29 ஜூலை 2021

மூன்றாவது கொரோனா அலையில் தமிழர்கள் அதிகம் பாதிப்பு

மகாலிங்கம் படவெட்டான், நாம் தமிழர் பினாங்கு.

இன்றைய மூன்றாவது கொரோனா அலையில் நம்மவர்கள் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அழிவிற்கு காரணங்கள்....

1. ஆரம்பத்தில் ஏற்பட்ட முதல் அலையில் இருந்த பாதுகாப்பு அம்சம், பய உணர்வு, அச்சம், கவனம் நம்மவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறை... இப்போது இல்லை.

2. இரண்டாவது அலையிலும் மிக மிகக் கவனமாக எதிர்க் கொண்டோம். அச்சம் பயம் இருந்தது. ஆனாலும் அலச்சிய போக்கு இருந்தது. கொஞ்சம் பாதிப்பு.

3. இப்போதைய மூன்றவது அலையில் முற்றிலுமாக முழு அலச்சிய போக்கை கையாண்டு....

அ... கூட்டம் கூட்டமாக கூடி மது அருந்துவது

ஆ... பணத் திமிரில் ஒன்று கூடி விருந்துகள் வைத்து ஆட்டம் பாட்டம் போடுவது

இ... பழைய பய பக்தி இல்லை..

ஈ... தெனாவட்டாக மமதையில் வாழ்வது... எனக்கு ஒன்னும் வராது என்ற திமிர்

உ... கட்டுபாடு அற்ற வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்

ஊ... இப்போதைய சமுதாய சிந்தனையில்  சிறு வயது முதல் வயதில் மூத்தவர்கள் வரை தலை கனம் பிடித்து அலைகிறார்கள்....

இவர்களின் தெளிவில்லாத சிந்தனையால் தான் நமது இனம் இன்று கொத்து கொத்தாக செத்து மடிக்கிறார்கள்.

ஆக, இந்தச் சூழலில் நாம் யாரையும் குறை கூறவோ வஞ்சிக்கவோ வேண்டாம்.

இந்த அழிவுக்கு காரணம் நாம் தான். மற்ற இனத்தவர்கள் இந்த நோயிலிருந்து பயந்து ஓடுகிறார்கள். ஆனால், நாமோ ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டும், மது போதையில் வாழ்ந்து கொண்டும் திருந்தாத ஜென்மங்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால் நமது அழிவை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைய நமது மக்கள் தொகை 7 சதவிகிதம் கூட இல்லை. ஆனால், கொரோனா முடித்த பிறகு நமது மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நமது இந்தியரின் விகிதம் 5 சதவிதமாக மாறி விட வாய்ப்பு உள்ளது.

ஆக, நம்மை நாமே காப்போம்... குடும்பத்தையும் காப்போம்.

மகாலிங்கம் படவெட்டான்

நாம் தமிழர். பினாங்கு.

 

28 ஜூலை 2021

நெஞ்சை உலுக்கிய நிகழ்வு

பதிவு: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

எந்த எல்லைக்குப் பணி நிமித்தமாக செல்கிறீர்கள்? ஆக்ராவுக்கு... அங்கு இரண்டு வாரம் பயிற்சி. அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி.


ஒரு மணி நேரம் சென்றிருக்கும். அப்பொழுது ஓர் அறிவிப்பு. மதிய உணவு தயார்.

’சரி உணவு வாங்கலாம்’ என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும் போது எனக்குப் பின்னால் இருந்த இராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.

ஏன்... சாப்பாடு வாங்கலையா?

இல்லை. விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கி உண்ணலாம். விலை குறைவாக இருக்கும்.

ஆமாம். உண்மை.

இதைக் கேட்ட பொழுது என்மனது மிகவும் வலித்தது. உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமானப் பணிப் பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.

அந்தப் பணிப் பெண் என் கைகளைப் பிடித்தாள். கண்களில் கண்ணீர். ’இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து’ என்றாள்.

நான் உண்டு முடித்து, கை கழவச் சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, ’நீங்கள் செய்தததை நான் பார்த்தேன். நான் வெட்கப் படுகிறேன்’ எனக் கூறி ’இந்தாங்க... என் பங்கு ரூபாய் 500’ என்று என்னிடம் கொடுத்தார்.

நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்து குலுக்கி, ’இது ஒரு மிகப் பெரிய கருணைச் செயல்... மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிச் சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை...

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயைத் திணித்தான்.

விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டைப் பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.

இறங்கி நடந்தேன். அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வண்டிக்காகக் காத்து இருந்தார்கள்.

அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்.

ஒரு தூண்டுதல். பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்... அனைத்துப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாகச் சாப்படுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.

இந்த இளம் வீரர்கள் குடும்பப் பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.

இவர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும்

சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

கோடிக் கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்... ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்... லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துகூட பார்ப்பது இல்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது..

இளைஞனே... என் சகோதரனே... உன்னைச் சரியான வழியில் வாழத் தயார் செய்து கொள்.

பின்னூட்டங்கள்

பதிவு செய்தவர் மீது நாம் குறை காண இயலாது. வேறு ஒரு புலனத்தில் பகிரப் பட்டது. பதிவாளருக்குப் பிடித்து இருக்கிறது. இங்கு பதிவு செய்து உள்ளார். தவறு இல்லை.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தில் பயணம் செய்யும் இந்தியப் போர் வீரர்களுக்கு விமானத்தில் இலவசமாக உணவு நீர் வழங்கப்படும். அப்படி இருக்கும் போது விமானத்தில் விற்கப்படும் உணவை விலை கொடுத்து வாங்கி வீரரகளுக்கு வழங்கியதாகச் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர: உண்மை ... தன் நாட்டை காக்கும் படை வீரனுக்கு உணவு இலவசமாக கொடுக்கலாமே...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தின் பயணம் மூன்று மணி நேரம். விமானத்தில் ஏறி இறங்க எல்லாம் முடிய ஐந்து மணி நேரம் பிடிக்கும். விமானத்தில் உணவு வாங்கிச் சாப்பிடாமல் டில்லியில் போய் இறங்கி சாப்பிடலாம்; அங்கு விலை குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர:உண்மை ஐயா

கேப்டன் வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. சாதாரண விமானங்களில் இராணுவ வீரர்களை அனுப்புவது குறைவு. அவர்களுக்கு என்று இராணுவ விமானங்கள் உள்ளன.

15 வீரர்களுக்கு சாப்பாட்டுச் செலவு 500 ரூபாய். ஒரு வீரருக்கு 30 ரூபாய். இந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்கும் அளவுக்கு இந்திய இராணுவ வீரர்களைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

வெங்கடேசன்: பொருமையாக படித்து பார்தால்தான் இவ்வளவு விஷயங்களும் விளங்கும் ஐயா அருமை 👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  மொத்தத்தில் ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையே அவமதிக்கும் கதையாகவே தெரிகிறது.

தேவி சர:இப்படி கதை எழுதுவதால் அவருக்கு என்ன இலாபம்...🤦🏻‍♀️

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவாளர் மீது நாம் குறை காணக் கூடாது. அதைப் பகிர்ந்ததால் தான் கருத்துகளைச் சொல்ல

கடைசியாக என்னைப் பாதித்தது. இந்திய இராணுவ வீரர்கள் 30 ரூபாய் இல்லாமல் ஐந்து மணி நேரம் பசியை அடக்கிப் பயணிக்கிறார்கள் என்று எழுதியவர் முன் வைக்கும் கருத்து... Totally absurd!

வெங்கடேசன்: சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

போன்ற நல்ல கருத்துகளையும் முன் வைப்பதற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கலாம்.

தேவி சர: எப்படி இருந்தாலும். இந்தக் கதையை பிரதமர் மோடி படித்தால் என்ன ஆவது... நல்ல வேலை அவருக்கு தமிழ் படிக்க தெரியாது...

வெங்கடேசன்: எப்படி இருந்தாலும் பிழை பிழைதான்... போர் எல்லையில் இந்திய இளைஞர்கள் நாட்டுக்காக உயிர் துறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் பொழுதை வீணாகச் செலவு செய்கிறார்கள் என்பதைச் சொல்ல முன் வருகிறார்.

ஒரு நாட்டை அவமதிப்பது போல கதை செல்கிறது.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



 

26 ஜூலை 2021

உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்பு (1) - முனைவர் க. சுபாஷிணி

25.07.2021

உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகைச் செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து செல்கின்றன. 

உண்டெரூல்டிங்கன் (ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு
அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021
சென்றிருந்த போது பதிந்த காட்சி.
-முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்.



அவை பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவும் பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப் டுவிட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன.

தமிழ்நாட்டுத் தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத் தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.


தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்ட காலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சிப் பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.  

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும்; சிறு நகரமாகட்டும்; கிராமம் ஆகட்டும்; எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு ஒன்றினைப் பற்றியது.

உண்டெரூல்டிங்கன் (Pfahlbaumuseum Unteruhldingen) கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகே உள்ளது. 

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள்
ஒருவர் ஃபெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு
'Pile Dwelling' என பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார்.



இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.
 
ஜெர்மனிக்கு தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி.

1853-1854 ஆகிய காலக் கட்டத்தில் இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டிக் கிழிந்து போயின. அதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பிச் சோதனை செய்தனர்.

அப்போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும்; அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்கு கிடைத்ததும்; ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் பெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' என பெயரிட்டு தன் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த கி.மு. 3000 கால அளவிலான வீடுகள்; இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன்.

தொடரும்...
-சுபா

 

கற்றல் கற்பித்தலில் என் பட்டறிவுகள் (17) - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே. குமார் - 25.07.2021

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை முடிவுற்று ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்துவிட்டது.

மலேசியக் கல்வியமைச்சிடம் இருந்து கூட்டரசு பிரதேச மாநிலத் திணைக்களம் வழியாக எனக்கு ஒரு மடல் வந்திருந்தது. அதில் கோலாலம்பூரில் உள்ள பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றிற்கு என்னை இட மாற்றம் செய்து இருப்பதாக எழுதப் பட்டிருந்தது.  


அந்தப் பள்ளிக்குச் சென்று 'உள்ளேன் ஐயா' என்று செய்யச் சொல்லி இருந்தது. தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனும் ஒரு சட்ட மிரட்டலோடு அந்த மடல் அமைந்து இருந்தது.

எனக்கு இது இரண்டாவது பள்ளி என்பதால் இவ்வகை மடல்கள் எனக்குப் புதிது. என்னுடைய முதல் பணி அமர்த்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கவில்லை.  சிலரைக் கேட்டு அறிந்த பொழுது வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போகும் போது மடல் இப்படித்தான் வரும் என்பதை அறிந்து கொண்டேன்.  

அது மட்டுமின்றி மடல் குறிப்பிடும் நாளில் தகுந்த காரணங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லாமல் காலம் தாழ்த்தினால் அரசு ஆணையை மீறியக் குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும் என்பதனையும் பிற்பாடு கல்வியமைச்சில் நான் ஒரு அதிகாரியாக இருந்த போது  உணர்ந்து கொண்டேன்.

ஒருவழியாகப் பள்ளித் திறந்த முதல்நாள் என்னுடைய யமாகா உந்துருளியில் (motorcycle) பள்ளிக்குச் சென்றேன். இது பெண்கள் இடைநிலைப்பள்ளி எனும் சுவரெழுத்துக்கள் என்னை வரவேற்றன.

பள்ளிக் காலையிலேயே தொடங்கி விட்டது. நான் பத்து நிமிடம் தாமதமாகச் சென்று சேர்ந்தேன். என் உந்துருளியைப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையின் ஓரமாக நிறுத்தினேன்.

'வா வா வாத்தியாரே வா' எனும் பாட்டை யாரோ பாடுவதுக் கேட்டு நிமிர்ந்தேன். சிற்றுண்டிச் சாலையின் இருக்கையில் நம்மின மாணவிகள் இருவர் அமர்ந்து இருந்தனர்.

நான் அவர்கள் பக்கம் நோக்கிய போது, ஒரு மாணவி குறும்பாகச் சிரிக்க மற்றொரு மாணவி ’படக்’கென்று வேறொரு பக்கம் திரும்பிக் கொண்டாள். இருவருக்கும் 15-16 அகவைக்குள் தான் இருக்கும்.

’அடக் கடவுளே முதல் நாளே வரவேற்பு இப்படி இருக்கிறதே’ என்று நொந்து கொண்டேன். இதை நான் உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை. பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்திய மாணவிகள் இப்படியும் இருப்பார்களா என்று எனக்கு வியப்பு ஏற்பட்டது.  

நான் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் முன்பின் தெரியாத ஆடவனைப் பார்த்து அதுவும் ஓர் ஆசிரியரைப் பார்த்து மாணவிகள் இப்படி எல்லாம் செய்தது இல்லை.

காலம் மாறிவிட்டு இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைமுறை மாற்றம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றியது.

அந்தப் பள்ளியில் என்னோடு சேர்த்து மூவர் மட்டுமே ஆண் ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் சீனர், ஒருவர் மலாய்க்காரர். மொத்தம் 120 ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் 117 பேர் பெண்கள். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள். பள்ளியின் முதல்வர், துணை முதல்வர்கள் எல்லோரும் பெண்கள்.

இந்த அதிர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பள்ளியின் தலைமையும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.


 

23 ஜூலை 2021

மலேசியத் தமிழனத்தின் குடிப்பழக்கம் - மகாலிங்கம், பினாங்கு

23.07.2021

நம் இனத்தின் குடிப் பழக்கம் தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ளது. ஏன் ஏன் ஏன்?

ஏறக்குறைய பிறந்த சில நாட்களில் இருந்து குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி... சுடுகாடு போகும் வரை... பழகிய இந்தக் குடியை மறக்க முடியாத... விட்டுத் தொலைக்க இயலாத... ஒரு சுயசிந்தனை இல்லாத... மானம் கெட்டத் தமிழ் இனமாக  மாறி...


மற்ற இனத்தவர்கள் காரி உமிழும் வகையில் இடம் பொருள் ஏவல் இல்லாமல்...

நடு ரோடு, பொது விளையாட்டுப் பூங்கா, கோயில் குளம், திருமணக் கொண்டாட்டம், பிறந்த நாள், இறந்த நாள், கருமாதி என்று எல்லாம்...

ஆண் பெண் என பால் தெரியாமல்... கண்டதே காட்சி கொண்டதே கோலமாக... தரி கெட்டு... நாளும் குடி குடி என்று குடித்து ஆட்டம் போடும் நம் இனத்தை யார் திருத்துவது?


தந்தையும் குடிக்கிறான்...
மகனும்  குடிக்கிறான்...
அம்மாவும் குடிக்கிறான்...
மகளும் குடிக்கிறாள்...
அதுவும் ஒரே மேசையில் அமர்ந்து...

குடியிலே வேறு வேறு பிரிவுகள்...
உயர் தர தண்ணி...
கீழ்த் தர தண்ணி...

ஆனால், போதை தரும் தண்ணியில் வேறு வேறுபாடு...
படித்தவருக்கு ஒரு வகை தண்ணி...
படிக்காத பாமரருக்கு ஒரு வகை தண்ணி...
பணக்காரனுக்கு உயர் தர தண்ணி...
ஏழை மக்களுக்கு  தரம் குறைவான தண்ணி...

ஆக மொத்தத்தில் நம்மவர்களில் 90 விழுக்காட்டினர் மது போதையில் தான் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... யாரை யார் திருத்துவது? தயவு செய்து நாம் நம்மைச் சுற்றியுள்ள நம் இனத்தை ஒரு வட்டமிட்டுப் பார்ப்போம்.


சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்பு அடைந்தவரின் உடல் நலத்தை சேதப் படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்கத் தூண்டுவதாகும்.

இரண்டாவதாக மதுவைக் குடிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் இயலாமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல வழிகளில் வெளிப்படும்.

சாராய மயக்கம் காரணமாகக் குடிப்பவர், அவரின் குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்களுக்குச் சமூகத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் சமுதாய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


சாராய மயக்கம் என்பதனைச் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு, மதுபானங்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதில் இருந்து மீள இயலாமை ஆகிய குறிப்பிட்ட அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

மதுபானங்களால் தூண்டப்படும் உடலியக்கவியல் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு போன்றவை குடிப்பவர் குடிக்காமல் இருக்க இயலாமைக்கு காரணிகளாக விளங்குகிறது.

சாராய மயக்கம் மன நலத்தையும் வெகுவாகப் பாதித்து மன நலச் சீர்கேடுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம். குடிப்பவர்களில் ஏறக்குறைய 18 விழுக்காடு மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அன்புடன்,
மகாலிங்கம் படவெட்டான்,
நாம் தமிழர்; பினாங்கு.


பின்னூட்டங்கள்

பாலன் முனியாண்டி: வாழ்கை என்பது வாழ்வதற்கே... வருவது வரட்டும் பயம் எதற்கு என்ற அறப சந்தோசத்தில் திலைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள்...

வெங்கடேசன்: உண்மை... தற்போது நம் சமுதாயத்தில் குடிப் பழக்கம மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. பிறந்த நாள், கருமாதி நாள், திருமண நாள் இப்படி எல்லா நாட்களிலும் குடியும் குடித்தனங்கள்...

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: வேதனையான விடயம்... யாரை யார் காப்பாற்றுவது ஐயா?

வெங்கடேசன்: நம் சமுதாயத்திடம் நல்ல விடயங்கள் சொல்ல முடிவதில்லை ஐயா. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

தனசேகரன் தேவநாதன்: சந்தோசத்தின் உச்சம் குடிப்பதுதான் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது நம் இளைய தலைமுறை... வேதனை

வெங்கடேசன்: இந்தப் பழக்கம் வைரஸை விட கொடூரமாக நம் சமுதாயத்தைக் குறிப்பாக... இளையோர் மத்தியில் மிக மோசமாக பரவியுள்ளது. வேதனையான விடயம் 😭😭

பால் சேர்வை: இந்தியர்கள் குடிb பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்

முருகன் சுங்கை சிப்புட்: திருடனாய் திருந்த வேண்டும்... நானும் பல போதைக்கு அடிமையானவன்தான். அமைந்த மனைவியும் ஒரு காரணம். சிந்தித்தேன் சிறப்பான முடிவை எடுத்தேன். 30 ஆண்டுகளாகி விட்டன. புகைபிடித்தல், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் அனைத்தையும் நிறுத்தி விட்டேன். நிறுத்தினால் மட்டுமே தன்மானம் கொஞ்சம் பிறக்கும்.

பொன் வடிவேலு ஜொகூர் பாரு: இந்தியர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்த, அவரவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடியில் மிதப்பவர்களைக் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க வேண்டும். அதுபோல சமுதாயமும் குடிகாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

குடிகாரர்களை சீர்திருத்த மையங்களுக்கு அனுப்ப வேண்டும். குடிப்பதை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என சொல்லிச் சொல்லி பல காலம் போய்விட்டது. இயக்கங்கள் நல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். -பொன் வடிவேல் ஜோகூர்பாரு 012-7299587

உதயக்குமார் பெர்லிஸ்: தமிழ் திரைப் படங்களில் புகைப் பிடித்தல் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு எனும் அறிவிப்பை விடுத்து அவ்வாறான காட்சிகள் இல்லாமல் இருத்தல் சிறப்பு.