20 ஜனவரி 2021

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர முயற்சியும் பயிற்சியும் (23)

19.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ


ஆசிரியர் கையை அறுத்துக் கொண்டார்; விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்; மாணவரின் மாண்பை கெடுக்கும் வண்ணம் ஆபாசமாக நடந்து கொண்டார்; இப்படி பலவாறாகச் செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.

இவை ஆசிரியரின் தரம் பற்றி நமக்குள் சில கேள்விகளையும் எழுப்புகின்றன.


முனைவர் குமரன் வேலு

பொதுவாகவே ஆசிரியர்கள் நிரம்ப நல்லவர்கள். மனசாட்சி உள்ளவர்கள். ஆனால் எல்லோரும் அப்படி இருந்து விடுவது இல்லை. ஒரு சிலர் நெல்லுக்குள் கிடக்கும் கல்லைப் போல் இருப்பதும் உண்டு.

ஒரு பள்ளியின் வெற்றிக்கு ஐந்து விடயங்கள் தரமாக இருக்க வேண்டும்.

1. தலைமைத்துவம்
2. ஆசிரியர்
3. மாணவர் தன்னாளுமை
4. பெற்றொர்களும் சமூகமும்
5. உட்கட்டமைப்பு வசதிகள் (தொழில்நுட்ப கருவிகளும் வளமும் உட்பட)     


#ஆசிரியர் தரம்

கல்வியமைச்சு ஆசிரியரைத் தரம் உயர்த்த பல்வேறு வழிகளைக் கையாளுகிறது.

ஆசிரியரின் கல்வித் தகுதி, ஆசிரியரின் மனப்போக்கு (attitude), ஆசிரியப் பணியில் உளமார்ந்த விருப்பம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்ப் பணிக்கு பயிற்சி ஆசிரியரைத் தேர்வு செய்கிறது.

சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும் எனும் கோட்பாடுக்கு ஏற்ப SPM தேர்வில் குறைந்தது 5 பாடங்களில் ’ஏ’ கிரேட் பெற்றவர்கள் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராக விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி ஆன பின்பே அவர்கள் ஆசிரியராக முடியும்.

முன்பு எல்லாம் SPM தேர்வில் இரண்டாம் நிலை கிரேட் அல்லது மூன்றாம் நிலை கிரேட் உள்ளவர்களும் ஒரு சான்றிதழ் / பட்டயப் படிப்பை மூன்றாண்டுகள் முடித்து ஆசிரியர் ஆகி விடலாம். இப்போது அது சாத்தியமில்லை.

ஆயினும் சான்றிதழ் / பட்டயப் படிப்பு படித்தவர்கள், நேரம் காலம் பார்க்காமல்  மிகுந்த கடப்பாடும் ஆர்வமும் கொண்டு பணி புரிவதாகவும்; பட்டதாரி படிப்பை முடித்து வருகிறவர்கள் நேரத்தோடு வீடு போய்ச் சேர்ந்து விடுவதில் குறியாய் இருப்பதாகவும் நமக்கு முறையீடுகளும் வருகின்றன.

அது ஒருபுறம் இருக்க, ஆசிரியரும் மனிதர்கள் என்பதால் அவர்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் எனும் அறிவியலையும் கலையையும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

நிருவாகக் கோட்பாடு 1 (Theory X)


எல்லா மனிதர்களும் வாய்ப்பு கிடைக்கும் போது பணியை ஒழுங்காகச் செய்யாமல் அல்லது முழுமையாக முடிக்காமல், அக்கறை இல்லாமல் ஏய்ப்பு செய்வார்கள் என்கிறது இந்தக் கோட்பாடு.

அதனால் ஆசிரியரைத் தொடர்ந்து கண்காணித்து; தவறு செய்யும்போது தண்டித்து (penalties); கூடுதல் திறமையைக் காட்டும்போது; பாராட்டிப் பரிசளித்து (rewards) ஊக்குவிக்க வேண்டும் என்கிறது அந்தக் கோட்பாடு. தொடர் கண்காணிப்பு என்பதுதான் இங்கே மையக்கரு.

அதனால்தான் ஆசிரியருக்குப் பணியில் சிறந்தோர் வெகுமதியும் (APC) வழங்கப் படுகிறது.

வேலையை ஒழுங்காகச் செய்யாதவர் மீது 3ஏ விதியின் (Peraturan 3A) கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுவதும் உண்டு.

சில ஆசிரியர்களுக்கு 3A விதியென்று ஒன்று இருப்பதே தெரியாது. இந்த விதி அரசாங்க ஊழியர் அனைவருக்கும் பொருந்தும்.

Peraturan 3A
Kewajipan mematuhi Peraturan Peraturan yang ditetapkan dan mana mana pegawai yang melanggarnya boleh menyebabkan diambil tindakan tatatertib


வேலைக்கு வராமல் சாக்குபோக்குச் சொல்வது; முறையாக விடுமுறை எடுக்காமல் வெளியூர் அல்லது உள்ளுரில் இருப்பது; மருத்துவ சான்றிதழில் தில்லுமுல்லு செய்வது; வரவுக்கு மீறிய கடன் பெற்று இருப்பது; அறிவிக்காமல் / அனுமதி இல்லாமல் பகுதி நேரத் தொழிலில் ஈடுபடுவது; வேலையில் சிரத்தை இல்லாமல் இருப்பது; இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது; நொடித்துப் போவது (bankrupt); அரசியலில் ஈடுபட்டு செய்தொழிலில் கவனம் குறைவது; என ஆசிரியருக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

பள்ளித் தொடங்கும் முன் நடக்கும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் இந்த விதி 3A குறித்து ஆசிரியர்களுக்கு நினைவுப் படுத்துவது நல்லது.

இந்த விதியின் கீழ் பாதிக்கப் பட்டோர் இருக்கின்றார்கள்.

பதவி இறக்கம் (கிரேட் இறக்கம்); சம்பளக் குறைப்பு; பதவி உயர்வுக்குத் தடை; உபகாரச் சம்பளம் கிடைப்பதற்குத் தடை; பணி நீக்கம் (exit policy); பணி ஓய்வு சம்பளம் இழப்பு; எனப் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலும் தலைமையாசிரியர்கள் கருணை மிகுந்தவர்கள். கண்டிப்பு மிகுந்த தலைமை ஆசிரியர்கள் சரியானக் காரணமின்றி வேலைக்கு வராத சூழலில் ஆசிரியரின் சம்பளத்தை வெட்ட உத்தரவு இடுவார்கள். விதிப்படி அவர்கள் செய்வது சரிதான்.

எனவே, ஆசிரியர்கள் மிகுந்த கவனத்தோடு தங்களின் எதிர்காலத்தை எண்ணிச் செயல்பட வேண்டும்.

மேற்கூறிய விதிகளும் தண்டனைகளும் ஆசிரியரின் தரத்தை உயர்த்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள முயற்சிகள்.

நிருவாகக் கோட்பாடு 2 (Theory Y)

மனிதர்கள் பொதுவாகக் கடமை உணர்வு உள்ளவர்கள். உள்ளார்ந்து நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைப்பார்கள்.

அவர்களுக்குத் தேவை காலத்திற்கு ஏற்ற திறன் பயிற்சியும் ஊக்கமூட்டலும் என்கிறது இந்தக் கோட்பாடு. தொடர்ப் பயிற்சியும் அதை நடைமுறைப் படுத்த சுதந்திரமும் ஊக்கமும் வழங்கப் பட்டால் பெரும்பாலானவர்கள் சிறந்த பணித் திறனைக் காட்டுவார்கள் என்கிறது இந்தக் கோட்பாடு.

இதன் அடிப்படையில்தான் ஆசிரியருக்குப் பல்வேறு பயிற்சிகள் பள்ளி அளவிலும் (PLC), மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் நடத்தப் பெறுகின்றன.

இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி தொழில் திறனை வளர்த்துக் கொண்டு நிபுணர்களாக மாறிவிடும் ஆசிரியரும் உண்டு. அதனால் வரும் பதவி உயர்வும் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

யாரையும் காக்கா பிடிக்காமல் செயல்திறன்; சிறந்த தொடர்பாடல்; மரியாதை; கடப்பாடு கொண்டவர்கள் மேல் பதவிக்குச் செல்கின்றனர். ஆனால் நம்முடைய மனித இயல்பின்படி, சிலருக்கு இந்த வாய்ப்புகள் கிட்டுவது இல்லை. அதைப்பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதும் இல்லை.

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்றும் கருமமே கண்ணாயினார் என்றும் எத்தனையோ ஆசிரியத் திலகங்கள் எந்த அங்கீரமும் எதிர்ப்பார்க்காமல் தங்களின் தொழிலைச் செய்வதும் உண்டு.

அவர்களுக்குப் பயனீட்டாளரான மாணவர்களே அங்கீகாரம். அவர்களின் தூய்மை, நேர்மை, தொழில் பக்தி; அவர்களின் இறுதி நாளில் சேர்கின்ற மாணவக் கூட்டம் காட்டிக் கொடுத்துவிடும்.

-குமரன் வேலு
19.01.2021




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக