02 ஜனவரி 2021

நல்லதோர் வீணை செய்தே - கரு ராஜா

 27.12.2020

இந்தியாவிலேயே முதன் முறையாக, முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மின் மோட்டாரைத் தயாரித்த மாநிலம் தமிழ்நாடு. தயாரிக்கப்பட்ட வருடம் 1937. தயாரித்தது யார் தெரியுமா?

முறையான பள்ளிக் கல்வியைத் தாண்டாமல் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். நம்ப முடிகிறதா? யார் அவர்?

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அந்தச் சிறுவனுக்கு பள்ளிக் கல்வியின் மேல் நாட்டம் இல்லை. எனவே பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப் பட்டான்.

பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். ஒரு நாள் அந்த வழியே வந்த ஓர் ஆங்கிலேயரின் மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்று விட்டது.

பைக் என்பதே அரிதலும் அரிதான அந்தக் காலக் கட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.

நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து, அங்கு ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த அந்தச் சிறுவன் ஓடி வந்தான். ‘பைக்’கைப் பிரித்து மேய்ந்து பழுது நீக்கி, அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்

அன்று தான் அதுவரையிலும் அந்தச் சிறுவன் மனதில் தீப்பொறியாய் இருந்த அறிவியல் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி கோவையில் ஓர் உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம். பல மாதச் சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது. வாங்கிய கையோடு அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து, பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.

அதன் பின் சின்னச் சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார். அன்று தொடங்கிய அந்தப் பயணம் இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது.

யார் அவர் என புதிராக இருக்கிறதா? மேலும் வாசியுங்கள்... 1945-இல் நடந்த சம்பவம்.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது. அந்தக் கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான். ஆனால் அவரோ பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.

ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும் இல்லாத காரணத்தினால், அவரையே அந்தப் பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம்.

பிரிட்டிஷ் அரசால் தயாரிக்கப்பட்ட அந்தக் கல்லூரியின் பாடத் திட்டத்தை மறுஆய்வு செய்த அவர், பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையே இல்லை.

அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். இரண்டு ஆண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார். ஆனால் அதைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை.

உடனடியாக அந்தக் கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  பதவி விலகல் செய்தார். இதில் வேடிக்கையானே விசயம் என்னவென்றால், அவர் அளித்த நன்கொடைகளாலும், அவரின் அயராத முயற்சியாலும் தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி கோயம்புத்தூரில் அமைந்தது.

நன்கொடை தந்து அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கல்லூரியின் முதல்வர் பதவியைத் தான் அவர் பதவி விலகல் செய்தார். அந்தக் கல்லூரி தான் தொடக்கத்தில் ’ஆர்தர் ஹோப் கல்லூரி’ என்று பெயரிடப்பட்டது.

பின்னாட்களில் கோயம்புத்தூர் ’அரசு தொழில்நுட்பக் கல்லூரி’ என்று மாற்றம் கண்டது. இன்றைய  Government College of Technology (GCT) Coimbatore.
 
புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே, முன்பு காலத்தில் ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி ஓடினார்கள். புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள்.

1930-களின் காலக் கட்டத்தில், அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும் அதை அவர் கையாள்வதும் வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே அவரிடம் கேமரா இருந்தது.

அதுவும் அவரே வடிவமைத்த கேமரா. அதைக் கொண்டு 1935-இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்த பொழுது அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியே படம் பிடித்தார்.

இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர் இந்தியாவில் சும்மா இருப்பாரா? நேதாஜி, காந்தி, நேரு, காமராஜர், பசும்பொன் தேவர், பெரியார் என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை.


1937-இல் முதன் முதலில் இந்தியாவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் மோட்டாரைத் தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.
 
1940-களிலேயே ஒரு முழு வீட்டையும் அஸ்திவாரம் தொடங்கி முழுக் கட்டிடம் வரையில் எட்டு மணி நேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.
 
1940-களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட தானியங்கி முகச் சவரக் கத்தியை வடிவம் அமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.

1952-இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார். ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் அந்தக் காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.
 
பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி; பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களை ஒரே கிளையில் தரும் மாமரம்; என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.

இவை எல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள். முறையான கல்வியறிவு ஏதுமின்றி தன் சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான்...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி தொடக்கப்பட்ட போது, அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்தவர்; GCT எனப்படும் கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சி எடுத்து நிதியுதவி செய்தவர். அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த கொங்கு மண்டலத்தின் தங்கம்...

*கோபாலசாமி துரைசாமி நாயுடு* சுருக்கமாக ஜி. டி. நாயுடு. பிறப்பு: மார்ச் 23, 1893. இறப்பு: 4 ஜனவரி 1974. (அகவை 80)

கல்வி இல்லை; பணம் இல்லை; வசதி இல்லலை; வாய்ப்புகள் இல்லை என்று இல்லைகளைப் பட்டியலிட்டு இயலாமையில் நிற்காமல், நாம் நிற்கும் அந்தப் புள்ளியில் இருந்து தான் உலகமே தொடங்குகிறது என்பதை உணர வேண்டும். நாமே நமக்கு மூலதனம்.

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் கண்டு நோகாமல் அவற்றைச் சேர்த்து வைப்போம். நம் வெற்றி விழாவில் மற்றவர்கள் அதைப் பெருமையாகப் பேசுவார்கள் என்று நினைக்கத் தொடங்கினால்...

நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்து இருக்கிறது. அதற்கு ஒரு பெரும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அந்த மாமேதையை நினைவு கூர்வோம்.

(நன்றி: முனைவர் மணிநாதன்)


01 ஜனவரி 2021

தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க - குமரன் வேலு

27.12.2020

தமிழ்ப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்யலாம்?  

நீலப் பெருங்கடல் வியூகம்


இந்திய மாணவர்கள் எனும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தமிழ்ப் பள்ளிகளுடன்  இன்று போட்டிக்கு நிற்பவை மலாய்ப் பள்ளிகளும் சீனப் பள்ளிகளும் தான்.

2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 67000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளிகளிலும்; 14,000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சீனப் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள். அதாவது ஏறக்குறைய 81000 மாணவர்கள்.

இவர்களைத் தமிழ்ப்பள்ளி பக்கம் இழுக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எந்த உத்தியும் எடுபட மாட்டாமல் போய் விட்டது.

இருமொழிப் பாடத் திட்டம் (DLP) உள்ள தமிழ்ப் பள்ளிகள் மட்டும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதில் வெற்றிக் கண்டு உள்ளன என்று தகவல் வருகிறது.

டி.எல்.பி பள்ளிகளும் டி.எல்.பி இல்லாத தமிழ்ப் பள்ளிகளும் மாணவர்களுக்காகப் போடும் போட்டியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பள்ளிக்கான நிரந்தர வாடிக்கையாளர்கள் என்று ஒரு தரப்பு இருக்கிறது. வெளியில் இருந்து வேடிக்கைப் பார்க்கும் தரப்பு. இந்த வேடிக்கைப் பார்க்கும் தரப்பு பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன.

இவர்களை இழுத்துக் கொண்டு வந்து தமிழ்ப் பள்ளிகள் பக்கம் சேர்க்கும் மாற்று வழிகளை ஆராயும் ஒரு நீலப் பெருங்கடல் வியூகச் சிந்தனையே இது.  

#நீலப் பெருங்கடல் வியூகம் வழங்கும் ஆறு வழிகளில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொருத்தமான ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

வழி 1: வியூகக் குழுக்கள் (Strategic Groups)

தமிழ்ப் பள்ளிகளால் வழங்க முடியாத மதிப்பை, கெளரவத்தை, எதிர்கால வாய்ப்புகளைத் தேசியப் பள்ளிகள் வழங்கிவிடும் என்று நம்பும் நம் இன மேட்டுக்குடி மக்கள் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

ஏழைகள், குண்டர் கும்பல் கலாச்சாரம் இன்னும் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த பள்ளிகளாகத் தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கும் பார்வை உள்ளவர்கள் தமிழ்ப் பள்ளிகளை மறுக்கின்றனர்.

அவர்கள் நாடுவது கெளரவம், தரம், மதிப்பு, மரியாதை போன்றவையாகும். அதற்குத்  துணையாக அவர்கள் விரும்புவது ஆங்கிலம்.

எனவே, தமிழ்ப் பள்ளிகளுக்கான எதிர்கால வாடிக்கையாளர்கள் இரு குழுக்களாக பிரிகின்றனர். ஒன்று - தரம் ஆங்கிலம் வழியாக வருகிறது என நம்பும் ஆங்கில விரும்பிகள்; மற்றொன்று - எந்த விதியையையும் விதிக்காத வாடிக்கையாளர்கள்.

ஸ்டார்பக்ஸ் (Starbucks) காப்பிக் கடையையும் மாமாக் கடையையும் (Mamak) ஓர்  ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். இரண்டிலுமே காப்பி விற்கப் படுகிறது. ஆனால் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவையும் எதிர்ப்பார்ப்பும் வெவ்வேறாக உள்ளன.

என் நண்பர் முனைவர் பட்டம் பெற்று உயர்ப் பதவியில் இருப்பவர். அவர் தன் மகளை காஜாங் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க ஆவல். ஆனால் டி.எல்.பி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று விதியையும் இணைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயார் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து இவ்வாறு சொன்னார்:

"என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் பதிய விருப்பம் இல்லை. ஆனால் அறிவியல் கணிதம் இரண்டையும் ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பதில் தமிழ்ப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. அதனால்தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நான் என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்தேன். அதனால் என் மகனுக்கு டி.எல்.பி வகுப்பில் இடம் வேண்டும்".

எனவே சிறப்புத் தமிழ்ப் பள்ளிகளை (Elite Schools) உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். இங்கே படிப்பதற்கு ஆங்கில மொழியில் முன்னறிவும், மலாய் மொழியில் முன்னறிவும் பெற்று இருக்க வேண்டும்.

இவை அரசாங்கம் நடத்தும் Sekolah Permata (for gifted children) போன்று இருக்கும். ஆனால் சில நெகிழ்வுத் தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆங்கிலத்தில் படிக்க இங்கே அனுமதி உண்டு.

கெட்டிக்கார மாணவர்களுக்கான பாடத் திட்டத்தைக் கொண்டு இருக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த தேர்வுகளை (IGCSE) எழுதும் வாய்ப்பை வழங்க பெற்றோர்களின் கடப்பாட்டைக் கோரலாம்.

பணக்காரர்கள், மெத்த படித்த பெற்றோர்கள், வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்க அனுப்பலாம். ஒரு நகரில் குறைந்தது ஒரு பள்ளி என இருக்கலாம். கூடுதலாக இங்கு பல்வேறு கல்வி வாய்ப்புகள்/ திட்டங்கள், பன்மொழிகள் கற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்தத் திட்டம் சமூகத்தின் மேட்டுக் குடிகளைத் தமிழ்க் கல்விப் பக்கம் கொஞ்சம் திருப்பும்.

இது ஒரு கருத்தாடல் மட்டுமே. உடன்பாடு இல்லாதவர்கள் தாராளமாகக் கருத்தில் மாறுபடலாம்.




 

மலாயா பல்கலைக்கழக ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரை - டாக்டர் சுபாஷினி

27.12.2020

பிலிப்புஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus) ஆவணங்கள் வழங்கும் கி.பி 17-ஆம் நூற்றாண்டு தூத்துக்குடி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள். (The 17th century Historical References to Thoothukudi by Fr.Philippus Baldaeus).

Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 9, n. 2, p. 11-23, dec. 2020. ISSN 2636-946X. 

சுருக்கம் (Abstract)

தமிழகத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொள்ள ஐரோப்பியர்களின் ஆவணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களின் ஆவணங்கள் எனும் போது பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களிலும் அதற்கு அடுத்த நிலையில் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு டச்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் அல்லது டேனிஷர்கள் போன்றவர்களின் ஆவணங்களை ஆய்வுக்குட் படுத்துவது மிகக் குறைவு.

இந்தக் கட்டுரை அந்தக் குறையைச் சுட்டிக் காட்டி  கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து அங்கு சில ஆண்டுகள் தங்கி இருந்து, பின்னர் தமிழகம் வந்து அங்கு டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராகப் பணிபுரிந்த பாதிரியார் பிலிப்புஸ் பால்டியுஸ் எழுதி வைத்த ஆவணங்களையும் அவர் உருவாக்கிய வரைபடங்களையும் அறிமுகப் படுத்துகின்றது.

பாதிரியார் பால்டியுஸ் அவர்களது ஆவணங்கள் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் நிலவிய வணிக நிலவரங்களையும்; டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளையும்; அருகாமைப் பகுதிகளான இராமேஸ்வரம் பற்றிய செய்திகளையும்; அந்தக் காலத்தில் நிலவிய போர்த்துக்கீசியர்களுடனான சவால்கள் நிறைந்த வணிக முயற்சிகளைப் பற்றியும் விவரிக்கின்றன.

பாதிரியார் பால்டியூஸ் அவர்கள் நிலவரைப்பட தயாரிப்புகளில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு உள்ளார். அதன் வழி இன்று தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட சில செய்திகளை இவரின் வரைபடங்களின் வழியாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த ஆய்வுக் கட்டுரை, தமிழக வரலாற்றின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்வோர் டச்சுக்காரர்கள் உருவாக்கிய  ஆவணங்களையும் வரைபடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது.

தூத்துக்குடி வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய கட்டுரை இந்தத் தளத்தில் உள்ளது.

https://tamilperaivu.um.edu.my/article/view/25914

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்

மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்விதழ் துறையின் அதிகாரப்பூர்வ ஆய்விதழ் ஆகும். இது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும் பல்துறை ஆய்விதழாகும். இவ்வாய்விதழ் தமிழில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும், வெளியீடு செய்வதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைக்கப்பட்ட களமாகும்.

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், உங்கள் ஆய்வை மதிக்கிறது. எனவே துரித நடவடிக்கைகளின் மூலம் உங்கள் ஆய்வை கூடிய மட்டில் விரைந்து  சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ்வாய்விதழ் இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பட்ட கட்டுரைப் பிரதிகளை இங்கு மறுவெளியீடு செய்வதை தடைசெய்கிறது. இந்த ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியீடு காண்கிறது.

இவ்வாய்விதழ் ஆண்டு தோரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகின்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த ஆய்விதழுக்கு அவரே தலைமைப் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

------

Jeyashree Kannan: அரும் பெரும் முயற்சி - ஆவணங்கள் பயன்படுத்துவதில் குறை - அனைத்தும் பயன்படுத்தப் பட்டால் நம் பெருமை வணிகம் முதல் வரலாறு வரை அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் - உன்னதமான முயற்சி - உத்வேகத்திற்குப் பாராட்டுக்கள்.


Dr.Subashini Kanagasundaram
Tamil Heritage Foundation.




சீன மார்க்சியக் கொள்கையாளர் - கென்னடி ஆறுமுகம் கிரீக்

26.12.2020

டிசம்பர் 26-ஆம் தேதி சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மா சே துங் பிறந்த தினம் (டிசம்பர் 26, 1893).

இவருக்கு 18 வயது இருக்கும் போது சீனா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்த நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன.

1920-இல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.

ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்டார். 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.

1935-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொதுவுடைமைக் கட்சி மிகுந்த வளர்ச்சி பெற்றது. அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது.

1949-இல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். சீன குடியரசு நாடு நவீன மயமானது.

பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது. சீனாவில் பெரும் தொழில் புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டும் அல்ல.

தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப் படுகிறார். இவரின் கொள்கைகள் மாவோயிசம்  என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்.

உலக கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், எங்க்லஸ், லெனின் இவர்களுடன் மா சே துங் பெயரும் இடம் பெறுகிறது.

 

அன்புள்ள சனீசுவரனார்க்கு - சாமி செலாயாங்

26.12.2020

எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 27-ஆம் தேதி நீங்கள் வீடு மாற்றிக் கொண்டு செல்வதாகக் கேள்விப் பட்டோம். புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள் போல...

உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கிறார்கள். உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.

புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணி விடுவீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கி விடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.

இருக்கும் வீட்டைக் கூட பெயர்த்துப் போட்டு விடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். ஏதோ வந்தது வந்து விட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.

அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம். அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது? பிள்ளைக் குட்டிகள் எல்லாம் பயப் படுகின்றன.  உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.

பிழைப்புக்கு ஒரு வேலை பார்த்து; பிடித்தம் போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து; விலைவாசியால் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று; பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி; பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து; வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும் குறையுமாய் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறோம்.

இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மி அடித்து விடாதீர்கள். வலி தாங்க முடியாது. காணாமல் போனவர்களைக் கூடக் கண்டுபிடித்துத் தராத அரசு போல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.

உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறி இறங்கியது போலத் தானே இருக்கிறோம்? வடிவேலைப் போல “ஔ” என்று அழுத படிதானே தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்கிறோம்.   

இதற்கும் மேலுமா எங்களைப் போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள். போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து; ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக. வழக்கம் போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.

இங்ஙனம்,

சனிப் பெயர்ச்சியால்
பாதிப்பு அடையும்
இராசிக்காரர்கள் சங்கம்