02 ஜனவரி 2021

நல்லதோர் வீணை செய்தே - கரு ராஜா

 27.12.2020

இந்தியாவிலேயே முதன் முறையாக, முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மின் மோட்டாரைத் தயாரித்த மாநிலம் தமிழ்நாடு. தயாரிக்கப்பட்ட வருடம் 1937. தயாரித்தது யார் தெரியுமா?

முறையான பள்ளிக் கல்வியைத் தாண்டாமல் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். நம்ப முடிகிறதா? யார் அவர்?

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அந்தச் சிறுவனுக்கு பள்ளிக் கல்வியின் மேல் நாட்டம் இல்லை. எனவே பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப் பட்டான்.

பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். ஒரு நாள் அந்த வழியே வந்த ஓர் ஆங்கிலேயரின் மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்று விட்டது.

பைக் என்பதே அரிதலும் அரிதான அந்தக் காலக் கட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.

நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து, அங்கு ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த அந்தச் சிறுவன் ஓடி வந்தான். ‘பைக்’கைப் பிரித்து மேய்ந்து பழுது நீக்கி, அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்

அன்று தான் அதுவரையிலும் அந்தச் சிறுவன் மனதில் தீப்பொறியாய் இருந்த அறிவியல் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி கோவையில் ஓர் உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம். பல மாதச் சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது. வாங்கிய கையோடு அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து, பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.

அதன் பின் சின்னச் சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார். அன்று தொடங்கிய அந்தப் பயணம் இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது.

யார் அவர் என புதிராக இருக்கிறதா? மேலும் வாசியுங்கள்... 1945-இல் நடந்த சம்பவம்.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது. அந்தக் கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான். ஆனால் அவரோ பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.

ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும் இல்லாத காரணத்தினால், அவரையே அந்தப் பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம்.

பிரிட்டிஷ் அரசால் தயாரிக்கப்பட்ட அந்தக் கல்லூரியின் பாடத் திட்டத்தை மறுஆய்வு செய்த அவர், பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையே இல்லை.

அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். இரண்டு ஆண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார். ஆனால் அதைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை.

உடனடியாக அந்தக் கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  பதவி விலகல் செய்தார். இதில் வேடிக்கையானே விசயம் என்னவென்றால், அவர் அளித்த நன்கொடைகளாலும், அவரின் அயராத முயற்சியாலும் தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி கோயம்புத்தூரில் அமைந்தது.

நன்கொடை தந்து அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கல்லூரியின் முதல்வர் பதவியைத் தான் அவர் பதவி விலகல் செய்தார். அந்தக் கல்லூரி தான் தொடக்கத்தில் ’ஆர்தர் ஹோப் கல்லூரி’ என்று பெயரிடப்பட்டது.

பின்னாட்களில் கோயம்புத்தூர் ’அரசு தொழில்நுட்பக் கல்லூரி’ என்று மாற்றம் கண்டது. இன்றைய  Government College of Technology (GCT) Coimbatore.
 
புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே, முன்பு காலத்தில் ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி ஓடினார்கள். புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள்.

1930-களின் காலக் கட்டத்தில், அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும் அதை அவர் கையாள்வதும் வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே அவரிடம் கேமரா இருந்தது.

அதுவும் அவரே வடிவமைத்த கேமரா. அதைக் கொண்டு 1935-இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்த பொழுது அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியே படம் பிடித்தார்.

இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர் இந்தியாவில் சும்மா இருப்பாரா? நேதாஜி, காந்தி, நேரு, காமராஜர், பசும்பொன் தேவர், பெரியார் என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை.


1937-இல் முதன் முதலில் இந்தியாவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் மோட்டாரைத் தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.
 
1940-களிலேயே ஒரு முழு வீட்டையும் அஸ்திவாரம் தொடங்கி முழுக் கட்டிடம் வரையில் எட்டு மணி நேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.
 
1940-களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட தானியங்கி முகச் சவரக் கத்தியை வடிவம் அமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.

1952-இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார். ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் அந்தக் காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.
 
பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி; பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களை ஒரே கிளையில் தரும் மாமரம்; என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.

இவை எல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள். முறையான கல்வியறிவு ஏதுமின்றி தன் சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான்...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி தொடக்கப்பட்ட போது, அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்தவர்; GCT எனப்படும் கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சி எடுத்து நிதியுதவி செய்தவர். அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த கொங்கு மண்டலத்தின் தங்கம்...

*கோபாலசாமி துரைசாமி நாயுடு* சுருக்கமாக ஜி. டி. நாயுடு. பிறப்பு: மார்ச் 23, 1893. இறப்பு: 4 ஜனவரி 1974. (அகவை 80)

கல்வி இல்லை; பணம் இல்லை; வசதி இல்லலை; வாய்ப்புகள் இல்லை என்று இல்லைகளைப் பட்டியலிட்டு இயலாமையில் நிற்காமல், நாம் நிற்கும் அந்தப் புள்ளியில் இருந்து தான் உலகமே தொடங்குகிறது என்பதை உணர வேண்டும். நாமே நமக்கு மூலதனம்.

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் கண்டு நோகாமல் அவற்றைச் சேர்த்து வைப்போம். நம் வெற்றி விழாவில் மற்றவர்கள் அதைப் பெருமையாகப் பேசுவார்கள் என்று நினைக்கத் தொடங்கினால்...

நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்து இருக்கிறது. அதற்கு ஒரு பெரும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அந்த மாமேதையை நினைவு கூர்வோம்.

(நன்றி: முனைவர் மணிநாதன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக