07.01.2021
காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தடத்தைப் பதித்துச் செல்கின்றது. அந்தப் பதிவானது அசாதாரணமான அனுபவங்களை ஏந்தி நிற்கும் போது, இயற்கையும் அதற்கான அழகையும் மதிப்பையும் உருவப் படுத்தி விடுகின்றது.
வரலாறு என்பது தனியே ஆண்டுகளின் தொகுப்பு அல்ல. சம்பவங்களின் தொகுப்புகளின் தொகுப்பு அல்ல. அதிகாரத்தில் உள்ள தரப்புகளின் தொகுப்பும் அல்ல. மாறாக அது அவற்றின் ஊடாக நகர்ந்து செல்லும் மக்களுடைய வாழ்க்கையின் தொகுப்பாகும்.
இன்று செய்ததை நாளை மறந்து, அடுத்தப் பரபரப்புக்காக இயங்கத் தொடங்கிவிடும் காலக் கட்டத்தில் வாழ்கிறோம். ஆகவே வருங்கால சந்ததியினருக்கு நம் முன்னோர்களின் பெருமையைக் காலத்திற்கு ஏற்றவாறு பதிய வேண்டி உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணில் அடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின்; அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிலையங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவார்கள்.
வரலாற்றில் நிலைத்து இருக்கும் படியாக, ஒரு சில இடங்களில் அந்தத் தனி நபரின் உருவச் சிலையை அமைத்தும் நினைவு கூர்வார்கள்.
அந்த வகையில், சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) சிலைக்கு அருகாமையில், 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய டான் கோட் செங், முன்ஷி அப்துல்லா சிலைகள்; சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான திரு. நாராயணன் பிள்ளையின் (Narayana Pillai) சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன.
சிங்கப்பூரின் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை நினைவுக் கூரும் வகையில் இந்த நால்வரின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமனின் சிலையும் முன்னோடியாக அமைந்து உள்ளது.
இந்தத் தீவில் உள்ள முக்கிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாராயணன் பிள்ளை, சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் உடன் பினாங்கில் இருந்து 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரை வந்து அடைந்தார்.
அங்கு வாழ்ந்த இந்தியச் சமூகத்தின் முதன்மைத் தலைவராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. சிங்கப்பூரை வந்து அடைந்த நாராயணன் பிள்ளை, தமது வாழ்க்கையை ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டிய நிலை. நிதித் துறையின் முதன்மைத் தலைவராகப் பதவி வகித்தார்.
துரதிருஷ்டவசமாக அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். இவரது இடத்தில் வேறு ஒருவர் இருந்து இருந்தால் மீண்டும் பினாங்கிற்கே சென்று விடலாம் என்ற எண்ணம் எழுந்து இருக்கும்.
நாராயணன் பிள்ளை அவர்கள் தனது அசாதாரண தைரியத்தால் சிங்கப்பூரிலேயே தங்கி முதல் செங்கல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு அடுத்த நிலையில், முதல்நிலைக் கட்டிட ஒப்பந்தக்காரராகவும் ஆனார்.
தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில், சிங்கப்பூரில் மிகப் பெரிய பருத்தி பொருட்களுக்கான சந்தையை அமைத்தார்.
பெரும்பாலான பிரிட்டன் வணிகர்கள் அவருடன் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அதிகமாகக் கடன் கொடுத்து துணிகளைச் சந்தையில் விற்பதற்கு உதவியும் செய்தார்கள்.
தொடர்ந்தால் போல துன்பம் அவரையும் விட்டு வைக்கவில்லை. அவருடைய மொத்தச் சந்தையும் தீயில் கருகியது. இதனால் பிரிட்டன் வியாபாரிகளுக்குப் பல்லாயிரக் கணக்கான டாலர் கடன் செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
இறுதியில் நகரத்தின் மையப் பகுதியில் ராபிள்ஸ், திரு. நாராயண பிள்ளைக்கு நிலம் ஒன்றினை வழங்கினார். அவரது வியாபாரத்தைப் புதுத் தோற்றத்துடன் ஆரம்பிக்க உதவிச் செய்தார்.
இத்தனை இன்னல்களுக்கும் இடையே, ஓர் இந்து ஆலயத்தைக் கட்டி எழுப்ப அவருக்கு ஆசை இருந்தது. அதனை நினைவுக் கூரும் வண்ணமாக தற்போது எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைகிறது. மேலும் இந்தக் கோயில், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாகவும் விளங்குகிறது.
அரசாங்கத்தின் உந்துதலால் பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு உயர்ந்தார். நாராயண பிள்ளை தனது வாழ்க்கையில் பல்வேறான இன்னல்களைச் சந்தித்து வந்தாலும், அவருடைய மன தைரியமும் நம்பிக்கையும் அவரை இறுதியில் வெற்றி அடையச் செய்துள்ளன.
சிங்கப்பூரில் பிற்காலத்தில் இலட்சக் கணக்கான தமிழர்கள் குடியேறி இன்று நிரந்தரமாக அங்கு தங்கி இருப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சிங்கப்பூரின் ஆரம்ப கால வளர்ச்சியிலும் தனது கடும் உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிய காரணத்திற்காகவே நாராயண பிள்ளைக்குச் சிங்கையின் மையப் பகுதியில் சிலை நிறுவி அவரைச் சிங்கை அரசாங்கமும் கௌரவித்து உள்ளது.
-செ.நவீன்
சான்று:
https://selliyal.com/archives/178567
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக