25 ஜனவரி 2021

தமிழன் தலையெழுத்து என்று மாறும்

24.01.2021

பதிவு செய்தவர்: தனசேகரன் தேவநாதன்

தாய் தமிழ்ச் சொந்தங்கள் கண்முன்னே இறந்தனர் துடித்து!

அதனைக் கண்ட தமிழர் உள்ளமோ வெடித்து!

இச்சோக அவல நிலையை நினைத்து!

மக்களெல்லாம் மழை மழையாய் கண்ணீரை வடித்து!

சுயம், பயம் என்ற மதிலை இடித்து!

மெத்தனத்தையும் அலட்சியத்தையும் விட்டொழித்து!

எழுந்தனர் உறக்கத்திலிருந்து விழித்து!

அறிவுபூர்வமான திட்டங்கள் பல வகுத்து!

அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாக அதைத் தொகுத்து!

மாற்றப்பட வேண்டும் ஈழத்தமிழரின் தலையெழுத்து!

அதையே இலக்காய் கொண்டனர் உலகத்தமிழர் அடுத்து!

அதற்கு  உள்ளத்தில் உரமேற்றினர் சபதம் எடுத்து!

நம்புங்கள் அதற்கு கைகொடுக்கும் நம் தமிழ் எழுத்து!

என்று எழுதுகிறேன் மங்களமாய் ஈழம் மலருமென முடித்து!

இத்தனைத் தீமையை,

இனி எத்தனை காலம்?

ஒரு பித்தனைப் போன்று,

சகிக்க வேண்டும் என் புத்தனே?

ஆக்கம்,
பா.சந்திரன்


 

பாவம் மலேசியர்கள்

25.01.2021

மலேசியர்களின் அடிப்படைத் தேவைகளில் அவர்களைப் ’பிசி’யாகவே வைத்து இருந்தால் அவர்கள் இழந்த சுதந்திரத்தை அவர்களே மறந்து விடுவார்கள். 

If you keep them busy with basic needs... they will forget about the freedom they lost...
 

பத்துமலை தைப்பூச ஊர்வலம் தேவைதானா? தமிழர் குரல் கண்டனம்

25.01.2021

நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுக்கு இடையே மக்களும் முன்களப் பணியாளர்களும் இந்தத் தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிற வேலையில், இவ்வாண்டு பத்துமலை தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலில் உள்ளதை அடுத்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இச்செயல் முன்னுக்குப்பின் முரணானது என்று மலேசிய தமிழர் குரல் சிலாங்கூர் & கூட்டரசு பிரதேச மாநில தலைவர் திரு.கணேசன் கண்டனம் தெரிவித்தார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகி மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கோவிட் 19 தொற்றின் தீவிரம் கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து இந்த ஆண்டிற்க்கான மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டத்தை நிறுத்தம் செய்வதாக முன்பு பினாங்கு மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்கள் அறிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இம்முடிவு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது. இதை ஏன் பத்துமலை நிர்வாகமும் பின்பற்றகூடாது?

அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலம் உட்பட நாடு தழுவிய நிலையில் அணைத்து ஆலயங்களும் மக்கள் பெருந்திரளாக கூடும் தைப்பூச விழாவை நிறுத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டன.

நிலைமை இவ்வாறு இருக்கையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஏழாவது வீடாக கருதப்படும் கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில் மட்டும் இவ்வாண்டின் தைப்பூச வெள்ளிரத ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்த அடம் பிடிக்கும் ஆலய நிர்வாகத்தினரின் போக்கையும்; அதற்கு அடித்தளமிட்டு ஊர்வலம் நடத்த பிரத்தியேக அனுமதி அளித்திருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலையும் தாம் சாடுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூச ஊர்வலம் நடைபெறும் என்றும் அதற்கு பத்து பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படுவர் என்றும், இதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு சாத்தியமாகுமா? வெறும் பத்து பேர் கலந்து கொள்ளும் இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இரத ஊர்வலத்தை காண மக்கள் திரள மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. ஊர்வலத்திற்குப் பிறகு புதிய "தைப்பூச நோய் தோற்றாளர்கள்" உருவாகினால் இதற்கு பத்துமலை தைப்பூச நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.

வெள்ளிரத ஊர்வலம் சமுக ஊடகம் முகநூல் நேரலை வழி மக்களுக்கு காண்பிக்கப்படும் என்கிறார்கள். அதற்கு  மக்கள் தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகளின் தைப்பூசத்தைக் காண்பார்களே; ஒரு தமிழன் தமிழர் நடத்தும் விழாவை விமர்சிக்கிறார் என்பதை விடுத்து கோவிட் 19 நோய் தொற்றின் தீவிரத்தை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக மதி இழந்து செயல்பட வேண்டாம் என்று கூறினார்.

மலேசிய திருநாட்டில் இருக்கும் அனைத்து ஆலயங்களுக்கும் தாய்க் கோயிலாக முன் உதாரணமாக இருக்க வேண்டிய பத்துமலை திருத்தல நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும் திரு. கணேசன் தெரிவித்தார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
 

கோலாலம்பூர் பத்துமலை இரதங்களுக்குப் பின்னால் செல்லுங்கள்... விதிகளை மீறுங்கள்... ஆனால் தயவுசெய்து இப்போதே 1000 ரிங்கிட்டை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிதற்காக அபராதம் 1000 ரிங்கிட்...



 

வாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் ஊடகங்களில் அலைபேசியின் வழியாகத் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் பல முறை சொல்லி இருக்கிறோம். ஆனால் சிலர் மீண்டும் மீண்டும் ஆங்கிலோ தமிழில் தட்டச்சு செய்வது வேதனையாக உள்ளது. சரி. மீண்டும் பதிவு செய்கிறோம்.

உங்களுடைய அலைபேசியில் Play Store எனும் ஒரு சின்னம் இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதைச் சொடுக்கி விடுங்கள்.

Play Store பகுதிக்கு நீங்கள் புதியவராக இருந்தால், சொடுக்கியதும் உங்களின் மின்னஞ்சலைக் கேட்கும். ஆங்கிலத்திலேயே மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் Search என்பதில் Sellinam என்று தட்டச்சு செய்யுங்கள். செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்யுங்கள். பின்னர் பதிப்பு (Install) செய்யுங்கள். சில கேள்விகள் கேட்பார்கள். செல்லினம் அமைப்பில் (Settings) பகுதியில் Switch Input Methods என்பதில்

English

Languages Tamil (Murasu Anjal)

என்பதைத் தேர்வு செய்யுங்கள். பின்னர்... சரி (Yes) என்று தட்டி விடுங்கள். மற்றவற்றைச் செல்லினம் செயலியே செய்து கொடுத்து விடும்.

உங்கள் அலைபேசியில் செல்லினம் நிறுவப் பட்டதும் தட்டச்சு முகப்பில் தமிழ் ஆங்கிலம் எனும் இரு மொழிகள் இருக்கும். தட்டச்சு பலகையில் ‘மு’ எனும் எழுத்துச் சின்னம்... ஆகக் கீழே இருக்கும்.

முதலில் ஆங்கிலத்தின் மூலமாகத் தமிழ் தட்டச்சு செய்யும் முறை வரும். மீண்டும் அதே எழுத்துச் சின்னத்தைத் தட்டுங்கள். ‘தமிழ்’ என்பது வரும். மீண்டும் தட்டினால் ’English’ என்பது வரும்.

உங்களுக்கு எது சரியாக அமைகின்றதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேல் விவரங்கள்:

தவிர எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. அவ்வளவுதான். மிகவும் எளிது. இரண்டு மூன்று நிமிட வேலைகள். கொஞ்ச நேரத்து வேலை. தமிழில் தட்டச்சு செய்வோம்.

 


22 ஜனவரி 2021

அவர் ரொம்ப பெரிய ஆள்

21.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

இந்த வாக்கியத்திற்குள் ஒளிந்து இருக்கும் ஓர் உளவியல் உண்மையைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இவர் ரொம்ப பெரிய ஆளுங்க... இவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... என்பது போன்ற வாக்கியங்களைப் பொதுவாகவே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

அதுபோன்ற வாக்கியங்களை நாம் ஏன் பயன்படுத்தி வருகிறோம் என்று இதுவரை சிந்தித்து உள்ளீர்களா? பலரும் இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்களே. அது ஏன்?

இது போன்ற வாக்கியங்களைத் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்றால் அது அவரது கண்ணோட்டம். அதில் எந்தவித தவறும் இல்லை.

அதே போல, ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சூழல் சார்ந்ததாக இருக்கலாம். அதுவும் தவறில்லை.

ஆனால் இதுபோன்ற வாக்கியங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது எப்படி சாதாரண ஒரு நிகழ்வாக இருக்க முடியும்? அது எப்படி அனைவராலும் ஒன்று போலவே சிந்திக்க முடியும்?

இது இயல்பாக நடந்த ஒன்று இல்லை. மாறாக இது நம் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இது திட்டமிட்டு நம்முள் திணிக்கப் பட்டதா? இல்லையா? என்று நம்மால் கண்டறிவது சாத்தியமானது இல்லை.

ஆனால் இது நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று என்பது தான் உண்மை‌‌. இது ஏன் நடந்தது? இதனால் நாம் எந்த வகையில் பாதிக்கப் படுகிறோம்? அதை எப்படி சரி செய்வது என்பதை நாம் உணர்ந்து செயல் படுத்தும் அவசியம் உள்ளது.

ஊடகங்களின் வழியாக இவர் அவ்வளவு பெரிய நபர்; இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர்; என்று சிலரை மட்டும் திரும்பத் திரும்ப நம் மனதிற்குள் இவர் பெரிய ஆள் என்கிற எண்ணம் தொடர்ந்து காட்டப்பட்டு அது நம் அனைவரது மனதிற்குள்ளும் ஆழமாக பதிவாகிறது.

உதாரணமாக, இன்று அவர் சமூக வலைத் தளத்தில் ஒரு டிவிட் செய்தார். இன்று அவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்தார். நாளை காய்கள் வாங்கக் கடைக்குச் சென்று வர திட்டமிட்டு உள்ளார்.

இப்படி யாராவது ஒருவர் பற்றி வெட்டியாக, இதை எல்லாம் பரபரப்பு செய்திகளாக மாற்றி நம் மனதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை நோக்கி தெரிந்தோ, தெரியாமலோ தயார் செய்து விடுகிறார்கள்.

இதன் விளைவாக அந்த ஒரு சிலரை மட்டுமே மிகப் பெரிய நபராக மற்றும் அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதிற்குள் வளர்ந்து விடுகிறது.

பிறகு என்ன? அந்த எண்ணம் தானாகவே நம் மனதிற்குள் ஓடும்,

இதன் விளைவாக, அவர் போன்ற நபர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றும்; அவர்கள் சாதனைகள் செய்யவே பிறந்து உள்ளார் என்றும்; நான் சாதாரண மனிதன்; நான் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்; என்கிற எண்ணங்கள் மறைமுகமாக நம் மனதை ஆக்கிரமிப்பு செய்து விடும்.

இந்த எண்ணங்கள் தான் நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் தான் நாம் சாதாரணமாக வாழும் நபர்; அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலையை நமக்குள் உருவாக்கி விடுகின்றன.

அதனால் தான் என்னால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையே பலருக்கும் எழுவதே இல்லை.

இது ஒரு சில நபர்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கோடி மக்களுக்கு அந்த நம்பிக்கையே பிறப்பதும் இல்லை. அத்தனை கோடி மக்கள் உளவியல் ரீதியாகவே தங்களைத் தாங்களே குறைவாகவே மதிப்பீடு செய்வது தான் வருந்தக் கூடிய விடயம்.

அவர் பெரிய ஆள்தான் என்பது ஒரு பிம்பம். அந்த பிம்பத்தைப் பார்த்து வியப்பு அடையாதீர்கள். அந்தப் பிம்பத்தைப் பார்த்து அசாத்தியமானவர் என எண்ணாதீர்கள்.

உங்களுக்கும் அது எல்லாம் சாத்தியம் தான். அவர் பெரிய ஆள் தான் அதை மறுக்கவில்லை. அதே வேளையில் நீங்களும் பெரிய ஆள் தான் என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்த நல்லதொரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு உண்மையாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்காமல் அதை மட்டுமே உங்கள் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு பயணம் செய்யுங்கள்.

அப்போது உங்களால் சாதிக்க முடியும்... நிச்சயமாக அதை உங்களால் சாதிக்க முடியும்... ஏனென்றால் நீங்கள் ஒரு பெரிய ஆள்...

அன்புடன்,
த. கார்த்திக் தமிழ்,
#BRAIN_vs_MIND.