13.01.2021
பதிவு செய்தவர்: செபஸ்டியன், கோப்பேங், பேராக்
டென்மார்க் நாட்டில் கார் விலை மிக அதிகம். அதனால் மிகக் கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டுச் சமையல்தான்.
பள்ளியைப் பொறுத்தவரை ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள்.
படிக்கும் காலத்தில் உலக அனுபவம் பெற சுற்றுப் பயணம் போவார்கள். ஏதாவது ஓர் ஆய்வுப் புராஜக்டை எடுத்துச் செய்வார்கள். கல்லூரிக் கட்டணம் முழுக்க முழுக்க இலவசம்.
அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதச் சம்பளமாக $900 கூட கிடைக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு; நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
சாதாரண வேலைக்கும், இருதய சிகிச்சை மருத்துவருக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்பட்ட வேலைக்குப் போகலாம்.
வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்து விடலாம். மதிய உணவை கம்பெனிகளில் தனியாக உண்ண மாட்டார்கள்.
அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசி கட்டத் தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாகக் கூடி ஒரே அறையில் தான் உண்ணுவார்கள்.
நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இப்படித்தான் ஒன்றாகக் கூடி உணவு உண்ணுவார்கள்.
மக்களிடையே சகோதரத்துவம் வளர வேண்டும் என்பதால் அரசு பல அமைப்புகளுக்கு உதவி செய்கிறது. மாலை வேளைகளில் சதுரங்கம், பொம்மை செய்வது போன்ற பொழுது போக்குகள்.
அரசு பல கூட்டுறவு வீடுகளைக் கட்டி உள்ளது. Bofaellesskap என பெயர். 30 குடும்பங்களைக் குடி அமர்த்துவார்கள். இங்கே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடி வருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம்.
வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
பணம், ஆடம்பரம் ஆகியவற்றைச் சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம். டபிள்யூ காரில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனைக் கூடுதலாக மதிக்கும் நாடு.
அதனால் பணக்காரன் என சொல்லிக் கொள்ளவே பலரும் கூச்சப் படுவார்கள். தன் வளமையைப் பொருட்களை வாங்குவதில் காட்ட மாட்டார்கள். காட்டினால் மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக