஏற்பதே அந்தக் கண்டுபிடிப்பிற்கு நாம் செய்யும் மரியாதை என ஒரு தரப்பினரும்; அவற்றிற்குத் தமிழில் பெயரிட்டால் தமிழின் சொற்களஞ்சியம் மேலும் பெருகும் என ஒரு தரப்பினரும் கூறுகின்றனர். எது சரி என்பது உங்கள் சிந்தனைக்கு! சரி.

வணக்கத்திற்கு வருவோம். Good morning என்பது ’உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும்’ என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக் கூடியன.

ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, ’காலை வணக்கம்’, ’மதிய வணக்கம்’, ’மாலை வணக்கம்’, ’இராத்திரி வணக்கம்’, ’படுக்கை வணக்கம்’, ’பாய் வணக்கம்’ என்று கூறி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் ருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம்.

ஆனால் தமிழில் கூறும் போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை என்பதால் வணங்குதல் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் எனக் கூறுவதனைத் தவிர்த்தல், தமிழ் இலக்கண வழக்கப்படி சரியானதாகும்.

அகன்சரவணன், ஆனந்த விகடன்
03.01.2020

https://www.vikatan.com/oddities/miscellaneous/small-explanation-about-the-tamil-word-vanakkam

வணக்கம் என்பது ஒன்றுதான்.

காலைக்கு ஒரு வணக்கம், மாலைக்கு ஒரு வணக்கம் என்று பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சிறப்பு.

வணக்கம் என்பதற்குப் பன்மையும் இல்லை. வணக்கங்கள் என்று சொல்வது தவறு.




 

அன்றும் இன்றும் தமிழரின் துன்பம் - பாதாசன்

 19.12.2020

ஆங்கிலவர் ஆட்சியிலே நேரில் துன்பம் !
  அடுத்துஜப்பான் ஆட்சியிலும் தெரிந்தே இன்னல் !
தாங்கியவர் மலேசியத்துத் தமிழர், நாடு
  தன்னாட்சி பெற்றபின்னர் காணும் கேடோ
ஓங்கிடினும் அவற்றினிலே ஒன்றும் கண்ணுக்
  கொருவருக்கும் தெரியாமல் நடக்கும் கோடி
ஆங்கில, ஜப்பானியர்தம் தொல்லை குன்று ;
  அதைமிஞ்சும் தமிழர்படும் தொல்லை இன்று !
                                                -பாதாசன்


புனைபெயர்கள்: பாதாசன், மஞ்சரி

தொழில்: பத்திரிகை ஆசிரியர்; மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியர்.

எழுத்து: 1960 முதல் எழுதி வரும் முன்னணிக் கவிஞர். கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நூல்கள்: "பாதாசன் கவிதைகள்", "ஞாயிறு களம்" (கட்டுரைத் தொகுப்பு)

சிறப்புக் குறிப்புகள்: கோலாலம்பூர் கவிதைக் களம் என்னும் கவிதைப் பயிற்சி மன்றத்தின் பொறுப்பாளர்; மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம், முத்தமிழ்ப் படிப்பகம் ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்.





பிரதமர் நஜீப் 2.6 பில்லியன் ரிங்கிட்

 19.12.2020

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது. அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்).

On 2 July 2015, The Wall Street Journal ran an exposé alleging that MYR 2.672 billion (USD 700 million) had been channelled from 1MDB into Najib's personal bank accounts.

1MDB has reportedly incurred debts of MYR 42 billion (about USD 11.1 billion) after only six years of operation.

ஒரு நாளைக்கு $6,355 செலவு செய்தால் 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2,739 ஆண்டுகள் பிடிக்கும்.

2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 ராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்).

(மலேசியம்)

Amaciappan: அடேயப்பா, இது ஒரு மலாய்க்காரர் என்பதால் ம்ம்ம்... யாருமே குறிப்பாக மலாய்க்காரர்கள் வாயே திறக்காமல் இருக்கின்றனர். வேறு யாராவதாக இருந்து இருந்தால் கிழி கிழி என கிழித்து இருப்பார்கள்.

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன். அந்த இனத்தில் நியாயவான்களே இல்லையா? அரசாங்க ஊழியர்களில் 99 சதவீதம் படித்தவர்கள். பட்டதாரிகள். கல்வியாளர்கள். இப்படி எண்ணற்றவர்கள் இருந்தும் நியாயத்தைக் கேட்பவர்கள் இல்லையா வேதனை... வேடிக்கை...




27 டிசம்பர் 2020

சோற்றில் பிறந்த நாதங்கள்

19.12.2020

சோறு என்று சொன்னதும் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு எனும் பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. சோறு; சாதம் எனும் இந்த இரு சொற்களின் பொருள் தன்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

சமைத்த அரிசிக்குப் பெயர் சோறு. அதே அந்தச் சோற்றைப் பரிமாறும் போது சாதம் அல்லது அன்னம் என்பார்கள். மலையாளத்தில் அன்னம்.

’சோறு சாப்பிட்டீங்களா’ என்றுதான் கேட்பார்கள். ’சாதம் இருக்கு... சாப்பிடுறீங்களா’ என்று தான் கேட்பார்கள். ’சாதம் சாப்பிட்டீங்களா’ என்று கேட்க மாட்டார்கள்.

சாதம் எனும் சொல்லுக்குப் பற்பல பொருள்கள் உள்ளன. அன்னம் என்று சொல்வார்கள். பிறப்பு என்பதற்கும் சாதம் என்கிற ஒரு பெயர் உண்டு. பறவையின் குஞ்சுக்கும் சாதம் என்கிற பெயர் உண்டு. சிவ மந்திரத்தில் சாதம் எனும் ஒரு சொல் வருகிறது. சரி. சாதங்களில் பற்பல சாதங்கள் உள்ளன.

* தேங்காய்ச் சாதம்
* தயிர்ச் சாதம்
* சம்பா அரிசியடி சாதம்
* மிளகுச் சாதம்
* எலுமிச்சைச் சாதம்
* புளிச்சாதம்
* மாங்காய்ச் சாதம்
* கதம்பச் சாதம்
* பொடி சாதம்


தொல்காப்பியம் என்பது நம் தமிழர்களின் சங்ககால இலக்கணக் காப்பியம். அந்தக் காப்பியத்தில் உணவைக் குறிப்பிடும் சொற்கள் உள்ளன. வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆகாரம், உறை, ஊட்டம், புகா, மிசை எனும் சொற்கள்.

அவை அனைத்தும் அரிசியில் இருந்து கிடைத்த உணவு வகைகள். ஆகாரம் என்பது வடச் சொல் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அது தமிழ்ச் சொல்.

பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களில் கும்மாயம், மெல்லடை, அப்பம், பண்ணியம், அவல் என்று தமிழர்களின் பலகாரப் பெயர்கள் வருகின்றன.

கி.பி.16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கிடைத்த கல்வெட்டுகளில் அதிரசம், பிட்டு, இடியாப்பம், சட்டினி, தோசை, சீடை போன்ற பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் அரிசியில் இருந்து வந்த உணவு வகைகள். இடியப்பம் அல்ல இடியாப்பம். ஆப்பம் என்பதே சரியான சொல்.

அரிசியைச் சோறாக ஆக்கினால் அது சோறு ஆக்குதல். அரிசியில் சரியான அளவில் நீர் விட்டு சமைத்தால் அது நிறை கட்டுதல். அரிசி சோறான பின்னர் வடித்து எடுத்தால் அது வடித்தல்.

அரிசி சோறாக மாறிய பின்னர் மேலும் வேக வைத்தால் அது கூழ். அப்புறம் அது கஞ்சி அதே சோறு மறுநாள் பழஞ்சோறு. அப்புறம் அதுவே பழைய சோறு என்று பட்டப் பெயர்.

கஞ்சி என்கிற சொல் சமயங்களில் வறுமைக் கோட்டின் நிலையைக் காட்டுகிறது. கஞ்சிக்கு அலைந்த அடிமை என்கிற ஒரு பழமொழியும் உள்ளது.

எது எப்படியோ ஜப்பான் காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டிகள் சுண்ணாம்புச் சோறு சாப்பிட்டு நம்மை எல்லாம் வாழ வைத்து இருக்கிறார்கள். அதை மறக்க வேண்டாம். அவர்களையும் மறக்க வேண்டாம்.

* அரிசிச் சோறு
* கம்பஞ் சோறு
* காய்ச் சோறு
* பழஞ் சோறு
* கூட்டாஞ்சோறு
* பெருஞ்சோறு
* சிறுஞ்சோறு
* வெஞ்சோறு
* தென்னஞ்சோறு
* வரகின் சோறு


கடைசியாக ஒரு செய்தி. சாதம், சாம்பார், பொரியல், துவையல், பச்சடி போன்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் அதற்கு என்ன பெயர் தெரியுங்களா... கூட்டமுது.

சான்றுகள்:

1. சூடாமணி நிகண்டு
2. அழுகணிச் சித்தர் பாடல்
3. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
4. Tamil lexicon.University of Madras.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2020




வண்ணத்துப்பூச்சி விளைவு

18.12.2020

வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆங்கிலத்தில் Butterfly effect என்று சொல்வார்கள். இந்த உலகில் சிலரால் அறியப் பட்டாலும் பலரால் அறியப் படாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விதி தான் வண்ணத்துப்பூச்சி விளைவு.

ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் அதன் தொடக்க காலத்தின் ஒரு சின்ன நிகழ்ச்சியைச் சார்ந்து உள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவு சுருக்கம்.


Butterfly effect is the sensitive dependence on initial conditions in which a small change in one state of a deterministic nonlinear system can result in large differences in a later state.

பிரேசில் நாட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது. அதன் சிறகு படபடக்கிறது.

அதனால் அங்கே சலசலப்பு ஏற்படுகிறது. அந்தச் சலசலப்பினால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சின்ன புயல்காற்று உண்டாகிறது. நம்புவீர்களா. நம்ப முடியவில்லை தானே. ஆனால் தொடர்பு உண்டு என்று நிரூபிக்க முடியும்.

ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப் படுபவர் எட்வர்ட் லோரன்ஸ் (Edward Lorenz). இவர் 1963-ஆம் ஆண்டு கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் சரி என்று நிரூபித்துக் காட்டினார்.


அதனாலேயே அந்தத் தத்துவத்திற்கு வண்ணத்துப்பூச்சி விளைவு என்று பெயர் வந்தது. ஒரு சின்ன தொடக்க நிலை விளைவு தான் நீண்ட கால பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொன்னார். அதையே சங்கிலித் தொடர் விளைவுகள் என்றும் சொல்லலாம்.

அதே போல தான் டோமினோ விளைவு (Domino effect). பல சிறிய டோமினோ கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி வையுங்கள். அவற்றில் முதலாவது நிற்கும் கட்டையைத் தட்டுங்கள். அதன் பின்னர் எல்லாக் கட்டைகளும் அடுத்தடுத்து விழும். இதுவே டோமினோ விளைவு.

அதாவது பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால் அதற்கு மூலகாரணமாக முதலில் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

அந்த முதல் நிகழ்ச்சியின் தாக்கத்தினால் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதைத் தான் டோமினோ விளைவு என்று சொல்வார்கள். ஆனால் பலர் அதை மறந்து விட்டு கடைசியாக நடந்த நிகழ்ச்சியை மட்டுமே பெரிதாகப் பார்ப்பார்கள். இது மனித இயல்பு.

அதே அந்த டோமினோ விளைவு தான், மலேசியா 1எம்.டி.பி. நிறுவனத்தின் மோசடிகளிலும் நடந்து உள்ளது. 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு இப்போது 4200 கோடி ரிங்கிட் கடன். மலேசியாவை கடன்கார நாடாக மாற்றி வருவதும் இதே இந்த டோமினோ விளைவு தான்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2020

 


மலேசியம் புலனத்தின் நிலைப்பாடு

17.12.2020

மலேசியம் புலனம் 2014-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதன் பயணத்தில் பற்பல கட்டங்களில் பற்பல போராட்டங்கள். பற்பல தாக்கங்கள். அரசியல் மேலிடங்களில் இருந்து பற்பல நெருக்குதல்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு நாட்டின் பிரதமரையும் அவரின் அமைச்சர்கள் சிலரையும் எதிர்த்து நின்றோம். எதிர்த்துக் குரல் கொடுத்தோம். *மாற்றம் ஒன்றே மாறாதது* என்று சொல்லித் தொடராகப் பல பதிவுகளைப் பதிவு செய்தோம். 2018-ஆம் ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இந்தப் புலனம் ஒரு காரணமாகவும் இருந்தது. உண்மை.

அந்த வகையில் நாட்டில் பெரிய ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு இந்தப் புலனமும் முக்கியப் பங்கு வகித்து உள்ளது என்பதையும் இங்கே தாழ்மையுடன் பதிவு செய்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் புலனத்தில் 248 உறுப்பினர்கள். அதை 100-க்கு குறைத்தோம். இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

அண்மைய காலங்களில் மலேசியாவில் நம் தமிழனத்திற்கும் நம் தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சமய வழிபாட்டுத் தலங்களும் பற்பல நெருக்குதல்கள். பற்பல இடர்பாடுகள். அநீதியான செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் தெரிவித்துக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறோம்.

நம் இனத்திற்கு எப்படி நல்லது செய்யலாம்; எப்படி நம் உரிமைகளை முன் வைக்கலாம். அதற்காக இந்தத் தளத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோம். அவையே முதன்மை நோக்கமாக அமைய வேண்டும்.

காலை வணக்கம்; மாலை வணக்கம்; இரவு வணக்கங்களைப் போட்டு, இடத்தை நிரப்பி நாம் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. தவிர மற்ற மற்ற புலனங்களில் பதிவாகும் பயனற்ற பதிவுகளை இங்கே இறக்குமதி செய்வதையும் தவிர்ப்போம். நகைச்சுவைக்காகச் சில பதிவுகள் போதும்.

இங்கே பதிவாகும் பதிவுகளை நம் பிள்ளைகளும்; நம் பேரப் பிள்ளைகளும் பார்ப்பார்கள். படிப்பார்கள். மறந்துவிட வேண்டாமே. கோரமான காட்சிகள்; இரத்தம் சிந்தும் காட்சிகளைத் தவிர்த்து விடுங்கள். அவற்றைத் தனிப் புலனத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம் மலேசியத் தமிழர்களின் சமூகச் கலாசார உரிமைகள்; மொழி உணர்வுகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். முடிந்த வரையில் கடல் கடந்த அரசியலில் முக்கியமான செய்திகளை மட்டும் பகிர்வோம். தொடருங்கள். பயணியுங்கள்.

புலன நிர்வாகிகள்:

கரு. ராஜா;
(கோலாலம்பூர்)

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
(பினாங்கு)

முத்துக்கிருஷ்ணன்;
(மலாக்கா)

 

காமராஜர் வாழ்க்கையில் ஒரு நாள் - கரு. ராஜா

17.12.2020

காமராஜர் முதல்வராக இருந்த போது அவரின் அலுவலகத்திற்குத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி சட்டை. கையில் ஒரு மஞ்சள் பை.

அவரை அழைத்து அருகில் அமர வைத்த காமராஜர் 'என்ன ரெட்டியாரே... ஏதாவது முக்கிய சேதியா... இல்ல சும்மா பார்க்க வந்தீரா...' என்று கேட்டார். வந்தவருக்குத் தயக்கம்.

'பரவாயில்ல சொல்லுங்க ரெட்டியார்...' என்று, மீண்டும் கேட்டார் காமராஜர்.

'ஒண்ணுமில்ல... என் மகனுக்கு கல்யாணம்... அதான்...'

'இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கணும். நல்ல விசயம் தானே...' என்று தட்டிக் கொடுத்துப் பாராட்டி, 'சரி... நான் என்ன பண்ணணும்...' என்றார் காமராஜர்.

'இல்ல... கல்யாணத்துக்கு... நீங்க தான் தலைமை தாங்கணும்... ஊரெல்லாம் சொல்லிட்டேன்... பத்திரிகை கொடுக்க நேர்ல வந்தேன்...' என்று தயங்கினார்.

'நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை... அதனால் அப்படி சொல்லிட்டேன்... தப்பா நினைச்சுக்காதீங்க...' என்று இழுத்தார்.

கோபத்தில் முகம் இறுகி 'எந்த நம்பிக்கையில் நீங்க முடிவெடுத்தீங்க... யாரைக் கேட்டு மத்தவங்ககிட்ட சொன்னீங்க...' என்று கடுமை காட்டினார் காமராஜர்.

கலங்கிய கண்களுடன், 'தப்பா நினைச்சுக்காதீங்க... அன்றைக்கு உங்களுக்கு வேலுார்ல ஒரு கூட்டம் இருக்கு... பக்கத்துல தான் என் ஊர்... அதனால கல்யாணத்துக்குக் கூப்பிட்டா கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன்...' என்றார், ரெட்டியார்.

'உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம்... அதுவா என் வேலை... வேற வேலை இல்லையா... வர முடியாது... நீங்க போயிட்டு வாங்க...' என பட்டென்று கூறி அனுப்பி விட்டார் காமராஜர்.

முகத்தில் அடித்தது போல் ஆனது ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லவில்லை.

கல்யாணத்தை அவர் வீட்டில் எளிமையாக நடத்தினார். அவரது வசதிக்கு அப்படித்தான் முடியும். கடைசியில் காமராஜர் வர.மாட்டார் என்பதும் மக்களுக்குப் புரிந்தது.

'என்னமோ நானும் காமராஜரும் ஒண்ணா சிறையில் இருந்தோம்... கூட்டாளிங்க... என் வீட்டு கல்யாணத்துக்கு வருவார்ன்னு பெரிசா தம்பட்டம் அடிச்சுகிட்டாரு... பார்த்தீங்களா அலம்பல...' எனும் ஏளனப் பேச்சுக் கூடியது. வந்து போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்.

மனம் உடைந்த ரெட்டியாருக்கு உடல் கூனிப் போனது. வீட்டிற்குள் சுருண்டு படுத்து விட்டார். அந்த வீடே வெறிச்சோடிப் போனது. சற்று நேரத்திற்கு எல்லாம் காரில் வந்த ஒருவர் 'முதல்வர் காமராஜர் வரப் போகிறார்...' என்ற செய்தியைச் சொன்னார்.

நம்பிக்கையற்று உட்கார்ந்து இருந்தார் ரெட்டியார். சில நிமிடங்களில் அடுத்த காரில், இரண்டு பெரிய தூக்குச் சட்டிகளில் சாப்பாட்டோடு வந்து இறங்கினார் காமராஜர்.

ரெட்டியாரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கு எல்லாம் கூட்டம் சேர்ந்து விட்டது. முதல்வரைத் தழுவியபடி குலுங்கி அழுதார் ரெட்டியார்.

’தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்திய காமராஜர், 'சுதந்திரப் போராட்டம்... ஜெயில்ன்னு எல்லாத்தையும் இழந்துட்ட... உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே... பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னப்பவே நான் வர்றதா சொல்லி இருந்தா... நீங்க இருக்குற கஷ்டத்துல கடன் வாங்குவீர்...’

'முதல்வர் வர்றார்ன்னு ஏதாவது பெரிசா செய்யணும்ன்னு போவீர்... அதான் அப்படிச் சொன்னேன்... மன்னிச்சிடுப்பா... உன் வீட்டு கல்யாணத்துக்கு வராமல் எங்க போவேன்...' என்று ஆரத் தழுவினார்.

கண்ணீர்... ஆனந்தக் கண்ணீரான நேரம் அது.

பிறகு வாசலில் பாய் விரித்து; எடுத்து வந்த சாப்பாட்டை அனைவருக்கும் போடச் சொல்லிக் குடும்பத்தாரோடு தானும் அமர்ந்து சாப்பிட்டார்.

சாப்பாட்டுச் சுமையைக் கூட அவருக்குக் கொடுத்து விடக் கூடாது என்று தன் பணத்தில் சாப்பாடு வாங்கி வந்தார் என்றால் ரெட்டியாரின் நிலை எப்படி இருக்கும் என்பதைக் கூறத் தேவை இல்லை.

நிலை மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில், நட்பைப் போற்றியவர் கர்மவீரர் காமராசர். அவர் மறையவில்லை. இன்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.



 

ம.தி.க. முன்னாள் தலைவர் பி.எஸ். மணியம் மறைவு - ச.த. அண்ணாமலை

17.12.2020

மலேசியத் திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் மானமிகு. பி.எஸ். மணியம் அவர்கள் உடல் நலமின்றி பெட்டாலிங் ஜெயா யுனிவர்சிட்டி மருத்துவமனையில் மறைவுற்றார். அவர் மகள் ம.தி.க மகளிர் தேசியத் தலைவி வழக்கறிஞர் சு. குமுதா அவர்கள் அந்தச் செய்தியை உறுதிப் படுத்தினார்.

கழகத்தில் பணியாற்றியவர்களில் நீண்ட காலம் சேவையை வழங்கியவர் என்ற தனி ஒரு பெருமை, மறைந்த பி. எஸ். மணியம் அவர்களுக்கு உண்டு.

கழக முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.. ஆர். இராமசாமி அவர்களுடன் நீண்ட நாள் பல பொறுப்புகள் ஏற்றதோடு, இன்று நமக்கென்று சொந்த கட்டடம்; மலாயன் மென்சன் கட்டடம்; செமளின் கட்டடம் பெற்றதில் பி.எஸ். அவர்கள் அதிகம் பங்காற்றி உள்ளார்.

கட்டடக் குழுத் தலைவராக மறைந்த அ. மருதமுத்து அவர்களுடன் கட்டடக் குழுச் செயலாளராகப் பணியாற்றிய பெருமையும் உண்டு.

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் பி. எஸ். மணியம் அவர்கள்; 2010-ஆம் ஆண்டில் கழகத்தின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கழகம் ஒரு புத்துணர்ச்சியுடன் செயல்படுவற்கு தன்னால் முடிந்த அளவில் கழகத்தைச் சீராக நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும் அவர் காலத்தில் தான் கழகத்தின் தேசியத் தலைவராக இருப்பவர் இரண்டு தவணைக் காலம் போதும்; மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மற்றவர்களுக்கு வழிவிட்டு, கழக இளைய தலைமுறைகள் செயல் படுவதை வெளியில் இருந்து ஊக்கப் படுத்திய நல்ல எடுத்துக் காட்டான ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.

கழக அன்பர்கள் மத்தியிலும், முன்னாள் தமிழ் அமைச்சர்களுடனும் நட்பு பாராட்டியவர். அவர் மறைவு கழகத்திற்கு மட்டும் அல்ல; அவர் குடுபத்திற்கும் பெரும் இழப்பாகும்.

அவர் தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ச.த. அண்ணாமலை,
ம.தி.க. தேசியத் தலைவர்.

17.12.2020



 

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது

17.12.2020

மதுரை அருகே கீழடி எனும் பெரிய ஒரு நிலப்பரப்பு. அங்கே தொல்லியல் ஆய்வுகள் செய்தார்கள். அங்கே கிடைத்த பொருட்களை ஆராய்ந்து பார்த்ததில் தமிழகச் சங்க காலம் என்பது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்து உள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கீழடி கிராமம். 2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆகழ்வாய்வு நடத்தியது. அங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 20-ஆ5வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தான் தொடங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் தொடங்கி உள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்து உள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலக் கட்டத்தில்தான் சிந்து நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப் பட்டது.

ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தார்கள், எழுதத் தெரிந்து இருந்தார்கள் எனும் முடிவிற்கு வரலாம்.

தொகுப்பு: மலேசியம்

Raja Sg Buluh:
அற்புதமான தகவல். இதைப் படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது.



 

வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் - ஈப்போ பி.கே.குமார்

17.12.2020

வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும். இப்படிச் சொல்பவர் சமூக ஆர்வலர்; தொழில் அதிபர் ஈப்போ புந்தோங் பி.கே.குமார்.

மலேசிய நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் நிறையவே ஆதரவுகளை வழங்கியவர். வழங்கி வருபவர். இந்த நாட்டில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியவர்.

தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காகத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.

தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்தி வருகிறார்.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காக நிறைய செலவு செய்தவர். (பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம்). அதையும் தாண்டிய நிலையில் அவர் இந்த மலேசியம் புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார். வாழ்த்துகிறோம்.

மலேசியம் புலனத்தின் அன்பர் பி.கே.குமார் அவர்கள் எழுதிய நூல் வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் எனும் விழிப்புணர்வு நூல். ஒவ்வோர் இல்லத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் அல்ல. படிக்க வேண்டிய நூல்.

படித்துப் பாருங்கள். மணிமணியான வர்த்தக அறிவுரைகளை வழங்குகிறார். -முத்துக்கிருஷ்ணன்:

Amachiappan: நிறைய வியாபார, வாணிக ( தொழில் தொடங்க ) நல்ல கருத்துக்கள் நிறைந்த தரமான புத்தகம். வெளியீட்டு அன்று நானும் கலந்து புத்தகமொன்றை வாங்கினேன். அருமை.

Chandran Larkin Johore: ஈப்போ பி.கே.குமார் அவர்களின் ‘வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.

Amachiappan: எழுதிய ஐயா பி.கே. குமாரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குப் புத்தகத்தை அனுப்பித் தருவார்.

BK Kumar: முகவரி தாருங்கள் இலவசமாக அனுப்புகிறேன்

Vengadeshan: வாழ்க வளமுடன் இறைவன் அருளால் தொடரட்டும் நற் பணி 👏👏👏👏👏🙌🙏


 

இள மரணங்கள் அதிகரிப்பு - இமயவர்மன் மதுரை

17.12.2020

Imayavarman: தற்போது இள மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகள் அற்ற அந்நியர்களையும் உலுக்கிப் போடுகின்றன. அவர் குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்குப் பிறகு அந்தக் குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப் படுகின்றன.

இது விதி அல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்...

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

2. இரவில் கண் விழித்து இருத்தல்

3. காலை உணவை தவிர்த்தல்.

4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

5. பணத்தை நோக்கிய ஓட்டம்

6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்

7. கவலைகளைக் கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பைத் தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னைத் தானே சீராக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தை வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதிய அளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.

பச்சையாக உண்ணக் கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக் கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததைத் தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்வதைக் குறையுங்கள்.

உடற்பயிற்சி, உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்துப் பேசி சந்தோசமாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களைப் பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாகப் பூணுங்கள்.

வாழ்க்கை ஓர் அற்புதமான பரிசு. அதை அவமதித்து விடாதீர்கள்.

   இமயவர்மன் மதுரை





தமிழ் மொழியில் கனடா தேசியப் பாடல்

17.12.2020

கனடா தேசியப் பாடலின் பெயர் ஓ கனடா. சர் அடோல்ப் பசில் ரூட்டியர் (Sir Adolphe Basile Routhier) என்பவரால் 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ராபர்ட் ஸ்டான்லி வீர் (Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழியில் கவிஞர் கந்தவனம் என்பவரால் 2017-ஆம் ஆண்டு மொழி ஆக்கம் செய்யப்பட்டது.

கனடா நாட்டின் 150-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டார்கள். வழக்கமாகத் தமிழர் பண்பாட்டைப் பெருமை செய்து வரும் கனடா அரசு; அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டி உள்ளது. கனடா நாட்டில் தமிழ் மொழிக்கு என்றும் எப்போதும் தனி மரியாதை.

தமிழர்களின் கலாசார நாட்களைக் கொண்டாடுவது; பொது அறிவிப்புகளைத் தமிழில் அறிவிப்பு செய்வது; தமிழர்களின் நிகழ்ச்சிகளில் தலைவர்கள் கலந்து கொள்வது; தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்வது என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்து வருகிறார்கள். உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தவர் கனடா பிரதமர் ஜஸ்டின் (Justin Trudeau). தமிழர்களின கலாச்சார பண்டிகையான பொங்கலுக்குத் தமிழில் வாழ்த்து தெரிவித்தவர். தமிழர்களின் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி உலகத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

இங்கே மாதிரி கனடாவில் மதவாதம் இல்லை. இனவாதம் இல்லை. வந்தேறிகள் இராமாயணமும் இல்லை.

(மலேசியம்)
17.12.2020 - 6:47 pm

Perumal Kuala Lumpur: பழந்தமிழர் வரலாற்றை கற்கவே இந்தப் புலனத்தில் கைகோர்க்கிறேன்

Chandran Larkin Johore:
இந்தப் புலனம் ஒரு சிறப்பான புலனமாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து இந்தப் புலனத்தில் தமிழ்ப்பள்ளி; கோயில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இனி வரக்கூடிய காலங்களில், இந்த மலேசியா நாட்டில், மலேசியா வாழ் இந்தியர்களின் பொருளாதாரம் எப்படி இருக்கப் போகிறது என்று பேசினால் சிறப்பாக இருக்கும். இனி வரக்கூடிய நம்முடைய சங்ததிகள் இந்த நாட்டில் எப்படி வாழப் போகின்றனர் என்பதைத் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.



மலேசியாவில் சாதிகளை மறந்து வருகிறோம் - சுங்கை சிப்புட் முருகன்

17.12.2020

**** Tanjavur: முத்து பையனுக்கு பெண் தேடி வருகிறேன். வயது 28. உடையார் நத்தமன்.

புலன நிர்வாகம்: மாப்பிள்ளை தேடுங்கள். பெண் தேடுங்கள். பிரச்சினை இல்லை. ஆனால் சாதிகள் வேண்டாமே. இந்தப் புலனம் ஒரு மலேசியப் புலனம். மலேசியாவில் சாதி சனம் சடங்கு சம்பிரதாய ஐதீகங்களுக்கு நாங்கள் மரியாதை வழங்குவது இல்லை. மன்னிக்கவும் ஐயா.

இந்தப் புலனம் தமிழர்களின் வரலாறு; சமுதாய மறுமலர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கும் புலனம். சாதிகள் இல்லையடி பாப்பா என்பதே எங்களின் நிலைப்பாடு. நாங்கள் மலேசியாவில் சாதிகளை ஒழித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

Murugan SSiput:
வணக்கம் அய்யா. ஒழிப்பது மட்டும் அல்ல. மீன்டும் மறந்தும் முளைக்கவும் கூடாது. இங்கே மலேசியாவில் நாம் சாதிகளை மறந்து வருகிறோம். சிலர் நினைவு படுத்துகிறார்கள். எத்தனை பாரதியார்கள் வந்தாலும் மாற்றவே முடியாது...

ஆரியப் பண்பாடுகளை நாங்கள் இங்கே மலேசியாவில் மறந்து வருகிறோம். தயவு செய்து கிளற வேண்டாம். மீண்டும் ஒரு நினைவூட்டல்.

இது மலேசியப் புலனம். இங்கே சாதிகள் தொடர்பான செய்திகளுக்கு இடம் இல்லை. ஆரியத்தை ஆராதனை செய்வதைத் தவிர்த்து வருகிறோம். இது தொடர்பான பதிவுகள் போதும். வேறு பயனுள்ள தகவல்களைப் பரிமாறுவோம்.


 

டத்தோ சரவணன் விழுதுகள் பேட்டி - பொன் ரங்கன்

17.12.2020

விழுதுகளில் தோழர் டத்தோ சரவணன் தகவல் சிறப்பு. மற்றவை காலத்துக்கு ஏற்றதாக இல்லை. சமுதாயக் குரல் தீர்வு அதிபுத்திசாலிகளிட்ம் இல்லீங்க... சமயத்தைப் பற்றி பேச ஆளுமை மிக்கவர்கள் பலர் உள்ளனர்.

நாத்திகத் திராவிடச் சிந்தனை மிக்க உங்களுக்கு ஏன் சார் ஆத்திக ஆய்வு? பட்ஜட் பேச்சில் என்ன சாதித்தீர்கள்? ஊடகச் சக்தியை உங்கள் திறமைக்கு ஏற்றவாறு இன்னும் ஆக்ககரமான முன்னெடுப்புக்கு ஆளுங்கள். எல்லாம் எதிர் மறை ஆய்வுகள். சிக்கல்கள்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் கொல்வது போதாது என்று நீங்கள் வேறு இனத்தை மேலும் தாழ்வடையச் செய்கிறீர்கள். நம்மைத் தோற்கடித்த ஆளும் கட்சி எதிர்க்கட்சிப் பேடிகளின் பேட்டிகள் வேண்டாம்.

தீர்வை நோக்கிப் பயணியுங்கள். அமைச்சுகளில் உள்ள வணிக வாய்ப்புகள், பொருளாதாரத் திட்டங்கள், ஏன் எச்.டி.எப்.ஆர். பயிற்சிகள், சமூகம், சுகாதாரம், விவசாயம், தயாரிப்புத் துறை, சேவைத் துறை, டிஜிட்டல் மார்கெட்டிங், இ-கோமர்ஸ் என்று போங்கள்.

சமுதாயக் குறை தீர்க்க யாருமில்லை! சும்மா ஊடகத்தில வேடிக்கை முகங்களைக் காட்டி வேடிக்கை காட்ட வேண்டாம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக உள்ளது.

தனி மனிதப் புலமைகள் தடுமாறுகின்றன. செல்வ மலர் குரலில் மட்டும் பொறுப்பு தெரிகிறது. உங்கள் கேள்விகள் நல்லா இருந்தாலும் பதில்கள் மேல் தட்டுப் பெரிய ஆட்களுக்கு மட்டும்.

பாமர மக்கள் சந்தா கொடுக்கும் ஏழைகளுக்கு ஓர் இட்டிலி கடை போட பண்டார் ராயாவிலோ, நகராண்மையிலோ ஒரு லைசன்ஸ் எடுப்பதற்குச் சொல்லித் தாருங்கள். புண்ணியமாகப் போகும். அரசு, அரசியல் ஆர்ப்பரிப்பு வேண்டாம். நம் இனத்ததைப் பொறுத்த மட்டில் அது தீராத சொறி சார். நன்றி.

பொன் ரங்கன். தமிழர் குரல்; சிலாங்கூர்.