26.12.2020
எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 27-ஆம் தேதி நீங்கள் வீடு மாற்றிக் கொண்டு செல்வதாகக் கேள்விப் பட்டோம். புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள் போல...
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கிறார்கள். உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணி விடுவீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கி விடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டைக் கூட பெயர்த்துப் போட்டு விடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். ஏதோ வந்தது வந்து விட்டீர்கள். வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம். அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது? பிள்ளைக் குட்டிகள் எல்லாம் பயப் படுகின்றன. உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.
பிழைப்புக்கு ஒரு வேலை பார்த்து; பிடித்தம் போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து; விலைவாசியால் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று; பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி; பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து; வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும் குறையுமாய் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மி அடித்து விடாதீர்கள். வலி தாங்க முடியாது. காணாமல் போனவர்களைக் கூடக் கண்டுபிடித்துத் தராத அரசு போல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறி இறங்கியது போலத் தானே இருக்கிறோம்? வடிவேலைப் போல “ஔ” என்று அழுத படிதானே தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்கிறோம்.
இதற்கும் மேலுமா எங்களைப் போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள். போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து; ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக. வழக்கம் போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.
இங்ஙனம்,
சனிப் பெயர்ச்சியால்
பாதிப்பு அடையும்
இராசிக்காரர்கள் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக