13 ஆகஸ்ட் 2021

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

சாரதா நயனதாரா சாந்தி பெறுக

13.08.2021

செல்வி சாரதா நயனதாரா, முன்னாள் நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகள். இராஜகுமாரன் அவர்கள் மறைந்த ஆதி. குமணன் அவர்களின் அண்ணன் ஆவார். கோவிட் தொற்று காரணமாக நயனதாரா மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 


அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறோம்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறோம். 


பாதாசன்: நம்பமுடியவில்லை. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. செல்வி சாரதா நயனதாரா, இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகளின் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறேன்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.


ராதா பச்சையப்பன்: பார்க்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏.

மலையாண்டி மலாக்கா: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவா இந்த மண் மீது வாழும் எங்கள் இனத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்.

கரு ராஜா: ஆழ்ந்த இரங்கல். நாட்டில் மரணச் செய்தி மிகs சர்வ சாதாரணமாக வந்து கொண்டிப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது.


கலைவாணி ஜான்சன்: மரணங்களின் ஓலங்கள்.... ஜீரணிக்க முடியவில்லை.... என்னவென்று சொல்வது. மலேசிய மண்ணில் தமிழுக்காக கோலோச்சிய ஒவ்வொரு ஜீவன்களையும் மரணம் தழுவிச் செல்வது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை.... நயனதாராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கடேசன்: ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆந்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.😭

தனசேகரன் தேவநாதன்: அழகிய முத்தாரம் அறுந்து போனதே... என்று தணியும் இந்த வேதனை இறைவா இறைவா ஓம் நமசிவாய


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இறைவா... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாழ வேண்டிய வயது. ஆதி. இராஜக்குமாரன் தன் வாழ்நாளில் தன் மகளுக்காகவே வருத்தப் பட்டவர். மலேசியம் அன்பர்களின் ஆழ்ந்த இரங்கல்... ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

விஜயசிங்கம்: என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

உதயகுமார் கங்கார்: ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் நமசிவாய.

மகாலிங்கம் படவேட்டான்: ஆழ்ந்த இரங்கல்... ஓம் நமசிவாய... ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

செல்லா செல்லம்: ஓம் சாந்தி  🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி

 

மலேசியம் இணையத்தளத்தில் மலேசியம் புலனப் பதிவுகள்

13.08.2021

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் தகவல்கள் மூன்று வாரங்களில் தானாகவே அழிபடும். அந்த வகையில் ‘மலேசியம் இணையத்தளம்’ தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் உறுப்பினர்கள் பதிவு செய்த அழகு அழகான பதிவுகள்; மணிமணியான முத்திரைப் பதிவுகள் எல்லாமே அழிந்து போய் விட்டன.


இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது. மலேசியம் புலனத்தில் பதிவாகும் நல்ல பதிவுகள்; நேர்த்தியான பதிவுகள் அனைத்தும் மலேசியம் இணையத் தளத்திலும் உடனுக்குடன் பதிவாகும்.

அவ்வாறு பதிவு செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த படசம் இரண்டு மணி நேரம் வரை செலவாகலாம். பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் நேர்த்தியான பதிவுகள் அனைத்தையும் சேகரித்து இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

மலேசியம் இணையத்தளத்தில் பதிவாகும் புலனப் பதிவுகள் காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாம் மறைந்த பின்னரும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும்; அல்லது 1000 ஆண்டுகள் கழித்தும், அடுத்து வரும் தலைமுறைகள் அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். நம்மைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

மலேசியம் எனும் பெயரில் ஒரு புலனம் இருந்தது. இப்படி எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்; இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று அவர்களும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பதிவுகள் தான் நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனம்.

வெங்கடேசன்: சிறப்பான முயற்ச்சி வாழ்த்துகள் ஐயா. தங்கள் செயல் மிக சிறப்பான ஒன்று 🙏🙏

கணேசன் சண்முகம் சித்தியவான்: உண்மை ஐயா. போற்றப்பட வேண்டிய செயல். காக்கப்பட வேண்டிய எழுத்துச் சாசனங்கள்.

தனசேகரன் தேவநாதன்: இது ஒரு மாபெரும் பணி. பொய் சேவையே மெய் என கருதுகிறோம் எனும் அண்ணன் அன்பானந்தன் அவர்களின் அமுத மொழி  ஓட்டப் பந்தயத்தில் எங்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்களே...

பொய் புளுகுச் சரித்திர மூட்டைகளை அடித்துத் துவைக்கும் உங்கள் எழுத்துக்ள் என்றென்றும் உயிர் பெற்று வாழும். அன்னை சரஸ்வதி அனைத்தையும் உங்களுக்கு அருள்வாய் என அன்னையை வேண்டி இந்த அமுத கானத்தை உங்களுக்காகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

https://youtu.be/l1kYJFo-uBU

தேவிசர: சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

தேவிசர: வணக்கம் அப்பா. கற்றுக் கொண்டதை வீணே விரயம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன் படட்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட தங்களுக்கு இறைவன் எந்த நேரத்திலும் துணை இருப்பார்.

சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

கரு. ராஜா: அருமை

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் தனசேகரன் ஐயா. தங்களின் நீண்ட பதிவு மனதில் ஆழமாய் வருடிச் செல்கின்றது.

இதற்கு மேலும் எதை எழுதுவது... தெரியவில்லை. தங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் நாட்டிற்கும் தேவை. வீட்டிற்கும் தேவை. இந்தப் புலனத்திற்கும் தேவை. வாழ்த்துகள் ஐயா


 

12 ஆகஸ்ட் 2021

மலேசியக் கல்விச் சட்டத்தில் கிரந்த எழுத்துகள்

தமிழ் மலர்: 12.08.2021

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அந்தப் பாவனையில் மொழி மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மொழிச் சீர்த்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை. எதை மாற்றம் செய்ய வேண்டுமோ; எதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமோ; அதைச் செய்வது சிறப்பு.

அந்த வகையில் மொழி மாற்றங்கள்; மொழிச் சீர்த்திருத்தங்கள் செய்பவர்களின் நல்ல நோக்கங்களைத் தவறாக எடைபோடுவது நம் நோக்கம் அல்ல. ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைச் சிதைவுறாமல் சீர்த்திருத்தம் செய்வது நலம் பயக்கும். அதுதான் முக்கியம். சீர்த்திருத்தம் எனும் பெயரில் திணிப்புகளைத் தவிர்ப்பதும் சாலச் சிறப்பு.

மொழிச் சீர்த்திருத்தம் செய்யப்படும் போது, பொது மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். நான் எடுத்த முடிவுதான் சரி என்று பிடிவாதம் செய்வது தவறு. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் என்று முரட்டுவாதம் செய்வது தவறு.

கிரந்த எழுத்துகள் வட எழுத்துகள் அல்ல. இதைத்தான் மலேசியக் கல்வி அமைச்சின் பாடத் திட்டக் குழுவினரும் முன்வைக்கின்றனர். பாடத் திட்டங்களை வகுக்கும் போதும் சரி; தொகுக்கும் போதும் சரி; கிரந்த எழுத்துகள் என்று சில அத்தியாயங்களை உருவாக்கிப் பாடமாகச் சொல்லித் தருகிறார்கள்.

1957-ஆம் ஆண்டு, மலாயா சுதந்திரம் அடைந்த போது ரசாக் அறிக்கை (Razak Report) எனும் கல்வி அறிக்கை உருவாக்கப்பட்டது. மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்து ரஹ்மான் தாலிப் (Rahman Talib Report 1960) அறிக்கை வந்தது. அதன் விளைவாக கல்விச் சட்டம் 1961 (Education Act 1961) உருவானது. அப்போது தான் தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை உருவாக்கினார்கள்.

அந்தக் கட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் கிரந்த எழுத்துகள் இணைத்துக் கொள்ளப் பட்டன. அப்போது இருந்தே கிரந்த எழுத்துகள் சட்டபூர்வமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தத் தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

எப்போது எழுதப்பட்ட பாட நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாய் இருந்தன. கிரந்த எழுத்துகள் இருக்கின்றனவா இல்லையா என்றுகூட அடையாளம் தெரியாமல் பிணைந்து போய் இருந்தன.

பின்னர் காலங்களில் வடமொழிச் சொற்கள் களையப் பட்டன. ஆனால் கிரந்த எழுத்துகளை மட்டும் விட்டு விட்டார்கள். ஒன்றும் செய்யவில்லை. அந்த எழுத்துகள் இன்றும் பாட நூல்களில் வந்து போகின்றன. அப்படியே பிள்ளைகளுடன் மக்களுடன் ஐக்கியமாகி விட்டன.

மேலும் ஒரு தகவல். 2011-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் லீனஸ் (LINUS) கல்வி முறை அமல் செய்யப்பட்டது. (LINUS, Literacy and Numeracy Screening). இந்த லீனஸ் திட்ட நடைமுறை தமிழ்ப் பள்ளிகளில் அமல்படுத்தும் போது கிரந்த எழுத்துகளும் இருந்தன. 2011 அக்டோபர் மாதம் வரையில் 1100 ஆசிரியர்களுக்கு லீனஸ் கல்வி முறை பயிற்சிக்கப் பட்டது. அந்தப் பயிற்சிகளில் கிரந்த எழுத்துகள் பயன்பாடும் ஓர் அங்கமாக இருந்தது.

ஆக காலம் காலமாகத் தமிழ்ப்பள்ளிகளில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் அண்மைய காலங்களில் கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்போம் என்று ஒரு குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாம் தடைக்கல்லாக அமையவில்லை. போராட்டம் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள். ஆனால் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கும் செவி சாயுங்கள். 


பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: அதிகாலையிலேயே படித்து விட்டேன் ஐயா. கருத்து குருடர்களை ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பின் பெரிய பட்டாளமே உண்டு ஐயா. உண்மையை உறக்க சொல்ல தயக்கம் வேண்டாம். தமிழோடு உயர்வோம் வாழ்க உங்கள் பணி 👌💞👌💞👌💞

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தங்களின் அன்பான ஆதரவான கருத்துகளுக்கு நன்றிங்க. பொதுவாக காலையில் பத்திரிகையைப் பார்ப்பது இல்லை. கட்டுரை வந்து இருக்கும் எனும் நம்பிக்கையில் மற்ற மற்ற வேலைகளில் ஈடுபடுவேன்.

இன்றைக்கு முதல் வேலையாகப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தேன். மனநிறைவு. தாங்கள் சொல்வது போல உண்மையைத்தான் சொல்கிறோம். உண்மையைத்தான் வலியுறுத்துகிறோம். அது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தனிப்பட்ட ’அஜெண்டா’, தனிப்பட்ட பார்வையில் சிலர் பிடிவாதம் பிடிக்கலாம்.

தோழரே. நம் பாதையில் நம்மால் இயன்றவரை நல்லவற்றைச் செய்து கொண்டே இருப்போம். 🙏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 நானும் காலையிலேயே கட்டுரையைப் படித்தேன். சில பல விசயங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அது போல வருவது வரட்டும். வந்த பிறகு பேசுவோம். கட்டுரையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கட்டுரையாளருக்கு நன்றி 🙏🌷.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கடைசி வரிகளின் சொல்லாடலைக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

கரு. ராஜா, சுங்கை பூலோ: கட்டுரை அருமை ஐயா. உங்களிடம் வாலாட்ட முடியுமா? அலவாங்குப் போட்டு நோண்டி எடுத்து ஆதாரம் காட்டிவிட்டார் நம்ம வரலாற்று பேரரசு முத்துக்கிருஷ்ணன்.

எந்தெந்த காலங்களில் நம் முன்னோர்கள் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். இனி என்ன ஆதாரம் வேண்டும் இங்குள்ள தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும். இரண்டு நாள் கட்டுரைகளை படித்து ஓரளவு தெளிவு அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம்.

வெங்கடேசன்: பூனைக்கு மணியும் சுண்டெலிக்கு சிலுவாரா? என்ன ஒரு வார்த்தை ஜாலம் ! 😄😄

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: (11.08.2021 பதிவு) நன்றிங்க ராஜா. சாட்டையடி என்று சொல்கிறீர்கள். ஆனால் காலையில் என்ன நடந்தது என்று கேட்கவில்லையே.

இன்று காலை மணி 9 இருக்கும். ஒருவர் மிக அமைதியாக அழைத்தார். கொஞ்ச நேரம் நன்றாக அமைதியாகப் பேசினார். நல்ல மனிதர் என்று முடிவு செய்யும் போதுதான் சுய ரூபத்தைக் காட்டினார்.

‘நீ தமிழனுக்கு பொறந்து இருந்தால் பார்ப்பான் எழுத்துக்கு அடிவருட மாட்டாய். தமிழ் மலருக்கு போன் செய்து என்ன செய்கிறேன் பார். உன்னை எழுத விடாமல் செய்கிறேனா இல்லையா பார்’ என்று ஒருமையில் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

அவர் மிரட்டிய தோரணையைப் பார்த்தால் மேல்மட்ட அரசியல் செல்வாக்கு ஆள்பலம் இருக்கலாம் போலும். விடுங்கள். இந்த மாதிரி எத்தனையோ மிரட்டல்களைச் சந்தித்து விட்டேன்.

இருந்தாலும் மனசுக்குள் ஆதங்கம். உண்மையை எழுதுவதால் எதிர்கள்தான் அதிகமாகிறார்கள் எனும் ஆதங்கம்.

அதிகாரம் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால்... நாளைய தினம் இரண்டாவது கட்டுரை வராமல் போகலாம். சொல்ல முடியாது. அதுவே ஒரு பனிப்போரின் ஆரம்பம்.. பார்ப்போமே!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க ராஜா. தெளிவான பார்வையில் சிறப்பான பின்னூட்டங்கள். ஆழமான பதிவு. சற்றுக் கூடுதலான தனிப்பட்ட தகவல். கிரந்த எழுத்துகள் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் வாட்ஸ் அப்; புளோகர், பேஸ்புக்; இன்ஸ்டகிராம் ஊடகங்களில் வழக்கம் போல பதிவு செய்யலாம் என்று நினைத்தேன்.

தாங்களும் பதிவு செய்யுங்கள் என்று காலையில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் மனத்தில் சின்ன சஞ்சலம்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜேந்திர சோழனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போய் நார் நாராகக் கிழித்து எடுத்து விட்டார்கள். நான் ஒரு தனிமனிதனாக ஒரே சமயத்தில் பத்துப் பதினைந்து தாக்குதல்களைச் சமாளித்தேன்.

அதன் பின்னர் சரியான மன உளைச்சல். நல்லதுதானே எழுதினேன். நல்லதுக்குத் தானே எழுதினேன். அதற்கு இந்த மாதிரியா... பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி என்று வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டார்கள். நல்ல ஒரு பாடம்.

ஊடகத்தில் பதிவு செய்யாமல் பத்திரிகையோடு விட்டு இருந்தால் பிரச்சினை பெரிதாகிப் போய் இருக்காது.

அதே போல கிரந்த எழுத்துகள் பற்றிய அந்த இரண்டு கட்டுரைகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்தால், சிலர் அவற்றைப் படம் பிடித்து மற்ற புலனங்களில் பகிரலாம். அதைப் பற்றி விவாதங்கள் நடக்கலாம். நல்ல பெயர் சிலருக்கு... கடைசியில் கெட்ட பெயர் எனக்கு.

நல்லதுக்கு காலம் இல்லைங்க. ’எப்ப... எப்ப... பாயலாம்’ என்று சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். வம்பை விலை கொடுத்து வாங்குவது சரியன்று. பத்திரிகை வாங்கிப் படித்துக் கொள்ளட்டுமே. அமைதியாக இருப்பதே சிறப்பு. என்ன சொல்கிறீர்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவருக்கும் தெரியாதுங்க.

பொன் வடிவேலு, ஜொகூர்: சகோதரர் முத்து அவர்களே, உங்களுக்கு துணையிருப்பவர் ஸ்ரீவிநாயகர், அன்னை ஸ்ரீமகாலக்‌ஷ்மி, சிவபெருமான், முருகப்பெருமான். தூசுகள் துவம்சமாகும் ௐ





நம்பிக்கை வைத்தால் அவமானம் நமக்கே

12.08.2021

ஆறுதல் கிடைக்கும் என்று சில வேளைகளில் நம்முடைய பிரச்சினைகளை நம்பிக்கையின் பெயரில் மற்றவரிடம் சொல்லி விடுகிறோம். இங்கே நம்பிக்கை தான் முதன்மை பெறுகிறது.

ஆனால் இந்தக் கலிகாலத்தில் உயிருக்கு உயிராய் நம்பியவர்களே மோசம் செய்து விடுகிறார்கள்.

2014-ஆம் ஆண்டில் என் நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் தோழி ஒருவர் இருந்தார். கூடப் பிறந்த தங்கைக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்துப் பழகி வந்தார். தன்னுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொல்லி விடுவார். நம்பிக்கை. நம்பிக்கை.

அந்தப் பெண்ணுக்குப் பண உதவி தேவைப்படும் போது எல்லாம் 50, 100, 200 என்று கொடுத்து உதவி செய்து வந்து இருக்கிறார். கணக்குப் பார்ப்பது இல்லை.

தங்கச்சி தானே என்று அவருடைய போன் பில்; கரண்டு பில்; அந்த பில் இந்த பில் என்று நிறைய கொடுத்து உதவி இருக்கிறார். சில ஆயிரங்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் என்னவோ பிணக்கு. அப்புறம் என்ன. நண்பரின் அந்தரங்க இரகசியங்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தன.

அதனால் நல்லா இருந்த அவருடைய மனைவிக்கும் அவருக்கும் சண்டைச் சச்சரவுகள். பிள்ளைகளும் தந்தையாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். குடும்ப உறவு முறை இன்றும் சீர் அடையவில்லை.

அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆகவே யாரிடமும் எந்த இரகசியத்தையும் சொல்லாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: உண்மை. நம்மிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால் நண்பனும் பகைதான். என் சொந்த அனுபவமே உண்டு. மனிதர்கள் பல வகை 🤷‍♀️

இராதா பச்சையப்பன்: 🌷🙏எதுவும் சொல்ல தோன்றவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை. 🤷‍♀️🤷‍♀️

கலைவாணி ஜான்சன்: சிறப்பு மிக்க பதிவு ஐயா... நிதர்சனமான உண்மை... 👍👍