06 பிப்ரவரி 2021

இயற்கையை ரசிப்போம்

05.02.2021

பதிவு செய்தவர் - தேவி, கடாரம்

சின்ன வயதில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது எல்லாம், ஒரு புறம் மனத்தில் வியப்பாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று தோன்றும்.

“அசோகர் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார், சத்திரங்களைக் கட்டினார்” என்று ஒரே வாய்பாடு. எப்போது பார்த்தாலும் மரம், செடி, கொடிகளைப் பற்றித்தான் பேசுவார்கள்.


இப்போதுதான் அந்த வரிகளின் உண்மையான ஆழம் தெரிகிறது. பொருளும் புரிகிறது. இப்போது பாருங்கள். எங்கு பார்த்தாலும் நிஜக் காடுகள் அழிக்கப் படுகின்றன., கான்கிரீட் காடுகள் உருவாகி வருகின்றன. அதனால் உலகின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது.


மனித உறவுகளைப் போல இயற்கை மீதான நமது நேசமும் பாசமும் ஆழமாகக் காலா காலத்திற்கும் தொடர வேண்டும். இது உலக மக்கள் பலருக்குப் புரிவது இல்லை.

இன்று நம்மில் பலர் மிக வேகமாக இயற்கைச் சூழலை மாற்றி வருகிறார்கள். இயற்கைக்கு நம் உதவி தேவை இல்லை. ஆனால் நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை.


நாம் வாழும் இந்த உலகின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கி இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்க வேண்டியது இதுதான்: “இயற்கை தான் நமது வாழ்க்கை”.

1964-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். அவரிடம் ஒருமுறை “நீங்கள் நாளை இறந்து போகப் போவதாக அறிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவரின்பதில்: “ஒரு மரம் நடுவேன்”.


மரம் நம் வாழ்க்கையின் குறியீடு. நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப்பாறுவார்கள். அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை சிறிதும் அற்றவர்கள் தான் இயற்கையைப் பாழாக்குவார்கள்.

மலைகளை அழிப்பார்கள். மரங்களை வெட்டுவார்கள். மணலை அள்ளுவார்கள். இவர்களைவிட மானிட இனத்திற்குப் பெரிய துரோகிகள் யாரும் இல்லை.

சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: “நிழல் தர மரம் இல்லையா? கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக் கூடாது, உன்னைத் தான் சொல்ல வேண்டும்”.



 

2 கருத்துகள்:

  1. நான் பதிவு செய்த காட்சிகளை கொண்டு
    அருமையான கட்டுரை படைத்து விட்டற்கள்
    மிக்க நன்றி ஐயா...😃

    பதிலளிநீக்கு