22 மார்ச் 2021

மன்னிக்க முடியாத கோபம்

22.03.2021

பதிவு செய்தவர்: தேவிசர கடாரம்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டார்.

"மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்க துடிக்கிறீர்களா நீங்கள்?"

மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம் ...ஐயா’ என்றார்கள்.

ஆசிரியர்க்கு மிகுந்த வியப்பு. ஒவ்வொருவராக அழைத்து "மன்னிக்கவும்... மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள உள்ளன?" என்று கேட்டார்.  ஒவ்வொருவரும் ஐந்து பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்.  மாணவர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார் .

ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளிப் பழம் கொண்டு வரப்பட்டது. யார் மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிப் பழங்களைப் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தக்காளி பை எப்போதும் உங்கக் கூடவே இருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகிலேயே வைத்து இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள். ஓரிரு நாட்கள் ஒரு கதையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாடகளில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின.

நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப் பட்டனர்  ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர் .

மௌனமாகப் புன்னகைத்த ஆசிரியர், "நாற்றம் வீசுபவை தக்காளிகள் மட்டும் அல்ல அந்த நாற்றத்தை போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை, பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால் தக்காளிப் பையை தூக்கி எறியுங்கள் என்றார்.

அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு ஏற்பட்டது. அப்போதே தக்காளி பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசினார்கள் பகை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.

நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்து இருக்கிறோம். தக்காளி பை நாற்றத்தை நினைவில் கொள்வோம். பகைமை மறப்போம். பகுத்தறிவோடு பயணிப்போம்.


 

ஆண் பெண் மூளை வித்தியாசங்கள்

22.03.2021

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது!

உதாரணமாக ஒரு பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப் பட்டு உள்ளது.

உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலைபேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி

பெண்களால் இலகுவாகப் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும்!

அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண் குழந்தை அதிகப் படியான சொற்களைத் தெரிந்து வைத்து இருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.

அதனால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைப் படத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் மூளையால் இதைச் செய்ய முடியாது. அது மட்டும் அல்லாது பெண்களால் ஆண்கள் முன்வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்.

வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றால் போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.

இதற்குக் காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக் கூடிய மூளைத்திறன்” ஆகும்.

உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப் பேச்சு

ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராகப் பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக அதைப் பொய் என்பதை அறிந்து கொள்வார்கள்!

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறு இல்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் போது ஓர் ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சினையையும் தனித் தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தீர்வை படிப்படியாக இனம் காணும். இதனால் பிரச்சினை உள்ள ஆண்கள் தனிமையில் தம் தீர்வுகளை இனம் கண்டு கொள்வார்கள்.

ஆனால் இதே அளவு பிரச்சினை உள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சினைகளைத் தனித்தனியாக பிரித்து அறியாது. யாராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனைகளையும் வாய் மூலமாக சொல்வன் மூலம் திருப்தி அடைந்து கொள்ளும்.

சொன்ன பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

தேவைகள்

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை

ஒரு பெண்ணிற்கு தனது காதல் உறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால் அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால் ஓர் ஆணிற்கு தன் வேலையில் பிரச்சினை இருப்பின் அவர்கள் காதல் உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

உரையாடல்

பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!


பின்னூட்டங்கள்


 

கலைவாணி ஜான்சன்: அருமை அருமை... உண்மைகள் நிறைந்த பதிவு ஐயா...

தனசேகரன் தேவநாதன்: இயற்கையின் அற்புதம் நன்றி ஐயா🌷🙏🌺

வெங்கடேசன்: சிறப்பான ஆச்சர்யமூட்டும் தகவல்கள். மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். நம்மை சுற்றி உள்ள நம் பெண் பிள்ளைகள்; நம்முடைய சகோதரிகள் இவர்களுடைய பழக்க வழக்கங்களில் இதைப் பார்க்க முடியும் 😄


 

சிட்டுக்குருவி தினம் உருவான கதை

22.03.2021

சிட்டுக் குருவிகள்...  சின்னக் குருவிகள்... செல்லக் குருவிகள்.  அவை மனித குலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார்.


அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக் குருவியும் இடம் பெற்றிருந்தது.  சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படும் அளவுக்கு என்ன தப்பு செய்தன?

விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றது தான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னால் தப்பா?

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக் குருவிகளை அழிக்கப் பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப் பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள்.

அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனை விதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான்.

சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர்.

கோடிக் கணக்கான சிட்டுக் குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன.

பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின.

மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி).

ஆனால் 3 கோடியே 60 இலட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில், சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக் கூடச் சொல்லப் பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா.

வெட்டுக்கிளிகள், பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து சிட்டுக் குருவியின் பெயர் நீக்கப்பட்டது.

இப்போது சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சம் அடைந்தது. சின்னக் குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.

பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது.

பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின் நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால், மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை.

இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக் குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக் குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு சிட்டுக் குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர்.

- எம்.குமரேசன்; நன்றி: விகடன்

தனசேகரன் தேவநாதன்: உலக படைப்பே ஒன்றுக்கொன்று உதவி என்ற அடிப்படைதான் என்பதை உணர்த்தும் அனுபவக் கட்டுரை.

நாகராஜன்: பதிவு அருமை ஐயா

கென்னடி ஆறுமுகம்: அருமையான தகவல் ஐயா.

தேவிசர கடாரம்: அருமை ஐயா...👌

ராதா பச்சையப்பன்: சிட்டுக் குருவி, சிட்டு குருவி‌ சேதி தெரியுமா. சிட்டுக் குருவியின் தினம் கட்டுரை நன்று. பல விசயங்களை தெரிய வருகிறது. நன்றி 🙏🌻

வெங்கடேசன்: இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ முடியும். ஒரு சிறிய பறவை இனத்தை அழித்ததால் சீனர்கள் என்ன விலை கொடுத்து இருக்கிறர்கள். அருமையான கட்டுரை மிக்க நன்றி ஐயா.

கரு. ராஜா சுங்கை பூலோ: ஒரு சாதாரண சிட்டுக் குருவிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையா???? சீனாக்காரனும் சில நேரத்தில் முட்டாள் தனமாக முடிவு செய்து இருக்கிறான். பாராட்டுக்கள்.


 

மரகதப் புத்தர் சிலை

 22.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம் கிரீக்

1784 மார்ச் 22 ஆம் தேதி உலகின் மிகப் புகழ்பெற்ற மரகதப் புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள 'வாட் பரா கேவ்' அல்லது 'வாட் பரா சி ரத்தன சசாதரம்' என்று அழைக்கப்படும் ஆலயத்திற்கு மாற்றப் பட்டது.

உருவ வழிபாடு என்பதையே புத்தர் ஏற்காததால், தொடக்கத்தில் புத்தரின் சிலைகளே அமைக்கப்பட்டது இல்லை.

எண்பது வயதில் இறக்கும் வரை நடந்தே அவர் போதித்துக் கொண்டு இருந்ததால் அவருடைய பாதத் தடங்கள்; போதிமரம்; பயணிப்பவர் இல்லாமல் குடையுடன் குதிரை; அவர் இல்லாத வெற்றுச் சிம்மாசனம்; தர்மச் சக்கரம்; உள்ளிட்டவைதான் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

சக்கரத்தின் ஆரங்கள் சமமாக இருந்தால்தான் அது சரியாகச் செயல்படும். அந்த அடிப்படையில் சமத்துவத்தின் அடையாளமாகப் புத்தர் பயன்படுத்திய தர்மச் சக்கரம்; பாதம் உள்ளிட்டவை சமத்துவத்தையே ஏற்காத இந்து சமயத்தால் பின்னாளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

புத்தரின் உடலை அடையாளமாகப் பயன்படுத்துவதை அவர் மறுத்ததால், போதி சத்துவர்களின் உருவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரியதை புத்தர் ஏற்றுக் கொண்டதாக சர்வாஸ்த்திவாத பவுத்தம் கூறுவதால், போதி சத்துவர்களின் உருவங்களும் சிலைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து புத்தரின் சிலைகள் உருவாகத் தொடங்கின. இது அவருக்கு 5-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கிறித்துவின் உருவத்தை அந்தச் சமயத்தினர் பயன்படுத்தியதன் விளைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தொடக்ககால பவுத்தச் சிற்பக் கலையில், கிரேக்கச் சிற்பக் கலையின் தாக்கம் அதிகமிருப்பது, அப்பகுதிகளிலும் பவுத்தம் பெற்றிருந்த செல்வாக்கை மட்டுமின்றி, அங்கு கிறித்தவம் உருவான போது, பவுத்தத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் விளக்குகிறது.

இன்று உலகில் இருக்கிற மிகப் பெரிய 10 சிலைகளில் 4 புத்தர் சிலைகள். உலகம் முழுவதும் பரவலாக மிக அதிகச் சிலைகளைக் கொண்டு இருப்பவரும் புத்தர்தான். பல்வேறு மிக அரிய பொருட்களாலான சிலைகளும் புத்தருக்கு உள்ளன.

அவற்றில் ஒன்றான இந்த மரகதக் கல்லாலான புத்தர் சிலை உருவான வரலாறு யாருக்கும் தெரியவில்லை. இந்துக் கடவுளர்களான விஷ்ணு, இந்திரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன.

1434-இல் கிடைத்த இது, சுண்ணாம்பு சாந்தால் செய்யப்பட்ட சிலையாகவே கருதப்பட்டு, சியாங் ராய் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

எதிர்பாராமல் சிலையின் மூக்குப் பகுதி சேதமுற்ற போது, உள்ளே பச்சை நிறம் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டபோது இரண்டு அடிக்கும் அதிக நீளமுள்ள மரகதக் கல்லில் செதுக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஐந்து முறை இடமாற்றம் செய்யப்பட்ட பின், 1784-இல் தற்போதைய ஆலயத்தில் இது அமையப் பெற்றது.



 

17 மார்ச் 2021

ராமோன் மாக்சாசே

17.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1957 மார்ச் 17-ஆம் நாளில் பிலிப்பைன்ஸ்சின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ராமோன் மாக்சேசே (49 வயதில்) விமான விபத்தில் பலியானார். "ஆசியாவின் நோபல் பரிசு" என்று புகழப்படும் மகசேசே (மாக்சாசே என்பதுதான் பிலிப்பினோ மொழியில் சரியான உச்சரிப்பு) விருது இவர் பெயரில்தான் வழங்கப் படுகிறது.

இவரின் எளிமை, நேர்மை, மக்களுடனான நெருக்கம், பிலிப்பைன்சின் பொற்காலம் என்று புகழப் படுகிறது. இவர் ஆண்ட மூன்றாண்டு காலத்தில் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்றும் அவர் பெயரை நிலைபெறச் செய்யும் நோக்கில் இந்த விருது உருவாக்கப்பட்டது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பேருந்து நிறுவனத்தில் வாகனங்களின் பழுது நீக்குபவராக (ஆட்டோமொபைல் மெக்கானிக்) வாழ்ந்த மாக்சேசே, இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் பிலிப்பைன்சின் இராணுவத்தில் சேர்ந்தார்.

ஸ்பெயினின் குடியேற்ற நாடாக இருந்து, 1899-இல் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு இருந்த பிலிப்பைன்சை, உலகப் போரில் ஜப்பான் கைப்பற்றிய போது தப்பிச் சென்ற மாக்சேசே, காடுகளில் ஒளிந்து கொரில்லா போராளியாகப் போராடினார்.

உலகப் போரின் முடிவில் விடுதலைப் பெற்ற பிலிப்பைன்சில் நாடாளுமன்ற உறுப்பினரானார் மாக்சேசே. கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் என்று கருதப்பட்ட ஹுக்பலஹாப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, முன்னாள் கொரில்லா என்ற முறையில் பாதுகாப்பு அமைச்சரான மாக்சேசே, நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. வாழ்வு இழந்த விவசாயிகள் என்று புரிந்ததும், சரண் அடைபவர்களுக்கு நிலம் முதலானவற்றை வழங்கி போராட்டத்தைச் சுமுகமாக முடித்தார்.

இராணுவத்தில் இருந்த ஊழல்வாதிகளை அகற்றி, சீரமைத்து இராணுவத்தின் மீதும் மரியாதையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் கூட்டாளி; தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர். 1953-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தி, எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.

ஊழல், நெருங்கியவர்களுக்கு சாதகம் முதலானவற்றை ஒழித்தது; குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பொதுமக்கள் வந்து செல்ல முதன்முறையாக அனுமதித்தது; பொது இடங்களுக்கு தன் பெயரைச் சூட்டுவதற்கு அனுமதி மறுத்தது; ஊதியத்தைத் தவிர சிறப்புச் சலுகைகளை ஏற்காதது என்று நீளும் பட்டியல் அவரை மக்களின் தலைவராக்கியது.

தன் காரின் ஓட்டுனர் சாலைவிதியை மீறிய போது, தானே இறங்கி அபராதம் செலுத்தியது; கார் பழுதாகி ஓட்டுநர் தடுமாறிய போது மீண்டும் மெக்கானிக்காக மாறி தானே சரி செய்தது; போன்றவற்றால் மக்கள் வியக்கும் தலைவராக இருந்தார்.

அவரின் ஆட்சியில், பல துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிய பிலிப்பைன்ஸ், ஆசியாவின் இரண்டாவது மிகச் சிறந்த நாடாக விளங்கியது.

அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் இந்த விருதும் உருவாக்கப்பட்டது.