07 மார்ச் 2021

மலேசியத் தமிழ் காப்பகம் பற்றிய பொய்யுரைகள்

07.03.2021

பகிர்வு: குமரன் மாரிமுத்து

மலேசிய தமிழ் காப்பகத்தின் பொறுப்பாளர்களின் படங்களைப் போட்டு, அவர்களை இந்துமத எதிர்ப்பாளர்களாகவும்; அதிலும் அவர்களின் தனித் தமிழே ஓர் இந்து மத எதிர்ப்பு எனவும் பொய்யான அறிக்கை தயாரித்து பரப்பி இருக்கும் செயலானது மிக இழிவான கீழறுப்பும், குள்ள நரித் தனச் செயலும் ஆகும்.

பொங்கல் சமயம் சாரா  என்ற நிலையையும், தைப்புத்தாண்டு என்பது போதுமான வரலாற்று ஆதாரமும், அறிவியல் தகைவும் இல்லாதது என்றும், சமயம் சார்ந்த தூய தமிழர்கள் சிலர் முன்னெடுத்த கருத்து மோதலை; காத்திருந்த கூட்டம் ஒன்று தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொங்கல் கருத்தாடலுக்குள் புகுந்து தனித் தமிழுக்கு அதாவது தூய தமிழ் முன் எடுப்புக்கு, கீழறுப்பு செய்ய எழுந்துள்ள செயல், வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இவர்கள் செய்வது மிகக் கேவலமான தனிமனிதத் தாக்குதலும், தனிமனித வளர்ச்சி கீழறுப்புமாகும். இது அறிவுடையோர் செயலே அல்ல.

அறிவுடையோர் தங்கள் அடையாளத்தைத் தெளிவாக முன்னிறுத்தி அறிவு வாதத்தில் அதாவது கருத்துக்கு கருத்தை முன் வைத்து மட்டுமே பேசுவர். இப்படி  கீழிறங்கி அடையாளத்தை மறைத்துக் கொண்டு தனிமனித தாக்குதலுக்கும், கீழறுப்புக்கும் போகவே மாட்டார்கள்.

இதில் இருந்தே இந்த பரப்புரையை செய்து இருப்பவர்கள் எவ்வளவு இழிவான கோழைகள் என்பது புலப்படும்.

மேலும் இவர்கள் சமயத்திற்கு புறம்பானவர்கள் அல்லது சமய நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பொய் பரப்புரை செய்து இருப்பவர்கள்; உண்மையில் மிக தீவிரமான சமயப் பற்றும், நாள் தவறாமல் முறையான இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்களும் ஆகும் என்பதை நான் மெய்ப்பட அறிவேன்.

இந்தb பொய் பரப்புரையாளர்கள் சமயம் என்ற பெயரில் தமிழ்ப் பற்றாளர்களை அவர்களின் தமிழ் முன் எடுப்புகளை இந்த நாட்டில் முடக்கிவிட திட்டம் தீட்டி இருப்பதாகவே நம்மை சந்தேகிக்க வைக்கிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பது போல், பொங்கல் கருத்தாடலை அப்படியே திசை திருப்பி தமிழ் காப்பகம் என்ற அமைப்பும், தமிழ் முன் எடுப்பும், இந்து மத எதிர்ப்பு என்பது போல், மலேசிய தமிழ் இந்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறது இந்தக் கூட்டம்.

மலேசிய இந்துத் தமிழர் என்பவர் தமிழைப் பேசி, தமிழை உயிராக மதித்து, தனித் தமிழை வளர்க்கத் துணை நிற்கும் தமிழர் கூட்டமே.

இவர்களின் பிள்ளைகள் தான் தமிழ்ப் பள்ளியில் பயிலும் குடும்பத்தார். தமிழ் காப்பகம் என்பதை எப்போதுமே தமிழ் மக்கள் ஆதரித்தே நிற்கிறோம். அதன் ஒரு கருத்தியலை மாற்றிக் கொள்ள கருத்து மோதல் நடந்தது அவ்வளவு தான்.

ஆனால் தமிழ் காப்பமே வேண்டாம் என்றும் அதை அழித்து விடும் நோக்கமும் கொண்டு இந்தச் சதிகாரக் கூட்டம் செயல்படுகிறது.

எந்த தமிழ்ப்பள்ளியின் தமிழ் அடையாளத்துக்கும் உதவாத இந்தக் கூட்டம். அதைக் கீழறுக்கக் காலம் பார்த்து இருந்து இப்போது இந்து சமயம் என்ற பெயரில் சில தீய சக்திகள், தூய தமிழ் பற்றாளர்களுக்கு இடையில் நடந்த (பொங்கல் கருத்து பகிர்வு முடிந்து விட்டது) 'பொங்கல் சமயம் சாரா' கருத்து மோதலை தனக்கு சாதகமாக திசை திருப்பி தமிழையும், தமிழ் பள்ளிகளையும் தமிழ் சமுதாயத்தையும் சதி வலைக்குள் சிக்க வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.

இதை மலேசிய தமிழ் இந்துக்கள் 'தமிழ் எங்கள் உயிர்' என்ற நிலையில்  அனுமதிக்கவே முடியாது.

தனித்தமிழ் என்பது தூய சைவ நெஞ்சராகிய மறைமலை அடிகளார் தொடங்கி வைத்த தமிழ் சக்தி. அது தமிழை தகவமைக்கும் மாபெரும் சக்தி. எந்தப் பெயரிலும் தனித் தமிழுக்கு எதிராக சதி வேலை செய்வதை உண்மையான ஒவ்வொரு மலேசிய இந்துத் தமிழனும் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒப்புக் கொள்ளவும் கூடாது.

காரணம் தமிழை இழந்த சமயம் தமிழருக்கு இல்லை. அது சைவமோ, கௌமாரமோ, காணாதி பத்தியமோ சாக்தமோ, மாலியமோ எதுவாயினும் அது தமிழோடு இணைந்து தமிழர்க்கு வாய்த்து நிற்பதே உண்மை.

அயல் மொழியில் தமிழன் சமயம் வளர்ப்பதும், அயல் மரபு தழுவுவதும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை விட்டு, மலேசியத் தமிழர் விலகவே கூடாது. தனித் தமிழின் எதிரிகள் உறுதியாக தமிழ் முருகனுக்கும், முதல் தமிழ் சங்க தலைவனாய் அமர்ந்த சிவத்திற்கும், தமிழ் வளர்த்த மதுரையம்பதி நாயகி அம்மை மினாட்சிக்கும் பகைவர்களே.

தமிழுக்கு எதிராகச் சதி செய்யும் இந்தக் கூட்டம் உறுதியாக எமது இறைமைக்கும் எதிரான பகைவர்களை. இந்த தமிழ்ப் பகைவர்களை மலேசிய தமிழ் இந்துக்கள் ஒரு முகமாய் புறந்தள்ள வேண்டும்.

-ஞெளிரன்




 

கவிஞர் சந்திரா குப்பன் நலம் பெறுக

07.03.2021

நாடறிந்த கவிஞர். நம் மலேசியம் புலன அன்பர். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனையில், கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவர் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும். மறுபடியும் பழையபடி கவிதைகள் எழுத வேண்டும். இறைவனை இறைஞ்சுகின்றோம். புலன அன்பர்களும் அவர் நலம் பெற வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.

புலன நிர்வாகிகள் அறுவரும் இதன் வழி தங்களின் ஆறுதலைப் பதிவு செய்கின்றனர்.

புலன நிர்வாகத்தினர்

கரு. ராஜா (கோலாலம்பூர்)
ராதா பச்சையப்பன் (கோலா சிலாங்கூர்)
தமிழ் மறவன் பாலன் முனியாண்டி (பினாங்கு)
கென்னடி ஆறுமுகம் (கிரீக்)
தேவி சரவணன் (கூலிம்)
முத்துக்கிருஷ்ணன் (மலாக்கா)

மலேசியம்
06.03.2021

ஆறுதல் தெரிவித்த அன்பர்கள்:

1.  நாகராஜன்: 🙏

2. தேவி கடாரம்: சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🏻

3. ராதா பச்சையப்பன்: 🌹🙏 திருமதி சந்திரா குப்பன் 'நலம் பெற்று வந்து மீண்டும் புலத்தில் அவர் கவிதைகளைப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நலம் பெற  இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🌹🙏🌹🙏🌹.

4. கு.ச. இராமசாமி: திருமதி சந்திரா குப்பன் உடல் நலம் பெற்று மீண்டும் நம்முடன் இணைய வேண்டும். அதிகம் எழுத வேண்டும். நாம் அனைவரும் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

5. வெங்கடேசன்: இறை அருளால் கவிஞர் சந்திரா குப்பன் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

6. தனசேகரன் தேவநாதன்: விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம். 🌹🙏🌹🙏🌹🙏

7. டத்தோ தெய்வீகன்: நலம் மலர்க! மீண்டும் கவிதைகள், வலம் வருக!

8. கென்னடி ஆறுமுகம்: விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.

9. சந்திரா குப்பன்: நன்றி உறவுகளே 🙏

10. குமரன் மாரிமுத்து: சகோதரி அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

11. கலைவாணி ஜான்சன்: சகோதரி விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏

12. சந்திரசேகர் தமிழகம்: கவிஞர் சந்திரா குப்பன் அவர்கள் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.

13. முத்துசாமி கோலா கிள்ளான்: கவிஞர் அவர்கள் பூரண சுகமடைய எனது அன்பு நிறைந்த பிரார்த்தனைகள். வாழ்க நலத்துடன் வளத்துடன் 🌷

14. டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: பரிபூரணமாக உடல் நலம் தேறி வர பிரார்த்திக்கிறோம்.

15. பி.கே.குமார், ஈப்போ:  வாழ்க வளமுடன் வாழ்க நலத்துடன்.

16. வனஜா பொன்னன்: சீக்கிரம் குணமாக வேண்டும். மீண்டும் நலம் பெற்று பிரகாசிக்க வேண்டும் எழுத்துலகில்...

17. கரு ராஜா சுங்கை பூலோ: காப்பார் கவிஞர் சந்திரா குப்பன் நலமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

18. டாக்டர் ஜெயபாலன்: காப்பார் கவிஞர் சந்திரா அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்போம் ...

19. தினகரன் தங்காக்: 😢🙏கவிஞர் சந்திரா மீண்டும் வருவார்கள்🙏👍🏻

20. வேலாயுதம் பினாங்கு: சந்திரா குப்பன் அவர்களே.... தங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம். மீண்டு நலமுடன் வாருங்கள். இப்படிக்கு, தமிழ் உறவு அன்பன். 🙏🙏🙏

21. முருகன் சுங்கை சிப்புட்: மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்.
அய்யா நலம்பெற என்னுடைய வாழ்த்துக்கள்.🙏

22. கணேசன் சண்முகம் சித்தியவான்: கவிஞர் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

23. செல்லையா செல்லம்: சகோதரி விரைவில் பூரண நலம் பெற பிராத்திக்கிறேன்

24. உதயகுமார் பெர்லிஸ்: சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

25: ஆதி சேகர் கோலாகிள்ளான்: நம்மோடு பயணிக்கும் தன் கவிதைகளால் பல மனதை தன்வசத்தில் வைத்திருந்த சந்திரா குப்பன்  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற தட்டச்சு பதிவை படித்தவுடன் சற்று மனம் வருந்தினாலும்... அவர்கள் சீக்கிரம் பூர்ண  சிகிச்சை பெற்று மீண்டும் மலேசியம்  என்ற நூல் நிலையத்திற்க்கு பல கவிதைகள் படைக்க வேண்டும் என்று
இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.   🙏

26. ஜெயகோபாலன் பாகான் செராய்:
கவிஞர் சந்திரா குப்பன் அனைத்தையும் வென்று நலமே திரும்பி வருவார்🙏

27. சிவகுரு மலாக்கா:
சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..

28. டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறேன்

ஒரு நெருடல்

இந்தப் புலனத்தைச் சேர்ந்த ஓர் அன்பர்; ஒரு கவிஞர் சுகவீனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டிக் கொள்வோம் என்று புலன நிர்வாகம் இன்று காலை ஓர் அறிவிப்பு செய்து இருந்தது.

அவருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொன்னால் அவரும் மகிழ்ச்சி அடைவார். புலன உறுப்பினர்கள் நமக்கு ஆறுதல் சொல்கிறார்களே எனும் மகிழ்ச்சியில் அவரும் சீக்கிரமாகக் குணம் அடைவார்.

இந்தப் புலனத்தில் அந்தச் செய்தியை 112 பேர் பார்த்து இருக்கிறார்கள். 8 பேர்தான் ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். 94 பேர் ஏனோ தானோ போக்கு?

ஏங்க ஆறுதல் சொல்ல மனசு வரவில்லை. ரெண்டு மூனு வரிகள் ஆறுதலாகச் சொன்னால் என்ன குறைந்து விடப் போகிறது. உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? சாப்பிடுற சோற்றில் பங்கு கேட்டார்களா?

உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் நீங்கள் வருத்தப் படாமல் வேதனைப் படாமல் இருப்பீர்களா. உங்களுக்கு என்றால் இரத்தம். மற்றவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்டினியா?

மருத்துவமனையில் இருக்கும் கவிஞர் சந்திரா குப்பன் தினசரி மூளையைப் பிசைந்து கவிதை எழுதிப் பதிவு செய்கிறார். அதைப் படிக்கிறீர்களே. அதற்காகவாது மனசில் கொஞ்சம் இரக்கம் வேண்டாம். அதற்காகவாவது இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல வேண்டாம்.

அவருக்கு ஓர் ஆறுதல் சொல்ல ஒரு வக்கு இல்லை. இந்த இலட்சணத்தில் தொலைக்காட்சி கலைக்காட்சி ஜூம் பண்ணிப் பாருங்கள். விவாதம் நடக்கிறது ‘லிங்கு லுங்கு’ கொடுத்து இருக்கிறேன்.

நன்றி இல்லாத் தனத்தின் சுயநலங்கள். வெட்கமாக இருக்கிறது. வயதில் மூத்த ஒரு பெண். முடியாமல் இருக்கிறார். அவருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல முடியாதவர்கள்...

இந்த மாதிரி இரக்கம் இல்லாதவர்கள்; நன்றி சொல்லத் தெரியாதவர்கள்; இனி இங்கு பயணிப்பதில் நியாயம் இல்லை.

புலன நிர்வாகம்
06.03.2021


ராதா பச்சையப்பன்:
🌹🙏கேட்காமல் தருவதே  ஆறுதல். கேட்டும் கிடைக்கவில்லையானால் ::::::::::? அதற்கு பெயரே வேறு. யாரையும் வற்புறுத்த வேண்டாமே. இது என் தனிப்பட்ட கருத்து.🙏🌹.

திருமதி சந்திரா குப்பன், நலமே வருவார். நம் புலனத்தை தன் கவிதைகளால் அலங்கரிக்க இறைவனின் ‌அருளால். இறைவனிடம் இறைஞ்சுகிறேன்🙏🌹🙏🌹🙏🌹.

முத்துக்கிருஷ்ணன்:
நன்றி இல்லாதவர்கள் நமக்குத் தேவையா?

தனசேகரன் தேவநாதன்: நமது புலனத்தைக் குடும்ப உறவுகளாக நினைப்பவர்களுக்கு ஐயாவின் ஆதங்கம் புரியும். வெறும் இரயில் பயணிகளாக இருந்தால் இந்த உணர்வின் உன்னதம் விளங்காது. அனைத்து மனிதர்களின் மனநிலையை பொறுத்தது. குடும்பத்தில் மூத்தவர் சொல் கேட்டு வாழ்கின்றவர்களுக்கு ஐயா அவர்களின் எண்ணம் பளிச்சென விளங்கும். நன்றி 🌹🙏

தேவி கடாரம்: தங்கள் ஆதங்கம் சரி ஐயா....👍🏻
இம்மாதிரி போக்கு கொண்டவர்களை என்ன சொல்ல...🤷🏻‍♀️
சொன்னாலும் புரியாதவர் போல் இருக்கிறார்கள்...
தாங்கள் எடுக்கும் முடிவே சரி ஐயா...👍🏻

தேவி கடாரம்: பிப்ரவரி 28 ஆம் தேதி சகோதரி சந்திரா குப்பன் பகிர்ந்த ஞாயிறு கவிதை.... சகோதரியின் கவிதைகளை நான் அழிப்பது இல்லை.. என்ன தான் புலனத்தில் நிறைய செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும்... என் அலை பேசியில் சேமிப்பு பெட்டி நிறைந்து விட்டாலும் பல நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவை நான் பத்திரமாக வைத்துக் கொள்வேன்..

அந்த வகையில் சகோதரியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்... கடந்த சில தினங்களாக அவரது கவிதை நம் புலனத்தில் காணாதது வருத்தமும் ஏமாற்றமும் எனக்கு இருந்தது.

நேற்று நம் புலனத்தில் ஐயா பதிவு செய்த பிறகே செய்தி தெரிந்தது...
மனம் கலக்கின்றது... அவர் மீண்டும் பழைய படி கவிதையோடும் சிந்தனை வரிகளோடும் புலனத்தில் வலம் வர இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன்.. 🙏🏻

முத்துக்கிருஷ்ணன்: இவருக்கு ஓர் ஆறுதல் சொல்ல மனசு வராத சில சுயநலங்கள்... இந்தப் புலனத்தைத் தங்கள் சொந்த சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு குதிரைச் சவாரி செய்வது கண்டு வருந்துகிறேன். மனிதநேயம் இல்லாதவர்கள்... வேதனை..

தேவி கடாரம்: உண்மை ஐயா...எனக்கும் அந்த வருத்தம் உண்டு...😔


முத்துக்கிருஷ்ணன் >>> டாக்டர் சுபாஷினி: மன்னிக்கவும் சகோதரி... நேரம் ஒதுக்கி இதை எல்லாம் உங்களால் இந்தப் புலனத்தில் பகிர முடிகிறது.

ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த மூத்த பெண் கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லீங்களா? வேதனை.


முத்துக்கிருஷ்ணன் >>> முருகன் சுங்கை சிப்புட்: இதை எல்லாம் பகிர முடிகிறது. நேரம் இருக்கிறது. ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லை. வேதனை.

முத்துக்கிருஷ்ணன் >>> இமயவர்மன்: இதைப் பகிர முடிகிறது. நேரம் இருக்கிறது. ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லைங்களா சார்.

முக்கிய அறிவிப்பு: இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் அவர்களுக்கு ஆறுதல் சொல்லாதவர்கள் தயவு செய்து எதையும் இங்கு பகிர வேண்டாம்.

அவர்களுக்கு வந்தால் இரத்தம். மற்ற புலன உறுப்பினர்களுக்கு என்றால் தக்காளிச் சட்டினியா? மனித நேயம் இல்லாத சுய விளம்பரங்கள் இந்தப் புலனத்திற்கு தேவை இல்லை. வெளியேறி விடலாம்.

முருகன் சுங்கை சிப்புட்: அம்மா நீங்கள் நலம்பெற என்னுடைய வாழ்த்துக்கள்.


டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: மதிப்புமிகு சந்திரா குப்பன் அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது - ஏதேனும் தகவல் தெரிவிக்கப்பட்டதா ? - மீண்டும் அவர்புலனத்தில்  வலம் வர ஆவலுடன் உள்ளோம்


சந்திரா குப்பன்: மகிழ்ச்சி. ஆண்டவன் அருளால் மீண்டும் முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏



வாழ்க்கை - சத்யா பிரான்சிஸ்

தெளிந்த நீரோடையாக கானகத்தில்
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
சுற்றுச்சூழலின் அந்தபுரத்தில்
கண் மயங்கி
பகலிலும் உறங்குகிறது..


தோல்வியைக்
கனவிலும் சுமக்காத வாழ்க்கை இன்பத் தேரோட்டம் போகிறது..
மலர்கள் தங்கள்
மரணத்தை எண்ணி
கவலைப்படுவதில்லை
வாழும்வரை சுற்றுப்புறத்தைத்
தன் மணத்தால் ஆசிரளிக்கிறது..!

எதிர்வரும் மனிதருக்குப்
புன்னகையை வழங்கு
இயற்கை கற்றுத் தந்த
அன்பை
எங்கும் பெருக்கு..!

உயர்வும் தாழ்வும்
வறுமையும் பெருமையும்
பரந்த உலகில் படர்ந்து இருப்பதைப் பார்த்து
வாழ்க்கைப் பாடம்
கற்றுக்கொள்..!

உன்னை நிழலாய்ப்
பின் தொடரும்
எதிர்பாராத நிகழ்வுக்கு
காரணம் இருக்கிறது..
மிக எளிதான வாழ்க்கை
கடினமாக உருமாறினால்
அது சமூகத்தின் தவறன்று,.!

வாழ்க்கை தத்துவம்
மென்மையான
மலராகவே உள்ளது..
புரிதல்  ஒன்றே
உள்ளத்தில் புதுமையை மலரச் செய்யும்!



   கவிஞர் சத்யா  பிரான்சிஸ்

வீரம் தழுவும் விளைநிலத்தில்

14.02.2021

பதிவு செய்தவர் :  குமரன் வேலு


காடாய்க் கிடந்த விளைநிலத்தைக்
      கழனி யாக்கப் பாடுபட்டு
வீடாய் எண்ணிப் படுத்துறங்கி
   விடிந்தும் கூட வினையாற்றி
ஓடாய்த்  தேய்ந்த உழவரெல்லாம்
     உதவிக் கென்று மாடுவளர்த்தார்
மாடாய் உழைத்த உழவரென்றும்
    மாடாய் மாட்டை நினைத்ததில்லை!

வளரும் கன்றாய் வாங்கிவந்து
     வயிறுப் புடைக்கப் புல்லையிட்டு
வளர்ந்தும் கூட மகனைப்போல்
   வாஞ்சை யுடனே மார்பிலிட்டு
தளர்ந்த வயதில் தானழைக்க
    தலையை ஆட்டி ஓடிவருமே
கிளர்ந்த மாட்டின் அன்புக்காய்க்
   கிழவன் வாழ்வார் நூறாண்டு!
   
காளை யுடனே மகன்வளர்ந்தான்
   காளை அடக்கும் கலையறிந்தான்
வேளை வந்த காலத்திலே
  விரைந்தான் முரட்டுக் காளையென்றே
நாளை அவனே வீரனென்று
    நாட்டு மக்கள் கூவிடுவார்!
ஆளை விரும்பும் கன்னியரும்
     அவனின்  வீரம் விளம்புவரே !

வீரம் தழுவும் விளைநிலத்தில்
   விதைத்த குருதி விழுமிடத்தில்
சோரம் போகா தமிழினத்தின்
   சொட்டும் மானம் வளர்ந்துநிற்கும்
பாரம் எதையும் தாங்கிநின்று
    பாடு பட்டு மெய்வருத்தி
மாரில் குத்துப் பட்டநிலை
    மாட்டுப் பொங்கல் காட்டிடுமே!



04 மார்ச் 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழ் மலர் - 15.02.2021

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்மேகும் செம்மைகள். எளிய எளிமைக் கூறுகள். வாழ்த்துகிறோம் தமிழ் மறவன் பாலன் முனியாண்டி.

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள். மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

மலேசியத் தமிழர் இனத்திற்கு யார் யார் சேவை செய்கிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டியது நம் கடமை. அதே வேளையில் இங்கே மலேசியாவில் இப்போதைய தமிழர்ச் சேவையாளர்களைப் போற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். புரியும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருக்கிற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஒரு செருகல்.

நாம் இங்கே எப்படி எல்லாம் அழுத்தப்பட்டு அமுக்கப்பட்டு வருகிறோம். மேலே எழுந்து வர முடியாமல் தத்தளித்துத் தவித்துக் கொண்டு இருக்கிறோம். தொட்டதற்கு எல்லாம் நம் தமிழர்களைச் சீண்டுவது ஓர் இனத்திற்கு ஒரு பெரிய புழைப்பா போச்சு.

எதற்கு எடுத்தாலும் வந்தேறிகள். உங்க ஊருக்கே திரும்பிப் போங்க எனும் கூப்பாடுகள். முன்பு எல்லாம் இப்படி இல்லீங்க. கொஞ்ச நாளாகத்தான் இந்த மாதிரியான ஆலாபனைகள். இடையில் ஒரு மெகா மனிதர் வந்தார். நல்லாவே சாம்பிராணி போட்டார். நல்லவே புகைச்சல்.

அவர் வந்த பூர்வீகத்தை மறைக்க இந்த நாட்டின் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கி விட்டார். கட்டுரையில் இருந்து தாண்டிப் போவதாக நினைக்கலாம். இல்லீங்க. வயிற்றெரிச்சல். என் இனத்தின் மீதான ஒரு பற்று. அவ்வளவுதான்.
 
நாட்டில் நடக்கிற சில பல கோலமால்களைக் கொஞ்ச நேரத்திற்கு விட்டுத் தள்ளுங்கள். அவற்றை எல்லாம் தாண்டி நம் நாட்டில் ஒரு சில அருமைத் தமிழர்கள் நல்ல சேவைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

பினாங்கில் பலரும் அறிந்த தமிழ்ச் சேவையாளர் பேராசிரியர் இராமசாமி. எல்லோருக்கும் தெரியும். மாநிலத்தின் துணை முதல்வர். தமிழ் மன்றத்தின் தலைமகன். தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராகமாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்கள். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் என்று பற்பல நாடுகளில் பற்பல அச்சுறுத்தல்கள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைக் கலாசாரம்; தமிழர்களின் பண்பாடு; ஆகியவற்றுக்கு பற்பல அச்சுறுத்தல்கள்.

அந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்களில் பேராசிரியர் இராமசாமி அவர்களும் ஒருவர். அவரின் குரல் ஒலிப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.

அவரின் நற்சேவைகளுக்கு பக்க பலமாக அமைந்து உறுதுணைச் சேவைகள் செய்து வரும் அமைப்பு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம். இது ஓர் அரசு சாரா இயக்கம். பினாங்கை அடித்தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கத்தின் தலைவர் தான் பாலன் முனியாண்டி.

இந்த இயக்கம் பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி-40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணி பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை. அவர்களின் இலக்கு கல்வி; பொருளாதாரம்; தலைமைத்துவம். இருந்தோம் போனோம் என்பது முக்கியம் அல்ல. இருக்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். அதையும் நினைவு கூர்வோம்.

செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பெருநடையைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிது கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி என்பவர் பினாங்கில் நல்ல ஒரு சமூகச் சேவகர்களில் ஒருவராகப் பார்க்கப் படுகிறார். தனக்கென வாழ்லாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களுக்குச் சேவை செய்வதைப் பரிதாகப் பார்க்கலாமே.

செபராங் பிறை செங்காட் தோட்டத்தில் பிறந்து பத்து காவான் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படித்தவர். பின்னர் உயர்க் கல்வியைச் செபராங் பிறை; பினாங்கு உயர்க் கல்விக் கழகங்களில் தொடர்ந்தவர். தற்சமயம் பினாங்கு தாசேக் குளுகோர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இளமைக் காலத்தில் அவருக்குப் பொது வாழ்க்கையில் அதிகமான ஈடுபாடுகள் இல்லை. இந்தக் கட்டத்தில் இவரின் சகோதரர் மாரியப்பன் அவரைப் பொது வாழ்க்கைக்குள் கொண்டு வந்தார். தாசெக் குளுகோர் மணிமன்றத்தில் ஒரு செயலவை உறுப்பினராகக் காலடி எடுத்து வைத்தார். பின்னர் அதே மன்றத்தில் செயலாளர்; தலைவர் பதவிகள்.

அதன் பின்னர் பொது வாழ்க்கை ஈடுபாடுகள். மக்கள் முரசு கோவி தியாகராஜன் அவர்களின் ஆதரவில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் உருவாக்கம் கண்டது. இடையில் டாக்டர் முரளி என்பவரின் ஆதரவு. மலாக்கா ஜெ.பி, வீராசாமியின் ஆதரவு. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரவின் குமார். யூ.யூ.எம். (UUM) பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத் துறையில் பட்டம் பெற்று தனியார் துறையில் வேலை செய்து வருகின்றார். மகள் அன்பழகி மலாயா பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு துறையில் பயின்று வருகிறார். இளைய மகன் உதயகுமார் இடைநிலை பள்ளியில் 4-ஆம் படிவம் பயல்கின்றார்.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ எப்படி எப்படியோ புகழ்ந்து எப்படி எப்படி எல்லாமோ அழைக்கிறோம்.

அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். போகிறார்கள். ஆனால், தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்றவர்கள் தான், நற்சேவையாளர் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள். வாழ்ந்தும் காட்டுகின்றார்கள்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்ற நல்ல சேவையாளர்கள் செய்து வருவது நல்ல புண்ணியமான சேவைகள். அந்த மாதிரியான மனிதர்கள் சிலரால் தான் மழையும் பெய்கிறது. பூமியும் செழித்து வளர்கிறது. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.02.2021