15 பிப்ரவரி 2022

மலாக்கா காடிங் தோட்டத்து தீபாவளி

தமிழ் மலர் - 16.11.2020

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். இரண்டாவது முறையாக உலகம் உருண்டையானது போல களை கட்டி நிற்கும். ஒரு பத்துப் பதினைந்து குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலக் கட்டம்.

தீபாவளிக்கு முதல் நாள். சாயங்கால நேரத்தில் சின்னச் சின்னத் துக்கடான்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்வோம். ஒரு மீட்டிங் போடுவோம். எந்த ஆற்றில் குளிப்பது. சின்ன ஆற்றில் குளிக்கலாமா. பெரிய ஆற்றில் குளிக்கலாமா. வாக்குவாதம் நடக்கும்.


மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டம்.

ரப்பர்த் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்து

இதே தோட்டத்தில் கிராணியாராகவும் பணி புரிந்தேன்.

பாலாறு என்று ஓர் ஆறு இருந்தது. பால் ஓடுகிற ஆறு அல்ல. ரப்பர்க் கழிவுகள் கலக்கும் ஒரு பழைய ஆறு. சும்மா சொல்லக் கூடாது. மனுசன் குளிக்க மாட்டான். புரிந்து கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் வைத்த பெயர் பாலாறு. ஒன் மினிட் பிளீஸ்.

தீபம் என்றால் ஒளி. ஆவளி என்றால் வரிசை. ஒளி விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் திருநாள். 21 விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பது ஓர் ஐதீகம். இப்போது எல்லாம் இந்த மாதிரி வரிசை வரிசையாக 21 விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறார்களா? தெரியவில்லை. பெரிய வயசு பெரிசுகளைக் கேட்டால் தெரியும்.

முன்பு 50 வருடங்களுக்கு முன்னர் தோட்டங்களில் தான் தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கோலாகலமாகப் பார்க்க முடிந்தது. அடுத்து நகர்ப் புறங்களில் பார்க்க முடிந்தது. கடைத் தெருக்களில் பார்க்க முடிந்தது. காட்டுக் கோயில்களில் பார்க்க முடிந்தது. ஏன் ஈய லம்பங்களில் கூட பார்க்க முடிந்தது.

தோட்டப்புற வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் போட்டிப் போட்டுக் கொண்டு தீப விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். நான் பிறந்து வளர்ந்த மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில் தீபாவளி என்றால் அப்படித்தான் இருக்கும்.

சில வீடுகளில் வாழை மரங்களை வெட்டி வந்து நிறுத்தி வைத்து இருப்பார்கள். சில வீடுகளில் தோரணங்கள் தொங்கும். சில வீடுகளில் மாயிலைத் தோப்புகளே தொங்கும்.


அந்தக் காலத்துத் தோட்டத்துப் புறப் பாலாறு. மாதிரிப் படம்.

காடிங் தோட்டத்துக் கதைக்கு வருகிறேன். எந்த ஆற்றில் குளிப்பது என்று விவாதம் நடக்கும். ஒன்றும் சரிபட்டு வரவில்லை என்றால் கைவசம் எப்போதுமே ஒரு துருப்புச் சீட்டு இருக்கும். தோட்டத்துக் கழிசல்களின் ஒட்டு மொத்த வங்கி என்கிற பேரில் ஒரு பழைய ஆறு. பக்கத்திலேயே ஓடும். பாலாற்றின் பங்காளி ஆறு.

நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். அதுதான் அப்போதைக்கு எங்களின் வேதாரண்யம். ஏழைச் சிறுசுகளின் ஒன்றுவிட்ட சரணாலயம்.

காய்ந்த மாடுகள் கம்புக் கொல்லையில் பாய்ந்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி கொஞ்ச நேரத்தில் எல்லா பையன்களும் சட்டை சிலுவார்களைக் கழற்றிப் போடுவார்கள்.

1960-ஆம் ஆண்டுகளில் நான் வாழ்ந்த தோட்டத்து  மேல் லயன் வீடு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அச்சம், கூச்சம், அசிங்கம், அருவருப்பு என்று ஒன்றுமே இருக்காது. வெட்கம் என்றால் என்ன. கட்டி என்ன விலை. அது எங்கே விற்கிறது என்று கேட்பார்கள். அந்த மாதிரி நிர்வாண ராகத்தில் ஆனந்த பைரவிகளின் ஆலாபனைகள்.

அப்புறம் என்ன. ஆற்றுக்குள் அடுக்கடுக்காய்ப் பாய்ச்சல்கள். ஓகோ ஐலசா. ஓகோ ஐலசா. ஒரே கும்மாளம். வயசு என்ன. பத்து பன்னிரண்டு இருக்கும்.

நாங்கள் நடத்துகின்ற இந்தக் கூத்துகளைப் பார்த்து பத்து வயது சிறுமிகள் எல்லாம் ஓடிப் போய் ஒதுங்கிக் கொள்வார்கள். பத்துமலை, ராசாத்தி, ராசம்மா, பார்வதி, கல்யாணி, பத்துமா. இப்படி சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

தோட்டத்து மேல் லயன் வீடுகளில் முதல் வீடு. சின்ன வயதில் வாழ்ந்த வீடு.
1959-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. இதை அவர்கள் படிக்க வேண்டும் என்பதே என்னுடைய தீபாவளி ஆசையும்கூட. ஆக அந்த ஆற்றுப் பக்கம் பெண் என்கிற பேரில் ஒரு கோழிக் குஞ்சுகூட வந்து எட்டிப் பார்க்காது. அப்படி ஒரு கூத்து நடக்கும்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆறு ’கோப்பி ஓ’ மாதிரி ஜென்மாந்திர கலருக்கு மாறிப் போய் இருக்கும். இருக்கிற மீன்கள் எல்லாம் கைலாசத்திற்கு பயணச் சீட்டுகளை வேறு வாங்கி இருக்கும். அதோடு விட்டால் தானே.

அதில் எவனோ ஒருவன் ஒரு சின்ன ஆள்காட்டி விரல் அளவுக்கு ஒரு மீனைப் பிடித்து விட்டான். பெயர் சுப்பன் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். அவனுக்கு அன்றைக்கு முழுவதும் மகா ராஜமரியாதை. அவனைத் தூக்கி வைத்து பெரிய ஓர் ஆட்டம்.

காடிங் தோட்டத்துப் பாலய நண்பன் சுப்பன்.  அருகில் சொந்தமாக வீடு கட்டி வாழ்கிறார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அது ஓர் அழகான காலம். அர்த்தம் தெரியாத ஆன்மீகங்கள். அற்புதமான பிஞ்சு மனங்களின் லௌகீகங்கள். அம்மணம் தெரியாமல் கலைந்து போகும் நனவுகள்.

மறுபடியும் கிடைக்குமா. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது. ரொம்ப நாளைக்கு முன்னால் தோட்டத்து அரிச்சுவடிகளில் இருந்து அவை எல்லாம் களவு போய்விட்டன.

அந்தக் காலக் கட்டத்தில் காடிங் தோட்டத்தில் குலேபகாவலி பூக்கள் இருந்தன. ஆங்கிலத்தில் எபிபில்லம் பைலாந்தஸ் (Epiphyllum phyllanthus) என்று பெயர். ரொம்ப நாளைக்குப் பிறகு ஆராய்ச்சி பண்ணி தெரிந்து கொண்டேன்.

காடிங் தோட்டத்து மேனேஜர் கூ பெக் வான் வாழ்ந்த பங்களா வீடு

இரவு 12 மணிக்கு மேல் இந்தப் பூ மலரும் போது நறுமணம் மூக்கைத் துளைக்கும். அதற்கு இலைகள் இல்லை. அந்தப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த மாரியம்மன் கோயில் வைத்து சாமி கும்பிடுவோம்.

இந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான், ராமன் என்கிற பையன் ஒரு செம்புத்துப் பறவையின் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்தான். அந்தக் காலத்தில், செம்புத்துப் பறவைகள் இருட்டுகின்ற நேரத்தில் பூச்சிகளைப் பிடிக்க பறந்து திரியும். சிகப்பு நிறத்தில் சற்றுப் பருமனாக இருக்கும்.

மரத்திற்கு கீழே இருக்கும் அலுவலகத்தில் தான் வேலை செய்தேன். அருகில் இருப்பது ரப்பர் பால் காய வைக்கும் கிடங்கு. ஆகப் பின்னால் இருப்பது பால் நிறுக்கும் இடம்.

இப்போது அவற்றைப் பார்க்க முடிவதில்லை. இங்கே காடுகள் அழிக்கப் படுவதால் அவை சோமாலியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்து விட்டதாக அரசல் புரசலாகக் கேள்வி.

ஆக அந்தச் செம்புத்துக் குஞ்சைச் சகல மரியாதையுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம். என் கண்ணையே ஒப்படைக்கிறேன் என்று சொல்லி அதை என்னிடமே கொடுத்து விட்டார்கள்.

விடிந்தால் தீபாவளி. ராத்திரி நேரத்தில் பக்கத்து வீட்டு ராமையா தாத்தா வந்தார். செம்புத்துக் குஞ்சைப் பார்த்து அசந்து போனார். மூனு நம்பர் அடிக்கிற மாதிரி செம்புத்துக் குஞ்சு லேசில் கிடைக்காது என்றார். அப்போது மூனு நம்பர்தான் பிரபலம். நான்கு நம்பர் கூடா இல்லாத காலம்.

நான் படித்த டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி. முன்பு அத்தாப்புக் குடிசையாக இருந்தது. இந்தப் பள்ளியின் முதல் தலைமையாசிரியர் மதிப்புமிகு வி.பி. பழனியாண்டி
அவர்கள் அன்பளிப்பு செய்த நிலத்தில் தான் இப்போது இந்தப் பள்ளியின் புதிய கட்டிடம்

எங்கே கிடைத்தது, எப்படி கிடைத்தது என்று விலாவாரியாக விசாரித்தார். விடிந்தால் தீபாவளி. இருந்தாலும் விடவில்லை. எங்களை களம் இறக்கி விட்டார். ஆற்றுப் பக்கத்தில் இருந்த லாலான் காடே தூள் தூளானது. லாலான் வேர்களைப் பிடுங்காத குறைதான்.

தூள் படத்தில் நடித்த விக்ரம் எங்கள் காடிங் தோட்டத்துக் கதையைப் பயன்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது. காடிங் தோட்டத்து மக்கள் பெரிய மனசுக்காரர்கள். பெரிதுபடுத்தவில்லை. சரி.

மதம் பிடித்த யானை செய்யும் துவம்சம் இருக்கிறதே அதையும் மிஞ்சிய சஞ்சீவிச் சதிராட்டங்கள் அங்கே நடந்து விட்டன. செடி கொடி எல்லாமே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன.

காஜா பேராங் உயர்நிலைப்பள்ளி.
ஐந்தாம் படிவம் (
முன்பு சீனியர் கேம்பிரிட்ஜ்) வரை படித்த பள்ளி.

கூண்டு மட்டும் கிடைக்கட்டும். உங்களுக்கு ஆளாளாக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறேன்டா. இது உங்க ஆத்தா மேல சத்தியம்டா என்று ஆசை அபிசேகங்கள் வேறு. சஞ்சீவி வேரைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.

‘செம்புத்துக் கூண்டுக்குள் சஞ்சீவி வேர் இருக்குமாம். அந்த வேரை நம்ப உடம்புக்குள் வச்சு தச்சிட்டா; துப்பாக்கியால சுட்டாலும் சாக மாட்டோமாம். சுங்கை சிப்புட்டுல காட்டுப் பெருமாளுனு ஒருத்தர் இருந்தாராம். அவர்கிட்ட இந்த சஞ்சீவி வேர் இருந்துச்சாம். அதை வச்சுகிட்டு அவரு வெள்ளைக்காரங்க கிட்ட என்ன மாதிரி கண்ணாமூச்சி காட்டினார்ரு என்றார்.

ஆனால் என்ன. செம்புத்துப் பறவையின் கூடும் கிடைக்கவில்லை. செம்புத்துக் குஞ்சின் தாயையும் பார்க்க முடியவில்லை. லாலான் காடு ஒலிம்பிக் திடலாக மாறியதுதான் மிச்சம். சரி. சஞ்சீவி வேர் விசயத்திற்கு வருகிறேன்.

காடிங் தோட்டம். 1970-களில் கட்டப்பட்ட வீடு

சஞ்சீவி வேர் இறந்த ஒருவரையே மறுபடியும் உயிர்பிக்கும் சக்தி பெற்றது என்று நாம் அனைவரும் கேட்டு அறிந்தது. ஆனால் பாருங்கள், இந்த வேரை வாங்கியவர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

கடல் கடந்து வந்து இங்கே சஞ்சீவி வேர் என்று சொல்லி சிலர் விற்கிறார்கள். விற்றுவிட்டுப் போகட்டும். ஒரு வேர் பத்தாயிரம் ரிங்கிட் வரை விலை போய் இருக்கிறது.

ரொம்ப வேண்டாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஐயாயிரம் கொடுத்து வாங்கி இருக்கிறார். உண்மையிலேயே அது சஞ்சீவி வேர் தானா என்று அவருக்கே தெரியாது.

டுரியான் துங்கல் நீர்த்தேக்கம் பற்றிய செய்தியறிக்கை

ஆனால் காசு பணம் பார்க்காமல் பொதுமக்கள் அதை வாங்குகிறார்கள். தாயத்து என்று இடைவாரில், தொடைவாரில் கட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். குறை சொல்லவில்லை. அதனால் நன்மை வந்ததா என்பதே என்னுடைய கேள்வி.

இஞ்சித் தின்றவரிடம் போய் இனிக்குதா புளிக்குதா என்று கேட்டால் என்ன சொல்வார். நல்ல மாதிரியாகக் கேட்டாலும் சரிபட்டு வராது. உண்மை தானே. விடுங்கள்.

சஞ்சீவி வேர் இருந்த மலை சஞ்சீவி மலை என்று சுக்கிராசாரியார் சொல்கிறார். இராமாயணக் காவியத்தைப் படித்து இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இலட்சுமணன் மற்றும் போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களைப் பிழைக்க வைப்பதற்காக சஞ்சீவி வேர் தேவைப் படுகிறது. பறந்து வந்த அனுமானுக்குச் சஞ்சீவி வேர் எது என்று தெரியாத நிலை.

காடிங் தோட்டத்துக்கு அருகில் இருக்கும் டுரியான் துங்கல் நீர்த்தேக்கம்

சஞ்சீவி மலையை அப்படியே தூக்கி வந்து விடுகிறான். சஞ்சீவி வேரின் மருத்துவ மகிமையால் இராமனின் படையினர் உயிர் பெறுகிறார்கள் என்று இராமாயணம் கூறுகிறது.

சஞ்சீவி மலை இப்போதைக்கு ராமர் பாலத்தின் அடியில் இருப்பதாகக் கேள்வி. தேடிப் பார்த்தால் கிடைக்கும். இப்போது ஒரு குழுவினர் ராமர் பாலம் தங்களின் பூர்வீகச் சொத்து என்று கலாய்க்கிறார்கள். ராமர் பாலத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது.

இனிமேல் யாராவது சஞ்சீவி வேர் என்று சொன்னால் உங்கள் தொடையைக் தட்டிக் காட்டி அங்கே புதைத்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள். எப்படி கிடைத்தது என்று கேட்டால் பறவைகள் பேசுவதை அறிந்து கொள்ளும் நயன மொழி தெரியும். அதனால் கிடைத்தது என்றும் சொல்லுங்கள்.  

கேள்வி கேட்டவர் கொஞ்சம் யோசிப்பார். அந்த மொழியை அவரும் கற்றுக் கொள்ள ஆசைப் படலாம். அப்படி ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கிறார் நம்ப சிக்ஸ் பேக் நடிகை நயன்தாரா. நயன மொழிகளின் நவரச அவதாரம். அவருக்கு எல்லாம் அத்துப்படி. ஆக அவரிடம் போய்க் கேளுங்கள் என்று சொல்லி ‘எஸ்க்கேப்’ ஆகிவிடுங்கள்!

இப்போது பெரிய ஒரு கேள்விக்குறி. வீடுகளில் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றுகிறார்களா? எங்கோ சில வீடுகளில் அந்த மாதிரி விளக்கு ஏற்றல்கள் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.

நவீனத் தொழிநுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வாட்ஸ் அப்; இன்ஸ்டாகிராம்; பேஸ்புக்; சூம் ஊடகங்கள் மூலமாகத் தீபாவளியைக் கொண்டாடி விட்டுப் போகிறார்கள். காலம் செய்த கோலம்.

இப்போது கோரோனாவின் கோரத் தாண்டவம். அந்தத் தாண்டவத்தில் அரசியல்வாதிகள் சிலரின் சுயநலச் சூப்பர் ருத்ர ஆர்ப்பாட்டங்கள். அப்பேர்ப்பட்ட நடராசருக்கே நடனம் சொல்லிக் கொடுப்பார்கள் போலும். எக்கச்சக்கமாய்த் தீபாவளி சிக்கிக் கொண்டது. பாவம் தீபாவளி.

இனவாதம் மதவாதத்தால் கொஞ்ச காலம் அழுதது. இந்த வருடம் ரொம்பவுமே கண்ணீர் வடிக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா, உலகம் முழுமைக்கும் பரவி கோடிக் கோடி மக்களின் வாழ்வதாரத்தைச் சீர் குலைத்துவிட்டது.

விடிந்தால் தீபாவளி. எல்லாச் சுவைகள் இருந்தாலும் அதில் கொஞ்சம் நகைச்சுவை கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம். அனைவருக்கும் கலந்த தீபாவளி வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.11.2020



 

 

12 பிப்ரவரி 2022

ஆப்பிரிக்கா நாட்டில் செரெங்கெட்டி அதிசயம்

மலேசியம் புலனத்தின் மற்றும் ஒரு பொது அறிவுத் தகவல்

ஒவ்வோர் ஆண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்கா, தான்சானியா, செரெங்கெட்டி (Serengeti) சரணாலயத்தில் இருந்து மசாய் மாரா (Masai Mara) என்ற இடத்துக்கு மில்லியன் கணக்கான விலங்குகள் இடம் பெயர்கின்றன. உலகத்தில் ஓர் அதிசயமாக கருதப் படுகிறது. (Seven Natural Wonders of Africa)


ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை செரெங்கெட்டி பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. இதனால் மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களின் பயணத்தை இந்த விலங்குகள் தொடங்குகின்றன.

இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் 260,000 வரிக் குதிரைகள் 1.7 மில்லியன் காட்டு எருமைகள், 470,000 சிறுமான்கள் என இலட்சக் கணக்கான விலங்குகள் இடப்பெயர்வில் ஈடுபட்டு மீண்டும் தம் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன. 250,000 காட்டு எருமைகள் 5,000 வரிக் குதிரைகள் 12,000 சிறுமான்கள் பலியாகின்றன.

இந்த விலங்குகள் மிகக் கடுமையான பாதைகள் வழியாகப் பயணம் செய்கின்றன. பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்டி செல்கின்றன. இந்த விலங்குகளை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள் காத்து இருக்கும். இவை தமக்கு கிடைத்த விலங்குகளை அடித்துப் பிடித்துச் சாப்பிடும்.

இவை மட்டும் அல்லாது, சிறுத்தைகள், கழுதைப் புலிகள், சிங்கங்கள் எல்லாம் காத்து இருந்து பயணம் செய்யும் விலங்குகளை வேட்டையாடும்.


விலங்குகளின் இந்த அதிசயப் பயணத்தைப் பார்த்து மகிழச் சிறப்பு சுற்றுலாவுக்குக் கென்யா அரசாங்கம் ஏற்பாடு செய்து தருகிறது.

இதனால் கென்யாவுக்குச் சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்து இருக்கிறது. இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் இடம் பெயர்வது உலகத்தில் ஓர் அதிசயமாகக் கருதப் படுகிறது.

(மலேசியம்)
11.02.2022


சான்றுகள்:
1. Zimmermann, Kim Ann (23 June 2017). "The Serengeti: Plain Facts about National Park & Animals". Live Science.

2. Serengeti, Heartbreak on the Serengeti". archive.ph. National Geographic Magazine. 29 June 2012.

3. Anouk Zijlma. "The Great Annual Wildlife Migration – The Great Migration of Wildebeest and Zebra". About.com.





 

09 பிப்ரவரி 2022

மலேசியப் பிரதமர் பதவியில் துன் சம்பந்தன்

மலேசிய வரலாற்றில், ம.இ.கா.வின் தலைவர் வீ. தி. சம்பந்தன் அவர்களும்; மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக் (Ling Liong Sik) அவர்களும்; மலேசியாவின் பிரதமர்களாகத் தற்காலிகமாகப் பதவி வகித்து உள்ளனர்.


துன் சம்பந்தன் 1973 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார். முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் வெளிநாட்டில் இருந்த போது, துணைப் பிரதமராக இருந்த துன் இஸ்மாயில் மரணம் அடைந்தார்.

அந்தக் கட்டத்தில் துன் சம்பந்தன் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக், 1988 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி; 1988 ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.

1988-ஆம் ஆண்டில், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைமை உறுப்புக் கட்சியான அம்னோ சட்டவிரோத அரசியல் கட்சியாக அறிவிக்கப் பட்டது. துன் மகாதீர், பாரிசான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டார்.

அதன் விளைவாக லிங் லியோங் சிக், பாரிசான் நேசனல் கூட்டணியின் புதிய தலைவரானார். புதிய கட்சியான அம்னோ பாரு, சங்கங்களின் பதிவு அதிகாரியால் சட்டப் பூர்வமாக்கப்படும் வரை 12 நாட்களுக்கு லிங் லியோங் சிக், பிரதமராகப் பணியாற்றினார்.

(மலேசியம்)
09.02.2022

சான்றுகள்:

1. https://varnam.my/varnam-exclusive/2021/46834/fearless-leader-tun-v-t-sambanthans-legacy-as-nations-first-indian-acting-prime-minister-in-1973/

2. https://www.malaysia-today.net/2019/02/26/for-a-few-days-in-1988-malaysia-actually-had-a-chinese-prime-minister/




 

06 பிப்ரவரி 2022

ஐடா சோபியா ஸ்கட்டர்

தொகுப்பு: ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்


ஐடா சோபியா ஸ்கட்டர்
(பிறப்பு: டிசம்பர் 9, 1870 – இறப்பு: மே 23, 1960)

தமிழ்நாட்டுப் பெண்களின் அவலநிலையைப் போக்குவதற்காகவும்; புபோனிக் கொள்ளை நோய், காலரா மற்றும் தொழுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் அழகிய பெண்மணி. அவரின் வரலாறு வருகிறது. படியுங்கள்.

1877-ஆம் ஆண்டு இந்திய நாட்டில் கடுமையான பஞ்சம். பசி. பட்டினி. இறப்பு எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவு இல்லாத  நிலை!


அந்தக் கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு வழங்குவதற்காக இந்தியாவிற்கு வந்தன. அப்படி ராணிப் பேட்டைக்கு வந்தவர்தான் ஒரு டாக்டர்.

அவருடைய பெயர் ஜான் (Dr. John Scudder). இவரின்  மகள் ஐடா ஸ்கடர். 14 வயது.

ஒரு நாள் இரவு கதவு தட்டப் படுகிறது. ஐடா கதவை திறக்கிறாள். ஒரு பிராமணர் நின்று கொண்டு இருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்.

அதற்கு ஐடா, "நான் டாக்டர் அல்ல. என் அப்பாதான் டாக்டர்... கொஞ்சம்  இருங்க... அவரை எழுப்புறேன்" என்கிறார்.

"இல்லம்மா... என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமண ஆளுங்க... பெண்ணைக் கணவன் இல்லாத பிற ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுகிறார்.


கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவைத் தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார்.

ஐடா தன் தந்தையைப் பற்றிக் கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டுப் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பி விடுகிறார்.

அந்தப் பெண்களுக்கு ’என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ என்று இரவு எல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா.

மறுநாள் காலை அந்தக் கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து செல்லப் படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பித் தேம்பி அழுகிறாள் ஐடா.


"என்ன தேசம் இது? பெண்களைப் படிக்க வைக்க மாட்டாங்களாம். பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களைப் படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்தப் பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதம் ஏற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டர் ஆகிறார்.

சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்தக் காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே, அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.

தமிழகத்தில் இறந்து போன அந்தப் பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவமனை தேவை என்பதை உணர்கிறார்.

பல நாடுகளில் இந்தியாவின் அவல நிலையைச் சொல்லி நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது.


இனி ஒரு கர்ப்பிணியைக்கூட சாக விடமாட்டேன் என்கிற உறுதியுடன் 19-ஆம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாத பாடுபட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப் பெருமை வாய்ந்தது. ஒரு நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சி.எம்.சி. (Christian Medical College - Research Institution in Vellore) மருத்துவமனை.

யார் இந்த பெண்?  இவர் ஏன் தமிழர்களுக்காக அழுதார்? இவர் ஏன்  தமிழர்களுக்காக உருகினார்? இவர் ஏன்  தமிழர்களுக்காகவே வாழ்ந்தார்?


எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து 5 இளம் பெண்களைத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சி தருகிறார் ஐடா. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்.

தமிழகப் பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை.

ஆனால், ஒரு பெண் தனியாளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. இலட்சக் கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டு இருக்கிறது!


"ஐடா" என்ற மனித தெய்வத்துக்கு மட்டும் இல்லை. இன்றைய ஆபத்தான சூழலில் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளாடை தாய்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

1928-ஆம் ஆண்டில் இவருடைய (Ida Sophia Scudder) பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் வேலூரில் ஒரு மருத்துவமனைக் கல்லூரி (Vellore Christian Medical Center) கட்டப்பட்டது. 2000 படுக்கைகள்.

இந்த மருத்துவமனைக் கல்லூரி கட்டப் படுவதற்கு ஐடா சோபியா, அமெரிக்காவில் சேகரித்த நிதி 4 மில்லியன் அமெரிக்க டாலர் (1930 ஆண்டு கணக்கு).


ஐடா சோபியா மருத்துவமனைக் கல்லூரி, இதுவரை 6000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. இவர்களில் ஏறக்குறைய 5000 பேர் பெண்கள்.

இந்த மருத்துவமனைதான் உலகத்திலேயே பெரிய கிறிஸ்துவ மருத்துவமனை.

இந்த அம்மையாரின் பெயரில் வேலூரில் Ida Scudder School எனும் பெயரில் ஒரு பள்ளிக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள்.  

ஆகஸ்டு 12, 2000-இல், இவருக்கு இந்திய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டது.

இந்திய அரசு கெய்சர் - இ - இந்து எனும் பொற் பதக்கத்தை அளித்து சிறப்பு செய்தது.


அவர் பெயரில் Ida Scudder Award எனும் விருது உருவாக்கப்பட்டு ஆண்டு தோறும் உலகம் முழுமைக்கும் வழங்கப் படுகிறது.

இவரைப் பற்றி 10 நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.

இந்திய நாட்டு வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் ஒரு சகாப்தம்.

(மலேசியம்)
06.02.2022

 

05 ஜனவரி 2022

நீர் நிலைகளின் வகை

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணல் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியில் இருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியில் இருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.


(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - மாக்கடல்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாக்கப்பட்டு; பலகைகளால் அடைத்து திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றுக்கு நீர் ஊட்டும் வழி.


(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18)  குட்டை (Small Pond) - சிறிய குட்டம். ஆடு மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கு ஏற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேல் எழுப்பி வரச் செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.


(24) கூவம் (Abnormal well) - ஓர் ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழம் இல்லாத கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெரும் கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலைகளில் இயல்பாய் அமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நான்கு புறமும் சூழ்ந்து அமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.


(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டு அமைந்த பெரும் கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக் கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட ஒரு நீர் நிலை.


(42) மடு (Deep place in a river) - ஆற்றில் அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் கொண்ட ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் ஒதுக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - சிறிய நீர் நிலைகள்.

(மலேசியம்)
05.01.2022