16.08.2021 - BBC News தமிழ்
ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தம் போராளிகளைக் காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது.
இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானைத் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது உறுதியாகி விட்டது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான நடைமுறைக்கு அரசு தயாராகி வருவதாக ஆப்கன் உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேசி இருக்கிறார்.
இந்த அளவுக்கு அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் நிலைக்கு தள்ளுவதற்கு தாலிபன்களால் எவ்வாறு முடிந்தது?
2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப் பட்டனர். பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தாலிபன்களும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் வெளியேறத் தொடங்கின.
இதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தங்களுடைய செல்வாக்கை நிலைநாட்டத் தொடங்கிய தாலிபன்கள், பல இடங்களில் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.
இன்று கடைசிக் கட்டமாக காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.
அமெரிக்கா வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்கத் துருப்புகளை முழுமையாக பின்வாங்க திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில், தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் பல நகரங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
2018-ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்காவுடன் தாலிபன்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 2020-இல் இரு தரப்புக்கும் தோஹாவில் ஓர் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது.
அதில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், தாலிபன்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், அல்-காய்தா போன்ற மற்ற தீவிரவாத அமைப்புகளை, தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைக்குள் இருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும்; ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் தாலிபன் படைகள், ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்களைத் தொடர்ந்து இலக்கு வைத்து தாக்கியது. தற்போது அமெரிக்கா தன் துருப்புகளைப் பின் வாங்கச் செய்து இருப்பதால், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிவேகமாக, நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யத் துருப்புகள் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 1990-களில் தான் 'தாலிபன்' என்கிற பஷ்தோ சொல் உருவானது.
தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்தில் பஷ்துன்களே அதிகம் இருந்தனர். இந்த இயக்கம் கடுமையான சன்னி இஸ்லாத்தை போதித்தது. இந்த இயக்கத்துக்கு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் இருந்து நிதி உதவி கிடைத்தது.
தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக் கிடக்கும் பஷ்துன் நிலப்பரப்புகளில் அமைதியை மீட்டுக் கொண்டு வரவும், தங்களின் கடுமையான ஷரியா விதிகளை அமல்படுத்தவும் உறுதி கூறியது.
ஆஃப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தாலிபன் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டம்பரில் ஹெராத் என்கிற ஈரான் எல்லையை ஓட்டி இருக்கும் மாநிலத்தைக் கைப்பற்றியது.
சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆப்கன் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தாலிபன். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள்.
இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேகத்தில் 1998-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானைத் தாலிபன் அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
தொடக்கக் காலத்தில் தாலிபன்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தாலிபன்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டம் இல்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர்.
சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளரவும் முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர்.
அதே நேரத்தில் தாலிபன்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப் படுத்தினர் அல்லது ஆதரித்தனர். குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவர்களை பொது வெளியில் கொல்வது; திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது; போன்ற தண்டனைகளை பின்பற்றப்பட்டன.
ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும்; பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும்.
டி.வி., இசை, சினிமா போன்றவற்றைத் தாலிபன்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது.
பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டன.
2001-ஆம் ஆண்டு, மத்திய ஆப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையைச் சிதைத்தது தாலிபன். இதற்கு அனைத்துலக அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.
பாகிஸ்தான் தான் தாலிபன் என்கிற அமைப்பு உருவாகக் காரணம். அந்த நாடு தான் தாலிபன் அமைப்பை வடிவமைத்தது என பலரும் கூறிய போது, அதைத் திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான்.
ஆனால் தாலிபன் அமைப்பில் ஆரம்பக் காலக் கட்டத்தில் இணைந்தவர்கள் பலரும், பாகிஸ்தானில் இருக்கும் மதரஸா பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்களின் ஆட்சி இருந்த போது அதை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதைத் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதாவை வழங்கின.
அதே போல தாலிபன் அமைப்புடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட கடைசி நாடும் பாகிஸ்தான் தான் என்பது கவனிக்கத் தக்கது.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தானையே நிலைகுலையச் செய்து விடுவோம் என மிரட்டியது தாலிபன் அமைப்பு.
2012 அக்டோபரில் பாகிஸ்தானின் மிங்கோரா எனும் நகரத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த மலாலா யூசுப்சாய் தாக்கப் பட்டதை ஒட்டுமொத்த அனைத்துலகச் சமூகம், பாகிஸ்தானியத் தாலிபன் தாக்குதலைக் கண்டித்தது.
அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தாலிபன்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலில், தாலிபன்களின் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்தது.
2013-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய டுரோன் தாக்குதலில் ஹகிமுல்லா மெஹ்சூத் உட்பட மூன்று முக்கிய பாகிஸ்தான் தாலிபன் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகின் கவனம் மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது.
அல்-காய்தா தீவிரவாத அமைபுக்கும், ஒசாமா பின் லாடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த 2001 அக்டோபர் 7-ஆம் தேதி அமெரிக்க இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படை கூட்டணி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.
டிசம்பர் முதல் வாரத்துக்குள் தாலிபன் ஆட்சி நிலைகுலைந்தது. அப்போதைய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின் லாடன் உட்பட சில மூத்த உறுப்பினர்கள் எப்படியோ தப்பி ஓடினர்.
தாலிபனின் பல மூத்தத் தலைவர்கள் பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. அங்கிருந்து கொண்டு தாலிபன் இயக்கத்தை நடத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது.
எத்தனையோ வெளிநாட்டு இராணுவத் துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தாலும், தாலிபன் மெல்ல தன் செல்வாக்கைப் பெற்று தன் அதிக்கத்தை ஆப்கானிஸ்தான் மண்ணில் விரிவாக்கிக் கொண்டது.
கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் காபூலில் பல்வேறு தாலிபன் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறின. இதில் கேம்ப் பேசின் பேஸ் தாக்குதல் குறிப்பிடத் தக்கது. தாலிபன் குழுவினர் நேட்டோ படைகள் மீதே நடத்திய தாக்குதல் இது.
கத்தாரில் தாலிபன்கள் ஓர் அலுவலகத்தைத் தொடங்குவது தொடர்பாக அறிவித்த போது, 2013-இல் அமைதி தொடர்பாக சில பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால் மறுபக்கம் வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 2015-இல் தாலிபன் குழுவின் முக்கிய தலைவரான முல்லா ஒமரின் மரணத்தை மறைத்ததாக ஒப்புக் கொண்டது. அவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த முல்லா மன்சூர் தாலிபன் குழுவின் தலைவரானார். இதே காலக் கட்டத்தில், மிக முக்கிய நகரங்களில் ஒன்றான குண்ட்ஸை வெற்றி கொண்டது தாலிபன்.
இது 2001-இல் தாலிபன் சந்தித்த தோல்விக்குப் பிறகு காணும் முக்கிய வெற்றிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு மே மாதம் முல்லா மன்சூர் ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் பதவிக்கு மற்றொரு தாலிபன் தலைவரான மெளலவி ஹிபாத்துல்லா அகுந்த்ஸாதா என்பவர் வந்திருக்கிறார்.
இப்போது வரை இவர் தான் தாலிபன் இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.
பிப்ரவரி 2020 அமெரிக்கா தாலிபன் அமைதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தாலிபன் சிக்கலான தாக்குதல் நடத்துவதை கைவிட்டது.
நகரங்கள் மீது, இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து, தனி மனிதர்களை இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.
பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைதிச் செயல்பாட்டாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் என இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.
அது தாலிபன்கள் தங்களில் தீவிரவாத கொள்கையில் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.
வெளிநாட்டுப் படைகள் இல்லையெனில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தாலிபன்கள் கைப்பற்றி விடலாம் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 2021-இல், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த அமெரிக்கத் துருப்புகளும் பின்வாங்கப்படும் எனக் கூறினார்.
ஏற்கனவே பல்வேறு நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கி விட்டன. எனவே தாலிபன்கள் பல்வேறு நிலப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
நேட்டோவின் மதிப்பீடுகள் படி, தற்போது 85,000 முழு நேரப் போராளிகள் தாலிபனில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலப் பகுதிகளை வரையறுப்பது கடினம்.
இருப்பினும் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை தாலிபன்கள் நேரடியாக கட்டுப்படுத்தி வருவதாகச் சமீபத்தைய கணிப்புகள் கூறுகின்றன.
பலரும் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக தாலிபன்களின் விரிவாக்கம் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் மோசமான உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அமெரிக்க படைகளை வழி நடத்திய ஜெனரல் ஆஸ்டின் மில்லர் என்பவர் கடந்த ஜூன் மாதம் எச்சரித்தார்.
மேலும் இது ஒட்டு மொத்த உலகத்துக்கே கவலை அளிப்பதாக அமையலாம் எனவும் கூறி உள்ளார்.
அதே மாதம் வெளியான அமெரிக்காவின் புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில், அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்ற பிறகு, அடுத்த ஆறு மாத காலத்துக்குள், ஆப்கானிஸ்தான் அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அந்த ஊகம், தற்போது உண்மையாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
பின்னூட்டங்கள்:
கென்னடி ஆறுமுகம்: ஆப்கானில் தலிபான் ஆட்சியை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக சீனா விளங்குகிறது.
முகில்: தலிபான்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் சொல்லப் படுகிறது. தெற்கு ஆசியாவில் இனி சீனாவின் கை ஓங்கும்இருக்கலாம் ஐயா.
கென்னடி ஆறுமுகம்: அமெரிக்காவை எதிர்கொள்ள இது அவர்களுக்கு உதவலாம்.
முகில்: இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
கணேசன் சண்முகம்: அடுத்து ஆப்கானிஸ்தானில் சீனாவில் பணத்தை அள்ளி வீசும்.
முகில்: இந்தியாவை மிரட்டுவதே அதன் நோக்கம்.
கென்னடி ஆறுமுகம்: ஆப்கானில் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.
கணேசன் சண்முகம்: கண்டிப்பாக
கென்னடி ஆறுமுகம்: அவர்களுக்கு பாலஸ்தீனத்துக்கு போராடவே நேரம் போதவில்லை. இதுவரை எந்த அரபு தேசமோ, இஸ்லாமிய நாடுகளோ ஆப்கான் மக்களுக்கு ஆதரவாக இதுவரை குரல் எழுப்பவில்லை.
முகில்: காபூல் விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி அதன் பாதுகாப்பை அமெரிக்க கூட்டுப் படையினர் மீட்டுள்ளனர். காபூல் நகரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக ஆப்கன் படையினர் தாலிபன்களிடம் வீழ்ந்து விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது
அமெரிக்காவின் உதவியுடன் ஆப்கன் படையினர் இயங்கி வந்தனர். அந்த வகையில் அமெரிக்காவை ஆப்கானிஸ்தானில் இருந்து துரத்த வேண்டும் என்பதே சீனாவின் இலக்கு. அப்படித்தான் சீனாவின் அரசியல் சாணக்கியம் செயல்படுகிறது. செயல்பட்டு வந்தது.
கென்னடி ஆறுமுகம்: ஆமாம் ஐயா. அமெரிக்க கூட்டுப்படைகள் ஆப்கான் மண்ணிலிருந்து வெளியான பிறகு தான் தாலிபான் உத்வேகம் எடுத்தார்கள். ஆனால் வெகு விரைவாகவே ஆப்கானை கைப்பற்றி விட்டார்கள்.
முகில்: தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்னர் ஆப்கான் படையினருக்கு போதுமான பயிற்சிகள் போதுமான தளவாடங்களை வழங்கி உள்ளனர்.
கென்னடி ஆறுமுகம்: ஆப்கான் இராணுவமும் எதிர்ப்பு காட்டாமல் அடங்(க்)கி விட்டார்கள்.
முகில்: ஆனால் சீனாவில் உதவிகள் அமெரிக்காவின் இலக்கைச் சிதறச் செய்து விட்டன. ஆமாம். அவர்கள் அப்படியே தலிபான் பக்கம் சேர்ந்து கொண்டார்களாம்... சண்டைகள் போடாமல்... தலிபான்களுக்கு வசதியாகிப் போனது
கென்னடி ஆறுமுகம்: அனைத்து போர் தளவாடங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். அவற்றுள் பல ஆயுதங்களை அவர்களுக்கு (தாலிபான்) தெரியவில்லையென செய்தி.
முகில்: ஆப்கானிஸ்தான் முக்கிய தலைவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்குச் சென்று விட்டார்கள். நாட்டை நடத்த ஆப்கான் தலைவர் எவரும் இல்லை... அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று செய்திகள் வருகின்றன...
முகில்: என்ன நடக்கும். உங்களால் யூகிக்க முடிகிறதா? பாகிஸ்தானுக்கு ஆபத்து... சீனா உள்ளே வரும்.
கென்னடி ஆறுமுகம்: எல்லாம் வல்லரசு நாடுகளின் கையில். (அமெரிக்கா, சீனா) அவர்கள் ஆட்டுவிப்பார்கள்... இவர்கள் ஆடுவார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா.
ஆனால் பாவம் அங்குள்ள பொதுமக்களின் நிலை கேள்விக்குறியே?
முகில்: மத்திய கிழக்கு நாடுகள் உடையும். அங்கே சீனாவின் உதவிக் கரங்கள் நீளும். இந்தியாவின் வல்லரசு கனவு பலிக்கும் காலம் நெருங்கி வருகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நண்பர்கள்.
சீனாவை எதிர்ப்பதற்கு அமெரிக்கா, இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியா விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.
[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் (பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாள், பூடான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான்) அனைத்திலும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இது இந்தியாவிற்கு கெட்ட செய்தி.
[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இது நிதர்சனமான உண்மை ஐயா.
முகில்: மூன்றாம் உலகப் போர் வராமல் இருந்தால் சரி. ஏன் என்றால் அப்படி வந்தால் மனுக்குலம் அழிந்து போகலாம்.
கென்னடி ஆறுமுகம்: ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பலத்த போட்டி.
முகில்: அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லாமே அணுகுண்டுகளை வைத்து இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னால் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். படித்து இருப்பீர்கள்.
கென்னடி ஆறுமுகம்: அப்படி ஒன்று வந்தால் அதில் சீன தேசம் முக்கிய காரணியாக இருக்கும்.
முகில்: 50% 50%... இந்தியா சீனா...
கென்னடி ஆறுமுகம்: ஆமாம் ஐயா.
முகில்: சரி தம்பி கென்னடி. நல்ல அறிவார்ந்த இளைஞராய் உள்ளீர்கள். வாழ்த்துகள். பின்னர் பார்ப்போம்.
நிறைய அனைத்துலக நடைமுறை விசயங்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். 👍👍
கென்னடி ஆறுமுகம்: மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏🙏
தனசேகரன் தேவநாதன்: கடந்த காலங்களில் தங்களின் சீன எல்லைகள் விரிவாக்கம் இந்திய நிலை கட்டுரைகள் நினைவிற்கு வருகிறது ஐயா யானையும் யானையும் மோதி பூனைகள் நசுங்கிப் போகலாம்🧐🧐🧐🧐🧐