30 மார்ச் 2021

சிறைக் கைதிக்கு மனைவி கடிதம்

 30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

அன்புள்ள கணவருக்கு... நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே... குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னால் இருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடம் இருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளை எல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக