19 ஜனவரி 2021

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஜாசின் தமிழ்ப்பள்ளி

18.01.2021

ஆக்கம்: கவிஞர் ஜாசின் ஏ. தேவராஜன்

ஜாசின் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது எழுத்தாளர் தேவராஜன் அவர்கள் வல்லினம் இதழில் நம்மைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அன்பர்களின் பார்வைக்குப் பதிவு செய்கிறேன். ஓய்வாக இருக்கும் போது படித்துப் பாருங்கள் >>>

*வண்ணச் சாந்துகளில் குளித்துக் கதைகளில் தம்மைத் துவட்டிக் கொண்ட கலைஞன்*


வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2015

தமிழ் சார்ந்தவர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்விச் சூழலில் மேலிடத்தில் இருந்து அடிமட்டம் வரை ஆடப் படுகின்ற தகிடு தத்தங்களைப் படம் பிடித்துக் காட்டும் இந்தத் தொடரில் கைங்கர்யவாதிகளுக்கு அப்பால் மாறுபட்ட வகையில் இயங்கிக் கொண்டு இருக்கிற ஆசிரியர்கள் இருவரை இந்தக் கட்டுரையின் வழி சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஒருவர் திரு. முத்துக்கிருஷ்ணன். மற்றொருவர் திரு. தாயபு கனி. இருவரையும் ஆசிரியர்கள் என்ற கட்டமைப்புக்கு வெளியே சமூகச் சேவையாளர்களாகவும்; இலக்கியம் சார்ந்தவர்களாகவும் அவதானிக்கிறேன்.

இவர்களைப் போல் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கவே செய்வர். ஆனால், நமது துரதிர்ஷ்ட்டம் அத்தகையவர்களைப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது!


ஜாசின் தேவராஜன் எழுதிய
அரிதாரம் கலைந்தவன் இலக்கியத் தொகுப்பு

முதலில் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களைக் குறித்துத் தொடங்குகிறேன். மலாக்கா, டுரியான் துங்கல் எனும் குக்கிராமத்தில் பிறந்த திரு. முத்துக்கிருஷ்ணன், மலேசிய ரீதியில் முற்றிலும் மாறுபட்ட தமிழாசிரியராகப் பவனி வந்தவர்.

இன்று மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் ’கணினி கேள்வி பதில்’ அங்கத்தைச் சுவைபட நடத்துவதோடு, ‘மாணவர் சோலைப்’ பகுதியை ஈர்க்கின்ற வகையில் தொகுத்துத் தருகிறார்.

இவர் தமிழாசிரியர் என்ற முத்திரையைத் தாண்டி மிகச் சிறந்த சித்திரக் கலைஞனாக உலா வந்தவர்.

இவரது சித்திரங்களும் வண்ணக் கலவைகளும் பள்ளிச் சுவர்களில் நங்கூரமிட்டு விட்டால், அவற்றில் இருந்து கழன்று கொள்ள எந்த விழிகளுக்கும் துணிவு வராது.


வரலாற்றுப் பேரரசு விருது 2020

வெற்றுச் சுவர்களுக்கு உயிர் வந்தது போல் மிக நேர்த்தியான சித்திர வேலைப் பாடுகளுக்கு உரியவர் என்ற பெயர் இன்றளவும் உள்ளது.

தாம் பணியாற்றிய பல தமிழ்ப் பள்ளிகளில் இன்றளவும் அந்த வசீகரச் சித்திரங்கள் நம்மை ஒரு கணம் நிறுத்தி விடுகின்றன. மாதிரிக்கு ஜாசின் தமிழ்ப்பள்ளியில் முத்துக்கிருஷ்ணன் தீட்டிய சித்திரங்களும் வடிவ எழுத்துகளும் இன்றளவும் யாரும் தீண்டிக் கெடுக்க அஞ்சுவர்.

வெளியில் இருந்து பள்ளிக்கு வருகின்றவர்கள் ஓரிடத்தில் அவரது சித்திரம் தட்டுப்பட்டு விட்டால், மற்றச் சித்திரங்களுக்குத் தாவுவர். அதே போல அவரது கையெழுத்துகளும் தனித்துப் பேசப்பட்டன.

அன்று அவர் பயன்படுத்திய ‘PELAKA’ இரக வண்ணச் சாந்துகள் இன்றளவும் சாயம் சிதையாமல் அழகூட்டிக் கொண்டு இருக்கின்றன.

வண்ணச் சாந்துகளை அநாயசமாகக் கையாளும் நுட்பம் எப்படி வாய்த்து என்பது வியப்பு! கலைத் தொடர்புடைய படைப்புகளை உடனுக்குடன் தீட்டித் தரும் தனித்த பெரும் ஆளுமையைக் கொண்டு இருந்தார்.

பள்ளியைத் தவிர்த்து வெளியே பல இடங்களுக்கு அவரது தூரிகை ஊர்ந்து போய் இருக்கிறது. ஆலயங்கள், சமூக மண்டபங்கள், பொது நிலையங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பொழுது நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சின்னப் பையன்.

நான் வசித்த புக்கிட் செர்மின் தோட்டத்தில் முனியாண்டி என்பவர் புதுப் பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்கி இருந்தார். பள்ளிப் பேருந்து என்பதை அடையாளப் படுத்துவதற்கு வாசகங்கள் தீட்ட வேண்டி முத்துக்கிருஷ்ணனை அணுகி இருந்தார்.

ஒரு மாலையில் முத்துக்கிருஷ்ணன் மிக எளிமையான தோற்றத்தோடு நெற்றிக் கோட்டில் நீர் வழிய மாலைச் சூட்டுக்குக் கீழ் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டு தமக்கே உரிய ஓரப் பார்வையில் வேலையைத் தொடங்கினார்.

மிகப் பெரிய ஓவியர் என்றாலும் சின்ன பந்தாகூட இல்லாமல் ஒரு தோட்டத் தொழிலாளியைப் போல் செயல்பட்டுக் கொண்டு இருந்தார். அவரது வேலையைத் தொடக்கத்தில் இருந்து பார்க்க இயலவில்லை. காற்பந்து விளையாட நண்பர்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்த நேரம் அது.


தென்றல் ஆசிரியர் வித்யாசாகர்

மறு நாள் காலை, அந்தப் பேருந்து புதுமணப் பெண் போல அழகு கோலம் பூண்டு தோட்ட மக்களைச் சுண்டி இழுத்துக் கொண்டு இருந்தது. அதுவரை எனக்கு அறிமுகமாகாதவர், பிறகு தான் தெரிந்தது அவர் ஜாசின் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்று! அதற்குப் பிறகே, அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன்.

ஜாசின் பட்டணத்தில் பிரபலமாக விளங்கிய கே.வி. நாயர் அவர்களுக்கு உரிமையான இரண்டு மாடி வீட்டை மாணவர் விடுதியாக மாற்றி ஏழை மாணவர்கள் எல்லாம் தங்கிப் படித்தனர்.

கல்வியில் தீவிரம் காட்டிய மாணவர்களுக்கு அந்தத் தளம் கூட்டுக் கல்வி முறைக்கான களமாக மாறியது. ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கல்வித் தளம். அங்குப் பகுதி நேர ஆசிரியராகத் திரு முத்துக்கிருஷ்ணன் வந்து போய்க் கொண்டு இருப்பது தெரிய வந்தது.

எழுதிக் குவித்த எண்ணற்ற எழுத்தோவியங்களை ஒரு முறை மாணவர்களிடம் கொண்டு வந்து காண்பித்து உள்ளார். அவை யாவும் பத்திரிகையில் முழுப் பக்கக் கதைகளாக வெளிப்பட்டு இருந்தன.

எனக்கு அதைத் தரிசிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. நண்பர்களின் மூலம் காதுபடக் கேட்டதே மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது.


ஜாசின் தேவராஜன் நூல் வெளியீட்டு விழா

1980-களின் இறுதியில் இக்கட்டான நிலையில் எமது குடும்பம் ஜாசின் பட்டணத்திற்குக் குடிபெயர்ந்தது. எங்கள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் கெலுபி எனும் கிராமத்தின் சாலை மருங்கேதான் அவரது இல்லம் அமைந்து இருந்தது.

அவர் எனக்கு மேலும் நெருக்கமானார். ஒரு தடவை பள்ளி நிகழ்வுக்காக திரைப்படப் பாடல் மெட்டில் ஒரு பாடலைக் கேட்டு இருந்தேன்.

‘திருடாதே பாப்பா திருடாதே’ என்ற பாடல் அமைப்பில் உடனடியாக அமர்ந்து கறுப்பு மையில் சித்திர எழுத்துகளைக் கோர்த்து யாத்துத் தந்தார்.

எழுதும் போதே எப்படி இவரால் இத்தனை நிதானமாகவும் பிழையறவும் அழகுறவும் எழுத முடிகிறது என வியந்தேன்!


தேன் சிந்துதே வானம் நாவல் 2016

பெரும்பாலும் தமிழாசிரியர்கள் மத்தியில் இது போன்ற தனித்துவம் வாய்ந்தவர்களைக் காண்பது குதிரைக் கொம்பு! சிலருக்கு அந்தத் திறமை இருக்கலாம். ஆனால், உயிர்ப்பு என்பதும் நீட்சி என்பதும் எத்தனை பேரில் காண இயலும்?

முத்துக்கிருஷ்ணனிடம் இருக்கின்ற அந்த உயிர்ப்பும் பிரசன்னமும் யாரிடமும் கண்டது இல்லை. அந்த மகோன்னத வியப்பு இன்றளவும் என் நெஞ்சக் கூடத்தில் எழில் ஓவியமாக உள்ளது!

நான் உட்பட அன்றையக் காலத்தில் அவரது பாதிப்பு இல்லாமல் சித்திர எழுத்துகளைத் தீட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

நேரடி போதனை இல்லாவிடினும், நாமும் அவரைப் போல் அழகாக வடிவமாக எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியவர் திரு. முத்துக்கிருஷ்ணன் ஒருவரே!

நவம்பர் 2020

நமது கல்விச் சூழலில் எத்தனையோ விதமான ஆசிரியர்களைச் சந்தித்து இருப்போம். எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் கையெழுத்துகளை நான் இரசித்ததே இல்லை.

கோழிகள் நடந்து போன காகிதங்கள் போலவும், கொம்புகள் மழிக்கப் பட்ட மொட்டை மான்களைப் போலவும், இராட்சச இட்டிலிகளைப் போலவும் விதவிதமான எழுத்துக்குரிய ஆசிரியர்களைப் பார்த்து இருப்போம்.

திரு. முத்துக்கிருஷ்ணனன் அவர்கள் எனக்கு நேரடி ஆசிரியராக அமையாதது எனது துரதிர்ஷ்டம். எழுத்து வடிவத்தை நேசிக்கக் கற்பித்தவர்.

அந்த நேசம் தமிழைத் தொடும் போது எல்லாம் வியாபிக்க வேண்டும் என்ற புதுவகை இரசாயனத்தைப் பாய்ச்சியவர் என்றால் மிகையில்லை.

பள்ளி மாணவர்களுடன்
குனோங் லேடாங் மலை உச்சியில்

தெரிந்தோ தெரியாமலோ இன்றுங்கூட அழகாக எழுத வேண்டும் என்று தூவலை ஏந்துங்கால், வடிவ எழுத்துக்கு முன்னோடியாக முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முந்தி வந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை.

சராசரி ஆசிரியருக்கு அப்பாற்பட்ட திறமைகளைத் தமக்கு உள்ளே வைத்து இருந்தார். ஆனால், கல்வியுலகம் அவரை அறிந்து வைத்த அளவுக்கு உணர்ந்து வைக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

சில உப்புச் சப்பற்ற காரணிகளை முன்வைத்து அவர் ஒரு சாமான்ய ஆசிரியர் என்று எடை போட்டு இன்றளவும் அவரது ஆளுமையை அலகிடத் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ அச்சு ஊடகங்களில் பணிபுரிந்தும் உள்ளார். சான்றாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மயில் இதழில் பணி புரிந்தபோது அவரது கைவண்ணம் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல வெளிப்பட்டது.

சிறுகதைகளின் பாடு பொருளும் நடையும் மாணவர்கள் விரும்பிப் படிக்கின்ற அளவுக்குக் கையாண்டு இருந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது.

எண்பதுகளில் உலகச் சாரணர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு உரியவராகவும் சைக்கிளோட்ட வீரராகவும் தம்மை வெளிப்படுத்தி இருந்த முத்துக்கிருஷ்ணன் பல சந்தர்ப்பங்களில் அந்த அனுபவங்களையே சிறுகதைக்குக் களமாக்கி இருந்தார்.

எனது அவதானிப்பில் அறிவுரையோ போதமோ சொல்ல வேண்டி தூவலைத் தூக்கி இருப்பார் என்று எண்ணத் தோன்றவில்லை. கலாம்சக் கூறுகளுக்கும் சில நுட்பமான சம்பவங்களுக்கும் முன்னுரிமை அளித்து இருப்பார் என்றே உணரத் தோன்றுகிறது.

எழுத்தில் அனைத்துமே அவருக்குப் பாடுபொருளாகி இருந்தன. இலக்கியப் போட்டிகளில் அவரது ஈடுபாடு கம்மி தான்.

1983-ஆம் ஆண்டு, காஜா பெராங் மண்மன்ற கலை இலக்கியப் போட்டியில் அவரோடு நானும் பங்கு பெற்று இருந்தேன். சிறுகதைப் பிரிவில் எங்களுக்கு முதன்மைப் பரிசுகள் கிடைத்தன. அதன் பின் பிற போட்டிகளில் கலந்து கொண்டாரா என்று அறுதியிடத் தெரியவில்லை.

எனது பள்ளிப் பிராயத்தின் போது தாம் மேற்கொண்ட சாரணர் முகாமின் போது ஏற்பட்ட இடர்பாடுகளையும் திகிலையும் கதையாக்கித் தந்து இருந்தார். இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் ஆற்றொழுக்கு நடையும் இயல்பான வருணனைகளையும் கொண்டு இருந்தவர்.

‘நினைவெல்லாம் நித்யா’ என்ற கார்த்திக்கின் படம் பேர் போட்டுக் கொண்டிருந்த போது, முத்தாய்ப்பு வைத்தால் போல மயில் வார ஏட்டில் ‘கனவெல்லாம் கார்த்திகா’ எனும் தொடர்கதையைச் சுவாரஸ்யத்துடன் தந்து வாசக மனங்களைக் கொள்ளை கொண்டது பழைய வாசகர்களுக்குத் தெரியும்.

ஆசிரியருக்கும் ஆறாம் படிவ மாணவிக்கும் ஏற்படக் கூடிய காதலும் அதன் அத்துமீறலும் மட்டும் இப்போதைக்கு என் ஞாபகத்தில் உள்ளது. அந்தத் தொடர்கதை நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா!

எழுபதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய பதிவாக எந்த நூலையும் இதுவரை தமிழுக்குக் கொடை ஆக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்! கலை இலக்கிய வெளிகளில் அவரும் பலமுறை, பலரிடம், பல சூழல்களில் தெரிந்தே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.


மலேசியாவில் இரண்டாவது உயரமான
குனோங் கொர்பு மலையில்

அச்சு ஊடகங்களின் கொடுக்கிப் பிடியில் தன் சக்தியை மாத்திரமே இழந்தவர். தற்போது, தான் சார்ந்துள்ள அச்சு ஊடகத்தில் நேர்மையான பலனைக் கையைக் கடிக்காத அளவுக்குப் பெற்று வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது! உண்மைக் கலைஞர்கள் வாழ வேண்டும்!

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய பாரதியார்கள் இனியும் வேண்டாம்! முத்துக்கிருஷ்ணன் அவர்கள் அப்பொழுதே விழித்து இருந்தால் இந்நேரம் துருவ நட்சத்திரமாக நின்று கொண்டு இருப்பார். (ஆனால், கலை இலக்கியம் அவரிடம் இருந்து காணாமற் போய் இருக்கலாம்)

https://www.vallinam.com.my/issue32/thevarajan.html

அதோடு மற்ற எழுத்தாளர்களைப் போல் அவருக்குக் காக்காய்ப் பிடிக்கத் தெரியாது; சம்பாதிக்கவும் தெரியாது! சத்தியமும் உண்மையும் நிறைந்தவர்!

எண்பதுகளில் நகர்ப்புறச் சூழலில் முகிழ்க்கின்ற உறவுகளை மையமாக வைத்துத் தொடர் கதையைத் தீட்டியது; மலேசியத் தமிழாசிரியர்கள் தொடாத ஒரு விடயமாகும்.

அதிலும் தங்களுக்கான பிம்பத்தோடு உலா போகும் தமிழ் ஆசிரியர்கள்; நல்ல காலத்திலேயே பாடப் புத்தகத்தைத் தாண்டி தூவலைத் தூக்க மாட்டார்கள் என்பது வேறு! அதில் திரு. முத்துக்கிருஷ்ணன் முற்றிலும் விதிவிலக்கு என்பது பெரும் பேறு!


ஜாசின் ஏ. தேவராஜன்


பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: எவ்வளவு திறமைகள் இருந்தும், அதை வெளியே காட்டிக் கொள்ளாதது ஏனோ?‌ வருத்த மாகவே இருக்கிறது... 😥

ஜெயராமன் சுங்கை சிப்புட்: சிறப்பு வாழ்த்துகள்... பாராட்டுகள்... அருமை...

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள்... வாழ்த்துகள்...

நாச்செல் அமச்சியப்பன், கேமரன் மலை: அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு உங்களைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை ஐயா!! அவருக்குத் தெரிந்ததை அறிந்ததை மட்டும் குறித்து எழுதி உள்ளார். இன்னும் வெளியில் தெரியாதது எவ்வளவோ?? இறைவா!!!

ராதா பச்சையப்பன்: உண்மைதான்🙏

தேவி கடாரம்: அற்புதம் ஐயா. தங்களைப் பற்றி அறியாத செய்திகளை அறிந்து ஆச்சிரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். சகலகலா வல்லவர் என்று சொன்னால் மிகை ஆகாது. தங்களின் ’கனவேல்லாம் கார்த்திகா’ நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா...

ஜெயகோபாலன் பாகன் செராய்: தங்களின் இளமைப் பருவம் சிறப்பு ஐயா...

சந்திரன், லார்கின் ஜொகூர்: சிங்கம்..💕

பி.கே. குமார்: நல்ல பதிவு. நன்றி.

ராஜா சுங்கை பூலோ: வணக்கம். முத்துக்கிருஷ்ணன் அவர்களை எனக்கு 1972-லிருந்து தெரியும். அவரிடத்தில் எனக்குத் தெரியாத பல செய்திகளைக் கவிஞர் தேவராஜன் எழுதியிருப்பது எனக்கு உள்ளபடியே ஆச்சரியம் அளிக்கிறது. அவர் எழுதிய ஒரே ஒரு வரி மட்டும் உண்மை. உங்களுக்கு காக்காய் பிடிக்கத் தெரியாது என்று... எனக்கு ஒரே ஓர் ஆதங்கம். உங்கள் படைப்பைப் புத்தக வடிவில் எப்போது பார்ப்பேன். நன்றி. வணக்கம்.

குமரன் மாரிமுத்து: அருமை... அருமை... முதலில், என் ஆசிரியரின் கை எழுத்துகளில் சிக்கிக் கொண்டேன். இன்று வரை அதிலிருந்து விடுபடவே இல்லை; உண்மை. அவர் எழுத்துகளை 10 வயதில் வாசிக்கத் தொடங்கிய போதே ஆயுள் கைதியாகிவிட்டேன். முத்து ஐயாவின் ஓவியங்கள் உயிர்ப்பு உடையவை; பேசும் தன்மை கொண்டவை. கொடுத்து வைத்தவன்; அனுபவித்து இருக்கிறேன்.

சந்திரன் லார்கின் ஜொகூர்:
சிறப்பான ஒரு பதிவு.. நன்றி ஐயா. மலேசியாவின் முத்து. இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல், நாட்டிற்கும் நம் இந்தியச் சமுதாயத்திற்கும் ஒரு சூரியனாக உதித்து கொண்டு இருக்கிறீர்கள். 🙏💕

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். ஜாசின் தமிழ்ப் பள்ளியில் பயின்ற ஓர் அழகிய தமிழ் மகளின் அழகிய தமிழ் உணர்வுப் பதிவு நேற்றைய தினம் பதிவானது. அந்தப் பள்ளியில் அடியேனும் ஓர் ஆசிரியராகப் பயணித்து உள்ளேன்.

அது தொடர்பாக நாடறிந்த கவிஞர் தேவராஜன் அவர்கள் வல்லினம் தமிழ் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வரைந்து உள்ளார். அதை நம் புலனத்தில் பதிவு செய்து இருந்தேன்.

அந்தப் பதிவு தொடர்பாகப் பலர் தங்களின் கருத்துகளையும் வாழ்த்துகளையும்; அன்பின் வெளிப்பாடாகவும்; ஆதரவின் செயல்பாடாகவும்; போற்றுதலின் நிலைப்பாடாகவும் உச்சத்தில் தோரணங்கள் கட்டி அழகு செய்து உள்ளார்கள்.  மனநிறைவின் உச்சத்தில் தமிழ்ச்சோலை பூமாரி பொழிவது போல உணர்வுகளின் பிம்பங்கள். மனம் நெகிழும் அழகான கருத்துகளைப் பதிவு செய்த மலேசியம் அன்பர்கள்:

1. வெங்கடேசன்
2. ஜெயகோபாலன்
3. சந்திரன், ஜொகூர்
4. ஆதி. சேகர்
5. ராதா பச்சையப்பன்
6. ஜெயராமன் சுங்கை சிப்புட்
7. நாச்செல் அமச்சியப்பன்
8. தேவி கடாரம்
9. கரு. ராஜா
10. குமரன் மாரிமுத்து


அடுத்து, 👌 🙏 👍 எனும் சின்னங்களைச் சொடுக்கிச் சென்ற அன்பர்கள்:

1. கென்னடி ஆறுமுகம்
2, வனஜா பொன்னன்
3. ஜெயகோபாலன்
4. தினகரன் சுப்பிரமணியம்
5. வரதராசன்
6. பி.கே. குமார்
7. பாரதிதாசன் சித்தியவான்


இவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களில் சந்திரன், ஜொகூர்; ஆதி. சேகர்; ராதா பச்சையப்பன்; நாச்செல் அமச்சியப்பன்; தேவி கடாரம்; கரு. ராஜா; குமரன் மாரிமுத்து; ஆகியோர் நீண்ட பதிவுகளைப் பதிவு செய்து என் நெஞ்ச இருக்கையில் நிலையான இடத்தில் அமர்ந்து விட்டார்கள். நன்றி. நன்றி. அந்த 17 பேருக்கும் மீண்டும் கைகூப்பி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்த்துச் சொல்ல மனசு வராத அன்பர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.


2 கருத்துகள்: