09 அக்டோபர் 2021

மலாக்காவின் முதல் கவர்னர் லியோங் யூ கோ

மலாயா மாநிலங்களில் யாங் டி பெர்த்துவா, கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் முதல்வர் லியோங் யூ கோ (LEONG YEW KOH. முதலும் கடைசியுமான சீனர். 31 ஆகஸ்ட் 1957-இல் இருந்து 30 ஆகஸ்ட் 1959 வரை பணியாற்றினார்.


அவர் 12 செப்டம்பர் 1959 முதல் 12 ஜனவரி 1963 வரை மலாயா நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்

மலாய் அல்லாதவர்கள் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்று யார் சொன்னது?

நமது சுதந்திரத்தின் தொடக்கத்தில் மலேசியா எப்படி இருந்து இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்போது போல இனம் மற்றும் மதத்திற்கு அப்போது குருட்டுத்தனம் எதுவும் இல்லை.

06 அக்டோபர் 2021

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி இருக்கிறார்

06.10.2021

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தன் சம்பளத்தைக் குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

3. அம்மா நீங்கள் விரும்பியதைச் சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாகக் காட்டப் படுகிறது. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. நீங்கள் தொலைபேசியில் பேசும் போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பது இல்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடம் இருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

5. அலமாரியில் வண்ண மயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தன் சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கு என்று ஆபரணம் ஏதும் இருப்பது இல்லை. தனக்கு என்று ஏதும் வாங்கியதும் இல்லை.  இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும் போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி அல்லது கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் பண்டிகைக்கு எனக்காகச் சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது ​​குழந்தைகள் சொல்கிறார்கள்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார்?

*அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.* இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.

 

13 செப்டம்பர் 2021

செந்தமிழ் செல்வி ஜனகா சுந்தரம்

12.09.2021
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராவார். மலேசிய நாளிதழ்கள்; தமிழகத்தின் மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களில் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.

1960-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலேசியத் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப்பட்டவர்.


பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவை உறுப்பினராகச் சேவை செய்தவர். தனியார் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றியவர்.

பினாங்கு இந்து சங்கப் பேரவையின் செயலாளர்; பினாங்கு வட்டாரப் பேரவையின் தலைவர். பல ஆண்டுகளாகப் பொறுப்பேற்று சேவை புரிந்தவர்.

1962-ஆம் ஆண்டு முதலே ஜனகா சுந்தரம்; ஜனனி என்னும் புனைப் பெயரில் கட்டுரை, சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.


வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் நேசன், மலேசிய முரசு ஆகியவற்றில் இவருடைய பல தொடர்கதைகள் வெளி வந்துள்ளன. இலக்கியத் துறையில் பல படைப்புகளை வழங்கியுள்ளார். இவரின் முதல் சிறுகதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ராணி வார இதழில் இடம் பெற்றது.

ஜனகா சுந்தரம் எழுதிய நூல்கள்

ஞானத் தழும்புகள் (சிறுகதைத் தொகுப்பு);

திருக்குறள் தொகுப்புரை (கட்டுரை நூல் 1997);

பாரதியார் கவிதைகள் (கட்டுரை நூல் 1998).


*சிறுவர் நூல்கள்*

கண்ணனின் துனிவு (1998);

ஔவையார் அறநெறி - ஆத்திச்சூடி (கட்டுரை -1998);

பைந்தமிழ் நாட்டு பழங்கதைகள் (கதைகள் - 1998)

*சமய நூல்கள்*

காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் (1997 / 1998)


1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய வானொலியின் இளைஞர் உலகம் நிகழ்ச்சியின் கருத்துக் களம் நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றவர். அப்போது தொடக்கம் இவரை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சியில் நானும் வாரா வாரம் கலந்து கொள்வேன். ஆழமான தமிழ் வளம். அழுத்தமான சொற்கள். உறுதியான சொற்கள். அவரின் தமிழறிவைக் கண்டு பல கட்டங்களில் வியந்து போய் இருக்கிறேன்.

இவர்தான் டாக்டர் சுபாஷிணியின் தாயார் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஒரு புறம். மலைப்பு ஒரு புறம். திகைப்பு ஒரு புறம். வாழ்த்துகிறேன்.

பின்னூட்டங்கள்

டாக்டர் சுபாஷிணி: அம்மா - ஒரு வழிகாட்டி!
(எழுத்தாளர் ஜனகா சுந்தரம்)

மலேசியாவில், அதிலும் குறிப்பாக பினாங்கில் ஒரே ஒரு தமிழ் புத்தகக்கடை மட்டுமே இருந்தது ஆரம்பத்தில். அங்கு தரமான நூல்கள் அவ்வப்போது மட்டுமே வந்துகொண்டிருந்தன.

தமிழகத்திலிருந்து யார் பினாங்கு வந்தாலும் அவர்கள் கையோடு கொண்டு வர வேண்டிய நூல்களைப் பற்றியும் அம்மா முன்னமே தெரிவித்து வரவழைத்து விடுவார்.

இப்படி நான் வளர்ந்த காலத்தில் வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அம்மா வைத்திருந்தது எனது தமிழ் நூல்கள் வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அம்மாவின் வழிகாட்டுதல் தான் எனக்கு இங்கு ஜெர்மனியிலும் என் வீட்டில் தரமான நூல்களுடன் ஒரு நல்ல நூலகம்  உருவாகுவதற்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

நூல் வாசிப்பு, அது பற்றிய சிந்தனை என்பது பெற்றோர்களது வழிகாட்டுதல்களினால்தான் நமது மனதில் ஆழப்பதியும் வகையில் நமக்கு அமைந்துவிடுகின்றன என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பாரதியின் நினைவு நாள் இன்று. பாரதியைப் பற்றிய முற்றுப்பெறாத ஒரு நூலையும் அம்மா எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல்களை எனக்கும் என் சகோதரிக்கும் கற்றுக் கொடுப்பார்.

நாங்கள் பாடிக் காட்ட அவர் மகிழ்வார். திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஆண்டுகள் சில கடந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு  இருக்கிறது.

நூல்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும்.. நூல்களை நேசிக்க வேண்டும் என்றும், வீட்டில் குட்டி நூலகம் இருக்க வேண்டும் என்றும் தனது செயலால் எனக்கு வழிகாட்டியாக இருந்த அம்மாவிற்கு இன்று (செப் 11) பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... -சுபா

தேவிசர கடாரம்: அருமை சகோதரி... புத்தகம் வாசிப்பது என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .என் பெற்றோறை பார்த்தே எனக்கும் இந்த பழக்கம் வந்தது...

தங்களின் தாய் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்கின்றார்.அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சுற்றியே இருக்கும்.....

தனசேகரன் தேவநாதன்: நண்பரின் கவிதை - வாசிப்பு

அன்று தொட்டு இன்று
வரை மனித நாகரீகத்தின்
பரிணாம வளர்ச்சிக்கு
வித்து வாசிப்பு அதுவே
விலை இல்லா சொத்து...

தனி மனிதனின் சிந்தனையில் உதித்த
அறிவியல் அகிலத்துக்கு
ஆயிரமாயிரம் நன்மைகளை
உயிர்ப்பித்து உயிர்களின்
வாழ்வாதாரம் நிர்ணியக்கப் படுகிறது
வாசிப்பில்...

ஆன்றாரோரும் சான்றாரோரும்
மனித குலத்தின் ஒழுக்க
நெறிகளுக்கு எழுதி வைத்த
ஆயிரமாயிரம் அறிவுரைகள்...

ஏடுகளில் ஏங்கிக் கிடக்கின்றன
சாமானியர்களின் வாசிப்புக்கும்  
நல் வாழ்வுக்கும்...

சுவாசிப்பு உயிர் வாழ எவ்வளவு முக்கியமாமோ
அவ்வளவு முக்கியம் வாசிப்பு
மனிதன் மனிதனாக மனிதத்துடன் மண்ணில் வாழ...

கல்வியின் முக்கித்துவம்
புத்தகங்களில் மூழ்கி இருக்கின்றன
அந்த கல்வி முத்தை மூழ்கி
எடுக்க வாசிப்பு என்ற
பயிற்சி வேண்டும்...

மன இறுக்கத்திலிருந்து
விடுபட சிறந்த வைத்தியம்
வாசிப்பு  வாசிப்பாபோம்
வசந்தத்தை வரவேற்பாபோம்
வாழும் வரை...

-நாரா
பத்து காஜா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மகிழ்ச்சியான செய்தி. பெற்றோர் எப்படியோ பிள்ளைகளும் அப்படியே... தாங்கள் இந்த அளவிற்கு சிறந்து விளங்குவதற்கு தங்களின் பெற்றோர்... குறிப்பாக, தாயார் மிக முக்கிய பங்கு வகித்து உள்ளார். நினைவு கூர்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன். 🙏💐

டாக்டர் சுபாஷிணி: மிக அழகான பதிவு தோழர். அம்மாவின் படைப்புக்களை அழகாக வரிசைப் படுத்தி விரிவாக எழுதி இருக்கின்றீர்கள். எனது நன்றி மலர்கள் 🌹🌹🌹. அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சுறுசுறுப்பு, பல திறமைகள், சமூகச் சிந்தனை  என எனக்கு நேரடி வழிகாட்டி அவர். எல்லா பணிகளுக்கு இடையேயும் அவரது கைமணமும் அபாரம். இன்று மட்டுமல்ல எல்லா நாளுமே அம்மா உடன் இருக்கின்றார்.. 😄 அன்பிற்கு நன்றி நன்றி 🙏😊🌷

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:1967-ஆம் ஆண்டு, தங்கள் தாயாருடன் மலேசிய வானொலி இளைஞர் உலகம் கருத்து மேடை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கருத்து விவாதங்கள ஏற்பட்டதை நினைத்துப் பார்க்கின்றேன். தாங்கள் தான் அவருடைய மகள் அறிந்து தங்கள் மீது தனி ஒரு மரியாதை ஏற்படுகிறது.

ஜனகா சுந்தரம்... புகழ்பெற்ற எழுத்தாளர்... என்னைக் கவர்ந்த எழுத்தாளர். இன்றும் என் நினைவில் வலம் வரும் அழகிய எழுத்தாளர். தங்களின் தாயார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

டாக்டர் சுபாஷிணி: மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏😊😊😊🌷

வெங்கடேசன்: சிறப்பான தகவல் மிக்க நன்றி ஐயா🙏

தனசேகரன் தேவநாதன்: நன்றி ஐயா. அவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். பினாங்கு மாநில இந்து சங்கத் தலைமைப் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர். வானொலியில் அவர் பெயர் வராத நாட்கள் அபூர்வம்.

அவரின் வாரிசு டாக்டர் சுபாஷிணி என அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஐயா. இந்து சங்க வரலாற்றில் இவர் தான் முதல் பெண் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்

கரு. ராஜா சுங்கை பூலோ: தகவலுக்கு நன்றி

முருகன் சுங்கை சிப்புட்: எல்லாம் புதுப் புதுத் தகவல்கள். மலேசியம் புலனம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வருகிறது. அத்துனை படைப்புகளும் அருமை 👏👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கனகா சுந்தரம்... 1970-களில் மலேசிய வானொலியில் முத்திரை பதித்தவர். இவர் என் மனைவியின் தோழியும் ஆவார். இருவருக்கும் கடிதத் தொடர்புகள் இருந்தன.

கலைவாணி ஜான்சன்: சிறப்பு ஐயா... சிறந்த எழுத்தாளரை அறிமுகம் செய்து, அவர் எழுதிய நூல்களையும் அறிமுகம் செய்து, அவருக்குச் சிறப்பு சேர்த்து உள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி... நன்றி 🙏🙏

கரு. ராஜா சுங்கை பூலோ: புலிக்கு நிச்சயம் பூனை பிறக்காது. புலிதான் பிறக்கும். அந்தப் புலிதான் டாக்டர் சுபாக்ஷினி.

கலைவாணி ஜான்சன்: வாழ்த்துகள் டாக்டர் சுபாஷினி 👏🏼👏🏼🌹🌹

ராதா பச்சையப்பன்: அருமை, சிறப்பு. எனக்குப் புத்தகங்களை வாசிப்பது என்றால் அதிக பிரியம். 👌👌🙏🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சொல்ல மறந்த தகவல்... ஜனகா சுந்தரம் அவர்கள்... சித்த மருத்துவம் பயின்றவர். தமிழ்நேசன் பவுன் பரிசு; தமிழ் முரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு; எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசுகள் பெற்றவர்.

குன்றக்குடி அடிகளார் `செந்தமிழ் செல்வி` எனும் விருது வழங்கி உள்ளார்.  

மலேசிய இந்து சங்கம் `தொண்டர் மாமணி’ விருது வழங்கி உள்ளது.

கலைவாணி ஜான்சன்: ஆகா அருமை அருமை ஐயா.... தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற அம்மையாருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்.... 🌹🌹🌹👏🏼👏🏼

இமயவர்மன் திருச்சி: வாழ்த்துக்கள் டாக்டர் சுபாஷினி

ராதா பச்சையப்பன்: உங்களுக்கு தெரியாததா, சகலமும் அறிந்தவர் நீங்கள். உங்களிடம் போட்டி போட ஆள் ஏது? 🙏👌👌🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அட போம்மா... அங்கே இங்கே தோண்டி எடுத்து... பெயர்  போட்டுக் கொண்டு இருக்கிறேன். இதில் பெருமைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை... பதிவிற்கு நன்றிம்மா 😇

 

06 செப்டம்பர் 2021

மாண்புமிகு வீ. கணபதிராவ் - கே. ஆர். சண்முகன்

பதிவாளர்: கருப்பையா ராஜா
06.09.2021

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு வீ. கணபதிராவ் அவர்களின் காணொலி பார்த்தேன். வியந்தேன். ஹின்றாப் போராளி. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமை அனுபவித்தவர்.


இந்தியர்களுக்கு இல்லை; பெரும்பான்மைத் தமிழர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தவர். தான் பிறந்த தெலுங்கு சமூகத்திற்காக ப்போராட்டக் களத்தில் குதிக்கவில்லை.

இன்று தெலுங்கன் என்று குறை கண்டு இந்தியச் சமுதாயத்தைப் பிளவு படுத்தி மகிழ்ச்சி அடையும் சகுனிகளே திருத்துங்கள்.

2008-ஆம் ஆண்டுக்கு முன்பு சிலாங்கூர் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவை எப்படி இருந்தது என்பது இந்தியச் சமுதாயம் உணர்ந்ததால் இந்தியர்களின் வாக்குகள் எதிர்க் கட்சிக்கு விழுந்தன.

சாதி துவேஷம் பேசுவது; சாதி பார்த்து தேடிப் பிடித்து வேட்பாளர் தேர்வு செய்து அரசியல் நடத்திய காலம் மலை ஏறிவிட்டது ராஜா.

காலத்திற்கேற்ப சிந்தனை மாற்றம் செய்து கொள்ள உங்கள் எலும்புத் துண்டுகளுக்குத் துதி பாடாதீர்கள். இனத் துரோகியாகச் செயல் படாதீர்கள்.  

இந்தியச் சமுதாயத்திற்கு உதவும் தலைவர்களை ஆதரிக்கா விட்டாலும் அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள். இந்தியர்களின் எதிர்காலம் எந்த தலைவரால் பாதுகாக்கப்படும் என்பது உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அம்னோவால் இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையாது. டத்தோஶ்ரீ நஜிப் காலத்தோடு முடிந்துவிட்டது.

பின்னூட்டங்கள்


மலையாண்டி மலாக்கா:
உண்மை. இனம் பார்த்து சேவை செய்யாத மனிதர். மலேசிய இந்திய சமுதாயம் தவறவிட்ட தலைவர். இவரால் சிலாங்கூர் இந்தியர் பயன்பெறுகின்றனர்.

கணேசன் சண்முகம்: நானும் மாண்புமிகு அவர்களின் விளக்க காணொலியைக் பார்த்தேன்.

சிறப்பாக சேவையாற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதி மீது தேவையில்லாத காழ்ப்புணர்ச்சி ஏனோ?

முகில்:
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர். ஆட்சிக்குழுஉறுப்பினர். மாண்புமிகு வீ. கணபதிராவ் ஒரு நியாயமான அரசியல்வாதி.







 

இறைவன் கொடுத்தது சந்தோசம் கொள்வோம் - தேவிசர கடாரம்


🌼 ஓர் ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.

🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.

🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.

🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.

🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.

🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.

🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.

🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .

🌼 இதுதான் நமது பிரச்சினையும்.

🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.

🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.

🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.

🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
        .....படித்ததில் பிடித்தது

பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்

செல்லையா செல்லம்:
மிகவும் சிறப்பு