06 ஜனவரி 2021

வான்மித்தா ஆதிமூலம் - நாசா விண்வெளி ஆராய்ச்சி

04.01.2021

உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் – வான்மித்தா ஆதிமூலம்


2000 ஏப்ரல் 9-ஆம் தேதி ஈப்போவில், ஆதிமூலம் - ஜெயந்தி தம்பதியருக்கு இளைய மகளாகப் பிறந்தவர். கிள்ளானில் வளர்ந்தவர். இப்போது நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார் வான்மித்தா ஆதிமூலம்.

நாசாவின் ஓர் ஆய்வுக் கிளை அமைப்பு ADVANVINGX. இந்த அமைப்பு உலகளாவிய நிலையில் வானவியல் ஆய்வுப் போட்டியை நடத்தி வருகிறது. அந்தப் போட்டியில் வான்மித்தா ஆதிமூலம் தகுதி பெற்று உள்ளார்.

வான்மித்தா ஆதிமூலம், தம்முடைய 20-வது அகவையில் வானளவு சாதனைப் புரியும் மலேசியராகத் திகழ்கிறார். இது நாள் வரையில் இவரை அறிந்திராத சமூகம் இன்று போற்றிப் புகழ்கின்றது. யார் இவர்?

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வி; மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் இடைநிலைக் கல்வி. தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் மாணவி.

வான்மித்தா ஆதிமூலம் இப்போது மலேசியர்கள் மெச்சும் மங்கை. இவரைப் பற்றிய குறிப்புகள் சமூக வலைத் தளங்களிலும்; நாளிதழ்களிலும் பரவலாகி வருவதை நாம் பார்க்கிறோம். வியக்கிறோம். வாழ்த்துகிறோம். அவரைப் பற்றிய சில குறிப்புகள.

வான்மித்தாவின் பெற்றோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இயல்பான குடும்பத்தினர்.

2007-ஆம் ஆண்டில், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 6ஏ - 1பி பெற்றார். 2015-ஆம் ஆண்டில் படிவம் மூன்றின் ‘பிடி 3’ தேர்வில் 9ஏ பெற்று அசத்தினார்.

அது மட்டும் அல்ல. 2017--ஆம் ஆண்டில் படிவம் ஐந்தின் எஸ்.பி.எம். தேர்வில் 10ஏ பெற்றார். 2018-ஆம் ஆண்டு கிளாந்தான் மெட்ரிகுலேசன் அரசு பல்கலைக்கழக நுழைவு கல்லூரியில் பயிலத் தேர்வானார்.

இவர் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்தார். இரு பாடங்களிலும் 'ஏ’ தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி.

பள்ளிப் பருவங்களில், தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியாளர்; தமிழ்ப் பேச்சுப் போட்டியாளர்; பற்பல போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளார். தற்போது தேசிய அளவிலான செயற்கைக் கோள் ஆய்வு போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்று உள்ளார்.

இவருடைய பெற்றோர், அண்ணன் புவனேஸ்வரன்; அண்ணி போஷாயித்திரி;  அண்ணன் சத்ய பிரபாகரன் ஆகியோர் தூண்டுதலும் ஊக்கமும் அளித்தனர். அவரின்  இந்த நிலைக்கு அவர்கள் பெரும் உந்துதலாக இருந்ததாக வான்மித்தா தெரிவித்தார்.

அவருடன் ஒரு சின்ன கலந்துரையாடல்:

தங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு, மாணவராக தாங்கள் வலியுறுத்துவது என்ன?

வான்மித்தா : உங்களுக்கு என நீங்கள் நிலைநிறுத்தி இருக்கும் வாழ்வியலில், மனது அளவில் மிக உறுதியாகவும் திடமாகவும் இருங்கள். நீங்கள் கொண்டு இருக்கும் கொள்கையில் சற்றும் தளரக் கூடாது. துணிவாக முன்னேறுங்கள்.

‘என்னால் முடியாது’ என நீங்கள் நினைக்கும் போது, தொடங்கிய போது இருந்த மன வலிமையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

மலேசியத் தமிழரான நீங்கள் நம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வான்மித்தா : நம் சமூகத்தின் பெரும் வெற்றிக்குத் தொடக்கம் தமிழ்ப் பள்ளிகள்தான். உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். வான் அளவில் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்துக் கொடுங்கள். நான் பயிலும் வானவியல் பொறியியல் துறையில், உங்கள் பிள்ளைகளும் பயில வழிகள் நிறைய உள்ளன. அனுப்புங்கள். நான் வழிக்காட்டியாக என்றென்றும் இருப்பேன்.

வானத்திற்கு எல்லை என்பது இல்லை. அது போல நம் குறிக்கோளுக்கும் எல்லைகள் இல்லை.
 

மலாயா தமிழர்களுக்குச் சேவை செய்யும் குமணன் கணேசன்

05.02.2021

மலேசியாவில் கல்வித் துறையில் எல்லோருக்கும் மிக அறிமுகமான கல்வியாளர் குமணன் கணேசன். இவர் கெடா, சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர். யூ.பி.எஸ்.ஆர். ஆங்கிலப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

கடந்த 20 ஆண்டுகளாக ‘தி எடுகேட்டர்” (THE EDUCATOR) எனும் கல்வி இதழ் வழி, மலேசியத் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமைப் பெறவும், தேர்வில் சிறப்பான புள்ளிகளைப் பெறவும் வழிகாட்டியாக இயங்கி வருகின்றார்.

மலேசியத் தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் நோக்கத்தில் ஒரு வலையொளியை உருவாக்கி சிறப்பாகச் செயலற்றி வருகிறார். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பயிற்றுத் துணைப் பொருள்களையும் உருவாக்கி ஒளியேற்றி வருகிறார்.

அதோடு நாடு முழுமையிலும் நேரடியாகச் சென்று இலவசமாக தமிழ்ப் பயிற்சிப் பட்டறை, வழிகாட்டி கருத்தரங்கு போன்றவற்றை தனி நபராகவும், தனியார் மற்றும் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். வாழ்த்துகிறோம்.


05 ஜனவரி 2021

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவி சாய்நித்திரா சுரேன்

05.01.2021

பினாங்கு மாநிலத்தில் அனைத்து மொழிப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கு பெறும் ஆங்கில மொழிக் கட்டுரைப் போட்டி; 2020 டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சாய்நித்திரா சுரேன்; மநில அளவில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இந்தப் போட்டி மாநில அளவில் நடைபெற்ற போட்டியாகும். மலாய்; சீனப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பல நூறு பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இருப்பினும் ஒரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வெற்றி பெற்றது பெருமைக்குரிய செய்தியாகும்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் மற்ற மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடும் அளவில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். தமிழ்ப்பள்ளிகள் நீடு வாழ வேண்டும்.

Sainetra Shri a/p Surein SJKT MAK MANDIN  மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

2nd Place (Naib Johan) and get Rm200.

Pertandingan  Menulis Esei Bahasa Inggeris (Sekolah Rendah)

Program Jaguh Bahasa 2020 Peringkat Negeri Pulau Pinang secara dalam talian.

மலேசியம் புலனத்தின் மற்றும் ஒரு தமிழ்த் தகவல்

நல் வாழ்த்துக்கள்... வெற்றிகள் தொடரட்டும் மகளே!





கட்டுரை மன்னன் - ம.அ. சந்திரன், பாடாங் செராய்

05.01.2021

தமிழ் மலர் 03.01.2021 நாளிதழ் ஞாயிறு மலரில் மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன் அவர்கள் எழுதிய கவிதை.

என்றைக்கோ நடந்துவிட்ட வரலாற் றைத்தான்
    இன்றைக்குக் கண்முன்னே காட்சி போலக்
கொண்டுவரும் திறன்எழுது கோலை பெற்று
    கூர்தமிழுக்குக் குப்பெருமை சேர்க்கும் அண்ணா
வண்ணவண்ன சொல்லாட்சி மூலம் நீங்கள்
    வழங்குகிற அறிவலைகள் நெஞ்சா ழிக்குள்
எழுந்தாட்டம் போடுதண்ணா இசைகள் மீட்டி

கட்டுரையை நகைச்சுவையாய் நகர்த்தும் உங்கள்
    கலைகண்டு வாய்சிரிக்கும் களுக்கென் றேதான்!
குத்தூசி களைநிரம்பச் சொல்லில் சேர்த்துக்
    குத்துகிற பாங்குமிக அருமையண்ணா!
பற்றுமொழி மேல்வைத்தே ஏட்டில் நீங்கள்
    பதிவுசெய்யும் கட்டுரைகள் விழிப்பு ணர்வை
கற்பவர்கள் உள்ளத்தில் ஏற்ப டுத்தி
    கம்பீர நடையிங்கே போடு தண்ணா!

கட்டுரைகள் ஆயிரத்து கும்மேல் செய்யும்
    கரம்பெற்றாய் சாதனையும் அதிலே கண்டாய்!
கட்டுரையை இன்றிங்கே படைத்து விட்டால்
    கரகாட்டம் கண்டபடி போடு கின்றார்!
பத்திரிகை தனைவிரித்தால் உங்கள் பக்கம்
    பார்த்தகணம் மனத்திலுற் சாகம் தாவும்!
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் நீங்கள் கொண்ட
    தமிழ்ப்பற்றைக் கண்டுதமிழ்த்தாய் செருக்க டைவாள்!

தமிழுக்குத் தொண்டுசெய்தார் பெருமை என்றும்
    தமிழர்வா னில்கதிர்போல் நிலைத்து நிற்கும்!
அமிழ்தான செம்மொழியை உயிர்மூச் சாக
    அகத்தினிலே ஏற்றுலவும் அண்ணா வாழ்க!
இமைமணிபோல் செந்தமிழை பாது காக்கும்
    இதயத்தைப் பெற்ற உங்கள் எழுத்தே ஊக்கம்!
சுமையாக எண்ணாமல் மொழியைத் தூக்கி
    சுகிக்கும்நீர் கட்டுரைக்கு மன்னன் தானே!

கரு.ராஜா: கொட்டு வாங்கினாலும் மோதிர விரல்களில் கொட்டு வாங்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த நாட்டின் புகழ்ப் பெற்ற ஒரு மரபுக் கவிஞனின் பாராட்டுக் கவிதையைப் படித்த போது மெய் சிலிர்த்துப் போனேன்.

சாகுல் ஹமீது: மரபுக் கவிஞனின் மணிக்கவிதை... இடைச் செருகல்... நகைச்சுவை... படிப்பதற்கு ஆர்வமூட்டும்... எடுத்துக் காட்டும் உண்மைகள்... குத்தூசி போல் தீட்டும்...  வாழ்த்துகள் ஐயா!

=====

புனைப் பெயர்: ம.அ. சந்திரன்
பணி: வியாபாரம்
நூல்கள்: சிந்தனைச் செல்வம் (கவிதைத் தொகுப்பு)
1973-ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பெரிதும் கவிதைகளும் கட்டுரைகளுமே எழுதி வருகிறார். மலேசியத் திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.

 

தாய்மொழிப் பள்ளிகளும் அரசமைப்புச் சட்டமும் – கி. சீலதாஸ்

05.01.2021

மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைப் பற்றிய விவாதம் ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்பு தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதைக் காலனி அரசு தடுக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும் அந்த அமைப்புகளின் மீது தடை ஏதும் இருந்ததில்லை.

அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கான எல்லா வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் நடுவண் அரசின் கல்வி அமைச்சு பொறுப்பிலிருந்து வருகிறது.

சுதந்திரப் பேச்சுவார்த்தை நடந்தபோது அன்றைய கூட்டணி கட்சி – அதாவது அம்னோ, மசீச, ம.இ.கா. ஒன்றாக இணைந்து தங்களின் கோரிக்கைகளை ரீட் ஆணையத்தில் சமர்ப்பித்தது.

அதில் கல்வி குறித்த திட்டங்களும், பல மொழிகளின் பாதுகாப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூட்டணி கட்சியில் இணைந்திருந்த நிலைப்பாடு எப்படி இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை அல்லது அவை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்ற கூற்று ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் 152-ஆம் பிரிவு மலாய் மொழியே தேசிய மொழியென உறுதியாகக் கூறிவிட்டது.

அதே மூச்சில் எவரும் தம் மொழியைப் பயிலவோ, கற்பிக்கவோ தடை ஏதும் இருக்காது. ஆனால், அரசு தொடர்பான காரியங்களில் அவை பயன்படுத்த இயலாது,

மலாய் மொழியைத் தவிர என்று குறிப்பிட்டிருப்பது தமிழ், சீனம் ஆகிய மொழிகளின் பாதுகாப்பை விளக்குகிறது; உறுதிப்படுத்துகிறது. காலங்காலமாக சீனமும் தமிழும்தான் பள்ளிக்கூடங்களைக் கண்டிருந்தன.

நமது அரசமைப்புச் சட்டம் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தபோது மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் சமர்ப்பித்த ஒரு குறிப்பில் இப்படி சொல்கிரார்.

“மற்றவர்களின் மொழியை அவர்கள் கற்றுக் கொள்ளவும், தங்களின் சொந்த பள்ளிகளில் அவர்களின் மொழி கற்பிக்கப் படுவதை, அவர்களின் சொந்த விவகாரங்களில், தொழில்களில் புறக்கணித்தால் அது தற்கொலைக்கு ஒப்பாகும்.

இந்தப் பல்லின மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் தங்களின் மொழியைப் பயன்படுத்துவது மென்மை நிலையாகும். மலாய் மொழி பிரதான மொழியாகவும் தேசிய மொழியாகவும் நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த நிலையில், அதே வேளையில் மற்றவர்களின் மொழிகள், எழுத்துக்கள், கலாச்சாரம் ஆகியவற்றை உறுதிப் படுத்துவதால், நாம் சரியான நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றார்.

1.5.1955-ஆம் தேதியில் எழுதப்பட்ட இந்தக் குறிப்பில், வெளியிடப்பட்ட கருத்துதான் அரசமைப்புச் சட்டத்தின் 152ஆம் பிரிவில் காண முடிகிறது என்றால் பொருந்தும்.

சுதந்திரத்துக்கு முன்னர் அம்னோ மட்டும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரம் பெற்று இருந்தால் நிலைமை வேறாக இருந்து இருக்கும்.

காலனி அரசு ஆரம்பத்தில் அம்னோவுடன் பலத்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மலாயாவில் வாழும் எல்லா இனத்தவர்களின் ஒப்புதல் குறிப்பாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவற்றிற்குத் திருப்திகரமான ஏற்பாடு வேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டது.

அம்னோ பிற இனங்களோடு ஒத்துப் போகும் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் அந்தக் கட்சியில் இருந்த அம்னோ தீவிரவாதிகள் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறிப்பாக, மொழி, கலாச்சார விஷயங்களில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டு இருக்கவில்லை என்பது தெளிவு.

சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை வடிவு பெற்ற போது எல்லா இனங்களும் இணைந்து வரவேண்டும் என்ற பிரிட்டனின் நிபந்தனை அல்லது அறிவுரை, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, அவர்களின் மொழிகள், கலாச்சாரங்களின் பாதுகாப்பு யாவும் சிந்திக்க வேண்டி இருந்தது.

அப்போது நிலவிய சமுதாய நிலையைப் பார்க்கும் போது சமரசம் தேவைப் பட்டது. சமரசத்துக்கு அடிப்படையே சிறுபான்மையினரின் மொழி, காலாச்சாரம் பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பை நல்க முன்வைத்தனர் அன்றைய அம்னோ தலைவர்கள்.

அவர்களில், துங்கு அப்துல் நஹ்மான், ரசாக், துன் டாக்டர் இஸ்மாயில் போன்றோர் அடங்குவர். அந்தத் தலைவர்கள் உடன்பட்டது எதற்கு? எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகக் கருதினர்.

ஒரு வகையில் அரசமைப்புச் சட்டதின் 152-ஆம் பிரிவு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களும் அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னும் அரசு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கான, கல்விக்கான செலவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்ததானது அரசமைப்புச் சட்டம் தந்த பாதுகாப்பை மதிக்கும் செயல் எனலாம்.

அதில் மாற்றம் காண நினைப்பது அரசியல் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயத்தில் அறுபத்து மூன்று ஆண்டுகளாக அமலில் இருக்கும் தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டும் அல்லது அவை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை என்கின்ற கருத்து இன ஒற்றுமையை விரும்பாதவர்களின் இனப்பகைமையைச் சீண்டிவிடும் செயல் என்றாலும் தகும்.

தாய்மொழிப் பள்ளிகள் சிறுபான்மையினரின் உரிமைக்காக, மொழிக்காக, கலாச்சாரத்துக்காகத் தங்களின் அடையாளத்தை நிலைநிறுத்த உதவும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

கல்வியாளர்களும் சமுதாய சிந்தனையாளர்களும் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்மொழி நிச்சயமாக அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்ற நிலைபாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

நம் தமிழ்ச் சமுதாயமும் ஓர் உண்மையை உணர வேண்டும். அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆதரவு தராவிட்டால், பிறர் மீது பழி போடுவதில் பயன் இருக்காது.

ஒரு வேளை, தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட்டு இப்பொழுது வழக்கில் இருக்கும் தேசிய மாதிரி பள்ளிகளில் சிறுபான்மையினர் சேர்க்கப் பட்டால், இந்தக் காலகட்டத்தில் காணப் பெறும் பிளவு மனப்பான்மை தொடராது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?

சிறுபான்மையினர் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதற்குத் துணையாக இருப்பது அவர்களின் சரிசமமான குடிமக்கள் என்ற அங்கீகாரம்தான். இந்த அங்கீகாரம் அவர்களின் மொழியை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும்.

இந்த ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரம் மறுக்கப் பட்டால் அவர்களின் மொழி, கலாச்சாரம், சமயம் அனைத்தும் பட்டுவிடும். இதை மலாயா, பிறகு மலேசியா உருவாக்க வழிவகுத்தவர்களின் நோக்கம் அல்ல. இதைப் புரிந்து கொள்வதே விவேகமான அணுகுமுறை.