14.08.2021
தந்தைகளின் இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.
இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும்; முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரைக் கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.
மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, ’மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும்’ என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.
எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.
வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.
சில்லறைச் செலவுகளுக்காகக் கொஞ்சம் பணமும் கொடுங்கள்.
மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
.
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.
குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.
ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதை செய்து இருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.
வயதானவர்களுக்குத் தனிமை மிக கொடுமையானது. ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கி கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள்.
தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்துத் தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.
குடும்பத் தலைவன் என்பவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்று எல்லாம் வாழ்ந்து விட்டவன்.
தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.
ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.
பின்னூட்டங்கள்
தேவிசர கூலிம்: அருமையான அவசியமான பதிவு... முற்றிலும் உண்மையான கருத்துகள்... என் தந்தையின் ஞாபகம் வருகிறது. அப்பாவிற்காகவே மாதத்தில் இரண்டு முறை வீட்டிற்கு செல்வேன்.
அம்மா தவறி விட்டதால் அப்பாவை நாங்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டோம். இருந்தும் அவர் பாதுகாவலர் வேலைக்குச் செல்வார். யார் கையையும் எதிர் பார்க்க மாட்டார்.
சிறப்பான உணவு செய்தால், கணவரிடம் வேலைக்குச் செல்லும் வழியில் அப்படியே கொடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புவேன். இதைப் படித்தவுடன் அதெல்லாம் ஞாபகம் வருகிறது.
கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா. தந்தையர்களுக்காக இந்தப் பதிவு. வரிக்கு வரி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. இன்றில்லை. தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பு.
பெருமாள் கோலாலம்பூர்: பிள்ளைகளுக்காக ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை அழகாக விவரித்துள்ளீர். ஆனால் பெற்றவர்கள் கொடுத்தே பழக்கப் பட்டவர்கள். பிள்ளைகளிடம் கேட்டுப் பெறாதவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்.👍👌
ராதா பச்சையப்பன்: 🌻🙏படித்ததும் மனம் அழுகிறது. எட்டு வயதிற்குப் பிறகு தந்தை பாசம் இல்லை. அப்பாவுக்குச் செல்லப் பெண் நான். திருமணத்திற்குப் பிறகும் மாமனாரும் இல்லை. பார்த்ததும் இல்லை. இதை எல்லாம் நினைக்கையில் வேதனைதான். 🙏🌻
வெங்கடேசன்: கலங்க வேண்டாம் மா. பெண் பிள்ளைகள் கலங்கக் கூடாது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் தந்தை மாதிரிதான். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள் தான். கலங்க வேண்டாம் 👍🙌🙌
பாலன் முனியாண்டி: இன்றைய பிள்ளைகள் உணர்வார்களா என்பது கேள்வி குறிதான் ஐயா.
காரணம் அன்று முதியோர் இல்லம் பார்ப்பதற்கு அரிதாக இருந்தது.
இன்று பார்க்கின்ற இடமெல்லாம் முதியோர் இல்லத்தை காண முடிகின்றது. இதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்.....
இந்த கட்டுரை படித்தபோது கண்கள் கலங்கின....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக