04 ஜனவரி 2021

டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன்

30.12.2020

நாடறிந்த சொற்பொழிவாளர். தூயத் தமிழில் பேசும் ஆற்றல். சமயப் பற்றாளர். முருக பக்தர். இவர் ஈப்போவில் ஒரு மகப்பேறு மருத்துவர். இருந்தாலும் சைவ உணவாளர். புலால் மறுப்பாளர்.

ஆனால் ஒவ்வொரு நாளும் இரத்தம் சதையோடு பழக வேண்டிய தொழில். எப்படிங்க டாக்டர் என்று கேட்டால் அது அப்படித்தாங்க என்பார்.

இனிய தோழர். அண்மையில் அவரைச் சந்தித்தேன். கோவிட் காலம். இருப்பினும் இருவரும் லிட்டல் இந்தியாவில் புதிதாகத் திறந்த சைவ உணவகத்திற்குச் சென்றோம். மசாலா காபி; மசாலா தோசைகள்.  

அன்புடன் பழகும் இயல்பு. மேடைப் பேச்சாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு அவரின் சொல்லாற்றல் ஒரு காரணம்.

பல்வேறு தமிழ்ப் பற்றாளர்களைச் சந்தித்து உள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்கு உரியவர்கள். இருப்பினும் டாக்டர் ஜெயபாலன் தனித்து நிற்கின்றார். இந்து சமயம்; முருகர் வரலாறு; அருணகிரிநாதர் வரலாறுகளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.

2019 நவம்பர் மாதம். ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தினரின் காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சி. அதில் காவடி என்பதற்கான அவரின் சொல் விளக்கம் அரங்கத்தில் கூடிய பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. இவர் அந்த மன்றத்தின் தலைவரும் ஆவார்.

கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப் பெருமானுக்குச் செலுத்தும் நேர்த்திக் கடன் என்று காவடிக்குச் சிறப்பாக விளக்கம் அளித்தார்.

பல பன்னாட்டுக் கருத்தரங்குகள்; ஆய்வரங்குகளில் கலந்து உள்ளார். இவரை நினைக்கும் பொழுது எல்லாம் தமிழ் வடிவமும்; தமிழ்ப் பற்றும் நினைவுக்கு வரும். இவரின் தமிழ்ப் பற்றைப் போற்றி மதிக்கிறோம். டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் நம் மலேசியம் புலனத்தில் நீண்ட கால அன்பர். வாழ்த்துகிறோம்.

(மலேசியம்)
30.12.2020

டாக்டர் ஜெயபாலன்: நன்றி முத்தண்ணா .... அன்பினால் கொஞ்சம் அதிகம் புகழ்ந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் .இந்தப் பெருமைகளுக்கு உகந்தவனாக்க  முருகப்பெருமான் அருள வேண்டும்  🙏


 

எட்வின் ஹப்பிள் - கென்னடி ஆறுமுகம் கிரீக்

30.12.2020

1924 டிசம்பர் 30-ஆம் தேதி சூரியக் குடும்பம் அமைந்து உள்ள பால்வீதி மண்டலத்திற்கு வெளியிலும், விண்மீன் மண்டலங்கள் (Galaxy) உள்ளன என்பதை முதன்முறையாக எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.

அதுவரை பால்வீதி (Milky Way) மண்டலம்தான் ஒட்டுமொத்த அண்டமுமே என்றுதான் மனிதர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்!

பால்வீதி மண்டலத்திற்கு வெளியே தென்பட்டவற்றைச் சுருள் நெபுலாக்கள் spiral nebulae) என்றுதான் அழைத்துக் கொண்டு இருந்தார்கள். விண்ணில் தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட அயனியாக்கப்பட்ட வாயுக்கள் ஆகியவற்றின் மேகங்கள் தான் நெபுலா என்று அழைக்கப் பட்டன.

நெபுலா என்ற லத்தீன் சொல்லுக்கு பனி மூட்டம் அல்லது புகை என்று பொருள். நெபுலாவில் இருந்து பல புதிய விண்மீன்கள் உருவாகும் என்றாலும், நமக்கு அருகாமை மண்டலமாக உள்ள ஆண்ட்ரமீடா (Andromeda Nebula) உள்ளிட்ட மண்டலங்களையே அதுவரை நெபுலாக்களாகத்தான் கருதி இருந்தார்கள்.

1919-இல் கலிபோர்னியாவிலுள்ள மவுண்ட் வில்சன் அப்சர்வேட்டரியில் (அப்போது) உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான 100 அங்குல ஹூக்கர் தொலைநோக்கியை நிறுவும் பணி முடியும் போது, ஹப்பிள் அங்கு பணியில் சேர்ந்தார்.

Edwin Hubble's arrival at Mount Wilson Observatory, California in 1919 coincided roughly with the completion of the 100-inch (2.5 m) Hooker Telescope.

கேலக்சியிலிருந்து தொலைவை அளக்க உதவும் செஃபீயிட் வேரியபிள் என்ற துடி விண்மீன் வகையைச் சேர்ந்த விண்மீன்களை இத்தொலைநோக்கி மூலம் ஹப்பிள் கண்டறிந்தார்.

அந்த அளவீடுகளைப் பயன்படுத்தி, இந்த நெபுலாக்கள் என்றழைக்கப்பட்டவை நெடுந்தொலைவில் இருப்பதையும், அதனால் அவை பால்வீதி மண்டலத்தின் பகுதிகளாக இருக்க முடியாது என்பதையும் அவர் கண்டறிந்தார்.

அவை நம் கேலக்சிக்கு வெளியே உள்ளவை என்று ஹப்பிள் 1924-இல் அறிவித்ததைத் தான்; 1755-ஆம் ஆண்டு, 'ஹிஸ்ட்டரி ஆப் நேச்சர் அண்ட் தியரி ஆப் த ஹெவன்ஸ்' (General History of Nature and Theory of the Heavens) எனும் நூலில் இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant) கருதுகோளாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அது அன்றைய வானியலாளர்களால் கடுமையாக எதிர்க்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஹப்பிளின் முடிவுகளும் எதிர்க்கப் பட்டது. 1929 வரை ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஏராளமான கேலக்சிகளைக் கண்டுபிடித்து இருந்த ஹப்பிள், அவற்றுக்கு இடையிலான தொலைவு குறித்த ஹப்பிள் விதியையும் உருவாக்கி இருந்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பு, அண்டம் என்பதைக் குறித்த அறிவியல் பார்வையின் அடிப்படையையே மாற்றி அமைத்தது.

Hubble's findings fundamentally changed the scientific view of the universe. Supporters state that Hubble's discovery of nebulae outside of our galaxy helped pave the way for future astronomers.

எக்ஸ்ட்ரா - கேலக்டிக் ஆஸ்ட்ரானமி என்ற புதிய துறையாகவே உருவாகிய இது, 2016 நிலவரப்படி, நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு பார்க்க முடிந்த தொலைவு வரை, 2 லட்சம் கோடி கேலக்சிகளும், அவற்றில் ஆயிரம் கோடி கோடி கோடி விண்மீன்களும் இருக்கலாம் என்று கணித்து உள்ளது.

கேலக்சியாஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு பாலைப் போன்ற என்று பொருள். இந்தப் பெயரே இன்று அனைத்து மண்டலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

 

03 ஜனவரி 2021

எழுத்தாழுமைகளில் புதிய பரிமாணம் - குமரன் மாரிமுத்து

30.12.2020

புலனத்தில் வாசகப் பயணிகள் பதிவு செய்யும் கருத்துக்களை அவ்வப்போது தாங்கள் எழுதிவரும் கட்டுரையோடு இணைத்து நாளிதழில் வெளியிட்டால் புதிய எழுத்தாழுமைகள் பரிணமிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நான் கருதுகிறேன்.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால் மேலும் தரமான கருத்துகளும் படைப்புகளும் புலனத்தில் மிளிரும். சின்ன சின்ன கருத்துக்களை எழுதுபவர்கள் நாளடைவில் சிறந்த எழுத்தாளர்களாக உருவாக இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

இது உங்களுக்குப் புதிய முயற்சி அல்ல. 1983/84 காம் ஆண்டுகளில் உங்கள் வகுப்பில் படித்த எங்களை பிய்த்து எடுத்து, எழுதச் சொல்லி தமிழ் நேசன் மாணவர் அரங்கத்தில் எங்கள் எழுத்துப் படிவங்களை வெளியிட்டு எங்கள் எழுத்துகளுக்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள். இன்று சிலர் நீங்கள் காட்டிய எழுத்து உலகில்....

அனுபவத்தின் அடிப்படையிலும் என் தமிழாசிரியர் என்ற உரிமையிலும் இந்த பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்... ஆரம்பிக்கலாமா ஐயா?

முத்துக்கிருஷ்ணன்: கட்டுரை வடிவாக்கத்தில் ஒரு புதிய திருப்பமாகக் கொள்ளலாம். நவீன தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியில் ஊடகங்கள் அபரிதமான மாற்றங்களைக் கண்டு வருகின்றன. அந்த மாற்றங்களின் வழி எதிர்கால எழுத்தாழுமைகளில் புது மாற்றங்களையும் கொண்டு வரலாம் என்பது என் கருத்து.

வாட்ஸ் அப் புலனப் பயணிகள் பதிவு செய்யும் கருத்துக்களைக் கட்டுரையோடு இணைப்பதும்; அந்தக் கருத்துகளை நாளிதழ்களில் வெளியிடச் செய்வதும் ஒரு புதிய பரிமாணமாகவும் கொள்ளலாம்.

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் மணி மணியான கருத்துகள் ஓரிரு நாட்களில் இடம் தெரியாமல் கரைந்து போய் விடுகின்றன. அந்த மாதிரியான முத்து மணிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காகத் தான் மலேசியம் வலைத் தளம் உருவாக்கப் பட்டது.

புலனத்தில் பதிவாகும் நல்ல நல்ல கருத்துகள் நிலைக்க வேண்டும். மரித்துப் போய்விடக் கூடாது. இணையத்தில் காலா காலத்திற்கும் உயிர்வாழ வேண்டும். அந்த வகையில் எவரும் செய்யாத ஒன்றை நாம் செய்து வருகிறோம்.

ஆனால் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுகளும் வேண்டும். இதே ஊடகப் பரிமாற்ற அணுகுமுறையை மற்ற மற்ற புலனங்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தம்பி குமரன் மாரிமுத்து... உங்களுக்கு 1981 - 1983-ஆம் ஆண்டுகளில் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்தேன். 1984-ஆம் ஆண்டு சிப்பாங் தெலுக் மெர்பாவ் பள்ளிக்கு மாறி விட்டேன்.

பாடத் திட்டத்தில் இல்லாத தமிழ்க் கையெழுத்துப் பாடம்; பத்திரிகைகளுக்குக் கதை எழுதுவது போன்ற திட்டங்களை; நான் பணியாற்றிய பள்ளிகளில் நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். ஓரளவுக்கு நல்ல மணி மணியான தமிழ் மாணவர்களையும்; எழுத்தாளர்களையும்; சமூகத் தலைவர்களையும்; கல்வியாளர்களையும் உருவாக்கிய மனநிறைவு உள்ளது.

தவிர கையெழுத்துப் பாடத்தில் நீங்களும் என்னிடம் அடி வாங்கி இருக்கிறீர்கள். நினைத்துப் பார்க்கிறேன். உங்களுடைய அந்த அழகு அழகான எழுத்துகள் இன்னும் எனக்குள் ஊர்ந்து செல்கின்றன. உங்களின் பதிவு ஓர் ஆசிரியருக்குக் கிடைத்த வெகுமதி. நன்றிங்க தம்பி.

ஆசிரியராக இருந்த போது உங்களை மிரட்டி இருக்கலாம். இப்போது அப்படி எல்லாம் செய்ய முடியாது. தோளுக்கு மேல் வளர்ந்து ஒரு குடும்பத்திற்குத் தலைவராக விளங்குகிறீர்கள். மரியாதை முக்கியம் அல்லவா. ஆனாலும்... ஆயிரம் இருந்தாலும்... குமரன் மாரிமுத்து என்பவர் நான் ரசித்த ஓர் அழகிய மாணவர். அவருடைய எழுத்துகளில் ஈர்க்கப்பட்ட ஓர் ஆசிரியன்.

 


ஜொகூர் சுல்தான் சொல்வதுதான் சரி - ரஞ்சன், கங்கார் பூலாய்

30.12.2020

ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனார். HALAL troli வேண்டும் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கேட்டார். "அதோ" என்று பணியாளர் ஓர் இடத்தைக் காண்பித்தார்.

உள்ளே சென்ற அவர், HALAL பொருட்கள் இருக்கும் பகுதி எங்கே என்று அங்கு இருந்த பணியாளரிடம் கேட்டார். பணியாளரும் ஓர் இடத்தைச் சுட்டினார்.

பொருட்கள் எல்லாம் வாங்கியாகி விட்டது. இப்போது, "HALAL" counter எங்கே என்று அங்கு இருந்த பணியாளர்களிடம் கேட்க அவரும் ஓர் இடத்தைக் காண்பித்தார்.

கணக்காளர் ஒவ்வொரு பொருளாகக் கணக்குப் பார்த்து தொகையைச் சொன்னார். அந்த வாடிக்கையாளரும் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

பிரச்சனையே இப்போதுதான் வந்தது! அந்தப் பண மெசின், இந்தப் பணம் "HARAM" என்று திருப்பி அடித்தது.

இப்போதைக்கு ஜொகூர் சுல்தான் சொல்வதுதான் மிக அவசியமான தேவை.



 

தமிழ்ப்பள்ளியில் படிச்சிட்டு போகலாம் - பி.கே. குமார்

30.12.2020

என்னமோ இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் தரத்தில் உள்ளத் தேசியப்பள்ளி, சீனப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பினால் எதிர்காலம் சூரியன் அளவுக்கு பிரகாசிக்கும் என்ற கனவில் இருக்கும் என் இனிய மலேசிய இந்திய மக்களே...

அப்படி ஒன்றும் இருக்காது என்பதைக் கண் திறந்து படித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் புத்தாக்கமும் புதிய ஆற்றலும் தேவை என்கிறது காலக் கணிப்பு.

இப்பொழுதே புதிய டாக்டர்களுக்கு வேலை இல்லை. எஞ்சினியர் தம்பிகள் வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் ஆசிரியராகி விட்டனர். தொடக்கச் சம்பளம் இவர்களுக்கு மற்றப் படிப்பு படித்த ஆசிரியர்களை விடவும் சற்றுக் கூடுதல் என்பது கூடுதல் தகவல். கணக்காயர்கள் கதியும் அதே கதி.

வழக்குரைஞர் நிறுவனங்கள் பல நொடித்துக் கொண்டு இருக்கின்றன. கணினியும் இணையமும் செயற்கை நுண்ணறிவும் (artificial intelligence) நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை (IR4) கிளப்பி விட்டுவிட்டன. புதிய உலகத்திற்கு புதிய அறிவுக் கலைகளும் ஆற்றல்களும் தேவைப் படுகின்றன.

இனி ஆங்கிலம் படிக்காமல் ஒரு திறன்பேசியை வைத்துக் கொண்டே நீங்கள் எந்த மொழியில் உள்ளதையும் படிக்கலாம். கேட்டுப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட வசதி கொண்ட வரும்காலம் வெகு தொலைவில் இல்லை. கோறணியின் கோரம் (கோவிட் 19) சில சிக்கல்களைத் தோற்றுவித்து இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கான தேவையை அதிகரித்து உள்ளது.

இனி புத்தாக்கம் ஆங்கில மொழியால் மட்டும் வருவது அல்ல. புத்தாக்கம் ஒரு சிறப்பு சிந்தனை உத்தி. மனித மூளையின் அறைகளில் சிந்தனைச் சட்டியில்   சமைக்கப்படும் அறிவு. திறமை இருந்தால் அது எந்த மொழியிலும் வரும்.

நல்ல வேளை. நாம் தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தோம். தமிழையும் காப்பாற்றிக் கொண்டோம்.

என்ன படித்து என்ன செய்ய... வேலை கிடைக்காமல் இருப்பதற்கும் அடிமை வேலை செய்வதற்கும் தொடக்கக் கல்வி எதில் இருந்தால் என்ன?

அதற்குத் தமிழ்ப்பள்ளியில் படித்துவிட்டு இடைநிலைப் பள்ளிக்குப் போகலாம். அறிவு இருந்தால் எப்படியும் முன்னுக்கு வரலாம்.

- குமரன் வேலு