12 பிப்ரவரி 2021

பிழை இல்லாமல் தமிழ் கற்றுக் கொள்வோம்

11.02.2021

பதிவு செய்தவர்: டாக்டர் ஜெயஸ்ரீ


மூனு சுழி “ண”, ரெண்டு சுழி “ன” என்ன வித்தியாசம்?

கண்ணப்பன்’னு’ எழுதச் சொன்னால் ஒருத்தன்

4-சுழி 5-சுழி போட்டானாம்!

என்னப்பானு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,

4-சுழி 5-சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!

மூனுசுழி "ண" என்பதும் தவறு!

"ண" இதன் பெயர் "டண்ணகரம்",

"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கு எல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்"னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கு எல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்"னு பேரு. இது ரெண்டும் என்றுமே மாறி வராது. இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா?

வேற மாதிரி சொன்னா. இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! வர்க்க எழுத்து-ன்னா,

சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.

இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்")
 
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்படி?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ’ட’ இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்".

இதே மாதிரிதான்

"ந' கரம்" என்பதை, "தந்நகரம்" னு சொல்லனும்.

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.

(பந்து, வெந்தயம், மந்தை…)

தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு. இதைப் புரிந்து கொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும்.  (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூடப் பாடத்தில் வராது!)

எடுத்துக்காட்டாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன –

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்து உள்ளனர்

இதை எல்லாரும் படித்து இருப்போம்-

வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையின எழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்தில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18-எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள –

18 எழுத்து வருதுல்ல... இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப் படுத்தாமல் "க ங ச ஞ ட ண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் அவற்றின் பெயருக்கேற்ப (உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி மென்மையாகவும் இன்றி இடையினமாக) செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகமே இரட்டை எதிர்த் துருவ ஈர்ப்பில் தானே இயங்குகிறது!

நெட்டை ’னா’ குட்டை

பள்ளம் ’னா’ மேடு

தொப்பை ’னா’ சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் ’னா’ மெல்லினம்.

அப்படின்னா பெண்கள் எல்லாம் மெல்லிய மலர்தானா... அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்.

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்பிட முடியுமா?

முடியும்னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழ் இயல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன "ர" என்பதும் தவறு!

பெரிய "ற" என்பதும் தவறு!

ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வருவது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் ’னு’ வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில ’லோல்’ படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம முன்னோர்கள்

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான்!

இதே மாதிரித்தான்

உயிரெழுத்தில்

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

ஐ-

ஒ-ஓ

என வரும் இன எழுத்துகள்

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை (ஓசை ஒழுங்கு) அறிந்து எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும். படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

நன்றி!


1 கருத்து: