27 டிசம்பர் 2020

இள மரணங்கள் அதிகரிப்பு - இமயவர்மன் மதுரை

17.12.2020

Imayavarman: தற்போது இள மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகள் அற்ற அந்நியர்களையும் உலுக்கிப் போடுகின்றன. அவர் குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்குப் பிறகு அந்தக் குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப் படுகின்றன.

இது விதி அல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்...

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

2. இரவில் கண் விழித்து இருத்தல்

3. காலை உணவை தவிர்த்தல்.

4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

5. பணத்தை நோக்கிய ஓட்டம்

6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்

7. கவலைகளைக் கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பைத் தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னைத் தானே சீராக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தை வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதிய அளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.

பச்சையாக உண்ணக் கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக் கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததைத் தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்வதைக் குறையுங்கள்.

உடற்பயிற்சி, உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்துப் பேசி சந்தோசமாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களைப் பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாகப் பூணுங்கள்.

வாழ்க்கை ஓர் அற்புதமான பரிசு. அதை அவமதித்து விடாதீர்கள்.

   இமயவர்மன் மதுரை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக