23 மார்ச் 2021

அட்லாண்ட்டிக் சுவர்

23.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்


இன்று மார்ச் 23 1942-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகப் போரின் அதிசயம் என்று சொல்லப்படும் அட்லாண்ட்டிக் சுவர் (Atlantic Wall) எனும் பாதுகாப்பு அரணை அமைப்பதற்கான உத்தரவை ஹிட்லர் பிறப்பித்தார்.

சுவர் என்று குறிப்பிடப் பட்டாலும், சிறு கோட்டைகள், தடுப்புகள் என்று மாறுபட்ட அமைப்புகளுடன் கொண்ட அரண். ஸ்பெயின் எல்லையில் தொடங்கும் பிரான்சின் கடற்கரைப் பகுதி, வடக்கே நோர்வேயின் வடமுனை வரை 3,200 கி.மீ.க்கும் அதிக (2,000 மைல்) நீளக் கடற்கரைப் பகுதியில் இது அமைக்கப்பட்டது.

அமெரிக்கா நேரடியாக உலகப் போரில் இறங்கியதும், நேச நாடுகளின் படைகள் கடல்வழியாக நுழையலாம் என்பதை எதிர்பார்த்த ஹிட்லர், 1943 மே 1-க்குள் (14 மாதங்களில்) இதைக் கட்டி முடிக்க உத்தரவிட்டார்.

17 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, 50 ஆண்டு அனுபவம் கொண்டிருந்த ஜெர்ட் வோன் ருண்ட்ஸ்ட்டெட் என்ற தளபதி, இந்தக் கட்டுமானப் பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.

ஜெர்மனியின் தாக்குதலை எதிர்பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தரைக்குள் மறைந்து இருந்து மேல் எழும்பும் பாதுகாப்புக் கோபுரங்களுடன், சுமார் 100 கி.மீ. தொலைவிற்குப் பிரான்ஸ் அமைத்து இருந்த ’மேஜினாட் லைன்’ என்கிற அரணை உடைத்து நுழைந்த அந்தத் தளபதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அவர் அனுப்பப் பட்டார்.


உண்மையில் அனைத்துப் பகுகளிலும் முழுமையாக கட்டி முடிக்கப் படவில்லை. எனினும் மிகப் பெரும் பகுதியைப் பாதுகாக்கிற வகையில் உருவாக்கப்பட்டு இருந்த இதற்கு இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டனர்.

வெறும் 10 விழுக்காடு ஜெர்மன் தொழிலாளர்களுடன்; சிறைப் பிடிக்கப் பட்டவர்கள் 90 விழுக்காட்டினர் பயன்படுத்தப் பட்டனர். 12 இலட்சம் டன் எஃகு (இருபதாயிரம் கவச வண்டிகள் செய்யலாம்), 1.7 கோடி கனமீட்டர் கான்க்ரீட் உள்ளிட்டவை பயன்படுத்தப் பட்டன.

இதன் அரண்களில், அதுவரை பிற படைகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த கப்பல்களின் பீரங்கிகள் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இவற்றுக்கான பல்வேறு விதமான குண்டுகளை விநியோகிப்பது மிகப்பெரிய சிரமாமாக இருந்தது. இருந்த போதிலும், எவ்வளவு தொலைவில் எதிரிகள் வரும் போது எப்படித் தாக்கினால் தடுக்கலாம் என்பதற்கு, ஏராளமான குண்டுகளைக் கடலில் சுட்டு ஒத்திகை பார்க்கப் பட்டது.

அத்துடன் கடலில் இருந்து இந்த அரண்கள் வரையிலான பகுதியில் சுமார் 50 இலட்சம் கண்ணி வெடிகளும் புதைக்கப் பட்டன.

1944 ஜூன் 6-இல் நோர்மண்டியில் இறங்கிய நேச நாடுகளின் படைகள், வெறும் சிலமணி நேரத்தில் இவற்றைத் தகர்த்து நுழைந்தன என்பது தனிக் கதை.

போருக்குப்பின் வெறுப்பின் சின்னங்களாக இவற்றைக் கருதிய மக்கள் பல பகுதிகளிலும் தகர்த்து விட்டாலும், பல பகுதிகளில் எஞ்சி இருப்பவை வரலாற்றுச் சின்னங்களாக நிற்கின்றன!
 



இந்திய மாவீரர்களின் நினைவு தினம்

1931 மார்ச் 24-ஆம் தேதி பகத்சிங் (24), சிவராம் ராஜகுரு (22), சுக்தேவ் (24) ஆகிய மூவருக்கும் லாகூர் சிறை வளாகத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை 11 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது முன்தினம் மார்ச் 23-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி விட்டனர்.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூவரும் ஒன்றாகவே, ஒரே சிறையில், ஒரே நேரத்தில், வீர மரணம் எய்தினர். இந்தியச் சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில் தூக்கில் போடப் பட்டவர்கள் இவர்கள் மட்டுமே.

சட்டப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட நீதிபதிகள் யாரும் முன்வராத நிலையில், ஒரு வெள்ளைக்கார நீதிமன்றத் தலைவரின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.

தண்டனை நிறைவேற்றப் பட்டதும், அவசர அவசரமாகச் சிறையின் பின்பக்கச் சுவர் ஒன்று உடைக்கப்பட்டது. பின்பக்கமாக, இரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு செல்லப் பட்டன.

சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்களின் அஸ்தி சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப் பட்டது.

இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில், மிக மிகச் சிறிய வயதில் தூக்குத் தண்டனை அனுபவித்தவர்கள். நிச்சயமாக இது நடக்கும் என முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் எந்தவிதச் சலனமோ, கலக்கமோ, வருத்தமோ காட்டவில்லை.

இந்தியத் தேசத்திற்காகச் சாவை எதிர் கொண்ட மகத்தான மாவீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். அவர்களின் நினைவுதினம் (மார்ச்-23) இன்று. அவர்களை என்றும் நினைவு கொள்வோம்.


பின்னூட்டங்கள்



தனசேகரன் தேவநாதன்: இவர்களின் தியாகத்தை இன்றைய தலைமுறையினர் மதிக்கிறார்களா. இந்தியாவில் அகிம்சை வழி சுதநந்திரம் என்பது சரியான ஒரு பதம். அதன் வரலாறு அதை மெய்பிக்குமா. தகவலுக்கு நன்றி ஐயா.

இமயவர்மன்: அருமை நண்பரே. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்கள் தூக்கு தண்டனை பெற்ற நாள் இது. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இந்த நாடு உள்ளது. அதே நேரத்தில் நாட்டைக் கொள்ளை அடிக்க கூட்டணி அமைத்துக் கொண்டு வீதிகளில் வலம் வருகிறார்கள் அவர்களுக்கும் மாலை மரியாதை பட்டு ஆடைஅளிக்கப் படுகின்றது. வெட்கக்கேடு.


வெங்கடேசன்:
இதற்கு எல்லாம் இவர்களுக்கு ஏது நேரம். தற்போதய அரசியல் மக்களை முட்டாளாக்கி... வறுமையில் தள்ளி.. இலவசங்களை அள்ளிக் கொடுத்து...சே மிகவும் கேவலமாகி விட்டது 😭😭😭



22 மார்ச் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் போட்டி 2021

22.03.2021

அனைத்துலக அறிவியல் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு (Emergeny Ranger Friendly System Project - Malaysia Innovation, Invention and Creativity Association - MIICA) பாராட்டுதலுக்கு உரியது.


உண்மையிலேயே கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி நிகழ்த்துகைக் காட்சியளிப்பு (presentation) பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எத்துனை அழகாக முன்வைக்கிறார்கள். எத்துனை அழகாக முன்னமைப்புச் செய்கிறார்கள். அனைவரும் மலாயா வாழ் தமிழர்களின் வாரிசுகள்.


இந்த நாட்டில் தமிழ்க் குழந்தைகள் மற்ற மற்ற மொழிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்குத் கங்கார் தமிழ்ப்பள்ளியும் முன்னுதாரணமாய் விளங்குகின்றது. பெருமைப் படுகிறோம்.


பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்ப் பெருமக்கள் மேலும் தமிழ்மொழிக்குச் சிறப்பு செய்ய வேண்டும். இந்தக் காணொலிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களை வெற்றி பெறச் செய்யலாம். அனைத்து அன்பர்களும் ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.


This is an international science project. Please like the school video to win in this video competition. Click in this link to like the video, comment and also please share to others.

https://www.facebook.com/watch/?v=476024890101248


மன்னிக்க முடியாத கோபம்

22.03.2021

பதிவு செய்தவர்: தேவிசர கடாரம்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டார்.

"மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்க துடிக்கிறீர்களா நீங்கள்?"

மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம் ...ஐயா’ என்றார்கள்.

ஆசிரியர்க்கு மிகுந்த வியப்பு. ஒவ்வொருவராக அழைத்து "மன்னிக்கவும்... மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள உள்ளன?" என்று கேட்டார்.  ஒவ்வொருவரும் ஐந்து பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்.  மாணவர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார் .

ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளிப் பழம் கொண்டு வரப்பட்டது. யார் மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிப் பழங்களைப் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தக்காளி பை எப்போதும் உங்கக் கூடவே இருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகிலேயே வைத்து இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள். ஓரிரு நாட்கள் ஒரு கதையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாடகளில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின.

நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப் பட்டனர்  ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர் .

மௌனமாகப் புன்னகைத்த ஆசிரியர், "நாற்றம் வீசுபவை தக்காளிகள் மட்டும் அல்ல அந்த நாற்றத்தை போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை, பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால் தக்காளிப் பையை தூக்கி எறியுங்கள் என்றார்.

அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு ஏற்பட்டது. அப்போதே தக்காளி பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசினார்கள் பகை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.

நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்து இருக்கிறோம். தக்காளி பை நாற்றத்தை நினைவில் கொள்வோம். பகைமை மறப்போம். பகுத்தறிவோடு பயணிப்போம்.


 

ஆண் பெண் மூளை வித்தியாசங்கள்

22.03.2021

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது!

உதாரணமாக ஒரு பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப் பட்டு உள்ளது.

உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலைபேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி

பெண்களால் இலகுவாகப் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும்!

அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண் குழந்தை அதிகப் படியான சொற்களைத் தெரிந்து வைத்து இருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.

அதனால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைப் படத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் மூளையால் இதைச் செய்ய முடியாது. அது மட்டும் அல்லாது பெண்களால் ஆண்கள் முன்வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்.

வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றால் போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.

இதற்குக் காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக் கூடிய மூளைத்திறன்” ஆகும்.

உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப் பேச்சு

ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராகப் பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக அதைப் பொய் என்பதை அறிந்து கொள்வார்கள்!

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறு இல்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் போது ஓர் ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சினையையும் தனித் தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தீர்வை படிப்படியாக இனம் காணும். இதனால் பிரச்சினை உள்ள ஆண்கள் தனிமையில் தம் தீர்வுகளை இனம் கண்டு கொள்வார்கள்.

ஆனால் இதே அளவு பிரச்சினை உள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சினைகளைத் தனித்தனியாக பிரித்து அறியாது. யாராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனைகளையும் வாய் மூலமாக சொல்வன் மூலம் திருப்தி அடைந்து கொள்ளும்.

சொன்ன பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

தேவைகள்

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை

ஒரு பெண்ணிற்கு தனது காதல் உறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால் அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால் ஓர் ஆணிற்கு தன் வேலையில் பிரச்சினை இருப்பின் அவர்கள் காதல் உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

உரையாடல்

பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!


பின்னூட்டங்கள்


 

கலைவாணி ஜான்சன்: அருமை அருமை... உண்மைகள் நிறைந்த பதிவு ஐயா...

தனசேகரன் தேவநாதன்: இயற்கையின் அற்புதம் நன்றி ஐயா🌷🙏🌺

வெங்கடேசன்: சிறப்பான ஆச்சர்யமூட்டும் தகவல்கள். மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். நம்மை சுற்றி உள்ள நம் பெண் பிள்ளைகள்; நம்முடைய சகோதரிகள் இவர்களுடைய பழக்க வழக்கங்களில் இதைப் பார்க்க முடியும் 😄