30 டிசம்பர் 2020

காகத்தின் வாழ்வியல் இரகசியங்கள் - நாகேஷ் எஸ்.வி.

22.12.2020

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அலட்சியம் செய்து இருப்போம். ஆனால் ஆச்சரியப்படும் அளவு அசாத்திய குணங்கள்; பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு.

மனிதனைவிட வாழ்வில் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இயற்கையின் பூரண அறிவைப் பெற இன்று காகங்களைப் பற்றி சித்த நூல்களில் சொல்லப்பட்ட இரகசியங்களைத் தெரிந்து கொள்வோம்.

காகம் உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாகக் காகத்தைச் சொல்லலாம். தன் ஜோடியுடன் மட்டுமே இணை சேரும். பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டுத் தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒரு போதும் தனியாகச் சாப்பிட வேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்துப் பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

காக்கைக்கையின் கூண்டுக்குள் இருக்கும் முட்டை தன் முட்டை இல்லை என்று காக்கைக்குத் தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவு அளித்து பராமரிக்கும்.  உலகில் மிகச் சிறந்த மாற்றந்தாய் காகம் தான்.

தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மை உண்டு. இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப் படுகிறது.

இது மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான். ஆனாலும் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவது இல்லையோ என்று தோன்றுகிறது.

காகத்திற்குத் தினமும் காலையில் கம்பு, சோளம், திணை வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு மறைந்த உடன் பிறப்புகளின் ஆசிர்வாதமாகும்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க; தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். கணுப்பிடி என்பது விடியல் காலையில் செய்யும் பிரார்த்தனை.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலம் போடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா… கா…. கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களைச் சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் கா... கா... என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  

மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். இதனால் மறைந்த உடன் பிறப்புகளின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை வழிபடுவதால் சனி பகவானைத் திருப்தி படுத்தியதாகவும் ஒரு நம்பிக்கை.

தமிழர்களின் நம்பிக்கையின்படி காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம் மணிக் காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாதது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். இது ஒரு நம்பிக்கை.

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும்; நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும்; முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா… கா… என்று பல முறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. இதுவும் ஒரு நம்பிக்கை.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம். காகத்திடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள்...

காலை எழுந்திரு

மாலையிலும் குளி

கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண்


வாழ்க வளமுடன் நலமுடன்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக